28.10.15

சிலப்பதிகாரப் புதையல் - 4


க. புகார்க் காண்டம்

1. மங்கல வாழ்த்துப்பாடல்

         திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
         கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
         வங்கண் உலகளித்த லான்.
        
         ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
5.      காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு
         மேரு வலந்திரித லான்.
        
         மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
         நாமநீர் வேலி யுலகிற்கு அவன் அளிபோல்
        மேல்நின்று தான்சுரத்த லான்.

10.     பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
        வீங்குநீர் வேலி யுலகிற் கவன்குலத்தோடு
        ஒங்கிப் பரந்தொழுக லான்.

        ஆங்கு,
        பொதியி லாயினும் இமய மாயினும்
15.    பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய
        பொதுவறு சிறப்பின் புகாரே யாயினும்
            நடுக்கின்றி நிலைஇய என்ப தல்லதை
            ஒடுக்கங் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
            முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே.
20.     அதனால்,
            நாகநீள் நகரொடு நாகநா டதனொடு
        போகநீள் புகழ்மன்னும் புகார்நக ரதுதன்னில்
        மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
        ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண் டகவையாள்;
25.     அவளுந்தான்,
        போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
        தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும்
        மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
        காதலாள் பெயர்மன்னுங் கண்ணகியென் பாள்மன்னோ;
30.     ஆங்கு,
        பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த
         ஒருதனிக் குடிகளோ டுயர்ந்தோங்கு செல்வத்தான்
            வருநிதி பிறர்க்கார்த்து மாசாத்து வானென்பான்
            இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டாண் டகவையான்;
35.    அவனுந்தான்,
            மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்
         பண்தேய்த்த மொழியினா ராயத்துப் பாராட்டிக்
        கண்டேத்துஞ் செவ்வேளென் றிசைபோக்கிக் காதலாற்
        கொண்டேத்துங் கிழமையான் கோவலனென் பான்மன்னோ:
40.    அவரை,
            இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால்
            மணவணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி
            யானை எருத்தத் தணியிழையார் மேலிரீஇ
            மாநகர்க் கீந்தார் மணம்.            
45.    அவ்வழி,                                                            
            முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம் வெண்குடை
        அரசெழுந்ததொர் படியெழுந்தன அகலுள்மங்கல அணி யெழுந்தது
        மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து      
          நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
50.     வான்ஊர் மதியம் சகடணைய வானத்துச்
சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
         மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
         தீவலம் செய்வது காண்பார்க ணோன்பென்னை
         விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
55.    உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
         சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
         ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர்
         விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை
         முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
60.    போதொடு விரிகூந்தற் பொலன்நறுங் கொடியன்னார்     
         காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
         தீதறு கெனஏத்திச் சின்மலர் கொடு தூவி
         அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
         மங்கல நல்லமளி யேற்றினார்: தங்கிய
65.    இப்பால் இமயத் திருத்திய வாள்வேங்கை
         உப்பாலைப் பொற்கோட் டுழையதா எப்பாலும்
        செருமிகு சினவேற் செம்பியன்
        ஒருதனி ஆழி உருட்டுவோ னெனவே.
           
பொழிப்புரை

நிலவைப் போற்றுவோம்! பூந்தாது பொழியும் மாலையை அணிந்த சோழனுடைய குளிர்ச்சி தரும் வெண்கொற்றக்குடையைப் போன்று இந்த அழகிய நிலத்தை உடைய உலகுக்குக் குளிர்ச்சியை அளிப்பதால் நாம் நிலவைப் போற்றுவோம்!

            கதிரவனைப் போற்றுவோம்! காவிரி நாட்டை உடைய சோழனது ஆணைச் சக்கரம் போல் பொன் போன்று பொலிகின்ற கொடுமுடியை உடைய மேருவை வலமாகச் சுற்றி வருதலால் நாம் கதிரவனைப் போற்றுவோம்!

            பெருமைமிகு மழையைப் போற்றுவோம்! அச்சத்தைத் தரும் கடலால் சூழப்பட்ட உலகுக்கு அவன் வழங்குவது போல் மேலே நின்று வளத்தைச் சுரப்பதால் நாம் பெருமைமிகு மழையைப் போற்றுவோம்!

            அழகிய புகார் நகரினைப் போற்றுவோம்! வீங்கி அமையும் கடல் சூழ்ந்த இந்த உலகில் அவனது குலத்தினரோடு தொன்று தொட்டு பொருந்தி உயர்ந்து பரந்து இயங்குதலால் நாம் அழகிய புகார் நகரினைப் போற்றுவோம்.

            அவ்வாறு பொதியமலையும் இமயமலையும் குடியிருப்பில் இருந்தும் பெயர்ந்து செல்வதையே அறியாத பழமை பொருந்திய குடிகள் வாழும், சராசரியானவை போன்றில்லாத சிறப்பை உடைய புகாரும் எந்தப் பதற்றமுமின்றி நிலைபெற்றவை என்று கூறுவதன்றி, அங்கு உயர்ந்த மக்கள் வாழ்வதால் அவற்றுக்கு முடிவு என்ற ஒன்று உண்டு என்று முற்றிய கேள்வியறிவால் அனைத்தையும் உணர்ந்தவர்கள் கூறமாட்டார்கள்.

அதனால் நெடிய நாக நகரோடும் நாக நாட்டுடனும் வைத்து எண்ணத்தக்க நீண்ட போகமும் புகழும் பொருந்திய புகார் நகர் எனும் நகரத்தில்

            வானிலிருந்து பொழியும் மழை போன்று வள்ளல் தன்மை உள்ள கைகளை உடைய மாநாய்கனின் குலத்தில் தோன்றிய கொம்பாகிய பொன்னால் ஆன கொடி போன்றவள் பன்னீரண்டு ஆண்டு அகவை அடைந்தவள்,

            அவள்தான் தாமரைப் பூவில் அமர்ந்த திருமகளின் வடிவு கொண்டவள் என்றும் குற்றமற்ற வடமீனாகிய அருந்ததியின் கற்பு இவள் கற்பை ஒக்கும் என்றும் பெண்கள் தொழுது போற்றுமாறு விளங்கிய பெருங்குணங்களை விரும்புகின்றவள்; அவளுடைய  பெருமைக்குரிய பெயர் கண்ணகி என்பதாகும்.

            அந்தப் புகாரில் விரிந்த நிலம் முழுவதையும் ஆளும் சோழ மன்னனைத் தலைமையாக வைத்து எண்ணுகின்ற ஒப்பற்ற குடிகளாகிய  தன் கிளைகளோடு கூடி மிக உயர்ந்த செல்வத்தை உடையவனும்  வந்த செல்வத்தைப் பிறர் தேவைகளை நிறைவு செய்ய வழங்கும் மாசாத்துவான் என்று அழைக்கப்படும், பெரும் செல்வனுக்கு பதினாறு ஆண்டு நிரம்பப்பெற்ற மகன்,

            அவன், புவி சிறிதாகும்படி பரந்த புகழை உடையவன், பண்ணினை வென்ற மொழியினை உடையவராகிய நிலவு போலும் முகத்தைக் கொண்ட பெண்கள் கூட்டம் பாராட்டிக் கண்டு போற்றும் செவ்வண்ணமாக முருகவேள் என்று புகழ்பெற்று காதலுணர்வு கொண்டு போற்றும் பேறுடைய கோவலன் என்ற பெயர் கொண்டான்.

            இவர்கள் இருவரையும் பெருமையுடைய இரு பெற்றோரும் ஒரு பெரு நாளில்  மணக்கோலம் காண விரும்பினர். விரும்பிய அளவில்,

            யானையின் பிடரின் மீது அழகிய அணிகலன்களை அணிந்த மகளிரை இருத்தி அம் மாநகர மக்களுக்கு மகிழ்ச்சி மிக்க மண நிகழ்ச்சியை அறிவித்தனர்.

            அதன்படி, முரசங்கள் இயம்பின, மத்தளங்கள் அதிர்ந்தன, சங்கு முதலியவற்றின் முழக்கங்கள் முறைப்படி எழுந்தன. வெண்குடைகள் அரசன் உலாவின் போது போல எழுந்தன, ஊரில் மங்கல அணி வலம் சென்றது.

            மாலைகள் தொங்கும் உச்சியைக் கொண்ட வயிரமணித் தூண்களை உடைய மண்டபத்தில் நீல மேற்கட்டியின் கீழ் அமைந்த அழகிய முத்துப் பந்தலில்,

            வானில் நகர்ந்து செல்லும் நிலவு சகடு எனப்படும் உரோகணியைக் கூடும் நாளில் வானிலுள்ள தனிச் சிறப்புடைய அருந்ததி எனும் விண்மீன் போன்றவளை தலைமை சான்ற முதிய பார்ப்பான் மறைநெறியில் நெறிப்படுத்த கோவலன் மணம் புரிந்து மணமக்கள் தீயை வலம் வருவதைக் காண்போரது கண்கள் செய்த தவம்தான் என்னே!

            விளங்குகின்ற(பளிச்சென்ற) மேனியை உடைய மகளிர் விரையினராயும் மலரினராயும் உரையினராயும் பாட்டினராயும் அண்ணாந்துயர்ந்த(நிமிர்ந்து நிற்கும்) இளைய முலையினை உடைய மகளிர் சாந்தினராயும் புகையினராயும் விளங்குகின்ற மாலையினராயும் இடிக்கப்பெற்ற சுண்ணத்தினராயும் அரும்பிய புன்னகையை உடைய மகளிர் விளக்கினராயும் கலத்தினராயும் விரிந்த முளைப் பாலிகையினராயும் நிறை குடத்தினராயும் ஆகிய மொட்டுக்களோடு விரிகின்ற கூந்தலையுடைய மணமுள்ள பொற்கொடியைப் போன்ற பெண்கள் இவள் காதலனைப் பிரியாமலும் கணவனின் கையின் உள் வைக்கப்பட்ட கை நெகிழாமலும் இடையூறுகள் இன்றி வாழ்க்கை அமையட்டும் என்று வாழ்த்தி விடு பூக்களைத் தூவி அழகிய நிலமாகிய புவியில் வாழும் அருந்ததி போன்றவளை நிலைபெற்ற நல்ல மங்கல அமளி (கட்டில், பள்ளி) மீது ஏற்றினார், இங்கிருந்து சென்று இமயத்தில் இருக்கச் செய்த புலியானது அதற்கு மேலே உள்ள பொன் உச்சியில் நிற்பதாக, எப் பக்கத்திலும் தன் போர் எதிரியைவிட மேம்பட்ட சினம் மிக்க வேலை உடைய சோழன் நிகரில்லா தன் ஆணைச் சக்கரத்தை உருட்டுவானாக எனச் சொல்லி வாழ்த்தினர்

இக்காதையின் சிறப்புகள்

காதை என்ற சொல் காது என்ற சொல்லின் அடிப்படையில் உருவானது. ஒருவர் சொல்ல அதை இன்னொருவரோ பலரோ கேட்பது என்ற பொருளில் இச் சொல் உருவாகியிருக்கும். அதுவே திரிந்து பின்னர் கதை என்ற வடிவத்தைப் பெற்றிருக்கும். இவ்வாறு நெடில் குறிலாக அல்லது குறில் நெடிலாக மாறியிருக்கும் நிகழ்வுகளை இந் நூலைப் பொறுத்து இயன்ற வரை சுட்டிச் செல்வோம்.

திங்களையும் ஞாயிற்றையும் மழையையும் புகாரையும் போற்றுவதன் மூலம் சோழ மன்னனின் மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் குணத்தையும் உலகின் மீதுள்ள ஆளுமையையும் வள்ளல் தன்மையையும் இடையீடில்லா ஆட்சிச் சிறப்பையும் போற்றுகிறார் ஆசிரியர்.

            இந்த நான்கு புகழ்க் கூற்றுகளையும் கோவலன் கண்ணகி திருமணச் செய்தியை நகர மக்களுக்கு அறிவித்த பெண்களின் அறிவிப்பின் பகுதி  எனக் கூறுவார் புலவர் த. சரவணத் தமிழன். ஆசிரியர் கூற்றாகவும் மகளிர் கூற்றாகவும் ஒரே நேரத்தில் பயன்படும் வகையில் இப் பாக்களை அடிகளார் வகுத்திருக்கிறார் என்றும் கூறலாம்.

            காவிரி நாடன் என்று சோழனைக் கூறுகிறார் அடிகள். சோழ நாட்டைத் தன்னுள் அடக்கியது இன்றைய தமிழகம். அச் சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ளும் கயவர்கள் தமிழகத்தை ஆண்ட காலத்தில் காவிரியை இழந்த நாடாயிற்றே தமிழகம் என்ற ஏக்கத்தை அத் தொடர் நமக்கு இன்று அளிக்கிறது.

            பொதியமலையையும் இமயமலையையும் போன்று புகார் நகரம் அழிவில்லாதது என்ற கூற்று பொய்த்துப்போனதை உரைபெறு கட்டுரையில் குறிப்பாக உணர்த்திய அடிகளார் இதனை ஓர் அவலக் குறிப்பாகக் கூறுகிறார் என்றே கொள்ள வேண்டும்.

            நாகநீள் நகரம் என்பதற்குச் சுவர்க்கம் என்று பொருள் கூறுகிறார் வேங்கடசாமியார். நாகர்களுடைய நகரம்தான் சுவர்க்கம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது என்பது இதன் மூலம் புலனாகிறது. நாகர்களின் நகரம் மட்டுமல்ல, நாகநாடு முழுவதுமே இன்பம் துய்ப்பதில் சிறந்ததென்றும் அதற்குச் சமமான சிறப்புடையது புகார் நகரென்றும் விளக்கப்படுகிறது. ஆக இளங்கோவடிகள் காலத்தில் நாகர்கள், நாகர் நகரம், நாகநாடு ஆகியற்றின் நாகரிகச் சிறப்பு பற்றிய மரபு தமிழகத்தில் நிலவியது தெளிவாகிறது. நாகரிகம் என்ற சொல்லே நாகர்கள் என்ற சொல்லின் அடிப்படையாக உருவானது என்பதும் தெளிவாகிறது.

            கண்ணகியை வடமீன் என்ற விண்மீனோடு உவமித்துக் கூறியிருத்தல் அவளுடைய நிலைமாறா மனத் திண்மையைக் குறிக்கவே என்பதாகும். அருந்ததியைப் பெண்ணாக்கி அவளது கற்பின் திறத்தை விளக்கும் கதையையும் தொன்மப் பூசகர்கள் வகுத்துள்ளனர். ததி என்பதற்குக் கிரகம் என்று பொருள் கூறுகிறது கழகத் தமிழ் அகராதி. அரும் கோள் அல்லது அரிய விண்மீன் என்பதே அருந்ததி என்பதன் பொருள் என்று கொள்ளலாமா?

