24.7.16

நீங்கள் மதம் மாற வேண்டாம், உங்கள் மதத்தை மாற்றுங்கள்



நீங்கள் மதம் மாற வேண்டாம், உங்கள் மதத்தை மாற்றுங்கள்
குமரிமைந்தன்

எல்லாவற்றையும் அரைகுறையாகத் தெரிந்துவைத்துக்கொண்டு அனைத்தையும் அறிந்தவர்கள் போல் பேசுகிறார்கள் இத்தலைமுறையினர். நம் ஆட்சியாளர்கள் அவர்களுக்குரிய கடமையாகிய நாட்டைப் பிறரிடமிருந்து காப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் ன் நாட்டு மக்களில் எவரும் அரசு அதிகாரத்துக்கு அறைகூவலாக வந்துவிடக்கூடாது என்பதற்காக புதியவை புனைவோரை அழித்துவந்தனர். அதனால் குண்டுமிழியான பீரங்கியோடு வந்த துருக்கர்களை எதிர்கொள்ள முடியாமல் போயிற்று. வெள்ளைக்காரன் வந்து இந்த நாட்டைக் கைப்பற்ற வரும் வரை வாள், வேல் தவிர நம் வீரர்கள் கையில் வேறு மேம்பட்ட ஆயுதம் என்ன இருந்தது? சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் அடைக்கலக் காதையில் மதுரைக் கோட்டையில் பொருத்தப்பட்டிருந்த கருவிகளில் குண்டுமிழியின் தொடக்கநிலையைக் காண முடிகிறது. சந்திரகுப்த மோரியன், கலிங்கத்துக் காரவேல்ன் போன்ற பகைவர்களால் ஒற்றர்களாக விடப்பட்டவரான, அவிழ்த்துப் போட்டுக்கொண்டு தம் மயிரைத் தாமே பிடுங்கும் மனநோயாளிகளான அம்மணர்கள் முல்லை குறுஞ்சி மக்களிடையில் ஊடுருவி அவர்களை மூவேந்தர்களுக்கு எதிராகத் திரட்டி கள்ளர் பிறராகிய களப்பிரர் கூட்டமைப்பால் தமிழகத்தைக் கைப்பற்றினர். அது வரை தமிழகத்திலிருந்த ஒரே ஒரு கோட்டை, ஒரேவோர் அரண்மனை, ஏன் ஒரேவோரு குட்டிச்சுவர் கூட இல்லாமல் அழித்தனர். பின்னால் வந்தவர்களும் எந்த புதுக் கண்டுபிடிப்புக்கும் இடந்தராமல் ஐந்தொழில் கொல்லர்களை இடங்கையினராக்கிக் கொடுமை புரிந்தனர். இந்தச் சூழலில் புதிய ஆயுதங்களோடு வந்த வெள்ளையரைக் கண்டு இங்குள்ள ஆளும் கூட்டம் அஞ்சி நடுங்கியது. ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, குமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிபள்ளம் எனும் ஊர். எண்ணெய் செக்காட்டிகளாகிய இவ்வூரார் ஏதோவொரு காரணததால் ஓர் ஆண்டில் தாங்கள் திருவிதாங்கூர் அரசனுக்குச் செலுத்த வேண்டிய ஊழிய்ம், தாவது இலவயமாக வழங்க வேண்டிய எண்ணெய், பிண்ணாக்கு போன்றவற்றைக் கொடுக்கவில்லை. இதற்காக அரசன் என்ன செய்யப்போகிறானோ என்று அஞ்சிய அவர்கள் உடனே கத்தோலிக்கத்துக்கு மாறினர். அரசனும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டான்.

            தமிழகக் கடற்கரை மீனவர்களை கடல் மூலம் துருக்கர்களும் உள்நாட்டுக் கொள்ளைக்காரர்களும் செய்யாத கொடுமைகள இல்லை. இடங்கையினராகிய மீனவ்ர்கள் ஆயுதம் வைத்துக்கொள்ளவும் தடை இருந்தது. இந்த நிலையில் போர்த்துக்கீசிய மதகுருக்கள் மீனவ மக்களை மதம் மாறச் சொல்லவில்லை, எங்கள் அரசரின் குடிமக்கள் ஆகிவிடுங்கள், உங்களுக்கு அவர் ஆயுதம் வழங்குவார் என்றனர் என்று தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும் என்ற நூலில் கே.கே.பிள்ளை அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்நிகழ்வுகளைப் பற்றி நாம் வெட்கப்பட வேண்டும். கையாலாகாத நம் அரசர்கள் அரேபியா, துருக்கி போன்ற நாடுகளிலிருந்து வந்த மதமாற்றிகளையும் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களையும் வரவேற்றார்கள். ஏனென்றால் இங்கு அவர்களுக்கு ஆசான் என்ற இடத்திலிருந்த பார்ப்பனர்கள் அடித்த கொட்டத்தை அடக்குவதற்கு வேறு வழி அவர்களுக்கத் தெரியவில்லை என்பதுடன் அவர்களின் ஆயுத வலிமையும் இவர்களைக் கிலிகொள்ள வைத்தது.

திருவிதாங்கூர் மன்னன் இராமவர்மன் தன் மரணப் படுக்கையில் தனக்குப்பின் தன் மகன்களுக்கு அரசுரிமையை வழங்கிவிட்டுப் போனான். ஆனால் அதற்கு மாறாக திருப்பாப்பூர் நாடான் அனந்தபத்மநாபன் என்பவன் அரசனின் மருமகனும் தன் உறவுக்காரனுமான மார்த்தாண்டன் என்பவனை அரசனாக்க முயன்றான். திருவிதாங்கூரின் 39 நாடான்களையும் அழைத்து தன் திட்டத்துக்கு உதவுமாறு அவர்களைக் கேட்டான். அவர்கள் நடப்பிலிருக்கும் மக்கள்வழிக்குப் புறம்பாகச் செயல்பட மறுத்துவிட்டனர். பின்னர் கன்னியாகுமரி அருகிலிருக்கும் பொற்றையடி நாடான் தாணுமாலயப்பெருமாளுடன் சேர்ந்து அரசனின் மகன்கள் இருவரையும் தந்திரமாகக் கொனறு மார்த்தாண்டனை அரசனாக்கினான். இவன் அரசனானதும் தங்களைத் தண்டிப்பான் என்று அஞ்சிய 39 நாடான்களும் கத்தோலிக்கத்துக்கு மாறி தங்களைக் காத்துக்கொண்டனர். அரசன் தன் பழியைத் தீர்த்துக்கொள்வதற்கு இட்ட ஆணைகளில் பெண்கள் இடுப்புக்கு மேல் எந்த ஆடையும் அணியக்கூடாது, தண்ணீர்க் குடத்தை இடுப்பில் வைக்காமல் தலை மீதுதான் சுமக்க வேண்டும். பொனம(உலோக)க் கலன்களை(பாத்திரங்களை)ப் பயன்படுத்தக்கூடாது, தாளிதச் சமையல் செய்யக்கூடாது என்பன சில.

இந்தக் கட்டத்தில்தான் ஆங்கிலர்கள் இங்கு நுழைகிறார்கள். அரசன், நம்பூதிரிகள், நாயர் - குறுப்புகள் கூட்டணி ஆகியோர் கொடுமைகளிலிருந்து தப்பிக்க வேறு வழியின்றி மேற்கு வட்டங்களில் சாணார்கள் மதம் மாறுகிறார்கள். இப்பெண்கள் முலையைத் திறந்து போட்டுத் திரிவதைக் கண்டு பொறுக்காத ஒரு மதகுருவின் மனைவி குப்பாயம் எனும் தளர்வான ஓர் இரவிக்கையைத் தைத்து மதம் மாறிய பெண்களுக்கு அணிவித்தார். இதை நாயர், நம்பூதிரி போன்றோர் எதிர்க்க போராட்டம் வெடிக்கிறது. மதகுருக்களுடன் பேசி கிறித்துவர்கள் மட்டும் அணிய ஒத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் போராட்டத்தில் பங்கேற்ற மதம் மாறாதவர்களும் அணிய முற்பட்ட போது மதமாறிகள் எதிர்த்தனர். இது ஒரு கலவரமாக வெடித்து கிறித்துவக் கோயில்கள் தீவைக்கப்பட்டன, இடிக்கப்பட்டன. பின்னர் பேசித் தீர்வு கண்டனர், அனைவரும் மேலாடை அணியலாமென்று. இந்த நிகழ்வுகளை அறியும் போது தமிழர், இந்தியர்கள் எனும் நம் உடம்புகளில் சாக்கடைதான் ஓடுகிறதா என்ற ஐயம் வருகிறது. இது நிகழ்ந்தது சாணார்கள் நாயர் - குறுப்புகளுக்கிடையில் சிக்கிக் கிடந்த மேற்கு வட்டங்களில். ஆனால் கிழக்கு வட்டமான அகத்தீசுவரத்தில் நடைபெற்றது வேறு வகையானது.

குமரி மாவட்டத்தில் சாரல் எனப்படும் தென்மேற்குப் பருவ மழை சிறப்பானது. பாண்டி எனப்படும் நெல்லை மாவட்டத்தில் மாரி எனும் வடகிழக்குப் பருவ மழை சிறப்பு. எனவே பனையேற்றுக் காலம் இரு நிலப்பகுதிகளிலும் மாறி மாறி வரும். குமரி மாவட்டப் பனையேற்றுக் காலத்தில் உள்ளூர்ப் பனையேறிகளுடன் பாண்டிக் காட்டிலிருந்தும் பனையேறிகள் குடும்பத்துடன் வந்து தங்கி இருந்து பனையேறுவர். பாண்டிக் காட்டுப் பனையேற்றுப் பருவத்தில் பாண்டிக்காரர்கள் திரும்பிச் செல்ல குமரி மாவட்டக்காரர்கள் குடும்பத்தோடு அங்கு சென்று தங்கிப் பனையேறுவர். இந்த நிகழ்வில் இந்தத் தோள்சீலைச் சிக்கல் ஒரு பெரும் உறுத்தலாக இருந்தது. எனவே இங்குள்ள பெண்களும் தோள்சீலை அணியத் தொடங்கினர். இந்த வட்டாரத்தில் சாணார்கள் பிற சாதியினர் அதிகமில்லாமல் செறிந்து வாழ்ந்ததால் உடனடிச் சிக்கல் எதுவும் உருவாகவில்லை. ஆனால் கன்னியாகுமரிக்கு அருக்கிலிருக்கும் ஒரு சந்தையில் இச்சிக்கல் வெடித்தது.

இந்தச் சந்தை செட்டியார்கள் கைகளில் இருந்தது. இது நாடார்கள் செறிந்த பகுதி. இங்கு சில சாணார்ப் பெண்கள் தோள்சீலை அணிந்து வந்தார்கள். அது பொறுக்காத, தங்களை மேல் சாதி என்று நினைத்துக்கொண்ட செட்டியார்கள் சிலர் நீண்ட கழிகளில் துறட்டி அரிவாள்களைக் கட்டி தூரத்திலிருந்தே தோள்சீலைகளை அகற்றுவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு நாள் ஒரு செட்டியார் இவ்வாறு தோள்சீலை அகற்றும் போது ஒரு பெண்ணின் கழுத்ததிலிருந்த தாலியை அரிவாள் அறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து பெரும் கொந்தளிப்பும் கலவரமும் நிகழ்ந்தன. அன்றிலிருந்து சாணார்கள் சந்தைக்குள் நுழைவதில்லை என்று முடிவெடுத்தனர்.

சந்தையில் விற்கும் பொருட்கள் பெரும்பாலும் இந்தச் சாணார்கள் தங்கள் விளைநிலங்களிலிருந்து கொண்டுவந்து செட்டியார்களுக்கு விற்பவையே. எனவே ஒரு கையில் சாணார்களிடம் வாங்கி மறுகையில் அவர்களிடமே விற்கும் வேலையையே செட்டியார்கள் செய்தனர். எனவே சாணார்கள் சந்தைக்கு வெளியே ஓர் உழவ்ர் சந்தையை உருவாக்கினர். தாம் கொண்டுவந்த பொருட்களை விற்றுவிட்டுத் தங்களுக்கு வேண்டியவற்றை வாங்கிச் சென்றனர். சந்தைக்குள் எவரும் நுழையாததால் செட்டியார்கள் சந்தையை விட்டு அகன்றனர். இப்போது சந்தை சாணார் கைகளுக்ககுள் வந்தது, தோள்சீலைப் போராட்டமும் வென்றது. இந்தச் சந்தையின் பெயர் தாலியறுத்தான் சந்தை என்ப்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் அந்தப் பெயரிலேயே வழங்குகிறது.

இந்தச் செய்தியைச் சொன்னவர் சுகுமாரன் தம்பி என்ற அதிகம் அறியப்படாத சிறந்த ஆய்வாளர். என் முன்முயற்சியில் புலவர் கு.பச்சைமால் போன்றோரின் உதவியுடன் இயங்கிய தமிழகச் சமூக வரலாற்றுக் கழகம் (தசவகம்) என்ற பெயரில் இயங்கிய அமைப்பின் ஆய்வுக் கூட்டங்களில் அவர் இது போன்ற பல அரிய செய்திகளைக் கூறியுள்ளார்.

அடுத்து சாணார்களின் விடுதலையில் வைகுண்டர் எனப்படும் முத்துக்குட்டி அடிகளின் பங்கு பற்றி மிக மிகைக் கருத்துகள் பெரும்பாலோர் உள்ளங்களில் பதிந்துள்ளன. அது தவறு.

முத்துக்குட்டி அடிகளுக்கு பெற்றோர் முடிசூடும்பெருமாள் என்று பெயரிட்டனர். இத்தகைய பெயரைச் சாணார் சூடக்கூடாது என்ற அரச ஆணைப்பபடி ஊர் நாடான் தடை செய்ததால் முத்துக்குட்டி என்று பெயரை மாற்றினர் பெற்றோர். அவரது பெற்றோரும் வீறுடையோராக இருந்திருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.

இவரும் இயற்கையிலேயே போர்க்குணம் கொண்டவராகவே இருந்திருக்கிறார். எம் மதத்தில் இண்ணந்தால் மேல்சாதிக் கொடுமைகளிலிருந்து விடுவிப்போம் என்று சீர்திருத்த(புராட்டற்றன்று)க் கிறித்தவர்கள் பரப்பியதால் இவர் மதம் மாறியிருக்கிறார். கோட்டையடி என்ற ஊர்க் கோயிலில் கோயில் பிள்ளையாக(கோயில் குட்டி என்றும் கூறுவர், மணியடித்தல் போன்ற ஓர் எடுபிடி வேலை) இருந்திருக்கிறார். இவ்வாறு மதமாற்றம் வேகம் பெற்று வந்த போது சாணார்கள் மீதான அரசின் கொடுமைகளை எதிர்க்கும் குரல்களும் ஓங்கி ஒலித்தன. இதைக் கண்டு அரண்ட திருவிதாங்கூர் அரசர் தன் அரண்மனையில் இருந்த ஆங்கில உடனுறை அதிகாரி(ரெசிடென்று) மூலம், இங்கு விடையூழியர்(மிசனரி)களால் கலவரச் சூழல் உருவாகும் நிலை உள்ளது, அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகையை வைத்தார்.