            கோவலனை முருகனுடன் உவமை காட்டுவது போல் செவ்வேள் என்ற சொல்லைப் பயன்படுத்துவதால் அவன் சிவந்த நிறம் உடையவனாக இருந்திருப்பான் என்று வேங்கடசாமியார் கருதுகிறார். பெண்களின்  கூட்டத்தில் இவனுக்கு கவர்ச்சி மிக்க ஓர் இடமிருந்தது என்று கூறுகிறார் அடிகள். அதே வேளையில் கண்ணகியைப் பெண்கள் அவளது நிலைமாறாத் தன்மைக்காகத் தொழுது போற்றினர் என்று கூறுகிறார். இதில் கூறப்படும் பெண்கள் முறையே களியாட்டுப் பெண்களும் குடும்பப் பெண்களும் ஆவர் என்று கொள்ளலாமா?

            திருமண அகவை பெண்ணுக்குப் பன்னிரண்டும் ஆணுக்குப் பதினாறும் என்று முற்காலத்தில் இருந்திருப்பது தெளிவாகிறது.

            பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம். பெரிய செல்வக் குடும்பத்தினர் இருவரும் தங்கள் பிள்ளைகளின் மணத்துக்கு ஏற்ற குடும்பம் என்ற நினைப்பில் இந்த மணத்தை ஏற்பாடு செய்துள்ளனர். கழக இலக்கியங்களில் கூறப்படுவது போல் மணமக்களுக்குக் களவு உறவு, அதாவது திருமணத்துக்கு முன்பான காதல் இருக்கவில்லை.

            ஊராருக்கு மணச் செய்தியை யானையின் மீது அமர்ந்த பெண்கள் அறிவிப்பது செல்வர்களின் திருமணத்தில் மட்டுமே நிகழத்தக்க நடைமுறை.

            ஒரு செல்வக் குடும்ப திருமண நிகழ்ச்சிகளை விரிவாகத் தருகிறார் அடிகள்.

            அவ்வழி
            முரசிலம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம் வெண்குடை
            அரசெழுந்ததொர் படியெழுந்தன அகலுள் மங்கல அணியெழுந்தது
என்ற வரிகள் மங்கல அணியின் ஊர்வலத்தை விளக்குவதாகக் கொள்ள வேண்டும்.

            கோவலன் அல்லது அவனும் கண்ணகியும் அம்மண சமயத்தினர் என்பது கொலைக்களக் காதையில் மாதரி கூறியதாக வரும் சாவக நோன்பிகள் அடிகளாதலின் (வரி18) என்பதனால் புலப்படுகிறது. அப்படி இருக்க, பார்ப்பன முறைப்படி எவ்வாறு திருமணம் நிகழ்த்தினர் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. பார்ப்பன மேலாளுமை எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை அம்மணம் அன்று கைவிட்டு விட்டதா? மாசாத்துவான், மாநாய்கன் போன்ற செல்வச் செழிப்புள்ளவர்கள் சமணத்தை ஒரு கால வண்ண(Fashion)மாகக் கடைப்பிடித்தார்களா, குமுகத்தில் புதுமையானது, உயர்வானது என்று கருதப்படும் அனைத்தையும் அச் செல்வர்கள் தங்கள் வயமாக்கிக் கொண்டனரா என்பது ஒரு கேள்வி.

            எழுத்தாளர் இராசம் கிருட்டினன் தினமணி கதிரில் மண்ணில் பதிந்த அடிகள் என்ற தலைப்பில் மணியம்மை என்ற பார்ப்பனப் பெண்ணின் வரலாற்றை எழுதினார். அதில், இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் ஓர் அரங்கத்தில் கூடியிருந்த மேட்டுக்குடிப் பார்ப்பனப் பெண்கள் உடுத்தியிருந்த பட்டுச் சேலைகளில் சோவியத் உருசியாவின் கொடி சரிகையில் நெய்யப்பட்டிருந்தது என்ற சுவையான செய்தி பதியப்பட்டிருந்தது. அதனைப் பார்த்து மணியம்மை எரிச்சலுற்றதாகக் கூறப்பட்டிருந்தது. அதாவது மேட்டுக்குடியினரிடையில் பொதுமை அப்போது காலவண்ணமாக இருந்திருக்கிறது. இன்றும்தான்!
           
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட என்ற வரி மாமுது பார்ப்பானாகிய பிரமன் வகுத்த வழியை மாமுது பார்ப்பானாகிய புரோகிதன் காட்டிட என்று பொருள் கொள்வதே பொருத்தமானது. இந்தத் திருமண முறையை பிரசாபத்தியமென்று நச்சினார்ச்கினியர் கூறியுள்ளதைக் காட்டுகிறார் வேங்கடசாமியார்.

            பிரமனைப் பிரசாபதி என்று கூறுகிறார் நச்சினார்க்கினியர். பிரசாபதி என்றால் குடிமக்களின் தலைவன் என்பது பொருள். பிரசை + பதி   பிரசாபதி பிரசாபத்தியம்.

            பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் காரணம் என்ப(தொல். பொருள்.143) என்பதில் வரும் ஐயர் மூத்தோர் ஆக வேண்டும். இவர் பெரும்பாலும் கூட்டுக் குடும்பத் தலைவரான அனைவருக்கும் மூத்தவராக இருந்திருக்க வேண்டும். பிரசாபதி என்பது கூட அத்தகைய கூட்டுக்குடும்பத் தலைவரைக் குறிக்கும் சொல்லாக இருக்கலாம்.

            நச்சினார்க்கினியர் கூறியபடி பிரமன் என்பவனையும் பிரசாபதி என்பவனையும் ஒன்றாகக் கொள்ள முடியவில்லை. எண்வகை மணங்களுள் முதலில் வருவது பிரமம். அடுத்து வருவது பிரசாபத்தியம். எனவே அவை வெவ்வேறு மணமுறைகள்.

1.       பிரமம்: என்பதை பார்ப்பன மணமுறை என்று கொள்வதுதான் சரி. அதாவது பிற எந்த மக்கள் குழுவையும் விட ஆண் மேலாளுமையை முழுமையாகக் கடைப்பிடிக்கும் குழுவாக அவர்கள் வளர்ந்ததன் அடையாளமாக அல்லது அதை உயர்வான நடைமுறையாகக் காட்டி அதைக் கடைப்பிடிப்பது, அதாவது பிரம்மச்சாரிக்கு  அணிமணிகளுடன் பெண்ணைத்  தானமாகக் கொடுப்பது என்பதன் பொருள், பெண் கொண்டுவரும் அணிமணிகளாகிய அசையும் சொத்துகள் முற்றிலும் கணவனுக்கே உரியது என்பதாகும். ஆனால் அது இன்று வரை நடைமுறையில் இல்லை. பெண் ஏதாவது காரணமாக கணவனைப் பிரிந்து வெளியேறினால் அவளது அணிமணிகளையும் அவள் கொண்டுவந்த தளவாடங்களையும் அவளுக்குத் திருப்பித் தரும் பழக்கம் இன்றும் பார்ப்பனர்களிடையில் நிலவுகிது. எனவே பிரமம் எனும் இந்த மணமுறை வெறும் கற்பனை என்றே கொள்ளவேண்டியுள்ளது.

2   பிரசாபத்தியம்: என்பதற்கு விளக்கம், மணமகன் கோத்திரத்தார் வேண்டிட இரு முது குரவரும் இயைந்து கொடுப்பது. இதில் மணம் நடத்தி வைக்கும் பார்ப்பனனைப் பற்றிய குறிப்பு இல்லை. இதுதான் இடையில் புகுந்ததாக இருக்க வேண்டும், தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும். இங்கே இரு முது குரவரும் நாம் மேலே குறிப்பிட்டுள்ளவாறு பிரசாபதிகளாக, குடும்பத் தலைவர்களாக, ஐயர்களாகச் செயற்படுவதைக் காணலாம். ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்று தொல்காப்பியம் கூறும் திருமணம் ஆகிய கரணம் என்பதன் மூலவடிவம் இதுவென்றே கொள்ள வேண்டும்.
     
3      ஆரிடம்: ஒன்றானும் இரண்டானும் ஆவும் ஆனேறும் வாங்கிக் கொடுப்பது.  இந்த முறைதான் பின்னர் பரியம் என்ற பெயரில் பணமாகக் கொடுப்பதாகத் திரிந்துள்ளது. இது ஆயர்களிடமிருந்து தோன்றியிருக்க வேண்டும். மாடு செல்வம் என்ற பொருளில் பண்டமாற்று ஊடகமாக மாறிய போது அனைவரும் மாட்டை வாங்கிப் பரியமாக வழங்கியிருப்பர். 

4 தெய்வம்: வேள்வி ஆசிரியர்களில் ஒருவருக்கு வேள்வித் தீ முன்னர் கொடுப்பது. இங்கு வேள்வி ஆசிரியர் என்பவர் வேள்வி நடத்தும் பூசகர் என்ற வகையில் பெண்களை அவர்களுக்குக் கொடுப்பது. வேள்விகள் மிகச் செல்வாக்குடன் இருந்த காலத்தில் வழிபாடே தீ வழிபாடாகத்தான் இருந்திருக்கும். தீயில் மனிதர்களைப் பலியிடும் வழக்கத்தின் எச்சமாகத் தமிழகத்தின் தென்கோடி மாவட்டங்களில் வணங்கப்படும் சுடலை மாடன்[1]வழிபாட்டில் தெய்வமாடி சுடலைக்குச் சென்று எரியும் பிணத்தை எடுத்து உண்பது திகழ்கிறது. தெய்வக் கதையைக் கூறும்போது பெண் உருத்தாங்கி ஆடும் கணியான்கள் என்ற ஆட்டக்காரர்கள் இந்தப் பெண் பூசாரியர்களின் எச்சமாக இருக்கலாமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. பிற்காலத்தில் வேள்வியில் நரபலி நின்று பூசகம் ஆண்கள் கைகளுக்கு வந்த பின் நெருப்பு ஓம்புவதற்குப் பெண்களை விடுவதன் ஓர் எச்சமாக வேள்வி ஆசிரியனுக்குப் பெண்களைக் கொடுக்க அவர்கள் கோயில்களில் பெண் பூசகர்களாகவும் கணிகையராகவும் செயற்பட்டிருப்பர். இது பின்னாட்களில் கோயில்களுக்குப் பெண்களைப் பொட்டுக்கட்டி விடுவதாகத் திரிந்திருக்கலாம். பிற்காலத்தில் கோயில்களுக்குப் பெண்களைக் கொடுக்கும் வழக்கம், பல்வேறு வடிவங்களில் இந்தத் தெய்வ மணத்திலிருந்து திரிந்து வந்திருக்க வேண்டும். தெய்வம் என்ற சொல், தெய்வத்துக்குப் பகரமாகப் பூசாரியைச் சுட்டுகிறது.

5   காந்தருவம்: என்பது ஒத்த இருவர் தாமே கூடும் கூட்டம். நீடித்த திருமண உறவாக இன்றி அப்போது மட்டும் கூடிப் பிரிதல். உண்மையில் இது குறிஞ்சித் திணைக்கு உரிய கூடலாக இருந்தாலும் இரண்டுக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. குறிஞ்சித் திணையில் குக்குல வாழ்முறையின் ஒரு கட்டத்தில், ஒரு குக்குலத்தின் கிளைகள் தனித்தனியாக வாழ்கின்றன; கிளையின் உள்ளே மணவுறவு தடை செய்யப்பட்டுள்ளது. அந்தத் கிளைக்கு மண உறவுள்ள இன்னொரு கிளையின் அல்லது கிளைகளின் உறுப்பினர்களுடன்தான் உறவுகொள்ள முடியும். இத்தகைய புணர்முறையுள்ள இரண்டு கிளைகளின் ஆண் - பெண் உறுப்பினர்கள் தற்செயலாக சந்தித்துக் கூடிப் பிரிகின்றனர். குழந்தைகள் தாயின் கிளைக்கு உரியவை. அவர்கள் தற்செயலாக மீண்டும் சந்தித்தாலன்றி அவர்களின் உறவு தொடராது. நிலையான மண உறவு என்ற கருத்துருவே தோன்றாத நிலை இது.

  காந்தருவம் என்பதோ மிகக் கடுமையான ஆண் மேலாளுமைக் கட்டங்களை எல்லாம் தாண்டி, நிலையான மண உறவு என்பது இருவர் உரிமைகளுக்கும் தடங்கல் என்ற எண்ணம் வலுத்து சேர்ந்து வாழ்தல் என்பது கூட இன்றி நினைத்தால் கூடிப் பிரிவது என்ற நிலையாகும். காந்தருவர் என்போரை இயக்கர்கள் என்றும் யாழோர் என்றும் கூறுவர். இவர்கள் வானூர்திகளில் இயங்கியவர்கள் என்று கூறப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் அடையாளமாக அவர்களது ஆயிரம் நரம்புகளை (சுரங்களை)க் கொண்ட பேரியாழ் குறப்பிடப்படுகிறது. இன்றைய வல்லரசு நாடுகளில் தொடங்கியுள்ள, தன் பாலரோடு திருமணம் என்பதன் அடுத்த கட்ட நிலை இது எனலாம். வரலாறு தன்னை மீட்கிறது என்பதற்கும் அந்த மீட்பு முழுமையானதல்ல என்பதற்கும் இது ஒரு மிகச் சிறப்பான எடுத்துக்காட்டு. குறிஞ்சி நில மண முறை மீண்டுள்ளது. ஆனால் அதற்குரிய பருப்பொருட் சூழல்கள் நேர் எதிரானவை.

      இன்று வல்லரசு நாடுகளில் சிதைந்து போன குடும்பம் என்ற அமைப்பை மீளக் கட்டுவது குறித்து பேசத் தொடங்கியவுடன், ஆகா! பார்! பார்! மேலையர்கள் நம் பண்பாட்டுப் பெருமையை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்; எனவே நம் சாதி வருணங்கள் என்ற அமைப்புகளை அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்வதற்கு இது அறிகுறி என்று மயிர் சிலிர்க்கிறார்கள் சில படித்த மே(ல்)தாவிகள். அவர்களுக்கு ஒன்று, அங்கே புதிதாக உருவாகும் குடும்பம் மிஞ்சிப் போனால் கணவன் - மனைவி, இன்னும் சரியாகச் சொன்னால் மனைவி - கணவன் சமநிலை அல்லது மனைவியின் மேலாளுமை என்பதாகத்தான் இருக்கும். இன்றைய தன்பால் உறவுகள், ஓர் ஆணிடம் தன் உரிமைகளை குடும்பம் என்ற நிறுவனம் நிலைக்க வேண்டும் என்பதற்காக இழக்க அங்குள்ள பெண் ஆயத்தமாயில்லை - ஒரு பெண்ணுக்குச் சம உரிமை கொடுக்க ஓர் ஆண் அணியமாயில்லை என்ற நிலைமையின் விளைவுதான்.  இதில் தீர்வு நாம் மேலே கூறியதாகத்தான் இருக்க முடியும்.

      முன்பு பெண்களின் மேலாளுமையை அவர்கள் எதிர்த்து நடத்திய கமுக்கக் கழகங்கள் (Secrct Societies) என்ற போராட்ட உத்தியில் ஆண் தன் மேலாளுமையை நிறுவியதற்கு எதிர்த்திசையில் இது அமையும்.

                  இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
                  அன்பொடு புணர்ந்த ஐந்தினை மருங்கின்
                  காமக் கூட்டம் காணுங் காலை
                  மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
                  துறையமை நல் யாழ்த் துணைமையோர் இயல்பே.
                                                                  தொல்: பொருள் 89.

 இதில் மறையோர் தேஎம் என்பதற்கு மறையோர் ஆகிய அந்தணரது நூல் என்று பொருள் கூறுகிறது இளம்பூரணம் (தொல்காப்பியம், பொருளதிகாரம் இளம்பூரணம், கழக வெளியீடு எண் 629, 1977 பக். 159). “துறையமை நல்யாழ்த் துணைமையோராவார் கந்திருவர்

அறன்நிலை ஒப்பே பொருள்கோள் தெய்வம்
யாழோர் கூட்டம அரும்பொருள் வினையே
இராக்கதம் பேய் நிலை என்றிக் கூறிய
மறையோர் மன்றல் எட்டவை அவற்றுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் புணர்ப்பினதன்
பொருண்மை என்மனார் புலமை யோரே
அதே நூல் மேற்கோள் பக். 160.

6 அசுரமாவது: வில்லேற்றினானாதல் திரிபன்றி எய்தானாதல் கோடற்குரியனெனக் கூறியவழி அது செய்தார்க்குக் கொடுத்தல். அதாவது, இராமனைப் போன்று வில்லை வளைத்தல் அல்லது அருச்சுனன், சீவகன் போன்று சுழலும் பன்றி உருவை அம்பால் எய்தல், கண்ணனைப் போன்று ஏறுதழுவல் போன்ற வீரச் செயல்களைச் செய்து அல்லது பந்தயங்களில் வென்று மணம் செய்தல். இந்த இலக்கணப்படி இந்தியப் பெரும் காப்பியங்களிலும் பெரும் மறவனப்புகளிலும் தொன்மங்களிலும் இடம் பெறும் பெரும்பாலான கடவுள்கள் அல்லது பெருமக்களின் திருமணங்கள் அசுரம் என்ற வகைப்பாட்டினுள் வருபவையே. அதில் தமிழர்களும் விலக்கல்ல. ஏறு தழுவல், தமிழ்க் கண்ணனுக்கே உரியது என்பதும் சீவகன் தமிழ்க் காப்பியமாகிய சீவக சிந்தாமணியின் கதைத் தலைவன் என்பதும் நினைத்துப் பார்க்கத் தக்கவை.

கிரேக்கக் காப்பியமான ஒடிசியில் அதன் தலைவனான உலீசிசு என்பவன் திராய்ப் போரிலிருந்து திரும்பியவன் நெடுநாட்களாகத் தன் வீட்டுக்கு வந்து சேரவில்லை. அந் நிலையில்  அவன் மனைவியை மணந்துகொள்ள விரும்பிய பலர் அவளை நெருக்கினார்கள். அப்போது மேலே சூழலும் பன்றி வடிவத்தைக் கீழே கண்ணாடியில் பார்த்து எய்யும் பந்தயம் முன்னிடப்படுகிறது. மாற்று வடிவத்திலிருந்த உலீசிசு பந்தயத்தில் வென்று மனைவியை அடைகிறான். நளன் கதை, மகாபாரதம், சீவக சிந்தாமணி ஆகியவற்றுடன் இதற்குள்ள ஒற்றுமை வியப்பளிக்கிறது. நளாயினிக்கு மறுமணம் ஏற்பாடாகி இருந்தது குறித்து தமிழ்ப் பண்பாட்டு ஆர்வலர்கள் என்ன நினைக்கிறார்கள்?

7         இராக்கதமாவது தலைமகள் தன்னிலும் தமரிலும் பெறாது வலிதிற் கொள்வது.

8         பைசாசமாவது களித்தார் (கள்ளுண்டார்) மாட்டும் துயின்றார் மாட்டும் கூடுதல்.

எண்வகை மணங்களுக்கு நாம் மேலே கூறிய விளக்கங்கள் தொல். பொருள். நூற்பா 89க்கு இளம்பூரணர் தந்துள்ளதன் அடிப்படையில் ஆனது. ஆனால் அபிதான சிந்தாமணியும் தமிழ்மொழி அகராதியும் இதிலிருந்து வேறுபட்ட விளக்கங்களைத் தந்துள்ளன. குறிப்பாக, அபிதான சிந்தாமணி அசுர மணத்தை விளக்காமல் விட்டுவிடுகிறது (பார்க்க மணம்) பெண்ணுக்குப் பொன் பூட்டிச் சுற்றத்தார்க்குப் பொன் வேண்டுவன கொடுத்துக் கொள்வது அசுர மணம் என்கிறது தமிழ் மொழி அகராதி (தொகையகராதி மணம் பார்க்க). கழகத்தமிழ் அகராதி சரியாகச் சொல்கிறது: அசுரம்  வீரச்செயல் புரிந்து பெண் கொள்ளல். நம் தெய்வங்களும் காவியத் தலைவர்களும் அசுர மணம் புரிந்துள்ளனர் என்பதைச் சொல்ல அபிதான சிந்தாமணியும் தமிழ்மொழி அகராதியும் கூசி மறைந்துள்ளன என்பது தெளிவு.
*                      *                       *
இதனைப் பிரசாபத்தியம் என்பர் அடியார்க்குநல்லார் எனச் சுட்டிக்காட்டியுள்ள வேங்கடசாமியார், இது தமிழில் ஒப்பு என்று கூறப்படும். ஒப்பாவது மைத்துனக் கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மாறாது கொடுப்பது என்பர் என்கிறார். தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப என்பதும் இதுவும் ஒரே தன்மையை உடையவையே.  குறிஞ்சித் திணையில் கிளையை அறிய அணிமணிகள், ஒப்பனைகள் போன்றவை பயன்பட்டன. பிற்காலத்தில் இவை உசாவல் மூலம் அறியப்பட்டன. குக்குல வாழ்வில் பூ, இலை, அணிகள் போன்ற அடையாளங்களை வைத்துக் குறிஞ்சி நிலமக்கள் தாம் ஒருவருக்கொருவர் புணர்ச்சிக்கு ஒத்த குடிகள்தாம் என்று தெளிந்து கூடினார். இன்று கிளை, கூட்டம், இல்லம், பட்டறை போன்ற எண்ணற்ற பெயர்களில் திருமணங்களில் இந்த ஒப்பு பார்க்கப்படுகிறது.

இனி அடிகள் தரும் செய்தித் தொகுப்புகளைப் பார்ப்போம். விரையினர். விரை பஞ்ச விரைகள்: கோட்டம்,  துருக்கம், தகரம், அகில், சந்தனம்.
கோட்டம் =  குராமரம் (குரவம்): ஒரு மருந்து, அது பஞ்சவிரையிலொன்று
      குரா:             குரவு மரம், நறுமணம்.
      குரவு:            குராமரம், நறுமணம்.
      குரவம்:         ஒரு மரம், கோட்டம், நறுமணம், பேரீந்து
      துருக்கம்:       கத்தூரி, கத்தூரி மிருகம், குங்கும மரம், பஞ்ச விரையினொன்று.
      தகரம்:           தகர மரம், அது பஞ்சவிரையிலொன்று, மயிர்ச் சாந்து, வாசனைப் பண்டம்              
      தகர்:               பலாசு
      பலாசு:            பலாசம்
      பலாசம்:          புன் முருக்கு, முருக்கு
      முருக்கு:          எலுமிச்சை, கிஞ்சுக மரம்
      புன் முருக்கு:   (இல்லை),
      கிஞ்சுகம்:        பலாசு, முண்முருக்கு.

            இந்த மரங்களைப் பற்றி அகராதிகள் தரும் செய்திகள் தெளிவாக இல்லை. தமிழ்ப் பல்கலைக் கழகம், சித்த மருத்துவக் கல்லூரிகள் முதலியவை இத் துறையில் ஆய்வுகள் செய்து அதன் அடிப்படையில் இலக்கிய உரைகளையும் அகராதிகளையும் மேம்படுத்த வேண்டும்.

            திருமணத்தில் பங்குபெறும் பெண்களது விளக்கத்தைத் தொகுத்தால் கிடைப்பது விளங்குமேனியர், சிந்த நோக்கினர், தயங்கு கோதையர், ஏந்திள முலையினர், முகிழ்த்த மூரலர், போதோடு விரி கூந்தல் பொலன் நறுங்கொடியன்னார் என்பது கிடைக்கிறது. மணம் வீசுகின்ற தங்கத்தால் ஆகிய கொடியைப் போன்றவர்கள் என்ற விரித்துரை மனதைச் சொக்கவைக்கிறது.

            இதில் போதொடு விரிகூந்தல் என்ற சொற்றொடரில் விரிந்த கூந்தல் பின்னர் நிகழ இருக்கும் அவலத்தின் குறிப்பை உள்ளுறையாகக் கொண்டது என்று பாவலர்மணி ஆ.பழநி சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு என்ற தன் ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார். இளங்கோவடிகள் தன் நூல் முழுவதும் கோலவன் இறப்பு பற்றிய அவலச் செய்தியால் நிறைத்து அதை ஓர் அவலக் காப்பியமாக வடித்துள்ளார் என்று காட்ட முயன்றிருக்கிறார் அவர். சிலப்பதிகாரத்தின் எண்சுவைச் சிறப்பை மறுக்கிறார். எடுத்துக்காட்டாக,

                        காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
                        தீதறு கெனஏத்தி 

என்பதனையும் காதலர் பிரிவதற்கும் கவவுக்கை நெகிழ்வதற்கும் முன்குறிப்பு என்கிறார். ஒருவர் நீடு வாழ்க என்று ஒருவரை வாழ்த்தினால் அவ்வாறு வாழ்த்தப்பட்டவன் விரைவில் இறந்து விடுவான் என்பதன் முன்குறிப்பு என்று கூறுவார் போலும்!

            அன்றைய தமிழகச் சூழலில் பரத்தையர் பிரிவு செல்வம் படைத்தவர்களிடையில் பரவலாக இருந்த நிலையில் இந்த வாழ்த்தைப் பொருத்திப் பார்த்தால் இதில் அவலச் சுவைக்கு இடமில்லை. யாரும் எதிர்பார்க்கத்தக்க பொதுவான ஒன்றாகவே கொள்ள வேண்டியுள்ளது.

            அது போலவே பெண்கள் அதிகாலையில் குளித்துக் கூந்தலை உலர்த்தி அது முழுமையாக உலராத நிலையில் சிறு பின்னல் இட்டு விரிந்த கூந்தலைப் பிணித்து அதில் மலர்களைச் சூடியிருப்பது கூந்தல் ஒப்பனைகளில் ஒன்று. ஐம்பால் எனும் கூந்தல் முடிப்பின் 5 வகைகளில் ஒன்றாக இதைக் கொள்ள வேண்டும். தலை விரி கோலம் என்பதும் இதுவும் வெவ்வேறானவை. பிற நான்கும் அவை வருமிடங்களில் சுட்டப்படும். மலர் மொக்குகளுக்கும் கூந்தல் ஒப்பனைக்கும் பொதுவான விரிந்த தன்மையை அதாவது விரிந்த கூந்தலிலே விரிந்த, விரிகின்ற அல்லது விரியும் மொக்குகள் என்று அடிகள் நயமாகப் பொருத்திக் கூறும் சொற்சுவைதான் இதில் தூக்கலாக இடம்பெற்றுள்ளது. குழல்வளர் முல்லையிற் கோவலர் தம்மொடு மழலைத் தும்பி வாய்வைத் தூத (அந்திமாலைச் சிறப்புச்செய் காதை வரி. 15-16) என்ற அதே உத்தி.

            சிலப்பதிகாரத்தின் முதல் காதையாகிய மங்கல வாழ்த்துப் பாடல், சோழ மன்னனைப் போற்றுதலில் தொடங்கி அவனை வாழ்த்தி முடிகின்றது. பலர் கூடி நின்று நிகழ்த்தும் ஒரு விழா ஆகையால் இறுதியில் அரசனை வாழ்த்தும் மரபு கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

            சாந்து என்ற சொல்லுக்கு சந்தனக் குழம்பு என்பதுடன் வாசனைப் பொடி என்று பொருள் அகராதிகளில் தரப்பட்டுள்ளது. பொடி பற்றி பின்னால் வருவதால் இது சந்தனத்தையே குறிக்கும்.

            இங்கு சுண்ணம் என்பது இன்று நாம் முகத்துக்குப் பூசும் முகப்பொடியாகிய டால்கம் பவுடரே (Talcum powder). 1972 ஆம் ஆண்டின் Chambers Twentieth Century Dictionary talc என்ற சொல்லுக்கு n.a very soft, pliable greasy silvery white foliated or compact mineral acid magnesium silicate commercially often muscovite mica என்றும் talcum - talc - schist schistose rock composed essentially of talc with necessary minerals என்று பொருள் தருகிறது. இது சுண்ணாம்புக்கல் போன்ற வெள்ளைக் கல்லை இடித்துப் பெறப்படுவதால் சுண்ணம் என்று நம் பண்டையர்கள் அழைத்துள்ளனர்.

            மணமக்களை வாழ்த்திய பெண்களைப் பற்றிய விளக்கம் அவர்கள் ஏந்தி வந்த பொருட்களோடும்  அவர்களது செயல்களோடும் கலந்து தந்திருக்கும் உத்தி ஒப்பற்ற  ஒன்றாகும்.

வெண்குடையும், முரசு மத்தள வகைகளும் அரசனுக்கு எழுவது போல் சங்கங்களும் எழுந்தன. ஊரினுள் அல்லது தெருவினுள் அல்லது மண்டபத்துள்  மங்கல அணி எழுந்தது. இது தாலியா என்ற குறிப்பு இல்லை. நீலநிற மேற்கட்டு அமைந்த முத்துப்பந்தலில் திங்கள் உரோகிணியைத் சேர்ந்த நேரத்தில் பார்ப்பன முறையில் தீவலம் செய்தனன்.