திருவிதாங்கூர், ஐதராபாத்து போன்ற பகுதிகள் சமத்தானம்(சமம் + தானம்) எனப்படும். அதாவது பிரிட்டீசு இந்திய அரசுக்குச் சமமான அதிகாரம் உள்ள பகுதி என்பது இதன் பொருள். ஆனால் இங்குள்ள அரசருக்கு நிலைப்படை வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. சொந்தமாக நாணயம், காவல்துறை, நயன்மைத் துறை, பல்கலைக் கழகம் எல்லாம் வைத்துக்கொள்ளலாம். இன்றைய மாநிலங்களை விட மிகுதியான பல அதிகாரங்கள் உண்டு. அதே வேளையில் அரசரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க சமத்தானத் தலைநகரிலே ஓர் உறைவிட அதிகாரியை ஆங்கில அரசு வைத்திருந்தது. இன்றைய ஆளுநர் போன்ற பதவி என்று சொல்ல்லாம். திருவிதாங்கூரைப் பொறுத்தவரை உறைவிட அதிகாரி சென்னை அரசதானியின் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருந்தார். இப்போது நம் நேர்வில் சாணார்களைப் பற்றிய அரசரின் குறையை உடனுறை அதிகாரி சென்னை ஆளுநருக்குச் சொல்ல அவர் அங்கிருந்த கிறித்துவ விடையூழிய அதிகாரிகளுக்குச் சொல்லி திருவிதாங்கூர் தமிழர் பகுதி விடையூழியர்களுக்கு சாணாரைப் பொறுத்துக் கொஞ்சம் அடக்கி வாசிக்க அறிவுறுத்தினார். இதனால் இங்கு சாணார்க்கெதிரான் ஒடுக்குமுறைகளைக் கண்டிக்கும் வீரார்ப்பான போக்கை கிறித்துவ மதகுருக்கள் கைவிட்டு வெறும் கடவுள் வழிபாட்டோடு நிறுத்திக்கொண்டனர். இதனால் வெறுப்படைந்த முத்துக்குட்டியார் கிறித்துவத்துக்கு முழுக்குப்போட்டுவிட்டு வெளியேறினார்.

முத்துக்குட்டி அடிகளின் அன்பர்கள் சிலர் அவர் கிறித்துவத்தைத் தழுவியதையும் பின்னர் அதைக் கைவிட்டதையும் பற்றிய செய்திகளை மறுக்கின்றனர். ஆனால் அவருடைய ஒட்டுமொத்த நடவடிக்கைகளை ஆய்கையில் இந்த நிகழ்வு நடந்திருக்கும் வாய்ப்புகள் மிகுதியாகவே எமக்ககுத் தோன்றுகிறது.

அடுத்து அடிகள் திருச்செந்தூர் சென்று கடலினுள் மூன்று நாட்கள் தவமிருந்து அருளும் நுண்ணறிவும் பெற்றதாகக் கூறியிருக்கிறார். ஆனால் இதற்கு மாறான ஒரு செய்தி நண்பர் ஒருவர் மூலம் கிடைத்தது. முத்துக்குட்டி அடிகள் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்திருக்கும் திருத்தங்கலில் இருக்கும் திருமால் கோயிலில் சில ஆண்டுகள் தங்கி அங்கு ஓர் பார்ப்பனரிடம் பாடம் கேட்டதாக அக்கோயில் தலபுராணத்தில் இருப்பதாகத் தன் நண்பர் ஒருவர் கூறியதாக பறம்பை அறிவன் என்ற நண்பர் ஒருவர் மடல் ஒன்றில் கூறியிருந்தார். இது பற்றி எழுத்தாள நண்பர் பொன்னீலன் அவர்களிடம் கூறிய போது தன் நண்பர் ஒருவர் அவ்வூரிலிருப்பதாகவும் அவர் மூலம் அந்தத் தலபுராண நூலைப் பெற்றுவிடலாம் என்றும் கூறினார். ஆனால் அது பற்றி எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. இன்னொரு நண்பர் மூலம் முயன்ற போது அவர் அண்மையில் வெளியிடப்பட்ட புதிய பதிப்பைப் பெற்றுத் தந்தார். அதில் முத்துக்குட்டி அடிகளைப் பற்றிய செய்தி எதுவுமில்லை. வாய்ப்பிருப்பவர் எவராவது பழைய பதிப்புகளை ஆய்ந்து இதுபற்றி முடிவு செய்துகொள்ளலாம்.

இனி தொடர்ந்து செல்வோம். திருச்செந்தூர்க் கடலுள் தவமிருந்து அருள் பெற்றாரோ அல்லது திருத்தங்கலில் பார்ப்பனரிடம் பயிற்சி பெற்றாரோ சில ஆற்றல்கள் வரப்பெற்று திரும்பிவந்தார் முத்துக்குட்டி அடிகள். இந்த ஆற்றல்கள் என்னவென்று பார்ப்போம்.

இதை வசிய ஆற்றல் என்று சுருக்கமாகக் கூறிவிடலாம். இந்த வசிய ஆற்றலை வைத்துத்தான் மோசே தொடங்கி இன்றைய அமிர்தானந்த மயீ உட்பட அனைவரும் தொழில் நடத்துகின்றனர். அது மட்டுமல்ல பெரும் அரங்கங்களில் மந்திர வித்தை நடத்தும் மந்திரவாதிகள் தொடங்கி தெருவில் செப்பிடு வித்தை என்றும் குறளி வித்தை என்றும் கண்கட்டி வித்தை என்றும் பிழைப்பு நடத்தும் அன்றாடங்காய்ச்சி வரை கடைப்பிடிப்பது ஒரே வித்தையைத்தான்.

தொடரும் முன் இந்த திருத்தங்கலைப் பற்றிய சில செய்திகளைக் கூறிவிடுகிறேன். சோழ நாட்டைச் சேர்ந்த பராசரன் எனும் பார்ப்பான் சேரனிடம் சென்று தன்னை எதிர்த்தோரை வாதில் வென்று அரசன் அளித்த விலையுயர்ந்த அணிகலன்களோடு திரும்பும் வழியில் பார்ப்பனர் மட்டும் வாழும் தங்கால் எனும் ஊரில் களைப்பாறுவதற்காக ஓர் அரச மரத்தடியில் அமர்ந்தான். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த பார்ப்பனச் சிறுவர்களைப் பார்த்து என்னோடு சேர்ந்து நான் கூறும் மந்திரங்களை ஓதி இதோ இந்தப் பொதியிலிருப்பவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றான். வார்த்திகன் என்பவன் மகன் தக்கினன் என்பவன் ஒலி பிறழாமல் ஓதியதால் தான் கொண்டுவந்த தங்க அணிகளை அவனுக்கு அளித்துவிட்டுச் சென்றான். சிறுவன் இவ்வாறு வரவுக்கு மிஞ்சிய அணிகளுடன் திரிந்ததால் அழுக்காறுற்ற அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தெரிவித்தனர். அவர்கள் வந்து வார்த்திகனைப் பிடித்துச் சிறையிலிட்டனர். அது கண்டு ஆற்றாத அவன் மனைவி அழுது புரளவும் அம்மன் கோயில் கதவு அடைத்துக்கொண்டது. இச்செய்தி பாண்டிய அரசனுக்கு எட்டவும் இது பற்றி மூதலித்து உண்மையறிந்து வார்த்திகனை விடுவித்து அவனிடம் மன்னிப்புக்கேட்டு அவன் முன் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்தான். அவனுக்கு தங்காலுடன் வயலூர் என்ற ஊரையும் இறையிலியாக வழங்கினான். இது சிலப்பதிகாரம் கட்டுரை காதை தரும் செய்தி. இன்று போல் காவலதுறை சரியாக மூதலிக்காமல் சிறையிலடைப்பதும் தலைமை நயமன்றம் வரை செல்வாக்குக்கு அடிபணிவதும் அன்றும் இருந்ததற்கான ஒரு தடயம்.

மேற்கூறிய கதை மூலம் ஓருண்மை புலப்படுகிறது. மூவேந்தர்களும் பார்ப்பனர்களுக்கு அளவுக்கு மீறிய சலுகைகளை வழங்கி அவர்களுக்கு அடிமைகளாகவே வாழ்ந்துள்ளனர் எனபது அது. தமிழ்நாட்டில் அம்மண சமயம் மன்னர்களுக்கு எதிரான பரப்பல்களுடன் வளர்ந்து வந்ததைக் கண்ட மூவேந்தர்களும் அந்த மதம் எந்த அடிப்படையில் மக்களை ஈர்க்கிறது என்பது குறித்து ஆய்ந்து அந்தக் காரணியை அகற்றுவது பற்றிச் சிந்திக்காமல், புத்த, அம்மண மதங்களின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தெற்கு நோக்கி ஓடி வந்த வடக்கத்திப் பார்ப்பனர்களுக்கு அளவுக்கு மிஞ்சிய செல்வாக்கை அளித்துள்ளனர். இன்று எப்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வது பற்றி பிரிட்டன் மக்களின் கருத்தறிய பொது வாக்கெடுப்பு நடத்தியதோ அதே போல் 9 நூற்றாண்டுகளுக்கு முன் ஓர் அரசன் ஒரு வரிவிதிப்புக்கு ஆங்காங்குள்ள பெருமக்களை அழைத்து அவர்களது கருத்தைக் கேட்டுத் தன் நிலைமையை விளக்கினான். அதிலிருந்துதான் இன்றைய பாராளுமன்ற ஆட்சி முறை திரிவாக்கம் பெற்று வளர்ந்தது. ஆனால் நம் நாட்டில் மக்ககளாட்சி என்ற பெயரில் பாராளுமன்றத்தைக் காட்டி ஆள்வினையாளர்களும் அரசியல் தலைவர்களும் மக்களை மிதித்து நசுக்குகிறார்கள். இவ்வாறு மக்களிடமிருந்து ஆட்சியாளர்கள் விலகிச் செல்லுந்தோறும் இந்த அரசு மட்டுமல்ல மக்களும் ஏன் மொத்த நாடும் நாளுக்கு நாள் நலிந்து மெலிந்து போகிறது.

இனி மேலே கூறிய சிலப்பதிகாரக் கதையில் தங்கால் என்று வரும் சொல்லுக்கு உரையாசிரியர் திருத்தங்கால் என்று பொருள் குறித்துள்ளார். ஆனால் சிவகாசி அருகில் இருக்கும் ஊர் திருத்தங்கல் ஆகும். இரண்டும் ஒன்றா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இனி, மீண்டும் முத்துக்குட்டி அடிகளுக்கு வருவோம். அவர் திருவிதாங்கூர் அரசால், அதாவது மேல் சாதியினரால் அவர்களிலும் உயர்ந்த நம்பூதிரிகளால் ஒடுக்கப்பட்ட 18 சாதியினரை இணைத்து கூட்டங்கள் நடத்தினார். அவர்களுக்குச் சம பந்திகள் நடத்தினார். இதற்காக அவர் அமைத்த இடங்களுக்கு நிழல்தாங்கல்கள் என்று பெயரிட்டார். இதில் திருத்தங்காலின் நிழல் இருப்பதைக் காணலாம். இவ்வாறு அவரது இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாக வளர்ந்து வந்தது. இதைக் கண்டு திருவிதாங்கூர் மன்னர் மிரண்டார். முத்துக்குட்டி அடிகளைப் பேச்சுக்கு அழைத்தார். இது பற்றி இரு வித கருத்துக்கள் நிலவுகின்றன.
           
ஒரு கூற்றின் படி அய்யாவை அரசரின் ஆட்கள் கட்டியிழுத்துச் சென்றனர் என்பது. இன்னொரு கூற்று அடிகள் தன் மாணவர்கள்(சீடர்கள்) துக்கிய பல்லக்கில் திருவனந்தபுரம் சென்றார் என்பது. அடிகளுக்கு 5 மாணவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் குமரி மாவட்டம் ஈத்தாமொழிக்குக் கிழக்கிலுள்ள புதூரை அடுத்திருக்கும் உடங்காட்டுவிளையைச் சேர்ந்தவர். அங்கு பழமை வாய்ந்த ஒரு நிழல்தாங்கலும் இருக்கிறது. அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என் தாயின் அன்னையார். அய்யாவை மாணவர்கள் பல்லக்கில் வைத்துத் திருவனந்தபுரத்துக்குச் சுமந்து சென்றதை அவர்கள் வாய்மொழியாகக் கேட்டிருக்கிறேன்.

            தன் வரலாறாக அடிகள் தன் மாணவர்களில் ஒருவராகக் கூறப்படும் அரிகோபால சீடர் என்பவரைக் கொண்டு எழுதுவித்த அகிலத்திரட்டு அம்மானையில் நீசன் என்ற சொல் மூலம் குறிப்பிடும் திருவிதாங்கூர் மன்னன் தன்னை புலிக்கூட்டில் புலியுடன் அடைத்ததாகவும் சுண்ணாம்புக் காளவாயில் வைத்துச் சுட்டதாகவும் அவற்றாலெல்லாம் தனக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறியிருக்கிறார். இது திருநாவுக்கரசர் கதையின் மறுபதிப்பு அன்றி வேறில்லை என்பது என் கணிப்பு.

            நான் முன்னம் குறிப்பிட்ட தசவகம் என்ற தமிழகச் சமூக வரலாற்றுக் கழகம் அமைப்பின் சார்பில் கன்னிமாகுமரியை அடுத்த வட்டக்கோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் மதமும் அரசியலும் என்ற தலைப்பில் நான் பேசினேன். அப்போது திருமாலாகிய பத்மநாபனின் தாசன் என்று தன்னை அறிவித்து அரசாளும் திருவிதாங்கூர் மன்னனை எதிர்த்து இயக்கம் நடத்திய வைகுண்டர் ஏன் தன்னை திருமாலின் தோற்றரவு(அவதாரம்) என்று அறிவித்தார் என்ற கேள்வியை முன்வைத்தேன். அப்போது அதற்கு விடை இல்லை என்றாலும் இன்னொரு செய்தியைக் கூறினார் நான் மேலே குறிப்பிட்ட சுகுமாரன் தம்பி. அய்யாவுக்கும் அரசனுக்கும் பேச்சு நடந்ததாகவும் அதில் அடிகள் ஒரு கோயில் கட்டி அதற்குள் சாணார்கள் தலைப்பாகை அணிந்து செல்லலாம் என்று உறுதியளித்தத்தாகவும் அதை அடிகள் ஏற்றுக்கொண்டதாகவும் இது குறித்த ஆவணங்களைத் தான் திருவனந்தபுரம் ஆவணக்காப்பகத்தில் பார்த்ததாகவும் கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த புலவர் கு.பச்சைமால், அய்யா வெள்ளையரை வெறுப்பவர், ஆங்கிலர் ஒரு சமத்தானத்தில் கலவரச் சூழல் உருவானால் சமத்தானத்தைப் பிடுங்கி தன் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடுவர் என்ற நிலைமையைச் சுட்டிக்காட்டியதால் அரசர் கூறியதை ஏற்றுக்கொண்டார் வைகுண்டர் என்று சற்று அடங்கிய குரலில் தலையைக் குனிந்துகொண்டே கூறினார். புலவர் கு.பச்சைமால் அய்யாவின் மாணவர் ஒருவரின் மரபில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, பெரும் ஆரவாரத்தோடு களமிறங்கிய அய்யா இறுதியில் திருவிதாங்கூர் அரசருடன் இணக்கம் கண்டு போராட்டத்தை நடுவில் கைவிட்டுவிட்டார் என்பதே உண்மை. அத்துடன் திருத்தங்கல் பற்றி நான் கேள்விப்பட்ட செய்தி உண்மையானால் அவர் தன்னைத் திருமாலின் தோற்றரவு என்று அறிவித்ததற்கான இன்னொரு காரணமும் தெரிந்துவிடும்.

            இதன் பின்னர் அய்யா தென்தாமரை குளம் என்ற ஊரில் ஒரு சிறு மண்டபத்தில் அமர்ந்து தன்னை நம்பி வரும் மக்களுக்கு நாமக்கட்டியைப் பொடித்து அதைக் கொடுத்து நெற்றியில் நாமம் இட்டு அந்தப் பகுதியில் தோண்டப்பட்ட முத்திரிக் கிணறு என்ற கிணற்றிலிருந்து பெறப்பட்ட தண்ணீரைக் குடிக்க வைத்து நோய்களைக் குணமாக்குதல், பேய்களை ஓட்டுதல் போன்ற “இறும்பூதுகளை” (அற்புதங்களை)ச் செய்துவந்தார். இந்த இடத்துக்கு இப்போது சாமித்தோப்பு என்பது பெயர். அவர் அமர்ந்திருந்த, வடக்கு நோக்கிய மண்டபத்துக்கு வடக்கு வாசல் என்பது பெயர். இத்துடன் அவர் உருவாக்கிய 18 சாதிக் கூட்டணி முடிவுக்கு வந்திருக்கும். அவருக்குத் தோழர்களாக இருந்தவர்கள் விலகியிருப்பர். இதற்குச் சான்றாக எழுத்தாளர் நண்பர் பொன்னீலன் அவர்களின் அன்னையார் திருமதி அழகியநாயகி அம்மாள் எழுதியுள்ள அருமையான தன்வரலாற்று நூலான கவலை ஓர் அரிய செய்தியைத் தருகிறது.