            நறுமணப் பொருட்களையும் மலர்களையும் சந்தனத்தையும், நறும்புகையையும், சுண்ணத்தையும் விளக்குகளையும் கலன்களையும் முளைப்பாலிகைகளையும் கொண்டு உரையாடியும் பாடியும் காதலரைப் பிரியாமல் பற்றிய கை நெகிழாமல் தீதறுக என்று சிறு மலர்களைத் தூவி மங்கல அமளி மீது ஏற்றி சோழனை வாழ்த்திச் சென்றனர். இங்கு கழக இலக்கியங்களில் காணப்படும் திருமண முறைகளுக்கு மாறாக, பார்ப்பனர் மறைவழியில் நடத்தும் மணவிழா காட்டப்படுகிறது. தாலி இருந்ததற்கான சான்று இல்லை.


[1] இந்தத் தெய்வ வழிபாடு வட மாவட்டங்களில் மறைந்து மாசானம் என்று மக்களுக்குப் பெயர் சூட்டுவது அதன் எச்சமாக இன்று நிலவுகிறது.

26.10.15

சிலப்பதிகாரப் புதையல் 3 உரைபெறு கட்டுரை


உரைபெறு கட்டுரை

  1. அன்று தொட்டுப் பாண்டியனாடு மழை வறங் கூர்ந்து வறுமை யெய்தி வெப்புநோயுங் குருவுந் தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்ல ராயிரவரைக் கொன்று கள வேள்வியால் விழவொடு சாந்தி செய்ய நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமு நீங்கியது.
  2. அது கேட்டுக் கொங்கிளங் கோசர் தங்கணாட கத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழை தொழிலென்றும் மாறாதாயிற்று.
  3. அது கேட்டுக் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வென்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்ட முந்துறுத் தாங்கு அரந்தை கெடுத்து வரந்தரு மிவளென ஆடித் திங்கள கவையி னாங்கோர் பாடி விழாக் கோள் பன்முறை யெடுப்ப மழை வீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று.
  4. அதுகேட்டுச் சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தரு மிவளோர் பத்தினிக் கடவுளாகுமென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே.

பொழிப்புரை

பாண்டியனது நாடானது அன்றிலிருந்து மழை பொய்த்து அதனால் வறுமை எய்தி வெப்பு நோயும் அம்மை முதலிய குருநோய்களும் தொடர்ந்ததனால் கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன் நங்கையாகிய கண்ணகிக்கு ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட்டு களவேள்வியுடன் விழாக் கொண்டாடி சாந்தி செய்ய அவன் நாட்டில் மிகச் செழிப்பாக மழை பெய்து நோய்களும் துன்பங்களும் நீங்கின.

            அதனைக் கேள்விப்பட்டுப் புதிய சிற்றரசர்களாகிய கோசர்கள் தங்கள் நாட்டினுள் நங்கைக்கு விழாவும் சாந்தியும் செய்ததால் மழைபெய்தல் தவறாமல் நடைபெற்றது.

            அதைக் கேள்விப்பட்டு கடல் சூழ்ந்த நாடாகிய இலங்கையின் அரசனாகிய கயவாகு என்பவன் நங்கையாகிய கண்ணகிக்கு நாள்தோறும் பலிகொடுக்கும் பலிபீடத்தை முன்புறம் நிறுவிய கோட்டத்தை அமைத்துத் துன்பங்களைக் களைந்து நமக்கு வேண்டும் வரங்களை அவள் தருவாளென்று நினைத்து ஆடி மாதத்தில் அங்கு ஒரு நகரத்தில் ஆண்டுதோறும் பல ஆண்டுகள் எடுக்க பல வளங்களும் பொருகி பொய்யாத விளைவையுடைய நாடாயிற்று அவனது நாடு.

            அதைக் கேள்விப்பட்டு பெருங்கிள்ளி என்னும் சோழ மன்னன் உறையூரில் இவள் ஒரு பத்தினித் தெய்வம் ஆகையால் எவ்வகையிலும் வரம் தருவாள் என்று நினைத்து கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் கட்டி நித்தமும் அணி செய்து விழாவும் எடுத்தான்.

உரைபெறு கட்டுரையிலுள்ள சிறப்புகள்

            வெப்பும் குருவும் என்று குறிக்கப்படும் நோய்கள் யாவை என்பது பற்றி அகராதிகளில் பார்த்தால்:

தமிழ் மொழியகராதி, வெப்பு: ஒரு நோய், மனத்துள் வெம்மை என்றும்
            கழகத் தமிழ் அகராதி, வெப்பு: ஒரு நோய், மனத்துன்பம், வெம்மை, கொடுமை என்றும் பொருள்கள் காணப்படுகின்றன.
           
உரையாசிரியர்களில் அடியார்க்கு நல்லார் உரையில் தொழு நோய் என்றும் வேங்கடசாமியார் உரையில் வெப்பு நோய் என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது.

            வெப்பு நோய் என்பது கி.பி. 2006 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பலரைத் தாக்கி நெடுநாள் நலிவுறவுச் செய்ததுடன் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சாகடித்ததும் அப்படி ஒரு நோயே, ஆளும் கட்சியாகிய தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியாக இருந்த பேரவைக் கட்சியைச் சார்ந்த பாலசுப்பிரமணியம் என்ற தலைவரைத் தவிர வேறெவரையும் தாக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டதுமாகிய சிக்குன் குனியா எனப்படும் மொழி முறித்தான் நோய் என்கிறார் திரு.வெள்வன் அவர்கள்.

            இந்த நோய் பரவலாகத் தாக்கிய 2006ஆம் ஆண்டுக்கு முந்திய ஆண்டு இறுதியிலிருந்து வேப்ப மரங்களின் இலைகள் கொத்துக் கொத்தாகக் கருகிவிட்டன. இது வழக்கத்துக்கு மாறாகும். வேப்ப மரமே வைரசு எனும் நுண்ணுயிரியை எதிர்த்து அழிக்கும் தன்மை உடையது ஆகும். இந் நுண்ணுயிரியால் உருவாகும் அம்மை, தட்டம்மை, மணல்வாரி, பொன்னுக்கு வீங்கி எனப்படும் அம்மன்கட்டு ஆகிய நோய்களுக்கு மருந்தே வேப்ப மரத்து இலையும் வேப்பெண்ணெய்யும் ஆகும். அப்படிப்பட்ட மரத்தையே தாக்கும் ஒருவகை நுண்ணுயிரியின் தோற்றம்தான் இந் நோய்த்தாக்கின் காரணம் என்றும் இது போல் வேப்ப மரத்தில் கருகல் காணப்படும் போது இது போன்ற நோய்த்தாக்கு இடம் பெறும் என்றும் ஊர்ப்புறத்து மூத்தவர்கள் கூறியதாக அவர் கூறினார். இது ஆயப்பட வேண்டிய ஒரு பொருளாகும். மக்கள் நோவு தாங்க முடியாமல் கைகால்களை இயக்க முடியாமல் மாதக் கணக்கில் துன்புற்ற போதும் பலர் மாண்ட போதும் நோயே இல்லை என்று ஓங்கி அடித்துவிட்ட ஆட்சியாளர்கள் இது போன்ற ஆய்வை மேற்கொள்வர் என்று எதிர்ப்பார்ப்பது கொட்டும் கடந்தை(குளவி)க் கூட்டில் தேனெடுக்கச் செல்லும் கதைதான்.

            குருநோய் என்ற சொல்லுக்குத் தமிழ் மொழி அகராதியும் கழகத் தமிழ் அகராதியும் வைசூரி என்ற பொருளைத் தருகின்றன. வேங்கடசாமியார் கொப்புளம் என்று பொருள் கூறுகிறார். அம்மை நோய் என்பதுதான் சரி. மழைக் காலம், பனிக் காலம், கோடைக் காலம் ஆகிய இம் மூன்றும் உடலில் உருவாகும் வெப்ப ஆற்றலை மிகக் கூடிய அளவில் எடுத்துக்கொள்கின்றன. அதற்காக உடலில் உள்ள பல்வேறு சத்துகளும் செலவழிந்து உடலின் கட்டமைப்பு மெலிவுற்று நோய் எதிர்ப்புத் திறன் குன்றுகிறது. அந்தச் சூழலில் தேவையான சத்தைக் கொண்ட உணவு இல்லை எனில் கொள்ளை நோய்கள் பரவுகின்றன. அவ்வாறுதான் பாண்டிய நாடு மழை இன்மையாலும் அரசன் இறந்து தலைநகர் அழிந்ததால் ஏற்பட்ட குழப்பத்தாலும் மக்களிடையில் பசியும் அதன் விளைவாகப் பிணிகளும் பரவியிருக்க வேண்டும்.

            ஆயிரம் பொற்கொல்லர்களைப் பலிகொடுத்து கண்ணகிக்கு வெற்றிவேல் செழியன் சாந்தி விழா எடுத்தான் என்பதனை வேங்கடசாமியார் மாவினால் ஆயிரம் பொற்கொல்லர் உருவங்களைச் செய்து பலியிட்டான் போலும் என்கிறார்.

            ஆனால் மதுரையில் நடைபெறும் ஒரு விழாவில் ஒரு பொற்கொல்லரின் தலைமயிரை வெட்டி, பழைய நிகழ்ச்சியின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது என்று பேரா.பர்.தே.லூர்து அவர்கள் கூறுவார்கள்.

            பாண்டியர் மீனைக் கொடியாகக் கொண்டு மீனவர் என்று அழைக்கப்படுபவர்கள். எனவே அவர்களுடைய பண்டைத் தலைநகரங்களாகிய தென் மதுரையும் கபாடபுரமும் கடல் துறைமுகங்களாகவே இருந்திருக்க வேண்டும். மூன்று தமிழ்க் கழகங்களின் வரலாறு கூறும் இறையனார் அகப்பொருள் உரை போன்றவற்றில் கூறப்படாத ஒரு தலைநகரம், இரண்டாம் கடற்கோளுக்குத் தப்பி கபாடபுரத்திலிருந்து வந்த பாண்டியர்கள் குறுகிய காலம் தங்கிய மணலூர் ஆகும். இந்த ஊரை எங்கெங்கெல்லாமோ தேடுகின்றனர். ஆனால் தூத்துக்குடி மாவட்டக் கடற்கரையில் கொற்கை மணலூர் என்றொரு ஊரும் அப் பெயரில் தென்னிந்தியத் திருச்சபை சேகரமும் இருப்பது இதுதான் அந்த மணலூர் என்பதை விளக்கும். இந்த நகரைப் பற்றி மகாபாரதத்தில் கூறப்பட்டிருப்பதாக திரு.வி.கனகசபையார் எழுதிய ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் என்ற நூலில் குறித்துள்ளார். தொடர்ந்த கடற்கோள்களின் பட்டறிவால் பின்னர் தலைநகரை உள்நாட்டிலிருக்கும் இன்றைய மதுரைக்கு மாற்றிய பாண்டிய மன்னர்கள் கொற்கையைத் தங்கள் துணைத் தலைநகராகவும் துறைமுகமாகவும் வைத்திருக்கின்றனர்.

            கொற்கை என்ற பெயர் ′கொல்′ என்ற சொல் அடிப்படையாகப் பிறந்தது என்று கருதுகின்றனர். கொல்லுத் தொழில் சிறப்பாக நடைபெற்ற ஒரு நகரம் என்று அதற்கு விளக்கம் கூறுகின்றனர். பாண்டியர் அரசுக்காக நாணயம் வடித்தல், போர்க் கருவிகள் செய்தல் ஆகியவை இங்குதான் நடைபெற்றன. இந்தப் பணிகளைக் கண்காணிக்கவும் மேலாளுமை செய்யவும் பட்டத்து இளவரசன்தான் பொருத்தமானவன். இந்தப் பணிகளை செயல்படுத்தும் போது தொழிலாளர்களுக்கும் பட்டத்து இளவரசனுக்கும் பூசல்கள், மோதல்கள் நிகழ்ந்திருக்கலாம். அதை வன்மமாக வைத்திருந்து கோவலன் கொலையில் ஒரு பொற்கொல்லனுக்கு முகாமையான பங்கு இருந்ததால் அதனைக் காரணமாக வைத்து அவர்களைக் கொண்டுவந்து அவர்களோடு மதுரையில் இருந்த பொற்கொல்லர்களையும் பிடித்து பலி கொடுத்திருக்கலாம். ஆயிரம் என்ற எண்ணிக்கை மிகையாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.

            கோவலன் கொலைப்படக் காரணமான பொற்கொல்லன் கைவினைக் கம்மியர் நூற்றுவர் பின்வர நடந்தான் என்று கூறப்படுவதால் பொன் தொழில் அன்றைய பாண்டிய நாட்டில் செழிப்பாக நடைபெற்றிருக்கலாம். கைவினைஞர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடி வந்த ஒரு சூழலில் மதுரை நிகழ்ச்சி நடத்திருக்கலாம். நகரில் புரட்சி நடத்தியதில் இந்தக் கம்மியர்களுக்கும் பங்கு இருக்கலாம். அதற்காக, கண்ணகிக்குச் சாந்தி செய்வித்தல் என்ற பெயரில் அவர்களை தீர்த்துக் கட்டியிருக்கலாம். எப்படியும் இந்தச் செயலுக்குப் பின்னணியில் வலிமையான அரசியல் காரணிகள் இருக்க வேண்டும்.

            சேரன் செங்குட்டுவன் கண்ணகிக் கோயில் கடவுள் மங்கலம் எடுத்ததில் பங்குகொண்டு, தன் நாட்டில் கண்ணகிக்குக் கோயில் எடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவனாக உரைபெறு கட்டுரையில் கூறப்படுபவன் இலங்கையின் மன்னன் கயவாகு.

            இவனைப் பற்றிய செய்தி ஒன்றைக் கனகசபையார் தன் நூலில் தருகிறார். அவனது தந்தை காலத்தில் கரிகாலன் இலங்கை மீது படையெடுத்து 12ஆயிரம் வீரர்களைச் சிறைப்படுத்திக் கொண்டுவந்து காவிரிக்குக் கரைமைத்தான் என்றும் அதற்குப் பழிவாங்குவற்காகப் பூம்புகாரைத் தான் அழித்துவிட்டதாகவும் அவன் கூறியிருப்பதாக இலங்கை வரலாற்றில் பதிவாகியுள்ளதாக அவர் கூறுகிறார்.

            மணிமேகலை இச் செய்தியை உறுதிப்படுத்துகிறது. தாயைப் போல் கணிகையாக விரும்பாத மணிமேகலை மீது இளவரசன் நாட்டம் கொண்ட சூழலில் புத்தத் துறவிகள் வடிவில் இருந்த இலங்கை ஒற்றர்கள் அவளை இலங்கையைச் சேர்ந்த இரத்தினத் தீவு எனப் பொருள்படும் மணிபல்லவத் தீவுக்கு அழைத்துச் சென்று இளவரசனின் கெடுபிடிகளிலிருந்து விடுபடுவதற்கு புத்தத் துறவிகள் மூலமாக உதவவும் பஞ்சத்தில் வாடும் மக்களுக்கு உணவளிக்கவும் தான் ஏற்பாடு செய்வதாக கயவாகு வாக்களித்திருக்க வேண்டும். சோறுடைத்த சோழ நாட்டில் பஞ்சம் வந்தது எப்படி?

            மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
            ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்
            இளவரசு பொறாஅர் ஏவல் கேளார்
            வளநாட ழிக்கும் மாண்பின ராதாலின்
            ஒன்பது குடையும் ஒருபக லொழித்தவன் (நீர்ப்படை காதை 118-122)
என்று வருவதில் புகார் நகரத்துச் சோழனுக்கு அடங்கிய ஒன்பது குறுநில மன்னர்கள் அவனுக்கு எதிராகக் கிளம்பி அவனது நாட்டில் அழிம்பு நடவடிக்கைகளில்,குறிப்பாக நெற்பயிர்களை அழிப்பதில் ஈடுபட்டிருக்கின்றனர். (அதனால் ஏற்பட்ட பஞஞ்த்தைப் பயன்படுத்தித்தான் கயவாகு அளித்த நெல்லாகிய “அமுதசுரபி”யைக் கொண்டு சோழ மக்களை அரசனுக்கு எதிராக மணிமேகலை துண்டிவிட்டிருக்கிறாள்.) சோழன் கிள்ளி வளவனின் மைத்துனன் சேரன் செங்குட்டுவன் அந்த ஒன்பது பேரையும் போரில் கொன்றதாக நீர்ப்படை காதை கூறுகிறது. இந்த ஒன்பது சிற்றரசர்களையும் கயவாகுவே தூண்டிவிட்டிருக்க வேண்டும். அவர்களைக் கொன்ற பின்னரும் நாட்டில் கலகங்களைத் தூண்டி விட்டிருக்கவும் செய்வான்.

            உதயகுமாரன் கொலைப்பட்டது பற்றி கந்திற்பாவை கூறியதாக மணிமேகலையில் கொல்லப்பட்டிருப்பது, கணிகையரைப் பயன்படுத்தி இளவரசர்களைக் கொல்ல வேண்டும் என்ற கவுடில்லியனின் அர்த்தசாத்திரத்துக்கு இசைந்த ஒரு சூழ்ச்சியே. அவ்வாறே மணிபல்லவத்திலிருந்து கலத்திலேற்றி விடப்பட்ட, நாகநாட்டு இளவரசி பீலிவளைக்குப் பிறந்த சோழ இளவரசன் சென்ற கலம் கவிழ்ந்ததில் அவன் செத்து கப்பலுக்கு உரியவனான கம்பளச் கெட்டி உயிர்பிழைத்ததும் சூழ்ச்சியாகவே இருக்க வேண்டும். பூம்புகார் அழிவுண்டது கடற்கோளால் அல்ல, இலங்கை அரசு புத்தத் துறவிகளாகிய ஒற்றர்களைப் பயன்படுத்தி மணிமேகலையை வசப்படுத்தி நடைபெற்ற ஒரு பெரும் கீழறுப்பு வேலையே. கிள்ளிவளவன் எங்கோ சென்றுவிட்டான் என்பது அவன் வஞ்சகமாகக் கொலைப்பட்டதைக் குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ள வேண்டும்.

            சிலப்பதிகாரம் நடுநற் காதையில் போரில் தோற்று ஓடிய கனகனையும் விசயனையும் தளைப்படுத்தி வந்தது பெருமைக்கு உரிய செயலன்று என்று கூறியவனாகக் காட்டப்பெறும் கிள்ளிவளவன் உரைபெறுகட்டுரையில் காணாமல் போனது இடையில் நிகழ்ந்தவற்றை நமக்குச் சொல்லாமல் சொல்லுகிறது. நூலில் வேறு எங்குமே குறிக்கப்படா உறையூர்ச் சோழன் பெருங்கிள்ளி கண்ணகிக்கு கோயில் எடுத்ததாக உரைபெறு கட்டுரையில் காட்டி இருப்பதும் கவனிக்கத்தக்கது. கண்ணகிக் கோட்டத்துக் கடவுள் மங்கலத்தின் போது கயவாகுவுடன் சேரனும் உறையூர்ச் சோழனும் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கரிகாலன் மக்களாகிய நலங்கிள்ளி நெடுங்கிள்ளி ஆகியவர்கள் இடையிலான பகைமை புறநானூற்றில் (புறம் 31) பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆயிரம் பொற்கொல்லர்களைக் காவுகொடுத்து கண்ணகிக்குச் சாந்தி செய்த பாண்டியனும் இவர்களுடன் இல்லை. மொத்தத்தில் கூட்டிக் கழித்தால் பூம்புகாரை அழித்ததில் இவர்கள் அனைவருக்கும் பங்குள்ளது என்ற முடிவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அதைப் போல் மதுரைக் கலகத்தின் தலைமைப் புள்ளியாக சாத்தனார் செயற்பட்டிருக்கலாம் என்றும் அண்டை நாட்டில் நடைபெற்றது போன்ற கலகங்கள் தன் நாட்டிலும் உருவாகாமல் அதை முளையிலேயே கிள்ளத்தான் செங்குட்டுவன் மதுரை நோக்கிவர அவனைத் தடுத்து நிறுத்தத்தான் சாத்தனார் அவனை இடைவழியில்(வண்டிப்பெரியாற்றில்) சந்தித்து கலகத்தில் கண்ணகியின் பங்கை மிகைப்படுத்திக் கூற, அந்த அடிப்படையில் மதுரையில் நடந்தது மக்கள் எழுச்சி அல்ல ஒரு பத்தினிப் பெண்ணின் சீற்றத்தின் விளைவே என்ற பரப்பலைச் செய்வது என்ற முடிவு அங்கு எடுக்கப்பட்டிருக்கலாம். அக் கலகத்தை   புத்தம், அம்மணம் வடிவில் இங்கு ஊடுருவிய ஒற்றர்களுடன் தமிழக அரசர்களிடையில் இருந்த பகைமையும் சேர்ந்து கழகக் காலத் தமிழகத்தின் அழிவுக்கு வித்திட்டதற்கான ஒரு தடயமாக சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை அமைந்திருக்கிறது என்று கொள்வதில் தவறில்லை.

            சாத்தனாரைப் பொறுத்தவரை அவர் இலங்கை ஆட்சியாளரின் கையாளாக மட்டும் செயற்படவில்லை, அம்மணர்களுக்கு எதிரான அரசியலையும் திறம்படவே செய்துள்ளார். முறைப்படி ஆய்ந்தறிந்து முறை செய்யாத ஓர் அரசனுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் பெரும் புரட்சியை நடத்திய வீரஞ்செறிந்த கண்ணகிப் பிராட்டியின் சிலை சீற்றம் கொண்டு செழுநகர் சிதைத்தேன்…….அடுசினப்பாவம் எவ்வகையானும் எய்துதல் ஒழியாது என்று மணிமேகலையிடம் கூறி வருந்தியதாக சாத்தனார் மணிமேகலையில் கூறுகிறார். அம்மணப் பெண்ணான கண்ணகியின் தரத்தைத் தாழ்த்துவதன் மூலம் இலங்கை அரசின் புத்தத்தை தமிழகத்தினுள் உயர்த்தி தமிழக மக்களிடையில் இலங்கை ஒற்றர்களை உருவாக்குவதே அவரது நோக்கம். கயவாகுவின் ஒற்றர்களால் உதயகுமாரன் கொல்லப்பட, காயசண்டிகையின் கணவன் பொறாமையால் கொன்றதாக கந்திற்பாவையைப் பேசவைத்த சாத்தனாரின் இன்னொரு செப்பிடு வித்தைதான் இதுவும். மணிமேகலைக் காப்பியத்தில் சாத்தனார் தரும் புத்தம் இலங்கையில் மட்டும் பின்பற்றப்படும் தேரவாதப் புத்தமே என்று ஆய்வாளர் வானமாமலை தன் மணிமேகளையில் பவுத்தம் என்ற கட்டுரையில் விளக்கியுள்ளார். இளங்கோவடிகளுக்கு எதிராக சாத்தனார் தொடுத்திருக்கும் இந்தப் போர் ஓர் அழுத்தமான நாட்டுப்பற்றாளன் மீது தாய்நாட்டு எதிரிகளுக்கு விலைபோய்விட்ட ஒரு கீழறுப்பாளனின் தாக்குதல் என்றே கொள்ள வேண்டும். குற்றத்தை உணர்ந்து பாண்டியன் உயிரை விட்ட பின்னரும் “ஏதுமறியா” மக்களை ஏன் அழிக்க வேண்டும் கண்ணகி என்பது இங்கு அவள் மீது வைக்கப்பட்டிருக்கும் “திறனாய்வு”. ஆனால் தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று  கண்ணகி நெருப்புக்கு ஆணையிட்டதாக அடிகளார் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பது மட்டுமின்றி அழிவோரும் அழிபவையும் ஆட்சியாளரின் படையினரும் பணியாளர் படையும் ஆட்சிக் கட்டமைப்பும்தான் என்பதைக் காட்டியிருப்பதையும் மறைத்து முன்வைக்கும் குற்றச்சாட்டு இது. இன்றைய இந்து இராமுக்கு இலங்கையில் இருக்கும் மாபெரும் தேயிலைத் தோட்டங்கள் போன்று அன்றைய சாத்தனாருக்கு இலங்கையில் என்னென்ன நலன்கள் இருந்தனவோ நாமறியோம்.    

            சோழ நாட்டுப் பஞ்சத்தைப் போக்கும் அளவுக்கு ஈழத்தில் வளமிருந்தது என்பதைக் குறிப்பாக மழை வீற்றிருந்து வளம் பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று என்ற வரி விளக்குகிறது. மற்றும் பூம்புகாரில் வந்திறங்கும் பண்டங்களைப் பற்றிய பட்டினப்பாலை வரி ஈழத்துணவும் காழகத் தாக்கமும் என்பது ஈழத்தின் உணவுத் தவசப் பெருக்கத்துக்குச் சான்று கூறுகிறது.

            பாண்டியன் தவிர்த்த பிற மன்னர்களும் கண்ணகிக்கு ‘சாந்தி’ செய்தனர் என்பதற்கு அவர்களும் பொற்கொல்லர்களைக் காவு கொடுத்தனரா, அந்த நாடுகளிலும் பொற்கொல்லர்களின் எழுச்சியால் சிக்கல்கள் உருவாகி இருந்தனவா என்ற கேள்வி இங்கு பொருத்தமின்றி இருக்காது, ஏனென்றால் தென்னிந்திய வரலாற்றை நுண்மையாகப் பார்த்தால் இங்கு இடங்கைப் பிரிவினரின் தோற்றம், இயக்கம் ஆகியவற்றில் ஐந்தொழில் கொல்லர்களுக்கு நடுப்பங்கு இருப்பதை அறிய முடியும்.

            மங்கல மடந்தையின் கோயிலுக்கு கடவுள் மங்கலம் செய்யும் நிகழ்ச்சியோடு முடியும் சிலப்பதிகாரக் காப்பியத்தின் பின்னுரையாக, அதன்பின் நடைபெற்ற வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பால் உணர்த்துவதாக அமைந்துள்ளது உரைபெறு கட்டுரை. எனவே இதனையும் இளங்கோ அடிகளே எழுதினார் எனக் கொள்ள வேண்டும்.

சிலப்பதிகாரப் புதையல் -3 உரைபெறு கட்டுரை


உரைபெறு கட்டுரை

  1. அன்று தொட்டுப் பாண்டியனாடு மழை வறங் கூர்ந்து வறுமை யெய்தி வெப்புநோயுங் குருவுந் தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்ல ராயிரவரைக் கொன்று கள வேள்வியால் விழவொடு சாந்தி செய்ய நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமு நீங்கியது.
  2. அது கேட்டுக் கொங்கிளங் கோசர் தங்கணாட கத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழை தொழிலென்றும் மாறாதாயிற்று.
  3. அது கேட்டுக் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வென்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்ட முந்துறுத் தாங்கு அரந்தை கெடுத்து வரந்தரு மிவளென ஆடித் திங்கள கவையி னாங்கோர் பாடி விழாக் கோள் பன்முறை யெடுப்ப மழை வீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று.
  4. அதுகேட்டுச் சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தரு மிவளோர் பத்தினிக் கடவுளாகுமென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே.

பொழிப்புரை

பாண்டியனது நாடானது அன்றிலிருந்து மழை பொய்த்து அதனால் வறுமை எய்தி வெப்பு நோயும் அம்மை முதலிய குருநோய்களும் தொடர்ந்ததனால் கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன் நங்கையாகிய கண்ணகிக்கு ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட்டு களவேள்வியுடன் விழாக் கொண்டாடி சாந்தி செய்ய அவன் நாட்டில் மிகச் செழிப்பாக மழை பெய்து நோய்களும் துன்பங்களும் நீங்கின.

            அதனைக் கேள்விப்பட்டுப் புதிய சிற்றரசர்களாகிய கோசர்கள் தங்கள் நாட்டினுள் நங்கைக்கு விழாவும் சாந்தியும் செய்ததால் மழைபெய்தல் தவறாமல் நடைபெற்றது.

            அதைக் கேள்விப்பட்டு கடல் சூழ்ந்த நாடாகிய இலங்கையின் அரசனாகிய கயவாகு என்பவன் நங்கையாகிய கண்ணகிக்கு நாள்தோறும் பலிகொடுக்கும் பலிபீடத்தை முன்புறம் நிறுவிய கோட்டத்தை அமைத்துத் துன்பங்களைக் களைந்து நமக்கு வேண்டும் வரங்களை அவள் தருவாளென்று நினைத்து ஆடி மாதத்தில் அங்கு ஒரு நகரத்தில் ஆண்டுதோறும் பல ஆண்டுகள் எடுக்க பல வளங்களும் பொருகி பொய்யாத விளைவையுடைய நாடாயிற்று அவனது நாடு.

            அதைக் கேள்விப்பட்டு பெருங்கிள்ளி என்னும் சோழ மன்னன் உறையூரில் இவள் ஒரு பத்தினித் தெய்வம் ஆகையால் எவ்வகையிலும் வரம் தருவாள் என்று நினைத்து கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் கட்டி நித்தமும் அணி செய்து விழாவும் எடுத்தான்.