அய்யா காலத்தில் வாழ்ந்த பொன்னீலனின் முப்பாட்டனார் ஒருவர் முத்துக்குட்டி அடிகளுடன் மிக நெருக்கமாக இயங்கி வந்துள்ளார். அவர் இடையில் பிரிந்து வந்து தங்கள் நிலத்திலிருந்த கைவிடப்பட்ட ஓர் அம்மன் கோயிலைப் புதுப்பித்து நாள்தோறும் மூன்று வேளை பூசையும் வழிபாடும் நடத்தியிருக்கிறார். நோய் தீர்த்தல், குறி சொல்லுதல், பேய் விரட்டுதல் என்று அந்தக் கோயில் அந்த வட்டாரத்தில் பெரும் ஈர்ப்பைப் பெற்றுள்ளது. பொன்னீலனின் பெரிய தந்தையார் காலம் வரை தொடர்ந்த இந்த வழிபாடு அவருக்குப் பின் அதைத் தொடர எவரும் முன்வராத நிலையில் மறைந்து போயிற்று. அடிகள் போராட்டத்தைக் கைவிட்டு சாமிதோப்பில் தங்கி திருமால் தோற்றரவு என்ற வடிவம் எடுத்ததனால்தான் அவரை ஒரு வழிபடு தெய்வமாக ஏற்றுக்கொள்ள விரும்பாமல் தன் மரபுத் தெய்வமான அம்மன் வழிபாட்டில் பொன்னீலனின் முப்பாட்டனார் இறங்கியிருக்கலாம் என்று கொள்ள வேண்டியுள்ளது.

அடிகள் மறைந்த பின் வடக்கு வாசல் மண்டபத்துக்குப் பின்புறம் அவரை அடக்கம் செய்து அந்த கல்லறையைச் சுற்றி கருவறையும் முன்னால் உள் மண்டபமும் வெளியே கொடிமரமும் உள்சுற்றும் மதிற்சுவரும் வெளிச்சுற்றுமாக ஒரு ஆகமக் கோயிலை அவரது மாணவர்கள் அமைத்தனர். இப்போது ஒரு சிக்கல் உருவானது.

முத்துக்குட்டி அடிகளுடன் ஏற்கனவே திருமணமாகி ஓர் ஆண் குழந்தையுடன் ஒரு பெண்மணி வந்து சேர்ந்தார். இறுதி வரை அவருடனேயே வாழ்ந்தார். அடிகள் கைம்பெண் மறுமணத்தைப் பரிந்துரைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறே பரிந்துரைத்த பெரியாரின் தொண்டர்கள் அதைப் புறக்கணித்தது போலல்ல, அடிகளாரின் தொண்டர்கள் அதனை வெறுத்தனர், அதைக் கேட்டாலே முகஞ்சுளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குறிப்பிட்ட குமுக மாற்றம் ஒரு குறிப்பிட்ட பொருளியல் கட்டமைப்பில்தான் இயலும் என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டுகள். பெரியாரைப் பற்றியோ அவரது இந்தக் குறிப்பிட்ட நிலைப்பாடு பற்றியோ அறியாதவர்கள் இன்று மாறிவிட்ட பொருளியல் சூழலில் எவருடைய அல்லது எந்த ஓர் இயக்கத்தினுடைய பரப்பலுமின்றி தாமாகவே கைம்பெண் மறுமணங்களில் ஈடுபடுவதும் முன்பு அதைக் கடைப்பிடித்தவர்கள் அதைக் கைவிட்டு வருவதும் இதனால்தான்.

அடிகளார் இறந்த பின் அவரது மாணவர்களுக்கும் இந்த அம்மையாருக்கும் கோயில் உரிமை பற்றிய பூசல் உருவானது. வழக்கு நயமன்றத்துக்குச் சென்றது. அம்மையாருடைய மகன் அடிகளாருக்குப் பிறக்கவில்லை என்ற கருத்தை மாணவர்கள் தரப்பு முன்வைத்தது. திருவனந்தபுரத்தில் ஆங்கில நயவர் முன் கூண்டிலேறிய அம்மையார் குழந்தை அடிகளாருக்குப் பிறந்ததுதான் என்று கூறினார். ஓர் இந்தியப் பெண் இது போன்ற செய்திகளில் பொய் கூற மாட்டார் என்று கூறி அந்த ஆங்கில நயவர் அவருக்குச் சார்பாகத் தீர்ப்புக் கூறினார். இவ்வாறுதான் சாமிதோப்பு கோயில் இப்போதைய அறங்காவலர் குடும்பத்தினர் கைகளுக்கு வந்தது. (நாமறிந்து அம்மண சமயத்தின் மகாவீரர் தவிர உலகில் தோன்றிய அனைத்து மதத் தலைவர்களுக்கும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அல்லது அவர்கள் இறந்த பின் அதிகாரப் போட்டிகள் வந்துள்ளன.

அய்யாவின் காலத்துக்குப் பின்:

இப்போதைய அறங்காவலர் குழுவினருக்குப் பாட்டனார் ஒருவர் ஒரு பெண்ணுக்கு கோயிலில் உரிமை கொடுத்து ஒரு பத்திரம் எழுதிக்கொடுத்துவிட்டார். அது வழக்கு மன்றம் சென்றது. வழக்கு முடிவில் மொத்தம் இருந்த அறங்காவலர்கள் எழுவரோடு எட்டாவதாக அந்தப் பெண்ணின் மரபினருக்கு உரிமை கொடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனால் ஒவ்வோர் எட்டாம் ஆண்டும் இந்தப் புதிய அறங்காவலர் பொறுப்பில் கோயிலின் முழுச் செயற்பாடும் இயங்கும். ஆனால் அன்பர்களுக்கு இதை ஏற்றுக்கொள்ளத் தயக்கமாக இருந்தது போலும். அந்த ஆண்டுகளில் ஆள் வரத்து குறைவாக இருக்கும். வருவோரில் பலரும் காணிக்கையைத் தட்டில் போடாமல் பழைய அறங்காவலரை அவர் வீட்டுக்குச் சென்று செலுத்தியதும் உண்டு.

ஏழ்மை நிலையிலிருந்த இந்தப் புதிய அறங்காவலர் காலத்தில்தான் அன்பர்கள் சமைப்பதற்கு கற்களை அணைத்து அடுப்பேற்றி வந்த நிலைமையை மாற்றி நிலையான அடுப்புகளை அமைத்தது, அன்பர்கள் அமரவும் படுக்கவும் என இருந்த மண்டபத்தின் ஓலைக்கூரையை ஓட்டுக் கூரையாக மாற்றியும் கோயிலிலும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளைச் செய்து மக்களின் பாராட்டைப் பெற்றார்.

கோயிலுக்குக் கணிசமான சொத்துக்கள் இருக்க வாய்ப்புள்ளது, அதே நேரத்தில் வருமானம் நிறையவே வருகிறது. அதனால் இந்து அறநிலையத் துறை கோயிலைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயல்கிறது. இதை எதிர்க்க அய்யா வழி எனப்படும் இந்த வழிபாட்டு முறை “இந்து” வழிபாட்டு முறைகளிலிருந்து மாறுபட்டது என்ற விளக்கத்தை முன்வைக்கின்றனர் அறங்காவலர்கள். அதனாலேயே பாலபிரசாபதி போன்றோர் அரசியல் கட்சிகளுடன் உறவு வைத்துக்கொண்டு தானும் ஓர் அரசியல் சார்ந்த அமைப்பை வைத்துள்ளார். கோயிலுக்குப் பின்னாலிருக்கும் நாடார் சாதியினரின் செல்வாக்குக்கு அஞ்சி ஒதுங்கி நிற்கிறது அரசு. இல்லையென்றால அய்யா அரும்பாடு பட்டு உருவாக்கிய சாதி, சமயங்கள் கடந்த தாய்மொழி வழிபாட்டுக் கோயிலினுள் சமற்கிருத மந்திரங்களுடன் பார்ப்பனப் பூசகன் என்றோ நுழைந்திருப்பான். ஆகமக் கோயில்களினுள் எந்தப் பூசகனும் அன்பர்களைத் தொட்டுத் திருநீறோ சந்தனமோ பூச மாட்டான். ஒரு நடுவரசு அமைச்சரை நோக்கி திருச்செந்தூர்க் கோயில் நம்புதிரிப் பார்ப்பனப் பூசகன் திருநீற்றை மடித்து வீசினான் என்று 40 ஆண்டுகளுக்கு முன்னால் பெரும் சிக்கல் எழுந்ததை நினைத்துப்பார்க்க வேண்டும். ஆனால் சாமிதோப்பிலும் பிற அய்யாவழிக் கோயில்களிலும் பூசகர் மக்களைத் தொட்டு நெற்றியில் நாமம் இடுவதைப் பார்க்க முடியும்.


அய்யா உருவாக்கிய வழிபாட்டுமுறையில் கிறித்துவத்தின் தாக்கம் இருந்தது. நம் மரபு வழிபாட்டு முறையில் ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பிரிக்கும் வகையில் மணியோசை, மேளங்களின் முழக்கம் என்று ஐம்புலன்களையும் அதிர வைக்கும் தன்மை உண்டு. ஆனால் கிறித்துவக் கோயில்களில் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் பாடவும் வேண்டுதல்களைக் கூறவும் செய்கின்றனர். இதனால் ஒன்றுபட்டுச் செயற்படும் ஒரு பயிற்சி அங்கு கிடைக்கிறது. அதைப் போலவே அடிகளார் உருவாக்கிய வழிபாட்டு முறையில் மதியம் நடைபெறும் வழிபாட்டில் மணியடித்தல், மேளதாளம் அனைத்தும் முடிந்ததும் உச்சிப் படிப்பு எனப்படும் ஒரு பாடல் வரிசையை அறங்காவலர் குழுவைச் சேர்ந்த ஒருவரும் பணிவிடைக்காரர் எனப்படுவோரில் ஒருவரும் சொல்ல அன்பர்கள் அதைத் திருப்பிச் சொல்ல ஏறக்குறைய 10 முறைகள் மீண்டும் மீண்டும் சொல்வர். அதைப் போல் முன்னிரவிலும் மணியடிப்பு, மேளதாளங்களை அடுத்து உகப்படிப்பு எனும் பாடல் வரிசை அறங்காவலர் குழுவினர் சொல்ல பிறரால் ஒப்புவிக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை சிறப்பான நாள். அன்று இரவு ஒரு பல்லக்கு ஊர்தியில் (வாகனத்தில்) அய்யாவை அமர்த்தி கோயிலைச் சுற்றி வருவர். இது கிறித்துவர்களுக்குப் போட்டியா, அவர்களைப் போலச்செய்ததா, அல்லது கிறித்துவத்துக்குச் சென்றவர்களை ஈர்க்கும் முயற்சியா என்ற ஐயங்களை ஏற்படுத்துகின்றன.

உச்சிப் படிப்பு முடிந்ததும் வடக்கு வாயிலில் கஞ்சி ஊற்றுவார்கள். இரவில் கூட்டாஞ்சோறு போன்று சமைத்து வழங்குவார்கள், நல்ல சுவையாயிருக்கும்.

அய்யாவின் கல்லறை அமைந்திருக்கும் கோயில் கருவறையில் ஒரு வேலின் பின்புறத்தில் அகன்ற பக்கத்தை மேல் பகுதியில் கொண்ட இலை வடிவப் பலகையைப் பொருத்தி காவித்துணியால் போர்த்திய “மூலவர்” வடிவம் உள்ளது. அதன் பின்புறம் சுவரில் ஒரு கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.  தேரிலும் ஊர்தியிலும் வைப்பதற்காக அதே வடிவிலான ஓர் “உற்சவர்” உருவமும் உள்ளது.

தை, வைகாசி ஆகிய மாதங்களில் ஆண்டுக்கு இரண்டு திருவிழாக்கள் நடைபெறும். நாள்தோறும் இரவில் ஊர்தி உலா, பத்தாம் நாள் தேரோட்டம் எல்லாம் உண்டு. ஆகமக் கோயில் போன்ற கோயில் அமைப்பும் தேர், திருவிழாக்களும் அய்யா அறிவுரைப்படி அமைந்தனவா அல்லது அறங்காவலர்கள் தங்கள் விருப்பம் போல் சேய்த ஏற்பாடுகளா என்பது தெரியவில்லை. கருவறை உள்ளும் அனைவரும் சென்று வழிபட முடிவதைப் பார்த்தால் அய்யாவின் அறிவுரை இருக்க வாய்ப்புள்ளதாகத் தோன்றுகிறது. அத்துடன் கோயிலுக்குள் தலைப்பாகை அணிந்து செல்வதும் அரசன் கொடுத்த உரிமைகளுள் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஆனால் தேர், திருவிழாக்கள், காணிக்கை, கைக்கூலி கூடாது என்ற அய்யாவின் அறிவுரைகளுக்கு எதிரானவையாகவே இவை விளங்குகின்றன. காணிக்கையைக் கூட “விளக்கெண்ணெய்க் காசு”, அதாவது கோயில் பராமரிப்புக்கு, என்ற பெயரில்தான் குறிப்பிடுகிறார்கள்.  

அடிகளாரின் காலத்துக்குப் பின் அவர் உருவாக்கிய நிழல்தாங்கல்கள் கணக்கு(குறி) சொல்லும் நிலையங்களாக மாறின. புதிதாக பதிகளும் தோன்றின. அய்யா வழியினர் கோயிலைப் பதி என்றும் வீட்டைக் கூரை என்றும் கூறுவர். ஞாயிற்றுக்கிழமைகளில் நிழல்தாங்கல்கள் அனைத்திலும் கணக்குச் சொல்வதும் பதிகளிலும் நிழல்தாங்கல்களிலும் உச்சிப்படிப்பு, வாகனம் எடுத்தல் முதலிய வழிபாட்டு நிகழ்வுகளும் நடைபெறும். திருவிழாக்களும் நடைபெறும். கார்த்திகை மாதம் சாமிதோப்பு தொடங்கி அனைத்துப் பதிகளிலும் நிழல்தாங்கல்களிலும் அடிகளாரின் ஆணையில் எழுதப்பட்ட அகிலத் திரட்டு அம்மானை என்ற நூலைப் படித்து உரை விளக்கம் செய்யும் நிகழ்ச்சி ஏடு வாசிப்பு என்ற பெயரில் நடைபெறும். இந்த வாசிப்புக் காலத்தில் சாமிதோப்பிலிருந்தும் பிற பதிகளிலும் நிழல்தாங்கல்களிலும் இருந்தும் குழு குழுவாக பிச்சை என்று அழைக்கப்படும் அரிசி, பணம் நன்கொடைகள் திரட்டுவர். இது பொதுவான நடைமுறை.