உரைபெறு கட்டுரையிலுள்ள சிறப்புகள்

            வெப்பும் குருவும் என்று குறிக்கப்படும் நோய்கள் யாவை என்பது பற்றி அகராதிகளில் பார்த்தால்:

தமிழ் மொழியகராதி, வெப்பு: ஒரு நோய், மனத்துள் வெம்மை என்றும்
            கழகத் தமிழ் அகராதி, வெப்பு: ஒரு நோய், மனத்துன்பம், வெம்மை, கொடுமை என்றும் பொருள்கள் காணப்படுகின்றன.
           
உரையாசிரியர்களில் அடியார்க்கு நல்லார் உரையில் தொழு நோய் என்றும் வேங்கடசாமியார் உரையில் வெப்பு நோய் என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது.

            வெப்பு நோய் என்பது கி.பி. 2006 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பலரைத் தாக்கி நெடுநாள் நலிவுறவுச் செய்ததுடன் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சாகடித்ததும் அப்படி ஒரு நோயே, ஆளும் கட்சியாகிய தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியாக இருந்த பேரவைக் கட்சியைச் சார்ந்த பாலசுப்பிரமணியம் என்ற தலைவரைத் தவிர வேறெவரையும் தாக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டதுமாகிய சிக்குன் குனியா எனப்படும் மொழி முறித்தான் நோய் என்கிறார் திரு.வெள்வன் அவர்கள்.

            இந்த நோய் பரவலாகத் தாக்கிய 2006ஆம் ஆண்டுக்கு முந்திய ஆண்டு இறுதியிலிருந்து வேப்ப மரங்களின் இலைகள் கொத்துக் கொத்தாகக் கருகிவிட்டன. இது வழக்கத்துக்கு மாறாகும். வேப்ப மரமே வைரசு எனும் நுண்ணுயிரியை எதிர்த்து அழிக்கும் தன்மை உடையது ஆகும். இந் நுண்ணுயிரியால் உருவாகும் அம்மை, தட்டம்மை, மணல்வாரி, பொன்னுக்கு வீங்கி எனப்படும் அம்மன்கட்டு ஆகிய நோய்களுக்கு மருந்தே வேப்ப மரத்து இலையும் வேப்பெண்ணெய்யும் ஆகும். அப்படிப்பட்ட மரத்தையே தாக்கும் ஒருவகை நுண்ணுயிரியின் தோற்றம்தான் இந் நோய்த்தாக்கின் காரணம் என்றும் இது போல் வேப்ப மரத்தில் கருகல் காணப்படும் போது இது போன்ற நோய்த்தாக்கு இடம் பெறும் என்றும் ஊர்ப்புறத்து மூத்தவர்கள் கூறியதாக அவர் கூறினார். இது ஆயப்பட வேண்டிய ஒரு பொருளாகும். மக்கள் நோவு தாங்க முடியாமல் கைகால்களை இயக்க முடியாமல் மாதக் கணக்கில் துன்புற்ற போதும் பலர் மாண்ட போதும் நோயே இல்லை என்று ஓங்கி அடித்துவிட்ட ஆட்சியாளர்கள் இது போன்ற ஆய்வை மேற்கொள்வர் என்று எதிர்ப்பார்ப்பது கொட்டும் கடந்தை(குளவி)க் கூட்டில் தேனெடுக்கச் செல்லும் கதைதான்.

            குருநோய் என்ற சொல்லுக்குத் தமிழ் மொழி அகராதியும் கழகத் தமிழ் அகராதியும் வைசூரி என்ற பொருளைத் தருகின்றன. வேங்கடசாமியார் கொப்புளம் என்று பொருள் கூறுகிறார். அம்மை நோய் என்பதுதான் சரி. மழைக் காலம், பனிக் காலம், கோடைக் காலம் ஆகிய இம் மூன்றும் உடலில் உருவாகும் வெப்ப ஆற்றலை மிகக் கூடிய அளவில் எடுத்துக்கொள்கின்றன. அதற்காக உடலில் உள்ள பல்வேறு சத்துகளும் செலவழிந்து உடலின் கட்டமைப்பு மெலிவுற்று நோய் எதிர்ப்புத் திறன் குன்றுகிறது. அந்தச் சூழலில் தேவையான சத்தைக் கொண்ட உணவு இல்லை எனில் கொள்ளை நோய்கள் பரவுகின்றன. அவ்வாறுதான் பாண்டிய நாடு மழை இன்மையாலும் அரசன் இறந்து தலைநகர் அழிந்ததால் ஏற்பட்ட குழப்பத்தாலும் மக்களிடையில் பசியும் அதன் விளைவாகப் பிணிகளும் பரவியிருக்க வேண்டும்.

            ஆயிரம் பொற்கொல்லர்களைப் பலிகொடுத்து கண்ணகிக்கு வெற்றிவேல் செழியன் சாந்தி விழா எடுத்தான் என்பதனை வேங்கடசாமியார் மாவினால் ஆயிரம் பொற்கொல்லர் உருவங்களைச் செய்து பலியிட்டான் போலும் என்கிறார்.

            ஆனால் மதுரையில் நடைபெறும் ஒரு விழாவில் ஒரு பொற்கொல்லரின் தலைமயிரை வெட்டி, பழைய நிகழ்ச்சியின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது என்று பேரா.பர்.தே.லூர்து அவர்கள் கூறுவார்கள்.

            பாண்டியர் மீனைக் கொடியாகக் கொண்டு மீனவர் என்று அழைக்கப்படுபவர்கள். எனவே அவர்களுடைய பண்டைத் தலைநகரங்களாகிய தென் மதுரையும் கபாடபுரமும் கடல் துறைமுகங்களாகவே இருந்திருக்க வேண்டும். மூன்று தமிழ்க் கழகங்களின் வரலாறு கூறும் இறையனார் அகப்பொருள் உரை போன்றவற்றில் கூறப்படாத ஒரு தலைநகரம், இரண்டாம் கடற்கோளுக்குத் தப்பி கபாடபுரத்திலிருந்து வந்த பாண்டியர்கள் குறுகிய காலம் தங்கிய மணலூர் ஆகும். இந்த ஊரை எங்கெங்கெல்லாமோ தேடுகின்றனர். ஆனால் தூத்துக்குடி மாவட்டக் கடற்கரையில் கொற்கை மணலூர் என்றொரு ஊரும் அப் பெயரில் தென்னிந்தியத் திருச்சபை சேகரமும் இருப்பது இதுதான் அந்த மணலூர் என்பதை விளக்கும். இந்த நகரைப் பற்றி மகாபாரதத்தில் கூறப்பட்டிருப்பதாக திரு.வி.கனகசபையார் எழுதிய ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் என்ற நூலில் குறித்துள்ளார். தொடர்ந்த கடற்கோள்களின் பட்டறிவால் பின்னர் தலைநகரை உள்நாட்டிலிருக்கும் இன்றைய மதுரைக்கு மாற்றிய பாண்டிய மன்னர்கள் கொற்கையைத் தங்கள் துணைத் தலைநகராகவும் துறைமுகமாகவும் வைத்திருக்கின்றனர்.

            கொற்கை என்ற பெயர் ′கொல்′ என்ற சொல் அடிப்படையாகப் பிறந்தது என்று கருதுகின்றனர். கொல்லுத் தொழில் சிறப்பாக நடைபெற்ற ஒரு நகரம் என்று அதற்கு விளக்கம் கூறுகின்றனர். பாண்டியர் அரசுக்காக நாணயம் வடித்தல், போர்க் கருவிகள் செய்தல் ஆகியவை இங்குதான் நடைபெற்றன. இந்தப் பணிகளைக் கண்காணிக்கவும் மேலாளுமை செய்யவும் பட்டத்து இளவரசன்தான் பொருத்தமானவன். இந்தப் பணிகளை செயல்படுத்தும் போது தொழிலாளர்களுக்கும் பட்டத்து இளவரசனுக்கும் பூசல்கள், மோதல்கள் நிகழ்ந்திருக்கலாம். அதை வன்மமாக வைத்திருந்து கோவலன் கொலையில் ஒரு பொற்கொல்லனுக்கு முகாமையான பங்கு இருந்ததால் அதனைக் காரணமாக வைத்து அவர்களைக் கொண்டுவந்து அவர்களோடு மதுரையில் இருந்த பொற்கொல்லர்களையும் பிடித்து பலி கொடுத்திருக்கலாம். ஆயிரம் என்ற எண்ணிக்கை மிகையாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.

            கோவலன் கொலைப்படக் காரணமான பொற்கொல்லன் கைவினைக் கம்மியர் நூற்றுவர் பின்வர நடந்தான் என்று கூறப்படுவதால் பொன் தொழில் அன்றைய பாண்டிய நாட்டில் செழிப்பாக நடைபெற்றிருக்கலாம். கைவினைஞர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடி வந்த ஒரு சூழலில் மதுரை நிகழ்ச்சி நடத்திருக்கலாம். நகரில் புரட்சி நடத்தியதில் இந்தக் கம்மியர்களுக்கும் பங்கு இருக்கலாம். அதற்காக, கண்ணகிக்குச் சாந்தி செய்வித்தல் என்ற பெயரில் அவர்களை தீர்த்துக் கட்டியிருக்கலாம். எப்படியும் இந்தச் செயலுக்குப் பின்னணியில் வலிமையான அரசியல் காரணிகள் இருக்க வேண்டும்.

            சேரன் செங்குட்டுவன் கண்ணகிக் கோயில் கடவுள் மங்கலம் எடுத்ததில் பங்குகொண்டு, தன் நாட்டில் கண்ணகிக்குக் கோயில் எடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவனாக உரைபெறு கட்டுரையில் கூறப்படுபவன் இலங்கையின் மன்னன் கயவாகு.

            இவனைப் பற்றிய செய்தி ஒன்றைக் கனகசபையார் தன் நூலில் தருகிறார். அவனது தந்தை காலத்தில் கரிகாலன் இலங்கை மீது படையெடுத்து 12ஆயிரம் வீரர்களைச் சிறைப்படுத்திக் கொண்டுவந்து காவிரிக்குக் கரைமைத்தான் என்றும் அதற்குப் பழிவாங்குவற்காகப் பூம்புகாரைத் தான் அழித்துவிட்டதாகவும் அவன் கூறியிருப்பதாக இலங்கை வரலாற்றில் பதிவாகியுள்ளதாக அவர் கூறுகிறார்.

            மணிமேகலை இச் செய்தியை உறுதிப்படுத்துகிறது. தாயைப் போல் கணிகையாக விரும்பாத மணிமேகலை மீது இளவரசன் நாட்டம் கொண்ட சூழலில் புத்தத் துறவிகள் வடிவில் இருந்த இலங்கை ஒற்றர்கள் அவளை இலங்கையைச் சேர்ந்த இரத்தினத் தீவு எனப் பொருள்படும் மணிபல்லவத் தீவுக்கு அழைத்துச் சென்று இளவரசனின் கெடுபிடிகளிலிருந்து விடுபடுவதற்கு புத்தத் துறவிகள் மூலமாக உதவவும் பஞ்சத்தில் வாடும் மக்களுக்கு உணவளிக்கவும் தான் ஏற்பாடு செய்வதாக கயவாகு வாக்களித்திருக்க வேண்டும். சோறுடைத்த சோழ நாட்டில் பஞ்சம் வந்தது எப்படி?

            மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
            ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்
            இளவரசு பொறாஅர் ஏவல் கேளார்
            வளநாட ழிக்கும் மாண்பின ராதாலின்
            ஒன்பது குடையும் ஒருபக லொழித்தவன் (நீர்ப்படை காதை 118-122)
என்று வருவதில் புகார் நகரத்துச் சோழனுக்கு அடங்கிய ஒன்பது குறுநில மன்னர்கள் அவனுக்கு எதிராகக் கிளம்பி அவனது நாட்டில் அழிம்பு நடவடிக்கைகளில்,குறிப்பாக நெற்பயிர்களை அழிப்பதில் ஈடுபட்டிருக்கின்றனர். (அதனால் ஏற்பட்ட பஞஞ்த்தைப் பயன்படுத்தித்தான் கயவாகு அளித்த நெல்லாகிய “அமுதசுரபி”யைக் கொண்டு சோழ மக்களை அரசனுக்கு எதிராக மணிமேகலை துண்டிவிட்டிருக்கிறாள்.) சோழன் கிள்ளி வளவனின் மைத்துனன் சேரன் செங்குட்டுவன் அந்த ஒன்பது பேரையும் போரில் கொன்றதாக நீர்ப்படை காதை கூறுகிறது. இந்த ஒன்பது சிற்றரசர்களையும் கயவாகுவே தூண்டிவிட்டிருக்க வேண்டும். அவர்களைக் கொன்ற பின்னரும் நாட்டில் கலகங்களைத் தூண்டி விட்டிருக்கவும் செய்வான்.

            உதயகுமாரன் கொலைப்பட்டது பற்றி கந்திற்பாவை கூறியதாக மணிமேகலையில் கொல்லப்பட்டிருப்பது, கணிகையரைப் பயன்படுத்தி இளவரசர்களைக் கொல்ல வேண்டும் என்ற கவுடில்லியனின் அர்த்தசாத்திரத்துக்கு இசைந்த ஒரு சூழ்ச்சியே. அவ்வாறே மணிபல்லவத்திலிருந்து கலத்திலேற்றி விடப்பட்ட, நாகநாட்டு இளவரசி பீலிவளைக்குப் பிறந்த சோழ இளவரசன் சென்ற கலம் கவிழ்ந்ததில் அவன் செத்து கப்பலுக்கு உரியவனான கம்பளச் கெட்டி உயிர்பிழைத்ததும் சூழ்ச்சியாகவே இருக்க வேண்டும். பூம்புகார் அழிவுண்டது கடற்கோளால் அல்ல, இலங்கை அரசு புத்தத் துறவிகளாகிய ஒற்றர்களைப் பயன்படுத்தி மணிமேகலையை வசப்படுத்தி நடைபெற்ற ஒரு பெரும் கீழறுப்பு வேலையே. கிள்ளிவளவன் எங்கோ சென்றுவிட்டான் என்பது அவன் வஞ்சகமாகக் கொலைப்பட்டதைக் குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ள வேண்டும்.