ஒரு 70 ஆண்டுகளுக்கு முன் அய்யா வழியினருக்கு மதிப்பு இருந்ததில்லை. அவர்கள் நெற்றியில் இடும் நாமத்தை கொக்கு பீச்சியிருக்கிறது என்று முகத்துக்கு நேராகவே கேலி செய்வார்கள். அப்போதெல்லாம் சாமிதோப்புக்கு வருவோரில் மிகுதி மேற்கு வட்டங்களில் நாயர்களின் கொடுமைகளுக்கு உள்ளாகும் நாடார் சாதியினரே மிகுதி. கிழக்கு வட்டமாகிய அகத்தீசுவரத்தில் அய்யாவின் மணவர்களாக இருந்தவர்களின் வழியினர் தவிர கோட்டாறு கூலக்கடைத் தெரு, வடசேரி கனகமூலம் சந்தை வெற்றிலை வாணிகர்களே மிகுதி. இவர்களில் பெரும்பாலோர் எங்கள் ஊர்க்காரர்கள். எங்கள் ஊர்க்காரர்கள் ஒரு காலத்தில் வெற்றிலை வாணிகர் சாதியினராகிய இலைவாணிகர்கள் எனப்படுவோருக்கு களியக்காவிளையிலிருந்து வண்டிகளில் வெற்றிலை ஏற்றி சந்தைக்குக் கொண்டுவந்தவர்களாகும். நாளடைவில் பெரும் பணக்காரர்களான இலைவாணிகர்கள் வாணிகத்தில் ஈடுபாட்டைக் குறைத்ததனால் வண்டிக்காரர்களே வாணிகர்களாயினர். இந்தப் புது வாணிகர்களின் உறவினர், நண்பர்களில் சிலரும் இவ்வாணிகத்தில் ஈடுபட்டனர். அத்துடன் பாக்கு, அதாவது கமுகிலிருந்து பெறப்படும் பச்சைப் பாக்கு வாணிகத்திலும் ஈடுபட்டனர். இவ்வாறு புதிதாக சந்தையினுள் நுழைந்த இவர்கள் எந்தவிதமான சிக்கல்களை அச்சந்தைகளில் வாணிகம் செய்த பெரும்பான்மையினரான பிற சாதிகளிடமிருந்து எதிர்கொண்டனரோ, அனைவரும் சாமிதோப்புக்கு தவறாமல் வரும் அன்பர்களாக மாறினர். என் தந்தையாரும் அவ்வாறே. நகருக்குள் அவர் எதிர்கொண்ட சாதிய இழிவுகளாலும் ஊரில் ஊர்த்தலைவர்களான நாடான்களுடனான முரண்பாடுகளாலும் அவர் எங்கள் வட்டார திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரானார்.

இன்று அய்யாவின் பெயரைக் கூறி அவர்தான் நாடார்களின் எழுச்சிக்கு அடிகோலிய ஒரே விசை என்று ஓங்கி அடிப்பவர்களுக்கு உண்மையில் அவரது இயக்கத்தின் வரலாறு தெரியாது. அன்று நாமம் அணிந்திருந்தவர்களைப் பார்த்து கொக்கு பீச்சியிருக்கிறது என்று ஏளனமாகப் பேசி இழிவுபடுத்தியவர்களில் பணக்காரர்களின் வழி வந்தவர்பகளே இவர்கள். இன்று சாதி அடிப்படையில் ஒதுக்கீட்டுப் பலன்களைப் பெற நாடார்களைத் தங்கள் பின்னால் அணிதிரட்டும் முயற்சியின் ஒரு பகுதிதான் இந்தப் பரப்பல். வாக்கு வேட்டையாடிகளையும் இந்தக் கணக்கில் சேர்க்க வேண்டும்.

அடிகளாரின் பணிகளால் சாணார்களின் மீட்சிக்கு குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எந்தப் பயனும் கிடைத்ததாகச் சொல்ல முடியாது. போராட்டத்துடன் அவர் தொடங்கிய பணி அவராலேயே இடையில் கைவிடப்பட்டது. எந்தக் காரணத்தால் கிறித்துவ விடையூழியர்கள் தங்கள் பணியைப் பாதியிலேயே விட்டார்களோ அதைப் போன்ற, அதே இடத்திலிருந்து தோன்றிய ஓர் அழுத்தத்தினால் இவரும் தன் போராட்டத்தைப் பாதியிலேயே விட்டார். சாணார்கள் தங்கள் உழைப்பு, சிக்கனம், ஒற்றுமை ஆகியவற்றாலேயே விடுதலையும் மேம்பாடும் அடைந்தனர். அத்துடன் மாதவையா, சி.பி.இராமசாமி ஐயர் போன்ற முற்போக்குச் சிந்தனை உள்ள திருவிதாங்கூர் திவான்களுக்கும் இந்த எழுச்சியில் பங்குண்டு. திருவிதாங்கூர் அரசால் கட்டப்பட்ட பேச்சிப்பாறை அணை நீர் சாணார் பகுதிகளுக்குப் பாய்ந்து நெல்வயல்களையும் தென்னந்தோப்புகளையும் உருவாக்கியது அவர்களது செல்வநிலையை மிக மேம்படுத்தியது. இராமசாமியார் புகுத்திய கட்டாய இலவயக் கல்வி சாணார்களின் எழுத்தறிவை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தி அரசுப் பணிகளில் அமர்த்தியது. இதனால் இப்போதிருக்கும் தலைமுறையினருக்குத் தங்களுக்கு முன்பிருந்த தலைமுறையினர் பட்ட அல்லல்கள் தெரியாது. சென்ற 1982ஆம் ஆண்டு சங்கக் குடும்பங்களும்(பரிவாரங்களும்) வல்லரசியமும் உருவாக்கிய கலவரம் சாணார்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தியது. இந்தக் கலவரத்தின் பின்னணியில் இந்து முன்னணித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட தாணுலிங்க நாடார் பாண்டிய அரச மரபில் கடைசியாக வள்ளியூரில் ஆட்சி செய்து கன்னடரால் அழிக்கப்பட்டவர்களின் தொடர்ச்சியாக தெற்கு நோக்கி வந்து பொற்றையடி ஊரில் திருவிதாங்கூர் மன்னரால் நாடான் பட்டத்துடன் அமர்த்தப்பட்டவர்களின் வழிவந்தவர் என்று தெரிகிறது. அவர் மரபே முற்றிலும் திருவிதாங்கூர் அரசருக்கு இணக்கமாக சாணார்களுக்கு மட்டுமல்ல தமிழுக்கும் தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் தீங்கு இழைப்போராகவே வாழ்ந்துவருகின்றனர். அந்த அடிப்படையில் இந்து நாடார் என்ற அடையாளத்தைக் காட்டி உலகெலாம் உள்ள பணக்கார இந்து நாடார்களிடமிருந்து சங்கக் குடும்பங்களுக்கு(சங்கப் பரிவாரங்களுக்கு) நிலையாகப் பணம் பாய்வதற்கு ஏற்பாடு செய்துவிட்டார். ஆக, தமிழர்களின், குறிப்பாக நாடார்களின் வளர்ச்சியைத் தடுப்பது தமிழகத்திலுள்ள தனது நலன்களுக்கு உகந்தது என்று திட்டமிட்டு களத்தில் இறங்கிய எதிரியாகிய மார்வாரிகளிடம் பொருளியல் களத்தில் உள்ள ஒட்டுமொத்த நாடார்களுமே மண்டியிட்டுக் கிடக்கிறார்கள்.

குமரி மாவட்டத்தை விட்டால் சென்னையில்தான் அய்யா வழி வழிபாடு பிற பகுதிகளை விட முனைப்பாகச் செயற்படுவதாகத் தெரிகிறது. இதற்குக் காரணம் செயலலிதாவின் தோழி சசிகலாவின் கூட்டம் நாடார்களின் பொருளியல் நிறுவனங்களை விழுங்க முயன்றதன் எதிர்வினையாகும். ஆனால் அங்கும் பூசை, திருவிழாக்களுக்கு அளிக்கப்படும் முகாமை மக்களை ஒன்றுப்படுத்துவதற்குக் கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த வகையில் வழிபாட்டை அங்கு உருவாக்கியவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை. சசிகலா கூட்டத்தின் படையெடுப்புகள் முழு வெற்றியுடன் தொடர்கின்றன என்றே தெரிகிறது. இது மார்வாரிகளின் படையெடுப்பின் முனைப்பை நாடார்களின் மட்டுமல்ல தமிழக மக்களின் கண்களிலிருந்தும் மறைக்கிறது.

மார்வாரிகள் தமிழக மக்களைப் போல் ஆண்டு 365 நாட்களும் கோயில்களில் ஆறு வேளை அல்லது மூன்று வேளை பூசை, வழிபாடு என்று நேரத்தையும் கவனத்தையும் செல்வத்தையும் வீண்டிப்பதில்லை. ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு சிறப்பு நாட்களோடு தங்கள் சமய நடவடிக்கைகளை முடித்துக்கொள்கிறார்கள். அதை நாமும் கடைப்பிடிக்க வேண்டும். கடவுள் கோயில்களில் மட்டும் இல்லை எங்கும் நிறைந்தவன் என்பதை மனதில் ஏற்றுக்கொண்டு விரும்பினால் தான் இருக்கும் இடத்திலிருந்தே எந்த நேரச் செலவும் பணச் செலவும் இல்லாமல் வழிபடலாம். “கிழவி, சாமி இருக்கும் திசை நோக்கிக் காலை நீட்டாதே” என்று சொன்ன கோயில் ஊழியனை நோக்கி, “சாமி இல்லாத திசையைக் காட்டப்பா, அந்தத் திசையில் என் காலை நீட்டுகிறேன்” என்று ஔவை சொன்னதன் உட்பொருளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடவுள் மனிதனைப் போல் நாம் முன்வைக்கும் வேண்டுகைகளுக்காக கைக்கூலி கேட்பவர் அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மனம் ஒன்றி கடவுளிடம் நம் துன்ப துயரங்களைப் பகிர்ந்து ஆறுதல் பெற விரும்புவோருக்கென்று வட்டார அடிப்படையில் வழிபாட்டுக் கூடங்களை அமைத்து அங்கு வருவோர் ஒன்றிணைந்து அதனைப் பராமரிக்க வேண்டும். அங்கு உருவம் என்ற ஒன்று கூடத் தேவையில்லை. மண்டபத்தைப் பேண ஒரே ஊழியர் மட்டும் போதும். அத்தகைய ஒரு சமயமாக வருங்காலத் தமிழகச் சமயம் அமையட்டும்.
நிறைவுற்றது.

பெருமாள் முருகனின் "மாதொருபாகன்"



பெருமாள் முருகனின் "மாதொரு பாகன்"
குமரிமைந்தன்
பெருமாள் முருகனின் "மாதொரு பாகன்" புதினத்துக்குத் தடை விதிக்க முடியாது என்ற சென்னை உயர்நயமன்றத் தீர்ப்பைக் கண்டு கொதிக்கிறார் பனியாக்களின் தமிழ்நாட்டுப் பேச்சாளரும் ஒருங்கிணைப்பாளரும் இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.) பெருச்சாளியுமான தணிக்கையாளர் எசு.குருமூர்த்தி.
இந்தப் புதினம் பற்றிய சிக்கலைக் கிளப்பியவர்கள் தமிழகத்ததுக்கு வெளியே உள்ளவர்களே. புதினம் வெளிவந்து 4 ஆண்டுகள் வரை எந்தச் சலசலப்போ குறுகுறுப்போ எங்கும் இல்லை. இது ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பின்னர்தான் சிக்கலைக் கிளப்பினார்கள். எங்கே பூசல்களையும் புகைச்சல்களையும் கிளப்பி தங்கள கால்களை ஊன்றலாம என்று கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் காத்திருக்கும் சங்கக் குடும்பங்கள் இந்நூலைப் படித்து இதில் கவுண்டர்களைக் கிண்டிவிட வழியிருப்பதாகக் கணக்குப்போட்டனர். நமது குருமூர்த்திதான் தமிழகத்தில் சாதி அடிப்படையில்தான் தொழில் வளர்ச்சி முடியும் என்று கோவை, மதுரை பெருநகர்களில் கூட்டங்கள் போட்டு சாதிகளை மறந்து தமிழக மக்கள் ஒன்றிணைந்து பனியாக்களுக்குப் போட்டியாக வந்துவிடக்கூடாது என்பதற்காகப் பாடுபட்டவராச்சே. அதனால் வலுவான சாதிகளில் குறிப்பிடத்தக்க புள்ளிகள் பற்றிய கணக்கு அவரிடம் ஆயத்தமாக இருக்குமே, அப்படித்தான் இச்சிக்கல் கவுண்டர்களின் தன்மானச் சிக்கலாக வெளிப்படுத்தப்பட்டது. குருமூர்த்தி இந்தப் புதினத்தில் இல்லாத செய்திகளை இட்டுக்கூறுகிறார். அந்தக் கதையின் உச்ச கட்டத்தில் அங்கு வரும் இளைஞர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற குறிப்பு இருப்பதாக எனக்கு நினைவில்லை. ஆனால் இவர் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று இருப்பதாக உண்மைக்குப் புறம்பாகக் கூறுகிறார்.
புதின ஆசிரியர் ஒரு கருத்தை வலிமையாகப் பதிந்திருக்கிறார், அதாவது கதைத் தலைவி பாலியல் உணர்வைத் தீர்த்துக்கொள்ள அடுத்தவர் உறவை நாடவில்லை என்பது அது. அவள் திருமணத்துக்கு முன் பார்த்து விரும்பிய இளைஞனின் முகத்தோற்றத்தைக் கொண்டவனையும் தன் கணவனின் சாயலில் இருந்த இளைஞனையும் தவிர்த்து தனக்கு முற்றிலும் புதியவனாகத் தோற்றமளித்த ஒருவனையே தேர்ந்தெடுக்கிறாள். தான் அயலானைக் கூடுவது காம உணர்வைத் தணிப்பதற்கல்ல, பிள்ளை பெறும் ஒரே நோக்கத்துக்காகத்தான் என்பதை தெளிவாகவே புரியவைக்கிறார் ஆசிரியர்.
குருமூர்த்தியின் இன்னொரு குற்றச்சாட்டு ஆசிரியர் தான் களப்பணி செய்து கிடைத்த புலனங்களின்(தகவல்களின்) அடிப்படையில்தான் இந்தக் கதை நிகழ்வுகளை எடுத்துவைத்தேன் என்று நூலில் குறிப்பிட்டிருப்பதாகவும் அதே நேரத்தில் சாதிக்காரர்களிடம் பஞ்சாயம் பேசிய போது அவர் குறிப்பிட்ட சான்றுகளில் எதையுமே எடுத்துவைக்கவில்லை என்பது. இது ஏன் என்று குருமூர்த்திக்குத் தெரியாமல் இருக்காது. பெருமாள் முருகனுக்கு இந்தச் சிக்கலைக் கிளப்பிவிட்டவர்களின் இலக்கு என்னவென்று தெளிவாகவே தெரிந்திருந்தது, இந்த நூலை வைத்து கோவை, அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில், 1982இல் குமரி மாவட்டத்தில் போல் ஒரு கலவரத்தை உருவாக்கி அந்த வட்டாரத்தில் வலுவாகக் காலூன்றலாம், தாணுலிங்கம் போன்று காட்டிக்கொடுக்கும் இரண்டகர்களை அங்கும் உருவாக்கலாம் என்பது. அதற்கு இடம் கொடுக்காமல் மன்னிப்புக் கேட்டு தன் எழுத்துப் பணியையே ஈகம் செய்வதாக அறித்த செயல் பாராட்டுக்குரியது. அவருக்கு நம் வாழ்த்துகள்.
இனி, ஒரு பெண் தன் கணவனைத் தவிர பிறிதொரு மனிதனுடன் உறவு கொள்வது பற்றிய நம் மனப்போக்கு, மரபுகள் பற்றிய சில செய்திகளைப் பார்ப்போம்.
நம் குமுகத்தில் ஒரு பெண்ணுக்கு திருமணத்துக்குப் பின் குறிப்பிட்ட காலத்துக்குள் குழந்தை இல்லாவிட்டால் அவள் படும் பாடு, அவளைப் பிறர் படுத்தும் பாடு சொல்லி மாளாது. முதலில் அவளுக்கு மலடி என்ற பட்டம், அவள் கணவனின் வளமை பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை. உடலுறவில் மனைவியை நிறைவு செய்ய இயலாத பேடிமையும் வளமை இன்மையும் ஒன்றல்ல. இதனால் கணவனின் வளமையில் ஐயுறும் பெண் அடுத்தவனை நாடுவதும் பல இடங்களில் நடக்கிறது. காஞ்சிபுரத்தில் நான் குடியிருந்த வீட்டின் பின் புறம் இருந்த வீட்டில் குடியிருந்த நடுப்பருவத்தை நெருங்கிய குழந்தை இல்லாத பெண் அண்டையில் குடியிருந்த இளைஞனுடன் இருந்ததைக் கணவன் கண்டுவிட அவள் தாய்வீட்டுக்குச் சென்று சில மாதங்கள் சென்று திரும்பி வந்தாள். மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர். நாம் குறிப்பிடும் புதினத்திலும் இருவரது பாலியல் உறவில் எந்தச் சிக்கலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நான் பணியாற்றிய காலத்தில் பல இடங்களில் ஒரு செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறேன், அதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் சோளப்பயிர் பொதி வந்திருக்கும் நிலையில் ஊரிலுள்ள இளம் பெண்களும் ஆண்களும் கொல்லைக்குள் புகுந்து ஒருவரை ஒருவர் துரத்திப் பிடித்துத் தமக்கு விருப்பமானவருடன், கூடத் தடைசெய்யப்பட்ட உறவுகள் போன்ற எந்தக் கட்டுப்பாடும் இன்றி உடலுறவுகொள்வர் என்பது. இதற்குக் கூறப்படும் விளக்கம், இவ்வாறு செய்வதால் பயிர்களின் விளைச்சல் பெருகும் என்பது. சொல்லாத விளக்கம் மகப்பேறு இல்லாத பெண்களுக்கு பிள்ளை பெறும் வாய்ப்பு என்பது.
விளைச்சல் கூடும் என்பது அறிவியல் சார்ந்தது. நெல், சோளம் போன்ற புல்வகைத் தவசங்களின் மகரந்தச் சேர்க்கை வண்டு, பூச்சிகள் போன்றவற்றால் நிகழ்வதில்லை, காற்றாலேயே தூள்களை கொண்டு சேர்க்கப்படுகின்றன. அதனால் வேளாண்துறையினர் ஒட்டு வகை தவசங்களை உருவாக்க ஒரு பொதியை இன்னொரு பொதியின் மீது மோதுவதுபோல் குலுக்குவார்கள். பொதி வரும் காலத்தில் உரிய காற்று இல்லை என்றால் விளைச்சல் மிகக் குறைந்து போகும்.1966ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் புயல் வீசி அழித்த போது குமரி மாவட்டத்தில் காற்று இன்றி நெல் பதராகிப்போனது இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது போன்ற பின்னணியில் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் துரத்தி ஓடும் போது பயிர்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி மிக உயர்ந்த மகரந்தச் சேர்க்கை நடைபெறும். இன்றைய நிலையில் பெரும் பரப்பில் பயிர்கள் விளையும் இடங்கில் பொதி வரும் காலத்தில் உலுங்கு வானூர்திகளை(எலிகாப்டர்களை) அப்பரப்பின் மீது பறக்கவிட்டு மகரந்தச் சேர்க்கையை உறுதிப்படுத்தலாம்.
மதுரையில் கள்ளழகர் சித்திரை வெள்ளுவாவன்று வைகை ஆற்றில் இறங்குகிறார். அது போல் காஞ்சியில் வரதராசப்பெருமாள் பாலாற்றில் இறங்குகிறார். எண்ணற்ற இடங்களில் இது போன்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவனந்தபுரம் பத்மநாதரும் குமரி மாவட்டம் பறக்கை மதுசூதனப்பெருமாளும் கடலுக்கு நீராடச் செல்வர், ஆனால் இவை ஆறாட்டுஎன்ற சொல்லாலேயே குறிக்கபடுகின்றன. ஆனால் இவை எவற்றிலும் கிடைக்காத செய்தி ஒரு மலைக் குடியிருப்பில் எனக்குக் கிடைத்தது. 1968இல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த செண்பகத்தோப்பு மலைப்பகுதியில் ஓர் அணை கட்டுவதறகான புலனாய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தோம். எங்களுக்கு உதவியாக அந்த மலைப் பகுதியில் வாழும் மலையாளி என்ற வகுப்பு மலைவாழ் மக்களில் சிலர் பணியாற்றினர்(அவர்கள் தமிழர்கள்தாம், மலையாளிகள் என்பது ஒரு பழங்குடிப் பெயர். அவர்கள் வாழும் காட்டுப் பகுதிக்கு மலையாளக் காடுகள் என்றும் பெயர். சவ்வாது மலைத்தொடர் என்ற இந்த தொடர் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்குக்கு மேற்கிலும் சேலம் மாவட்டத்துக்குக் கிழக்கிலும் 100 மைல் தொலைவுக்கு நீண்டு கிடக்கிறது. நான் குறிப்பிடும் காலத்தில் அங்கு அங்கிங்கெனாத படி எங்கும் சந்தன மரங்களாக இருந்தன, அதனால்தான் அதற்கு சவ்வாது மலை என்ற பெயர். அந்தப் பகுதி மக்கள்தாம் இப்போது செம்மரம் வெட்ட ஆந்திரம் சென்று உயிரை விடுகின்றனர்.) அப்போது சித்திரை வெள்ளுவா அன்று விடுமுறை வேண்டுமென்றனர். எனென்று கேட்ட போது அன்று இரவு சாமி ஆற்றில் இறங்குவதாகவும் அதற்கு ஊரார் அனைவரும் ஆற்றினுள் இரவு நெடுநேரம் இருப்போம் என்றும் கூறினர். அப்போது பேச்சோடு பேச்சாக அன்றிரவு ஆற்றினுள் ஆண்களும் பெண்களும் தாம் விரும்பும் எந்த ஒருவருடனும் எந்தத் தயக்கமும் இல்லாமல் உடலுறவு கொள்வார்கள் என்ற செய்தி வெளிப்பட்டது. நான் விளையாட்டாக நாங்களும் வருகிறோமே என்றேன். அதெல்லாம் முடியாது எங்கள் மக்கள் தவிர பிறரை விடுவதில்லை என்று கூறினர். அப்படியானால் இந்த ஆறாட்டுகளும் சாமிகள் ஆற்றுக்குள் இறங்கும் நிகழ்வுகளும் என்றோ ஒரு நாள் குழந்தைப் பேறுக்கோ, திருமணத்தின் மூலம் முறை மாப்பிள்ளை, அகப்புற மணமுறைகளுக்கு அப்பால் ஒருவரை விரும்பி எண்ணம் நிறைவேறாமல் வாழ்வோரின் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு வகைதுறையாக இது கடைப்பிடிக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. (மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது கூட சில ஒதுக்குப்புறங்களில் குறிப்பிட்ட சில குழுவினர் இது போன்ற மரபுகளைக் கடைப்பிடிப்பதாக ஒருவர் கூறினார்.)
இனி குழந்தைப் பேற்றுக்காக நம் பெண்கள் எத்தனை இன்னல்களை பட்டறிந்திருக்கிறார்கள் என்பதை நம் தொன்மங்கள் சொல்பவற்றிலிருந்து பார்ப்போம்.
தொன்மங்களுக்குள் நுழைவதற்கு முன் கழகத் தமிழ் இலக்கியங்களினுள்ளும் தொல்காப்பியத்தினுள்ளும் சிறிது நுழைந்து திரும்புவோம்.
குறிஞ்சித் திணையின் உரிப்பொருள் கூடல். இங்கு ஓர் ஆடவனும் பெண்ணும் தற்செயலாகச் சந்தித்து இருவரும் புணர்முறையுள்ள குழுக்களைச் சேர்ந்தவர்களா என்பதை உடை, சூடும் பூக்கள் போன்ற அடையாளங்கக்ளை வைத்து தெளிந்து கூடிப்பிரிவது. அதே இணை மீண்டும் கூடுவது அரிது. அவளும் அவனும் வெவ்வேறு வேளைகளில் வெவ்வேறு இணைகளோடு இணையலாம். குழந்தைகள் பெண்ணின் குழுவுக்கு உரியதாயிருந்ததால் இதில் சிக்கல் இல்லை. முல்லை நிலத்தில் பெண் தான் சந்தித்து விருமபியவனை தோழி ஒருத்தியின் துணையுடன் பெற்றோருக்குத் தெரிவித்து தன் கூட்டத்துடன் சேர்த்துக்கொள்வது இருத்தல். ஆயர்களில் தாய்வழிப் பிரிவில் உள்ள பெண்டுக்கு மேய்க்கி என்ற முறையை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.
மருத நிலத்தில் காட்சி முழுமையாக மாறுகிறது. இங்கு தோழி முல்லை நிலத்தைப் போல் தலைவிக்குச் சமமானவளல்லள், வேலைக்காரி போன்றவள். இங்கே நாம் தலைவியைப் பற்றிப் பேசப் போவதில்லை, தோழியைப் பற்றியே பேசப்போகிறோம். இந்தத் தோழி தலைவியின் செவிலியின் மகள். அந்தச் செவிலியோ தலைவியின் தாயின் தோழி. தாயின் பிள்ளைகளை வளர்ப்பவள். அவளுக்கு இந்தக் குடும்பம்தான் வீடு. இவளுக்குக் குழந்தைகள் எப்படிப் பிறக்கின்றன? அந்த வீட்டு ஆடவர்களினால்தான். குழந்தையை வளர்க்க இப்படி ஒரு செவிலியை வைத்துவிட்டு அந்த வீட்டின் தலைவி தன் பொழுதை எப்படிப் போக்குவாள்? விளையாடிப் போக்குவாளா? விளையாட்டுத் தோழிகள் யார்? வேலைக்காரிகளாக இருக்க வேண்டும், அல்லது வீட்டுத் தலைவனின் பிற மனைவிகளாக இருக்க வேண்டும். இந்த விடையைத் தேடுவது நமக்கு இங்கு தேவை இல்லையென்றாலும் நம் பண்டைக் குமுகத்தின்ன் இயங்குநிலையைப் பற்றிய ஒரு புரிதலுக்கு உதவும் என்பதால் இங்கு குறிப்பிடுகிறேன். இந்தச் செவிலி என்பவள் தமிழில் வெள்ளாட்டி என்பவளுக்கு இணையானவள் என்று நினைக்கிறேன். வெள்ளாட்டி என்ற சொல்ல்லுக்கு வேலைக்காரி, வைப்பாட்டி என்ற இரு பொருட்களைத் தருகிறது அகராதி. இரு பொருள்களும் ஒருத்தியைக் குறிக்கிறதா, வெவ்வேறு ஆட்களைக் குறிக்கிறதா என்ற ஐயம் இருந்தாலும் ஒருவரைக் குறிப்பதாகக் கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். செவிலியின் ஆண்மகன் குடும்பத் தலைவியின் ஆண்மகனுக்குத் தோழன். பெரும்பாலும் அவனது விலைமகளிர்க்குத் தூதுவனாக, பிற்காலத்தில் பார்ப்பானாக திரிவாக்கம் பெற்றிருக்கலாம். அல்லது வீட்டு ஆள்வினையில் ஈடுபட்டு பிள்ளையாக - பாலகன் என்பது சமற்கிருத வடிவம் - மாறியிருக்கலாம். செவிலியின் மகள் அவளது தோழியாக அவளுடன் கணவன் வீட்டுக்கு விடப்படுகிறாள், அங்கு அவளது மக்களுக்குச் செவிலியாகவும் அவளது கணவனுக்கு வைப்பாட்டியாகவும் வாழ்கிறான்
நம் குமுகத்தில் இன்றும் சில பணக்காரக் குடும்பங்களில் தங்கள் சாதி அல்லது தங்களதை விட தாழ்ந்தது என்று கருதப்படும் சாதிகளைச் சார்ந்த ஒரு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த கணவனும் மனைவியும் வீட்டு வேலைகளையும் வேளாண்மையையும் பார்த்துக்கொள்ள பெண்கள் குடும்பத்து ஆண் பிள்ளைகளுக்கு வைப்பாட்டிகளாக வாழும் நிலை உள்ளது.
இது போன்ற நிகழ்முறையை இங்கிலாந்து கோமகன்கள்(பிரபுக்கள்) குடும்பத்திலும் பார்க்க முடிகிறது. நாம் பரவலாக அறிந்த "கல்லிவர் செல்கைகள்"(Gulliver’s Travels) புதினத்தின் ஆசிரியரான சொனாதன் சுவிப்டு(Jonathan Swift) ஒரு கோமகன் குடும்பத்தில் வீட்டு ஆள்வினைகளைப் பார்த்து வந்தவர். அங்கு வேலை பார்த்த ஒரு பெண்ணும் அவரும் காதலித்து வந்தனர். ஒரு நாள் அவருக்குத் தெரிய வருகிறது, தான் இப்போதைய கோமகனின் தந்தைக்கு அவரது வேலைக்காரி மூலமாகப் பிறந்த கள்ளப்பிள்ளை(illegal child) என்று. அது மட்டுமல்ல தான் காதலிக்கும் பெண் இப்போதைய கோமகனின கள்ளப்பிள்ளை என்பதும் தெரிய வந்தது. அதாவது அந்தப் பெண்ணுக்குத் தான் முறைப்படி சிற்றப்பன் என்பது. அவருக்கு வாழ்க்கையே வெறுத்துப் போயிற்று. வேறொரு பெண்ணைக் காதலித்தார். இருப்பினும் முன்னவளைத் தன் பராமரிப்பிலேயே வைத்திருந்தார். அதனால் அவர்களுக்குள்ள உறவைக் கொச்சைப் படுத்தி அவர் காதலி கூற அதற்கு அவளைக் கண்டித்துக் கடுமையாக ஒரு மடலை இவர் எழுத அவள் தற்கொலையே செய்துகொண்டாளாம். அதன் பின் இறுதி வரை தன் முன்னாள் காதலியைத் தன்னுடன் வைத்துக்கொண்டு திருமணமே இல்லாமல் வாழ்ந்திருக்கிறார். ஆங்கிலக் குமுகத்தின் மீதுள்ள அவரது வெறுப்பு அவரது நூலில் துலக்கமாக வெளிப்பட்டுள்ளது. ஆங்கிலக் குமுகத்தைக் கிண்டலடித்து கோல்டுசிமித்து எழுதிய உலகக் குடிமகன் (The Citizen of the World) புதினத்தைவிட மிகக் காட்டமானது இவரது இந்த நூல். அதன் சுருக்கத்தை குழந்தைகள் இலக்கியமாகப் படிப்பவர்களுக்கு இது புலப்படாது. குதிரைகள் ஆளும் நாட்டில் அரசனான குதிரையிடம் தன் பட்டறவுகளைப் பற்றி கல்லிவர் பேசும் போது குதிரை கேட்கும், நீங்கள் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் போல் தெரிகிறதே என, ‘ஐய்யைய்யோ நான் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவன், பெரிய குடும்பத்தவன் என்றால் இளம் அகவையில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி சொத்தை எல்லாம் அழித்து உடலையும் கெடுத்து பணத்துக்காக ஒரு கிழட்டுச் சீமாட்டியைக் கட்டிக்கொண்டு அதில் பிறக்கும் பிள்ளை என்னைப் போல் கட்டுடலுடன் இருக்குமாஎன்று கேட்பான்.
கோவலன் போன்ற ஒருவனின் விளக்கமாக இது இல்லையா? கோவலனுக்கு சிறு அகவையிலே மணம் முடித்து வைத்ததுதான் வேறுபாடு.
இப்படி பெண்கள் திருமணமாகிக் கணவன் வீட்டுக்குப் போகும் போது இடம் பெயர்ந்த செவிலிகளின் மரபினர் நாடு முழுதும் பரந்தனர். சோழ நாட்டைப் பொறுத்த வரை களப்பிரர் படையெடுத்த போது இந்த நிலக்கிழார்கள் நொறுங்கிப்போக இந்த செவிலியர் மரபினர் ஒருங்கிணைந்து பிள்ளைகள் என்ற பட்டத்துடன் வெள்ளாளராகியிருக்கலாம்.
அது போலவே பாண்டிய நாட்டில் வெள்ள நாடான்கள் என்பவர்கள் வெள்ளாளப் பெண்களை பாலியலில் கொடுமையாகக் கையாள, அதை திருவிதாங்கூர் அரசன் இரு வெள்ள நாடான்களுக்கு எதிராகப் பிறப்பித்த பிடியாணையை இரண்டு கல்வெட்டுகள் மூலம் காட்டுகிறார் The Dravidian Lineage என்ற நூலின் ஆசிரியர் இம்மானுவேல் அவர்கள். அக்கல்வெட்டுகளில் ஒன்று நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ளது. அப்போது பாண்டிய அரசு பங்காளிச் சண்டைகளால் பெரும் நெருக்கடியில் இருந்ததால் வலுவிழந்து கல்லிடைக்குறிச்சி வட்டாரம் திருவிதாங்கூர் மன்னனின் ஆளுகையின் கீழ் இருந்தது. பாண்டிய நாட்டின பகுதிகளாகிய நாடுகள் எனும் பகுதிகளின் ஆட்சியாளர்களாகிய நாடான்களும் இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்புண்டு. இதைப் பயன்படுத்தித்தான் அரியநாத பிள்ளை நாயக்கர்களுக்காகக் களத்தில் இறங்கி வெள்ளாளர்களுக்கு விடுதலை வழங்கியிருக்க வாய்ப்புள்ளது. மறவர் பாளையங்களாயிருந்து பின்னர் ஆங்கிலர் காலத்தில் இடைக்கிழாரியங்களாக(சமீன்தாரியங்களாக) மாறியவற்றில் உள் வீட்டுப் பணிகளைப் பார்த்தவராக இருந்து கிடைத்த கல்வியால் பிற்காலத்தில் மேன்மையடைந்த அகமுடையார்களும் இத்தகையவர்கள்தாமோ?