            சிலப்பதிகாரம் நடுநற் காதையில் போரில் தோற்று ஓடிய கனகனையும் விசயனையும் தளைப்படுத்தி வந்தது பெருமைக்கு உரிய செயலன்று என்று கூறியவனாகக் காட்டப்பெறும் கிள்ளிவளவன் உரைபெறுகட்டுரையில் காணாமல் போனது இடையில் நிகழ்ந்தவற்றை நமக்குச் சொல்லாமல் சொல்லுகிறது. நூலில் வேறு எங்குமே குறிக்கப்படா உறையூர்ச் சோழன் பெருங்கிள்ளி கண்ணகிக்கு கோயில் எடுத்ததாக உரைபெறு கட்டுரையில் காட்டி இருப்பதும் கவனிக்கத்தக்கது. கண்ணகிக் கோட்டத்துக் கடவுள் மங்கலத்தின் போது கயவாகுவுடன் சேரனும் உறையூர்ச் சோழனும் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கரிகாலன் மக்களாகிய நலங்கிள்ளி நெடுங்கிள்ளி ஆகியவர்கள் இடையிலான பகைமை புறநானூற்றில் (புறம் 31) பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆயிரம் பொற்கொல்லர்களைக் காவுகொடுத்து கண்ணகிக்குச் சாந்தி செய்த பாண்டியனும் இவர்களுடன் இல்லை. மொத்தத்தில் கூட்டிக் கழித்தால் பூம்புகாரை அழித்ததில் இவர்கள் அனைவருக்கும் பங்குள்ளது என்ற முடிவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அதைப் போல் மதுரைக் கலகத்தின் தலைமைப் புள்ளியாக சாத்தனார் செயற்பட்டிருக்கலாம் என்றும் அண்டை நாட்டில் நடைபெற்றது போன்ற கலகங்கள் தன் நாட்டிலும் உருவாகாமல் அதை முளையிலேயே கிள்ளத்தான் செங்குட்டுவன் மதுரை நோக்கிவர அவனைத் தடுத்து நிறுத்தத்தான் சாத்தனார் அவனை இடைவழியில்(வண்டிப்பெரியாற்றில்) சந்தித்து கலகத்தில் கண்ணகியின் பங்கை மிகைப்படுத்திக் கூற, அந்த அடிப்படையில் மதுரையில் நடந்தது மக்கள் எழுச்சி அல்ல ஒரு பத்தினிப் பெண்ணின் சீற்றத்தின் விளைவே என்ற பரப்பலைச் செய்வது என்ற முடிவு அங்கு எடுக்கப்பட்டிருக்கலாம். அக் கலகத்தை   புத்தம், அம்மணம் வடிவில் இங்கு ஊடுருவிய ஒற்றர்களுடன் தமிழக அரசர்களிடையில் இருந்த பகைமையும் சேர்ந்து கழகக் காலத் தமிழகத்தின் அழிவுக்கு வித்திட்டதற்கான ஒரு தடயமாக சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை அமைந்திருக்கிறது என்று கொள்வதில் தவறில்லை.

            சாத்தனாரைப் பொறுத்தவரை அவர் இலங்கை ஆட்சியாளரின் கையாளாக மட்டும் செயற்படவில்லை, அம்மணர்களுக்கு எதிரான அரசியலையும் திறம்படவே செய்துள்ளார். முறைப்படி ஆய்ந்தறிந்து முறை செய்யாத ஓர் அரசனுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் பெரும் புரட்சியை நடத்திய வீரஞ்செறிந்த கண்ணகிப் பிராட்டியின் சிலை சீற்றம் கொண்டு செழுநகர் சிதைத்தேன்…….அடுசினப்பாவம் எவ்வகையானும் எய்துதல் ஒழியாது என்று மணிமேகலையிடம் கூறி வருந்தியதாக சாத்தனார் மணிமேகலையில் கூறுகிறார். அம்மணப் பெண்ணான கண்ணகியின் தரத்தைத் தாழ்த்துவதன் மூலம் இலங்கை அரசின் புத்தத்தை தமிழகத்தினுள் உயர்த்தி தமிழக மக்களிடையில் இலங்கை ஒற்றர்களை உருவாக்குவதே அவரது நோக்கம். கயவாகுவின் ஒற்றர்களால் உதயகுமாரன் கொல்லப்பட, காயசண்டிகையின் கணவன் பொறாமையால் கொன்றதாக கந்திற்பாவையைப் பேசவைத்த சாத்தனாரின் இன்னொரு செப்பிடு வித்தைதான் இதுவும். மணிமேகலைக் காப்பியத்தில் சாத்தனார் தரும் புத்தம் இலங்கையில் மட்டும் பின்பற்றப்படும் தேரவாதப் புத்தமே என்று ஆய்வாளர் வானமாமலை தன் மணிமேகளையில் பவுத்தம் என்ற கட்டுரையில் விளக்கியுள்ளார். இளங்கோவடிகளுக்கு எதிராக சாத்தனார் தொடுத்திருக்கும் இந்தப் போர் ஓர் அழுத்தமான நாட்டுப்பற்றாளன் மீது தாய்நாட்டு எதிரிகளுக்கு விலைபோய்விட்ட ஒரு கீழறுப்பாளனின் தாக்குதல் என்றே கொள்ள வேண்டும். குற்றத்தை உணர்ந்து பாண்டியன் உயிரை விட்ட பின்னரும் “ஏதுமறியா” மக்களை ஏன் அழிக்க வேண்டும் கண்ணகி என்பது இங்கு அவள் மீது வைக்கப்பட்டிருக்கும் “திறனாய்வு”. ஆனால் தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று  கண்ணகி நெருப்புக்கு ஆணையிட்டதாக அடிகளார் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பது மட்டுமின்றி அழிவோரும் அழிபவையும் ஆட்சியாளரின் படையினரும் பணியாளர் படையும் ஆட்சிக் கட்டமைப்பும்தான் என்பதைக் காட்டியிருப்பதையும் மறைத்து முன்வைக்கும் குற்றச்சாட்டு இது. இன்றைய இந்து இராமுக்கு இலங்கையில் இருக்கும் மாபெரும் தேயிலைத் தோட்டங்கள் போன்று அன்றைய சாத்தனாருக்கு இலங்கையில் என்னென்ன நலன்கள் இருந்தனவோ நாமறியோம்.    

            சோழ நாட்டுப் பஞ்சத்தைப் போக்கும் அளவுக்கு ஈழத்தில் வளமிருந்தது என்பதைக் குறிப்பாக மழை வீற்றிருந்து வளம் பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று என்ற வரி விளக்குகிறது. மற்றும் பூம்புகாரில் வந்திறங்கும் பண்டங்களைப் பற்றிய பட்டினப்பாலை வரி ஈழத்துணவும் காழகத் தாக்கமும் என்பது ஈழத்தின் உணவுத் தவசப் பெருக்கத்துக்குச் சான்று கூறுகிறது.

            பாண்டியன் தவிர்த்த பிற மன்னர்களும் கண்ணகிக்கு ‘சாந்தி’ செய்தனர் என்பதற்கு அவர்களும் பொற்கொல்லர்களைக் காவு கொடுத்தனரா, அந்த நாடுகளிலும் பொற்கொல்லர்களின் எழுச்சியால் சிக்கல்கள் உருவாகி இருந்தனவா என்ற கேள்வி இங்கு பொருத்தமின்றி இருக்காது, ஏனென்றால் தென்னிந்திய வரலாற்றை நுண்மையாகப் பார்த்தால் இங்கு இடங்கைப் பிரிவினரின் தோற்றம், இயக்கம் ஆகியவற்றில் ஐந்தொழில் கொல்லர்களுக்கு நடுப்பங்கு இருப்பதை அறிய முடியும்.

            மங்கல மடந்தையின் கோயிலுக்கு கடவுள் மங்கலம் செய்யும் நிகழ்ச்சியோடு முடியும் சிலப்பதிகாரக் காப்பியத்தின் பின்னுரையாக, அதன்பின் நடைபெற்ற வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பால் உணர்த்துவதாக அமைந்துள்ளது உரைபெறு கட்டுரை. எனவே இதனையும் இளங்கோ அடிகளே எழுதினார் எனக் கொள்ள வேண்டும்.

21.10.15

சிலப்பதிகாரப் புதையல் - 2

பதிகம்

குணவாயிற் கோட்டத் தரசு துறந்திருந்த
குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்குக்
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடிப்
பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்

5.ஒருமுலை யிழந்தாளோர் திருமா பத்தினிக்கு
அமரர்க் கரசன் தமர்வந்து ஈண்டிஅவள்
காதற் கொழுநனைக் காட்டி அவளொடெங்
காண விட்புலம் போயது
இறும்பூது போலுமஃ தறிந்தருள் நீயென

10.அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தன்
யானறி குவன் அது பட்டதென் றுரைப்போன்
ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்ப்
பேராச் சிறப்பின் புகார்நக ரத்துக்
கோவல னென்பானோர் வாணிகன் அவ்வூர்

15.நாடக மேத்தும் நாடகக் கணிகையொடு
ஆடிய கொள்கையின் அரும்பொருள் கேடுறக்
கண்ணகி யென்பாள் மனைவி அவள்கால்
பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டிப்
பாடல்சால் சிறப்பின் பாண்டியன் பெருஞ்சீர்

20.மாட மதுரை புகுந்தனன் அதுகொண்டு
மன்பெரும் பீடிகை மறுகிற் செல்வோன்
பொன்செய் கொல்லன் றன்கைக் காட்டக்
கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு
யாப்புற வில்லைஈங் கிருக்கென் றேகிப்

25.பண்டுதான் கொண்ட சில்லரிச் சிலம்பினைக்
கண்டனன் பிறனோர் கள்வன் கையென
வினைவிளை காலம் ஆதலின் யாவதுஞ்
சினையலர் வேம்பன் தேரா னாகிக்
கன்றிய காவலர்க் கூஉய்அக் கள்வனைக்

30.கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
நிலைக்களங் காணாள் நெடுங்கணீர் உகுத்துப்
பத்தினி யாகலின் பாண்டியன் கேடுற
முத்தார மார்பின் முலைமுகந் திருகி

35.நிலைகெழு கூடல் நீளெரி ஊட்டிய
பலர்புகழ் பத்தினி யாகும் இவளென
வினைவிளை கால மென்றீர் யாதவர்
வினைவிளை வென்ன விறலோய் கேட்டி
அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்

40.கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்
வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்
ஆரஞ1 ருற்ற வீரபத் தினிமுன்
மதுரைமா தெய்வம் வந்து தோன்றிக்
கொதியழற் சீற்றங் கொங்கையின் விளைத்தோய்

45.முதிர்வினை நுங்கட்கு முடிந்த தாகலின்
முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவனொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
சங்கம னென்னும் வாணிகன் மனைவி
இட்ட சாபங் கட்டிய தாகலின்

50.வாரொலி கூந்தல்நின் மணமகன் றன்னை
ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவிற் காண்ட லில்லென2க்
கோட்டமில் கட்டுரை கேட்டனன் யானென

55.அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்

60.நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுளென
முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே யருளுகென் றாற்கவர்
மங்கல வாழ்த்துப் பாடலும் குரவர்
மனையறம் படுத்த காதையும் நடம்நவில்

65.மங்கை மாதவி அரங்கேற்று காதையும்
அந்தி மாலைச் சிறப்புச்செய் காதையும்
இந்திர விழவூ ரெடுத்த காதையும்
கடலாடு காதையும்
மடலவிழ், கானல் வரியும் வேனில்வந் திறுந்தென

70.மாதவி இரங்கிய காதையும் தீதுடைக்
கனாத்திற முரைத்த காதையும் வினாத்திறத்து
நாடுகாண் காதையும் காடுகாண் காதையும்
வேட்டுவ வரியும் தோட்டலர் கோதையொடு
புறஞ்சேரி யிறுத்த காதையும் கறங்கிசை

75.ஊர்காண் காதையும் சீர்சால் நங்கை
அடைக்கலக் காதையும் கொலைக்களக் காதையும்
ஆய்ச்சியர் குரவையும் தீத்திறங் கேட்ட
துன்ப மாலையும் நண்பகல் நடுங்கிய
ஊர்சூழ் வரியும் சீர்சால் வேந்தனொடு

80.வழக்குரை காதையும் வஞ்சின மாலையும்
அழற்படு காதையும் அருந்தெய்வந் தோன்றிக்
கட்டுரை காதையும் மட்டலர் கோதையர்
குன்றக் குரவையும் என்றிவை அனைத்துடன்
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்

85.வாழ்த்து வரந்தரு காதையொடு
இவ்வா றைந்தும்
உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசா லடிகள் அருள மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்

90.இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென்.

பொழிப்புரை:

அரசியல் வாழ்வைத் துறந்து திருக்குணவாயில் என்னும் கோட்டத்தில் தங்கியிருந்த, மேற்குத் திசை அரசனாகிய செங்குட்டுவன் எனும் சேர அரசனுக்கு இளங்கோவாகிய, அதாவது தம்பியாகிய அடிகளுக்கு மலையில் வாழும் குறவரெல்லாரும் திரண்டு சென்று பொன்போலும் பூவினை உடைய வேங்கை மரத்தின் நன்மை தரும் அடர்த்தியான நிழலில் ஒரு முலையை இழந்தவளாய் வந்து நின்ற ஓர் அழகிய பெருமை மிக்க பத்தினிக்காக தேவர்களுக்கு அரசனாகிய இந்திரனது சுற்றத்தார் நெருங்கி வந்து அவளுடைய காதலுக்குரிய கணவனை அவளுக்குக் காட்டி அவளோடு அவர்கள் எமது கண் காண விண்னை நோக்கிச் சென்றது ஓர் இறும்பூதாக இருந்தது என்பதனை நீ அறிந்தருள்க என்றனர்.

அப்போது அவன் பக்கத்தில் இருந்த இனிய தமிழ்ப் புலவனாகிய சாத்தனார் இது குறித்த செய்திகளை நான் அறிவேன் என்று கூறத் தொடங்கினான். ஆத்தி மாலையை உடைய சோழனது பழைய நகரங்களுள் நீங்காத சிறப்பை உடைய புகார் என்னும் நகரத்தில் கோவலன் என்னும் பெயருடைய ஒரு வாணிகன் அவ் வூரிலுள்ள நாடகத்தைப் போற்றிக் கொண்டாடும் நாடகப் பொதுமகளோடு கூடி ஆட்டம் போட்டதன் விளைவாக அரிய செல்வம் எல்லாம் அழிந்துபோக கண்ணகி என்ற பெயர் கொண்ட அவனது மனைவியின் இனிய ஓசையமைந்த சிலம்பை விற்க விரும்பி பாடல் பெற்ற சிறப்பை உடைய பாண்டியனது பெரும்புகழ் பெற்ற மாட மதுரையினுள் நுழைந்தான்.

சிலம்பை எடுத்துக்கொண்டு பெருமை மிக்க வாணிகர் தெருவில் சென்றவன் பொற்கொல்லன் ஒருவனைக் கண்டு அவனிடம் அதைக் காட்டினான்.