நாம் பிள்ளைப் பேறு பற்றிக்கூற வந்தோம். தொன்மங்களிலுள்ள செய்திகள் பற்றி அடுத்துப் பார்ப்போம்.
பண்டை மக்களில் நெருப்போம்பும் பூசகப் பெண்தான் குமுகத் தலைமை ஏற்றிருந்தாள். பின்னர் இந்திரன் என்ற பதவி உருவான பின்னும் தலைவியாக பெண் இந்திராணியாக நிலைத்திருக்க குறிப்பிட்ட தகுதியில் வெற்றி பெற்ற ஆடவன் இந்திரனாக மாறி மாறி வந்தனர் என்பது மகாபாரதத்தில் நகுசன் கதையில் தெரிகிறது. அடுத்த கட்டமாக மூத்த ஆண் மகனே ஆட்சிக்கு உரியவனானான். எனவே இருக்கும் அரசனுக்கு அடுத்து அரியாசனத்தில் அமரும் ஆண்மகவைப் பெற்றெடுக்கும் அரசி தெய்வமாகப் போற்றப்பட்டாள். பழையோள் குழவி என்று முருகனோ வேறு யாரோ போற்றப்படும் பழையோள் எனும் தெய்வம் குழந்தையைக் கையில் வைத்திருக்கும் இயக்கியாக நம் குமுகத்தில் வணங்கப் படுகிறாள். இதே தெய்வம்தான் கன்னி மரியாக உருமாற்றம் பெற்றுள்ளது. அதாவது அங்கு வழக்கிலிருந்த ஒரு கன்னித்தாயின் வழிபாட்டை மாற்ற முடியாமல் ஏசுவுக்கு இணையாக அவரது தாயையும் உயர்த்தி அந்த மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் அங்கு மத்ததை நிலைநிறுத்தச் சென்ற ஏசுவின் மாணவர்கள். நம் நாட்டில் வழிபடப்படும் இயக்கியின் குழந்தைக்கும் கன்னிமரியின் மகனுக்கும் தந்தை யார் என்ற கேள்விக்கே இடமில்லை.
அடுத்த கட்டமாக கணவனான அரசன் மூலம் ஆண் மகவே பிறக்கவில்லை என்றால் எனன செய்வது? அதைப் பற்றித்தான் தொன்மம், அதிலும் மகாபாரதம் விலைமதிப்பில்லா செய்தியைத் தருகிறது. ஓர் அரசனுக்கு ஆண்மகவு இல்லையென்றால் குல குரு, ஒரு பார்ப்பன மாணி(பிரம்மச்சாரி), யாராவது ஒரு பார்ப்பனன், கணவனின் உடன்பிறந்தார், எவனோ ஓர் ஆடவன் என்ற வரிசை முறையில் ஒருவனுடன் அவள் உறவு கொள்ளலாம் என்று அது வரையறுக்கிறது. இது அரசனுக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் பொருந்தும்.
இதில் விந்தை என்னவென்றால் உடலுறவின் போது ஆண், பெண் இருவரில் எவருடைய விந்தணு அல்லது கரு முட்டை வலுவானதோ அதுதான் பிறக்கும் பிள்ளையின் பாலை முடிவு செய்கிறது என்று பல ஆண்டுகளுக்கு முன் குமுதம் இதழில் படித்திருக்கிறேன். ஆணின் விந்தணு வலிமையாக இருந்தால் பிறக்கும் குழந்தை பெண்ணாக இருக்கும், பெண்ணின் கருமுட்டை வலிமை பெற்றிருந்தால் பிள்ளை ஆணாக இருக்கும் என்பது அது.
தசரதனின் மனைவிமார் தலைவெட்டப்பட்ட வேள்விக் குதிரையைப் புணர்ந்து பிள்ளை பெற்றனர் என்கிறது இராமாயணம். ஒரு வேளை இது பெருமை என்று அன்று கருதினரோ? விக்கிரமாதித்தன் எனும் அரசனைப் பெருமைப் படுத்துவதற்காக எழுதப்பட்டதாகக் கூறப்படும் விக்கிரமாதித்தன் கதையில் வழிநடையாக வந்த ஒரு பார்ப்பான் பசி மயக்கத்தில் ஒரு விலைமகள் வீட்டுத் திண்ணையில் படுத்திருக்க அதைப் பார்த்த விலைமகள் அவனை வீட்டுக்குள் அழைத்து அவனுக்குச் சோறும் போட்டு அவனுடன் படுத்துப் பெற்ற பிள்ளைகள்தாம் விக்கிரமாதித்தனும் அவன் தம்பி பட்டியும்.
மகாபாரதத்தில் சந்தனுவுக்குப் பிறந்த இரு மகன்களும் இறந்து போக பிறங்கடை வேண்டுமென்று தன் மகனான வேதவியாசனிடம் சந்தனுவின் மனைவியான பரிமளகந்தி ஆணையிட அவன் மூத்தவன் மனைவியைக் கூட அவள் துறவியான வியாசனின் தோற்றத்தைக்கண்டு கண்ணை மூடிக்கொண்டு படுக்க பிள்ளை குருடாயிருக்குமென்று சொன்னான் வியாசன். அவன்தான் திருதராட்டிரன். அப்படியானால் அடுத்த மருமகளோடு உறவுகொள்ளுமாறு ஆணையிட்டாள். அவளோ உடல் நடுங்கி மூடிக்கொண்டு படுத்தாள். பிறக்கும் குழந்தை நோயாளியாயிருக்குமென்றான். பாண்டு பிறந்தான். அவன் பெயரால்தானே பாண்டுரோகம் என்ற நோயே இருக்கிறது! அப்படி என்றால் இன்னொரு முறை இளையவளுடன் கூடச் சொல்லி மருமகளையும் கண்டித்தாள். அவளோ ஒரு வேலைக்காரியை ஒப்பனை செய்து அழகூட்டி விடுத்தாள். அவள் முனிவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தாள், முனிவனும் மகிழ்ந்து குழந்தை நன்றாக இருக்கும் ஆனால் அம்மா இடம் மாறிவிட்டது, இனி இது போன்ற வேலையைக் கொடுக்காதே என்று விடைபெற்றான்.
வியாசனே வசிட்ட முனியின் மகனான பராசனால் பரிசல் ஓட்டி வந்த பருவமெய்தாத மச்சகந்திக்குப் பிறந்தவன். மீன் வயிற்றில் பிறந்தவளான மச்சகந்தியின் உடலில் மீன் நாற்றம் இருந்ததால் பராசன் நல்ல மணம் வீசச் செய்து அவளுக்கு பரிமளகந்தி என்று பெயரும் இட்டான். மீனவப் பெண்ணான அவளை சந்தனு மணந்துகொண்டான்.
பஞ்ச பாண்டவர்களும் கர்ணனும் அவர்களின் தாய்மாரின் கணவனுக்கா பிறந்தார்கள்?
இவர்களெல்லாம் ஆரியர்கள் அல்லது வடக்கத்திகள் என்று சிலர் வாதிடலாம். துரியோதனாதியர் நூற்றுவரும் சேரர்களின் முன்னவர் என்று புறநானூற்று 2ஆம் பாடல் கூறுகிறது. அவர்களுக்கு நீத்தோர் கடனாகிய பெருஞ்சோறு வழங்கினான் உதியஞ்சேரலாதன் என்கிறது அது. பரணரின் அகத்துறைப் பாடலும் சான்று கூறுகிறது. கண்ணன் இறந்த நாளிலிருந்து தொடங்கும் கலியூழி தமிழர்களுக்கு உரியது. கி.மு.3101இல் ஓர் ஆண்டுமுறையை, அதிலும் கதிராண்டு முறையை இந்தியாவிலென்ன உலகத்திலேயே யார் வகுத்திருந்தனர்?
ஆக, இந்தியாவில் என்ன, தமிழகத்திலும் கூட பெண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என இருந்தனர் என்பது ஒரு வெற்றுக் கற்பனை. இதைப் பற்றிச் சற்று விரிவாகப் பார்ப்போம்.



தமிழ்நாட்டில் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதி வரை பெண்களுக்கு மணவிலக்கு மறுமண, கைம்பெண்களுக்கு மறுமண உரிமைகள் நடைமுறையில் இருந்தன. குறிப்பாக, மறவர் போன்ற பிற்படுத்தப்பட்ட சாதியினர், தாழ்த்தப்பட்ட சாதியினர்களுக்கு இருந்தன. அதிலும் மறவர்களிடையில் ஆண்களை விட பெண்களுக்கு இதில் முன்னுரிமையும் இருந்தது. ஆண் மணவிலக்கு கேட்டால் அறுப்புக்கூலி என்ற பெயரில் பெண்ணுக்கு ஒரு தொகை வழங்க வேண்டுமென்று தெரிகிறது. பெண்களுக்கு அத்தகைய கட்டுப்பாடு எதுவும் கிடையாது. “தாலியைக் கழற்றி கூரையில் எறிந்துவிட்டுப் போய்விடலாம்” என்பார்கள். அவள் பிள்ளைகளைப் பற்றியும் கவலை இல்லை. மறுமணம் செய்பவன் அவர்களை ஏற்றுக்கொள்வான், ஏனென்றால் மனைவி வேலை செய்து குடும்ப வருமானத்தைப் பெருக்குவாள், பிள்ளைகளும் வளர்ந்த உடன் வேலைக்குச் செல்வார்கள். இவ்வாறு ஏழு முறை மணம் செய்த ஒரு பெண்ணின் 27 குழந்தைகளால் ஓர் ஊரே உருவாகிவிட்டது என்று பறம்பை அறிவன் என்பவர் கூறினார்.{முகம்மதியர்களிடையில் பெண்ணுரிமையின் அடையாளம் என்று அவர்கள் கூறும் மணவிலக்கு உரிமை என்பது உண்மையில் பெண்ணுக்கெதிரான பெரும் கொடுமையாகும். பெண்ணே மணவிலக்கு கேட்டாலும் அது ஆணாகிய கணவனுக்கு இழுக்கு என்று கணவனை தலாக்கு சொல்ல வைப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல, தன் குழந்தைகளை அவள் தன்னுடன் அழைத்துச்செல்ல முடியாது. மறுமணம் செய்யும் முகம்மதியக் கைம்பெண்ணின் குழந்தைகள் தாய்மாமன் வீட்டிலோ தந்தையின் உடன்பிறந்த ஆண்களின் வீட்டிலோ ஏதிலி(அனாதை)களாகத்தான் வாழ வேண்டும். கணவன் இறந்தால் சிறு குழந்தைகள் உட்பட ஆண்கள் எவரும் அவள் இருக்கும் அறைக்குள் 41 நாட்கள் நுழையக் கூடாது. மணவிலக்குப் பெற்றிருந்தால் கூட குறிப்பிட்ட காலத்துக்குள் மறுமணம் செய்யக் கூடாது. அடுத்துப் பிறக்கும் குழந்தை பழைய கணவனுக்கா அல்லது புதுக் கணவனுக்கா என்று தெரிந்துகொண்டு அதற்கேற்ப குழந்தையைக் கையாள்வதற்கே இந்த ஏற்பாடு.}     


பின்னர் இச்சாதியினரது செல்வநிலை உயர்ந்து கணவனின் வருமானம் மிகுந்து மனைவி வேலைக்கும் போகாமல் மக்களும் பள்ளிக்குச் செல்லும் நிலை வந்ததும் இந்த மணவிலக்கு மறுமண உரிமைகளைச் செயற்படுத்த முடியாத நிலை வந்தது. இந்தக் கட்டத்தின் வெளிப்பாடுதான் 1971இல் வெளிவந்த பட்டணமா பட்டிக்காடா திரைப்படம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு பெண் கணவனிடம் சண்டை பிடித்து அல்லது கொடுமை தாங்காமல் தாய் வீடு வந்தால் அவளது பெற்றோர் கணவன் வீட்டுக்குச் சென்றுவிடத்தான் வலியுறுத்துவர். ஆனால் இன்றும் மதுரை மாவட்டத்தில் கணவனோடு முரண்பட்டுத் தாய்வீட்டிலிருக்கும் மகளைக் கணவன் அழைத்தும் விடாமல் அதனால் ஆத்திரமடையும் கணவன் மகளையும் அவளது தாய் உட்பட உறவினர்களையும் வெட்டுவதும் கொலை செய்வதும் அடிக்கடி நடைபெறுவது பழைய மறுமண உரிமை நினைவின் எச்சமாகவே தோன்றுகிறது. முன்பு மணவிலக்கு – மறுமணம், கைம்பெண் மறுமணத்தை இழிவாகக் கருதிய சாதியினரே இப்போது அதைக் கூச்சமில்லாமல் கடைப்பிடிப்பது போல் அவ்வுரிமைகளை இடையில் கைவிட்டவர்கள் மீண்டும் கடைப்பிடிப்பது காலத்தின் கட்டாயமாகத் தோன்றுகிறது.

கணவன் சிறு அகவையில் இறந்துவிட குழந்தைகளுடன் துன்புறும் இளம்பெண்ணின் கணவனின் தம்பி அல்லது திருமணம் ஆகாமல் இருக்கும் தமையன் பெண்ணையும் குழந்தைகளையும் பராமரித்து அதே நேரம் திருமணம் செய்யாமல் அவளுடன் வாழ்வது கிட்டத்தட்ட எல்லா சாதிகளிலும் நடைமுறையில் இருக்கிறது. தம்பியே அண்ணியைத் திருமணம் செய்வதும் நடைபெறுகிறது.

அடுத்து இரு சாதிகளில் ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்ட சாதியினர் வீட்டுக்குள் நுழைந்து பெண்களோடு உறவு கொள்வது தமிழ்நாடு முழுவதும் அண்மைக்காலம் வரை தட்டுத்தடங்கல் இல்லாமல் நடைபெற்ற ஒன்றாகும்.

எட்டயபுரம் அருப்புக்கோட்டை சாலையில் மேலக்கரந்தை என்ற ஊரில் ஓர் ஏரி அமைக்கும் பணியில்1965ஆம் ஆண்டில் இருந்தேன். அதிலிருந்து 5 மைல் வடக்கில் சாலைக்குக் கிழக்கில் இருக்கும் வெம்பூர் எனும் ஊரில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து மனைவி, தாயாருடன் குடியிருந்தேன். அந்த வீடு இருந்தது ஒரு பாழடைந்த அக்கிரகாரம் எனப்படும் பார்ப்பனச் சேரியில். சுவரெங்கும் வெடிப்புகளும் தளமெல்லாம் உடைந்து பெருச்சாளியும் எலியும் குடியிருந்தன. வீட்டையடுத்து கரிசல்காடு. மழை பெய்தால் கரிசல் மண் வெடிப்புகளுக்குள் பதுங்கி வாழும் பாம்பு அரணை தவளை அனைத்தும் வீட்டை நோக்கிப் படை எடுக்கும் அந்த அக்கிரகாரத்தில் நான் குடியிருந்த வீட்டுக்கு எதிரில் ஒரு பார்ப்பன முதியவர் மட்டும் குடியிருந்தார். ஆய்வுநிலை அஞ்சலகம்(Experimental Post Office) அவர் பொறுப்பிலிருந்தது. அவரே சமைத்துக்கொள்வார். ஒரு பெண்ணும் அவள் கணவனும் அவ்வப்போது வந்து அவருக்குச் சிறுசிறு பணிகள் செய்து கொடுப்பர். அந்தப் பெண் நல்ல தோற்றமுள்ளவள். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.

பகல் வேளையில் தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்கள் ஓரிருவர் எங்கள் வீட்டுக்கு வந்து என் தாயாரிடமும் மனைவியிடமும் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்போது தம் பிள்ளைகளைக் காட்டி இது இந்த நாயக்கருக்குப் பிறந்தது, இது இந்த தேவருக்குப் பிறந்தது என்று கூறுவார்கள் என்று பின்னர் என் மனைவி சொல்லி கூச்சப்படுவாள். இந்நிலையில் ஒரு நாள் இரவு 7 மணி அளவில் எதிர்த்த வீட்டு ஐயர் வீட்டுக்கு அவர் வீட்டுக்கு வரும் ஆடவன் வந்தான். என்ன இப்போது வந்திருக்கிறாய் என்று அவர் கேட்க அவன், வீட்டுக்குச் சென்ற போது கதவு சாத்தியிருக்க வீட்டின் முன் செருப்பு கிடந்ததாகவும் அதனால் கொஞ்ச நேரம் ஐயர் வீட்டில் இருந்துவிட்டுப் போகலாம் என்று வந்ததாகவும் எந்த மாறுபட்ட உணர்ச்சியுமின்றி இயல்பாகக் கூறினான். இது போன்ற நிகழ்வுகள் ஒரு நூற்றாண்டுக்குள் தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் நடைபெற்றிருக்கின்றன. நாயர்களின் ஒடுக்குமுறைக்கு சாணார்கள் ஆட்பட்டிருந்த காலத்தில் கருவுற்றிருக்கும் சாணார்ப் பெண்களைக் கலப்பையில் பூட்டி உழுதவர்கள் அப்பெண்களை பாலியலில் எப்படிக் கையாண்டிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். கடற்கரைப் பெண்களை அடுத்திருந்த நாடார்கள் நடத்திய விதம் ஒன்றும் மெச்சத்தக்கதல்ல. பெரியகுளத்தில் 1978இல் பணியாற்றிய காலத்தில் திருமணமான ஒரு பார்ப்பனப் பெண்ணை அவ்வூரிலுள்ள ஒரு பணம்படைத்த மறவர் அனைவருமறிய தூக்கி வந்து தன் மனைவியாக்கிக் கொண்டதைக் கூறினார்கள். நான் அங்கு இருக்கும் போதும் அப்பெண் அவரது மனைவியாகத்தான் இருந்தாள்.

காஞ்சிபுரத்தில் நான் பணியாற்றிய போது எங்கள் துறையில் இன்னொரு அலுவலகத்தில் பணியபாற்றிய நண்பர் ஒருவர் என்னிடம் ஒளிவு மறைவில்லாமல் பேசுவார். திருமணமாகாத அவர் ஒரு சில நாட்கள் விலைமகளிரிடம் செல்லவில்லை என்றால் சாப்பாடு இறங்காது, சாப்பிட்டால் வாந்தி எடுத்துவிடும் என்பார். இதற்காக அங்கு இன்று வாடிக்கையாளர்களை வைத்திருந்தார். அவர்களில் ஒருவர் விலைமகளிரை வைத்துத் தொழில் நடத்தும் மதுரை வட்டாரத்தைச் சேர்ந்த மறவர் சாதிப் பெண். அவளுக்கு மகள் ஒருத்தி படித்துக்கொண்டிருந்தாள். அவளை ஒரு முறை தருமாறு கெஞ்சிப் பார்த்திருக்கிறார். அவள் மசியவில்லையாம். இந்த நண்பர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்.

பெரிய குடும்பங்களில் தங்கள் பெண்களை மிகுந்த கட்டுப்பாட்டுடன் வளர்த்ததாகப் பெருமை பேசுவர். பருவமடைந்த தங்கள் வீட்டுப்பெண் சாரளம் வழியாகத் தெருவைப் பார்த்ததாகவும் அவளை உயிரோடு சுவரில் வைத்துக்கட்டிவிட்டதாக, அல்லது வீட்டுக்குள் ஒரு குழியைத் தோண்டி அதனுள் ஏதாவது ஒரு பொருளைப் போட்டு அதை எடுத்துத்தரச் சொல்லி கீழே இறங்க வைத்து மண்ணைப் போட்டு மூடி உயிருடன் புதைத்து விட்டதாகவும் ஆன கதைகளை வட்டாரத்துக்கு வட்டாரம் கேட்கலாம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரை குமரி மாவட்டத்தில் நாடார்களிடையில் பள்ளிக்குச் சென்ற ஒரு சிலரைத் தவிர பருவமடைந்த பெண்கள் திருமணம் வரை வீட்டைவிட்டு வெளியில் வருவதில்லை. திருமண உறுதி நிகழ்வில் கூட மணமகன் பெண் வீட்டுக்குச் செல்வதில்லை. நான் என் மனைவியை முதன்முதலில் மணமேடையில்தான் பார்த்தேன். இப்படித்தான் பெண்ணின் கற்பு பேணப்பட்டது. மற்றப்படி தமிழர்களுக்கென்று பிறவியிலமைந்த தனிக் கற்பு என்ற பண்பு இருந்ததில்லை. உலகின் எல்லா மக்களையும் போன்றவர்கள்தாம் நாம்.   


மனித வரலாற்றில் ஒரு கட்டத்தில் இரு வகையான ஆண் – பெண் உறவுகள் இருந்ததற்குத் தடயங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, நாயர்களிடையில் குடும்பத் தலைவன் ஒரு தாயின் மூத்த ஆண்பிள்ளை. சொத்து அனைவருக்கும் பொதுவாக இருந்தாலும் அதன் ஆள்வினை காரணவன் எனும் மூத்த ஆண்மகன் தலைமையில்தான் இருந்தது. அவனுக்கு மட்டும் வெளியிலிருந்து பெண் எடுப்பர். அவள் கணவன் வீட்டுக்கு வந்து அவனுக்கு மட்டும் மனைவியாக இருப்பாள். வீட்டிலுள்ள பிற பெண்கள் ஒரு கணவனை மணந்திருந்தாலும் நம்பூதிரிகளுடன் அவர்கள் சம்பந்தம் என்ற பெயரில் உறவு வைத்திருப்பர். அது தவிர பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை மணமுடித்துக் கொள்வதும் ஆண்களும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணப்பதுமாக இது ஒரு வலைப்பின்னல் போல செயற்பட்டதாக ஐரோப்பிய ஆய்வாளர்களைச் சுட்டி ஏங்கல்சு தன் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த “வலைப்பின்னல்” இருந்ததா என்பதைக் களத்தில் உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டுமென்பது என் எண்ணம்.
இது போல் தொடக்க காலக் குமுகங்களில் ஒவ்வொரு ஒன்றியும் ஒரு தலைவனின், பிறவற்றை விடப் பெரிய வீட்டை நடுவில் கொண்டதும் அதைச் சுற்றி வட்ட வடிவில் சிறு வீடுகள் அதைச் சூழ்ந்திருக்கவுமான அமைப்பைக் கொண்டிருந்தன என்று மாந்த நூலார் கூறுகின்றனர். இந்த அமைப்புக்குப் பெயர் கோட்டை என்றும் கூறுகின்றனர். இத்தகைய கோட்டைகளை உடைத்து அவற்றை ஒரே கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் வேலையை 7 குக்குலத் தலைவர்களான முனிவர்கள் எனப்படுகின்ற பூசகத் தலைவர்கள் இந்திரன் என்ற தொடக்கநிலை அரசனுக்குக் கொடுத்தார்கள் என்று நம் வேதங்கள், தொன்மங்களுக்கு விளக்கம் சொல்கின்றனர். இவை ஆரியர்களுக்கு உரியனவல்லவா என்று கேட்காதீர்கள். இந்திரன் தமிழகத்தின் மருத நிலத் தெய்வம். நிலத்தொடர்பு என்பது வலிமையானது. தொல்காப்பியம் அத்தொடர்பை ஐயத்துக்கிடமில்லாமல் கூறுகிறது. இவ்வாறு தலைவன் மனைவியைப் பொறுத்த வரை அவன் ஒருவனுக்கு மட்டும் உரியவளாகவும் பிறரெல்லாம் பல ஆடவர்களுடனும் உறவு கொள்பவர்களாகவும் இருந்தனர் என்று கொள்ள முடிகிறது.
குழந்தை பிறப்பில் ஆணின் பங்கு அறியப்படாமல், அல்லது ஒரு ஆண் – ஒரு பெண் என்று இல்லாமல் கூட்டாக, பெண்ணின் தலைமையில் குடும்பம் அல்லது கூட்டம் இருந்ததோ அதுவரை பாலியல் உறவில் பெண்ணின் உரிமை பேணப்பட்டது. என்று பெண்ணின் தலைமை முறியடிக்கப்பட்டதோ அன்றிலிருந்தே அவள் மீதான பாலியல் வன்முறை தொடர்கிறது. மகாபாரரதத்தில் ஐவருக்கும் ஒரே மனைவியாக வாய்த்த திரௌபதையை எப்படி கையாள்வது என்று அவர்களுக்கு ஒரு முனிவன் அறிவுரை கூறுகிறான். அது போல் ஆண்டுக்கு ஒருவர் என்று முறை வைத்துக்கொள்கிறார்கள். அது போல் பஞ்சாபில் ஒரு தாய்க்குப் பிறந்த அத்தனை ஆண்பிள்ளைக்கும் ஒரே பெண்ணை மணமுடித்துவைத்தனர் என்று கூறப்படுகிறது. திருமணத்தின் போது பெண்ணின் முகத்தில் முக்காடு போட்டுவிடுவார்களாம். தனக்கு தாலி கட்டியவன் எவன் என்று அவளுக்குத் தெரியாதாம். ஒரு மருமகள் “மாமி எனக்குத் தாலி கட்டியது யார்?” என்று கேட்க, “போடி போக்கத்தவளே, எனக்குத் தாலி கட்டியவன் யாரென்றே எனக்குத் தெரியாது” என்று மோவாயில் இடித்தாளாம் என்று வேடிக்கையாகக் கூறுவார்கள்.
முன்னாள் தமிழகத்தின் கூட்டுக் குடும்பத்தில் கூட்டுக் குடும்பத்தின் மூத்த ஆண்மகனான தலைவன் வைத்ததுதான் சட்டம். அவன் அந்தக் குடும்பத்தை விரும்பியவாறெல்லாம் கையாள்வான். பாலியல் குறித்து பெண்களிடமும்தான். கூட்டுக் குடும்பம் போய்விட்டதே என்று படித்த ஒரு கூட்டம் தமிழகத்தில் புலம்பிக்கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு கூட்டுக் குடும்பம் என்றால் என்னவென்றே தெரியாது. பெரிய நிலவுடைமையில் உழைக்கும் ஆடவர்களும் அவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஆக்கிப்போட்டு வீட்டைப் பராமரிப்போராகப் பெண்களும் இருந்தனர். செலவுக்கு என்று ஒரு தம்பிடி தேவைப்பட்டாலும் தலைவரிடம்தான் எவரும் கையேந்தி நிற்க வேண்டும், ஏனென்றால் ஒருவருக்கும் வேறு வரும்படிக்கு வழி கிடையாது. மூத்தவர் இறந்து போனால் இருப்பவர்களில் மூத்தவருக்கு அதிகாரம் கைமாறும். அவர்தான் இறந்தவரின் சடங்குகள் அனைத்தையும் செய்வார். மொட்டை அடிப்பதுதான் அப்போது அவருக்கு அடையாளம். ஏதம் கேட்க வருவோர் மொட்டையிட்டிருப்பவரைத்தான் கண்டு கேட்பார்கள். இந்து அவிபக்த குடும்பம் என்பதில் ஒருவன் இடம் பெயர்ந்தாலோ வேறு தொழிலில் ஈடுபட்டாலோ அவனது கணக்கைப் பிரித்து அவனுக்குக் கொடுத்துவிடுவார்கள் போலும். சிலப்பதிகாரம் கனாத்திறமுரைத்த காதையில் தேவந்தியின் கணவனான சாத்தன் அவளை விட்டுப் பிரியும் போது தாயத்தார் எனும் கூட்டுக் குடும்ப உறுப்பினருடன் வழக்குரைத்து மனைவிக்குரிய பங்கைப் பெற்றுக்கொடுத்து தான் புண்ணிய ஆறுகளில் ஆடப்போவதாகக் கூறி வெளியேறுகிறான். தில்லை மூவாயிரவர் எனும் பூசகப் பார்ப்பனர்களிடையிலும் இந்த நடைமுறை இருப்பது போல் தெரிகிறது.
பிற குடும்பங்களில் ஒருவன் படித்து வேலைக்குப் போனால், அவன் தன் தேவைக்குக் குடும்பத் தலைவனிடம் கைகட்டி நிற்க வேண்டியதில்லை, அவ்வாறே அவன் மனைவியும். முன்பு கணவன் குடும்பத் தலைவனுக்கு அடிமையாக இருந்ததால் மனைவியும் அடிமையாக இருந்தாள். இப்போது கணவன் தன்னதிகாரம் பெற்றுவிட்டதால் மனைவியும் தன்னிச்சையாக நடக்கத் தொடங்கினாள். இது பிற பெண்களுக்கு, குறிப்பாக மாமியார், நாத்தனார்களுக்கு மட்டுமல்ல, பிற மருமகள்களுக்கும் வெறுப்பை ஏற்படுத்தின. இதன் எதிர்வினை அதிக சீதனம் என்ற பெயரில் பெண்ணைத் துன்புறுத்துவதும் கொலை செய்வதும் நிகழ்ந்தன. சென்ற நூற்றாடில் தொடங்கிய மருமகள் எரிப்புகளுக்கு இதுதான் அடிப்படை. இப்போது கணவனும் மனைவியும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் பெற்றோரைப் பேண முடியாத பல சூழல்கள் இருக்கின்றன, அவர்களின் சொத்துகள் தவிர வேறு கவர்ச்சி எதுவும் இல்லை. அதையும் பயன்படுத்த முடியாத நிலையில் நமது சொத்துடைமைச் சட்டம் உள்ளது. ஆண் வழியில் எத்தனையாவது தலைமுறையாக இருந்தாலும் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அதற்கு மூத்தோர் சொத்தில் உரிமை வந்து விடுகிறது. ஒரு சொத்தை மக்களின் படிப்புக்காக என்று விற்றாலும் கூட அந்தப் பிள்ளைகள் அகவை அடைந்ததும் தன் தந்தை மனநிலை பாதிக்கப்பட்டு சொத்தை விற்றார் என்று நயமன்றம் செல்லும் நேர்வுகளுக்குக் கணக்கில்லை. இதற்கு ஒரே தீர்வு சொத்துகள் அதன் உடைமையாளருக்கு முழு உரிமைப்பட்டதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட அகவைக்குப் பின் பிள்ளைகள் பகுதி நேர வேலை பார்த்துத் தங்கள் படிப்பைத் தொடர வேண்டும். பெற்றோர் விரும்பினால் பிள்ளைகளுக்குச் சொத்தை வழங்கலாம் அல்லது காசாக வழங்கலாம், வழங்கித்தான் ஆக வேண்டுமென்ற கட்டாயம் இருக்கக் கூடாது என்பது எமது தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழக நிலைப்பாடு. சொத்தில்லாதவர் ஒரு ஓய்வூதியத் திட்டத்தில் முதலிட்டு தங்கள் முதுமைக்காலச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டும்.
அமெரிக்காவில் பெற்றோரின் சொத்தில் பிள்ளைகள் உரிமை கோர முடியாது, அதே வேளையில் பிள்ளைகளின் திருமணத்தில் பெற்றோர் தலையிட முடியாது என்றும் பிரிட்டனில் பெற்றோரின் சொத்துக்கு பிள்ளைகள்தாம் உரிமையாளர் என்றும் ஆனால் பெற்றோர் சொல்லும் இணையைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும் 19ஆம் நூற்றாண்டில் இருந்ததாகப் படித்திருக்கிறேன். இங்கும் பிள்ளைகளே தங்கள் இணைகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வுகள் பெருகி வரும் சூழலில் சொத்துடைமைச் சட்டத்திலும் மாற்றம் கொண்டுவர வேண்டும்.
ஆண்பெண் உறவைத் தொடர்ந்தோமானால் இன்று வரை தமிழகத்தில் குமுக ஏற்றத்தாழ்வுள்ள  சாதிகள் என்ற அமைப்பால் பெண்களின் கற்புக்கு என்றுமே அச்சுறுத்தல் இருந்துவந்திருக்கிறது. இந்த உண்மைகளை அறிந்திருந்தும் அனைவரும் ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழர்களின் பண்பாடு, கற்பில் தமிழ்ப் பெண்களுக்கு உலகில் ஈடிணையில்லை என்ற பொய்யைத் திரும்பத் திரும்ப நமக்குள் கூறி மகிழ்ந்துபோகிறோம். இதற்கு அடிப்படையாக இருப்பது கழக இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு எட்டுத்தொகைகள். தொகுப்பு என்னும் போதே சிலவற்றையாவது கழித்திருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். நான் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையானால் உங்களை ஒரேயொரு கேள்வி கேட்கிறேன், தமிழகத்தில் பார்ப்பனர் முதல் கடைக்கோடி சாதி வரை குடும்ப நிகழ்ச்சிகளில் தாய்மாமன் ஏற்கும் முகாமையான பங்கு நம் எல்லோருக்கும் தெரியும். கழக இலக்கியத்தில் புறப்பொருள் குறித்தவற்றை வேண்டுமானால் விட்டுவிடலாம், அகத்துறைப் பாக்களிலாவது ஓர் இடத்திலாவது ஒரே ஓர் இடத்திலாவது தாய்மாமனைப் பற்றிய ஒரே ஒரு குறிப்பையாவது உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா?
ஆக, இந்தத் தொகுப்பை அதாவது கழிப்பை யார் செய்திருப்பார்கள்? பனியாக்களின் தமிழக முன்னோடிகளான, சந்திரகுப்த மௌரியன், கலிங்கத்துக் காரவேலன் விடுத்த அம்மண ஒற்றர்கள்தாமே! தொல்காப்பிய உரையில் அகத்துறைக்கு எடுத்துக்காட்டுப் பாடல் இல்லாததால் எழுதப்பட்டது கலித்தொகை, புறத்துறைக்கு எழுதப்பட்டது புறப்பொருள் வெண்பாமாலை. அந்த அளவுக்கு 5000 ஆண்டுகால செய்யுள்களை அழித்திருக்கிறார்கள். அதாவது 3700 ஆண்டுகள் இடைக் கழகம், 1850 ஆண்டுகள் கடைக் கழகம், தாங்கள் தமிழ்நாட்டினுள் நுழைந்த கி.மு.4ஆம் நூற்றாண்டிலிருந்துள்ள பாடல்களில் அவர்கள் கழித்தவை போக எஞ்சியவை நமக்குக் கிடைத்துள்ளன, கி.பி.150 வாக்கில் கழகம் முடிவுக்கு வந்துள்ளது. 3700 + 1850 = 5550 - 400 -150 = 5000. இடைக்கழக முடிவில் நூல்கள் அழியவில்லை, உயிரோடு மீண்ட அரசன் பாண்டியன் முடத்திருமாறன் அவற்றை மீட்டுவந்துவிட்டான். தொல்காப்பியம் இரண்டாம் கழகக் காலத்தில் உருவானது. அது கிடைத்திருக்கிறதில்லையா? அப்போது இருந்த இலக்கியங்களைக் கண்டல்லவா அவர் இலக்கணம் வகுத்தது? ஆக அந்த இலக்கியங்களும் பாடல்களும் எங்கே போயின? கி.பி. 5ஆம் நூற்றாண்டுவரை இருந்த ஓர் அரண்மனையோ கோயிலொ வளமனையோ ஏன் ஒரு குட்டிச்சுவரோ இல்லாமல், களப்பிரர்களைக் கொண்டு வெறியூட்டி அழித்தவர்கள் அம்மண ஒற்றர்களன்றி வேறு யார்? இங்கிருந்த கல் தச்சர்கள் உட்பட ஐந்தொழிற் கொல்லர்கள் அனைவரையும் நாட்டைவிட்டு ஓட்டியவர்கள் வேறு யார்? இங்கிருந்து விரட்டப்பட்ட அவர்களல்லவா தாய்லாந்து, கம்பூச்சியா சென்று அங்கோர்வாட் போன்ற கோயில் நகரங்களை உருவாக்கியவர்கள்? கீழை நாடுகளிலும் வட இந்தியாவிலும் அமைந்திருப்பவற்றுக்கு இணையான தரமுள்ள கோயில்கள் தமிழகத்தில் மீண்டுள்ளனவா? எங்கோ ஊர்ப்புறங்களில் பதுங்கியிருந்தவர்களிலிருந்து தொடங்கிய மரபுதான் இன்று தமிழகத்தில் எஞ்சியுள்ளது. பல்லவர்கள் தொடங்கிய அது சோழர்கள் காலத்தில் மேம்பட்டிருக்கிறது.
தமிழகத்து இசை நாடகக் கலைஞர்களை நாட்டை விட்டே துரத்திவிட்டனர் அல்லது அடக்கிவைத்தனர். யாழ் மீட்டும் பாணர்கள் தையற்காரர்களாக முடக்கப்பட்டனர். இதை முன்னுணர்ந்துதான் கண்ணகி வரலாற்றைப் பயன்ப்படுத்தி இசை, நாடகம் மட்டுமல்ல தமிழர்களின் அனைத்துத் துறைகளையும் பற்றி எழுத்தில் பதியத்தக்கவற்றைப் பதிந்துவிட்டுப் போய்விட்டார் தமிழனின் தனிப்பெரும் பாவலர் இளங்கோவடிகள்.
இவ்வாறு ஆடல் பாடல்களுக்கு தமிழகத்தில் வேரே அற்றுப்போனதால்தான் இராசராசன் தன் தேவைகளுக்காக ஆந்திரத்திலிருந்து தேவரடியார்களை இறக்க வேண்டியதாயிற்று.
அன்றுவரை ஏழ்மையின் அடிப்படையில் உழைக்கும் மக்களை ஒடுக்கி வந்த தமிழகத்தில் இப்போது கோட்பாட்டின் அடிப்படையிலும் அரசு அதிகாரத்தைக் கொண்டும் ஒடுக்கினர் அம்மண ஒற்றர்கள். உழவுத் தொழிலாளரை நிலங்களை உழுவதன் மூலம் மண்ணில் வாழும் புழு பூச்சிகளைக் கொல்பவர்களேன்றும் சராசரி மக்களை புலாலுண்பதால் இழிவானவர்களென்றும் ஒடுக்கினர். அதே வேளை இந்த உழவர்களை வைத்து பயிர் செய்வித்துப் பயனடைந்த புதிய சாதியினரான மதமாறிய வெள்ளாளராகிய புதிய காணியாட்சிகளையும் பெருநிலக்கிழார்களையும் உயர்த்தி வைத்தனர்.
தமிழர்களை ஆரியர்கள் ஏமாற்றிச் சாதிகளாகப் பிளந்துவிட்டனர் என்றனர் ஆரியர் – திராவிடர் கோட்பாட்டினர். இப்போது களத்திலிறங்கியிருக்கும் தமிழகத்தில் வாழும் பிறமொழியாளர் எதிர்ப்புக் கோட்பாட்டினர், வடுகர்கள் தமிழர்களை ஏமாற்றிச் சாதிகளாகப் பிரித்துவிட்டனர் என்கின்றனர். இரண்டும் உண்மையல்ல, ஆரியர் என்ற இனமே உலகில் இருந்ததில்லை என்பதே உண்மை. சாதி என்பது தமிழர்களின் உருவாக்கம்தான், அதற்கு கோட்பாட்டு விளக்கம் தந்து அரச அதிகாரத்தின் துணையுடன் இறுக்கமடையச் செய்தவர்கள் அம்மண ஒற்றர்கள்தாம். இன்றைய தமிழகச் சாதியப் பண்பாடு அம்மணர்கள் உருவாக்கியதே. அதை உடைக்க வேண்டுமாயின் புலால் உண்பது இழிவு எனும் கோட்பாடு உடைக்கப்பட வேண்டும். உயிர்க்கொலையின்றி உலகில் எந்த உயிரினமும் வாழவில்லை என்ற இயற்கை விதியை வலியுறுத்த வேண்டும். பனியாக்களாகிய மார்வாரி – குசராத்திகள் தமிழகத்தை நடுவரசு அதிகாரத்தின் மூலமும் நேரடியாகத் தமிழகத்தில் நுழைந்தும் நடத்தும் சுரண்டலுக்கு எதிராக தமிழக மக்கள் சாதி, சமய, மொழி, இன வேறுபாடின்றிப் போராடுவதன் மூலம் தமிழக மக்களிடையில் முழுமையான ஒற்றுமையை உருவாக்க முடியும். 
இது வரை ஒருவனுக்கு ஒருத்தி என்ற பொய்ம்மைக்கு மாறாக பெண்கள் ஆண்களின் பாலியல் கொடுமைக்கு ஆளாகி வந்துள்ளனர். அவர்களுக்கு பாலியல் உரிமைகள் மறுக்கப்பட்டே வந்துள்ளன. இதற்கு ஒரே விதிவிலக்கு நாம் மேலே கூறியிருந்த மறவர் பெண்களின் பாலியல் உரிமைகள்தாம். நாம் அதனை வரையளவாக வைத்து எதிர்கால ஆண் – பெண் உறவுகளை வரையறுக்க வேண்டும். ஒரு பெண் விரும்பி மணவிலக்கு கேட்டால் அவளை அலைக்கழிக்காமல் வழங்க வேண்டும். அவள் குழந்தைகளைத் தன்னிடம் வைத்துக்கொள்வதற்கு உரிமை வேண்டும். இன்றைய நிலையில் கணவன் அவளுக்கும் அவள் குழந்தைகளுக்கும் அவளது வருவாய் நிலையைக் கணக்கிலெடுத்து வாழ்க்கைப் பணம் தர வேண்டும். நாம் திட்டமிட்டிருக்கும் எதிர்காலத் தமிழ்நாட்டில் இத்தகைய குழந்தைகளுக்கு கல்வி முதலிய செலவுகளையும் வாழ்க்கைச் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.
இப்படிப்பட்ட திட்டம் நடைமுறைக்கு வந்தால் பெண்கள் எடுத்ததற்கெல்லாம் மணவிலக்கு கேட்பார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படலாம். அது ஓரளவு உண்மைதான். புதிதாக உரிமைகளைப் பெறும் எவரும் தொடக்கத்தில் கொஞ்சம் ஆர்ப்பாட்டமாக நடந்துகொள்வது இயல்புதான். ஆனால் ஆண் – பெண் தனித்து வாழ்வதென்பது எளிதல்ல. மேலை நாடுகளில் மணவிலக்கு செய்வோர் உடனடியாக மறுமணம் செய்துகொள்வது அதனால்தான். குழந்தைகளைப் பொறுத்த வரையில் அங்கு அவர்களது கல்விமுறை குழந்தைகளது திறன்களை வெளிக்கொணர்வதாக இருப்பதால் இது அவர்கள் வீட்டிலிருக்கும் நேரத்தைக் குறைக்கிறது. அத்துடன் குறிப்பிட்ட அகவையில் எதிர்ப்பாலர் நட்பைப் பெறுவதும் இந்த அழுத்தத்தைக் குறைக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற பொய்யைக் கூறிக்கொண்டு நம் மக்கள் அதை மறைவில் மீறுகிறார்கள் அல்லது மீற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். வளர்ந்த நாடுகளில் அவர்கள் தாங்கள் செய்வதையே தங்கள் மதிப்பீடாகவும் கொண்டுள்ளனர்.
ஆணுக்குச் சமமாக முழுவதும் பெண்ணுக்கு உரிமை வழங்குவதை ஆண்கள் விரும்பாமலும் ஆணின் மேலாளுமையை ஏற்க பெண்கள் மறுப்பதுமே ஒரே பாலின உறவுகளுக்குக் காரணமாகின்றன. இது மனித குடும்ப வாழ்வு வரலாற்றில் ஒரு முட்டுக்கட்டை நிலை. இது அந்நாடுகளில் மக்கள் தொகை குறைவுக்கும் வழிவகுக்கும். இதன் விளைவான மனிதவள வீழ்ச்சியால் வளர்ச்சி குன்றிய நாடுகளிலிருந்து மக்கள் அந்நாடுகளில் குடியேறுவது மிகுந்து இன்று  பிரிட்டன் தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டது போல் பணக்கார நாடுகள் ஒவ்வொன்றாக விலகும் சூழல் வரும். இன்று அமெரிக்காவில் நிகழ்பவை நாளை அங்கும் இந்த தனிமைப்படுத்தல் உருவாகலாம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. அதற்கு நாம் ஆயத்தமாக வேண்டும். நமக்குரிய வளங்கள் நமக்கு மட்டும் பயன்படுமாறு, நமக்குக் கிடைக்கும் மூலவளங்களைக் கொண்டு நம் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுமாறு ஓர் அறிவியல் – தொழில்நுட்ப மண்டலத்தை உருவாக்கி உலகுக்கு வழிகாட்டுவோம். முழுத் தன்னாட்சியும் பொருளியல் உரிமையும் உள்ள மாநிலங்களைக் கொண்டதாக இந்தியாவை உயர்த்தும் போராட்டத்தைத் தமிழகத்திலிருந்து தொடங்குவோம்.
தமிழகத்தில் ஆண்பெண் உறவு குறித்த அடிப்படை உண்மைகளை வெளிப்படுத்தி ஒரு புதினம் எழுதிய பெருமாள் முருகன் அவர்களுக்கும் அதைக் காரணமாக வைத்து தமிழகத்தில் 34 ஆண்டுகளுக்கு முன் குமரி மாவட்டத்தில் நிகழ்ந்தது போல் மீண்டும் ஒரு சாதிக் கலவரத்தைத் தூண்ட முயன்ற சங்கக் குடும்பப் பேச்சாளர் தணிக்கையாளர் குருமூர்த்திக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். தமிழகத்தின் ஆண்பெண் உறவு பற்றிய பொய்ம்மைகளைத் தோலுரித்துக்காட்ட வாய்ப்பளித்தமைக்காக இந்த நன்றி.
முற்றும்.