கோப்பெருந்தேவியாகிய பட்டத்து அரசிக்கு அன்றி இந்தச் சிலம்பு வேறெவருக்கும் பொருத்தமாக இருக்காது, எனவே இங்கே இரு என்று சொல்லித் தான் போய் தான் முன்பு திருடிக் கொண்ட ஒலிக்கின்ற பரல்களை உடைய சிலம்பை வேறொரு கள்வன் கையில் கண்டேன் என்று கூறினான்.

பழைய வினையின் பயன் விளையும் காலம் ஆதலால் எதனையும், மொட்டு விரிந்த வேப்ப மாலையை அணிந்த பாண்டியன் ஆராயாமல் செயலாற்றல் உள்ள காவலர்களைக் கூவி அழைத்து அந்தத் திருடனைக் கொன்று அந்தச் சிலம்பை இங்கே கொண்டு வாருங்கள் என்று கூறினான்.

அவ்வாறு கொலைப்பட்ட கோவலன் மனைவி இருப்புக் கொள்ள முடியாதவளாய் நெடிய கண்கள் நீரைச் சொரிந்து பத்தினி ஆதலால் பாண்டியன் அழிந்து போகுமாறு செய்து முத்தாரம் அணியும் மார்பில் இருக்கும் முலையின் முகத்தைத் திருகி அதில் தோன்றிய நின்று எரியும் தீயில் நிலைபெற்ற மதுரையை எரித்த பலரும் புகழும் பத்தினியாகும் இவள் என்று சாத்தனார் கூறினார்.

பழைய வினையின் பயன் விளையும் காலம் என்று கூறினீர், அவர்களுக்கு வினையின் பயன் யாது என்று இளங்கோ அடிகள் கேட்டார்.

பெருமை மிக்கவரே கேளுங்கள்! தளராத சிறப்பை உடைய பழம் பதியாகிய மதுரையில் உள்ள கொன்றை மாலை அணிந்த சடைமுடியை உடைய கடவுளாகிய சிவன் உறையும் வெள்ளி அம்பலத்தில் உள்ள பொது இடமாகிய மண்டபத்தில் நடு இரவின் இருட்டில் படுத்திருந்தேன். தாங்குவதற்கு அரிய துன்பத்தை அடைந்த வீர பத்தினியின் முன் மதுரை மாதெய்வம் வந்து தோன்றி கொதிக்கின்ற நெருப்பாகிய சீற்றத்தை முலையால் விளைவித்தவளே, உங்களது முற்றிய வினை இங்கு வந்து சேர்ந்தது ஆகையால் பசும் பொன்னாலான தொடிகளை அணிபவளே உன் கணவனோடு உனக்கு, குலையாத நல்ல புகழையுடைய சிங்கபுரத்தைச் சேர்ந்த சங்கமன் என்னும் வாணிகனின் மனைவி இட்ட சாபம் இப்போது வந்து மூண்டது ஆகையால், நீண்டு தழைத்த கூந்தலை உடையவளே உன் கணவனை, இன்றைக்குப் பதினான்காம் நாள் பகல் வேளை சென்ற பின் வானோர் வடிவில் அன்றி இவ் வுலகத்தார் வடிவில் காண்பது இல்லை என்ற மாற்றமில்லாத பொருளுரையை நான் கேட்டேன் என்று சாத்தனார் கூறினார்.

அரசு முறை செய்வதில் தவறிழைத்தோர்க்கு அறமே கூற்றுவனாக ஆவதும் புகழ்ச் சிறப்புடைய கற்புடைய பெண்ணை உயர்வான மக்களும் போற்றுதல் இயல்பு என்பதும் முன் வினை உருவம் பெற்று துரத்தி வந்து பயனை விளைக்கும் என்பதும் நுண்ணிய தொழில் அமைந்த சிலம்பு காரணமாக வெளிப்பட்டமையால் சிலப்பதிகாரம் என்னும் பெயரில் பாட்டை உடைய ஒரு செய்யுள் மூலம் நிலை நாட்டுவோம் என்று இளங்கோ அடிகள் சொன்னார்.

இது முடியுடை மூவந்தர்களுக்கும் உரியது, ஆகையால் அடிகள் நீங்களே இதனை அருளிச் செய்ய வேண்டும் (செய்வது சிறப்பாக இருக்கும்) என்றார் சாத்தனார்.

அதற்கு அவர் மண வாழ்த்துப் பாடலும் பெற்றோர் அவர்களை இல்லறத்தில் தனித்து இருத்திய காதையும நடனம் கற்ற நங்கை மாதவி அரங்கேறிய காதையும் அந்திப் பொழுதாகிய மாலையின் சிறப்பை உரைக்கும் காதையும் இந்திர விழாவை புகார் எடுத்த காதையும் விழா முடிவில் கடலாடிய காதையும் கடலாடிய பின் பூக்கள் இதழ் விரித்த கழிக் கானலில் பாடிய கானல் வரியும் இளவேனில் வந்து பொருந்தியதாகப் பிரிந்த மாதவி வருந்திய காதையும் கண்ணகி தான் கண்ட தீங்கை உடைய கனாவின் திறத்தைத் தேவந்திக்கு உரைத்த காதையும் கவுந்தி அடிகளும் கண்ணகியும் வினாவிய செய்திகளை உடைய சோழ நாட்டின் வளத்தை அவர்கள் கண்ட காதையும் அங்ஙனம் நாட்டினைக் கண்டு இன்புற்றவர் காட்டினைக் கண்டு துன்புற்ற காதையும் வேட்டுவ மகளாகிய சாலினி கொற்றவையாகத் தெய்வமேறி ஆடிப் பாடிய வரியும், இதழ் விரிந்த மாலையை உடைய கண்ணகியோடு மதுரைப் புறஞ்சேரி சென்று தங்கிய காதையும் முழங்கும் முரசொலியை உடைய மதுரையைக் கோவலன் கண்ட காதையும் புகழ் மிக்க கண்ணகியாகிய நங்கையை மாதரியிடம் கவுந்தி அடிகள் அடைக்கலம் கொடுத்த காதையும் கோவலன் கொலைக்களப்பட்ட காதையும் மாதரி முதலான ஆய்ச்சியர் குரவைக் கூத்தாடின முறைமையும் கோவலன் கொலையுண்ட தீய செய்தி கேட்டு கண்ணகி அரற்றிய துன்ப மாலையும் நண்பகல் பொழுதில் எல்லாரும் கண்டு நடுங்குமாறு கண்ணகி ஊரைச் சூழ வந்த ஊர் சூழ் வரியும் புகழமைந்த பாண்டியனோடு கண்ணகி வழக்குரைத்த காதையும் வழக்கில தோற்ற பாண்டியன் தேவியை நோக்கிக் கண்ணகி வஞ்சினங் கூறிய வகையும் கண்ணகியின் முலையிலிருந்து எழுந்த தீ தாவி எரித்த காதையும் மதுரைமா தெய்வம் தோன்றி பழம்பிறப்பை எடுத்து விளங்க உரைத்த கட்டுரை காதையும் மது ஒழுக மலர்ந்த மாலையை உடைய குறத்தியர் அவளைத் தெய்வமாக்கி வழிபட்டு ஆடிய குன்றக் குரவையும் என்ற இந்த இருபத்துநான்குடன் காட்சிக் காதையும் கல்லைக் கொண்ட கால்கோள் காதையும் அந்தக் கல்லில் கடவுளை எழுதி கங்கையாற்றில் நீர்ப்படுத்திய காதையும் பத்தினிப் படிமத்தைக் கடவுள் மங்கலம் செய்த காதையும் அவ்வாறு வாழ்த்திய கடவுள் செங்குட்டுவனும் அங்கு வந்திருந்த அரசர்களும் கேட்ட வரங்களை அருளிய காதையும் எனும் இம் முப்பதுமாகிய உரையும் பாட்டும் இடையிடையிட்ட காப்பியமாகிய செய்யுளை புகழமைந்த இளங்கோ அடிகள் அருளிச் செய்ய மதுரையில் உள்ள கூல வாணிகனான சாத்தன் என்னும் புலவர் கேட்டார் என்பது இச்செய்யுளின் பாகுபாடாகிய வகையினைத் தெரிந்து கொள்வதற்கு உதவும் பதிகத்தின் அடக்கம் என்க.

பதிகத்தில் உள்ள சிறப்புச் செய்திகள்:

1. நூலைப் பற்றிய அறிமுகம் பதிகம்
2. நூலில் சொல்ல இயலாத செய்திகளைக் கூறுவது பதிகம்.
3. நூலின் தன்மைகளைத் தருவது பதிகம்.
4. நூலின் பயன் பற்றிக் கூறுவது பதிகம்.
5. நூலின் அமைப்பு பற்றிக் கூறுவது பதிகம்.
6. நூலின் வரலாறு பற்றிக் கூறுவது பதிகம்.
7. நூலின் உள்ளடக்கம் பற்றிக் கூறுவது பதிகம்.

சிலப்பதிகாரம் தோன்றிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலாயினும் சிலர் வேண்டுமென்று உள்நோக்கத்துடனும் பலர் அறியாமையாலும் திறனாளர்கள் சிலர் பிழைப்பதற்காகவும் கூறுவதுபோல் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் என்று வைத்துக்கொண்டாலும் சிலப்பதிகாரப் பதிகத்துக்கு இணையான ஒன்றை அன்றைய உலகின் எந்த இலக்கியத்திலும் காண முடியாது.

ஆனால் வையாபுரியாரின் கூற்றை வலியுறுத்தும் பல்கலைக் கழக நல்கைக் குழுவிடம் பணமும் இசைவுகளும் பெற்று இயங்கும் தமிழகப் பல்கலைக் கழகங்களில் பாட நூல்கள் எழுதுவோரும் பட்டங்கள் பெறுவதற்காக ஆய்வேடுகள் வரைவோரும் சிலப்பதிகாரம் எட்டாம் நாற்றாண்டில் தோன்றியது; அதன் பதிகத்தையும் வஞ்சிக் காண்டத்தையும் வேறு எவரோ எழுதிச் சேர்த்துவிட்டனர் என்று கூறுகின்றனர். தமிழ் இலக்கியம், வரலாறு, பண்பாடு என்ற அனைத்துத் துறைகளிலும் வையாபுரியாரின் கூற்றுகள் மீது, தங்கள் பேராசான் என்று அறிவித்துக் கொள்ளும் காரல் மார்க்சின் மீது வைத்திருப்பதை விட மிகுதியான நம்பிக்கை வைத்திருக்கும் அனைத்து வகை பொதுமையினரும் இந்தக் கண்ணோட்டத்தைத் தங்கள் அடிப்படை அணுகலாகக் கொண்டிருப்பதால் அதைப் பின்பற்றினால்தான் முற்போக்குச் சிந்தனை கொண்டிருப்பதாகத் தம்மை பிறர் மதிப்பார்கள் என்பதாலும் வையாபுரியாரின் கருத்துக்குப் பலரிடத்தில் உடன்பாடு உள்ளது.

மதுரை யாதவர் கல்லூரியில் பணியாற்றிய ப-ர்.இராமசாமி என்ற தமிழ்த்துறை விரிவுரையாளரை 1981-82 இல் அவரது இல்லத்தில் சந்தித்தேன். அவர் பண்டிதர் பட்டத்துக்கான ஆய்பொருள் பதிகம் என்பதுதானாம். அவர் கூறினார், சிலப்பதிகாரப் பதிகத்தில் நூலில் இல்லாத செய்திகள் இருப்பதால் அதை இளங்கோவடிகள் எழுதவில்லை என்று வாதிட்டார். நூலில் சொல்ல முடியாத செய்திகளைச் சொல்வதுதான் பதிகத்தின் நோக்கமே என்று நான் எடுத்துக்கூறியும் அந்த விரிவுரையாளரின் கருத்து மாறவில்லை. ஒருவேளை ஆய்வேடுகளின் தொடக்கத்தில், ஆய்வின் ஒட்டு மொத்தக் கருத்தை தொகுத்துக் கூறும் தொகுப்புரையை (Synopsis) பதிகம் என்று தவறாகக் கொண்டுவிட்டார் போலும். இப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் படிக்கும் மாணவர்களையும் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி வழிநடத்தப்போகும் எதிர்காலத் தமிழகத்தையும் நினைக்கும் போது ஒரு புறம் மறுக்கமாகவும் இன்னொரு புறம் துயரமாகவும் நடுக்கமாகவும் உள்ளது.

நன்னூல் முதல் நூற்பா, முகவுரை, பதிகம், அணிந்துரை, நுன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை, பாயிரம் என்று பதிகத்ததுக்குரிய வெவ்வேறு பெயர்களைத் தந்துள்ளது.
முன்னுரை, அறிமுகம் போன்ற பெயர்கள் பின்னாளில் சேர்ந்துள்ளன.

சிலப்பதிகாரப் பதிகத்தைப் பொறுத்தவரை ஒரு கருத்து உள்ளது. சிலப்பதிகாரத்துக்குப் புலவர் சாத்தனாரும் மணிமேகலைக்கு இளங்கோவடிகளும் பதிகம் எழுதினர் என்பது. மேலோட்டமாக நோக்கினால் அது பொருத்தமாகவே தெரிகிறது. ஆனால் இவ் விரு நூல்களின் பதிகங்களைப் படிக்கும் போது அவற்றின் நடை அந்த அந்த ஆசிரியர்கள் நூல்களின் பொது நடையையே ஒத்து இருப்பது தெரிகிறது. எனவே தம் தம் நூலுக்கு அந்தந்த ஆசிரியர்களே பதிகம் எழுதினர் என்று கொள்வது பொருத்தமாகும். இருவருக்கும் மட்டுமே தெரிந்த ஒரு செய்தி சிலப்பதிகாரம் பதிகத்தில் கூறப்படுகிறது. அது, மதுரை நிகழ்ச்சிகளைக் கூறிய போது சாத்தனார் கோவலனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வருமாறு காவலர்களுக்குப் பாண்டியன் ஆணையிட்டதைச் சொல்லுகையில், வினை விளை காலமாதலின் சினையலர் வேம்பன் தேரான் ஆகி என்று அவர் கூறியதைச் சுட்டிக் காட்டி வினை விளை காலமென்றீர் யாதவர் வினையென்று இளங்கோவடிகள் கேட்டதும் அதற்குச் சாத்தனார் விடை கூறியதும் அவர்கள் இருவரும் மட்டுமே அறிந்தவை. உடனிருந்தவர் யாராவது கேட்க வாய்ப்பிருக்கிறது என்றாலும் அப்படி அவர்கள் எழுதிச் சேர்த்திருந்தாலும் இளங்கோ அடிகள் காலத்தில் பெரும்பாலும் அவரது ஆணையால் அல்லது இசைவுடன்தான் செய்திருக்க வேண்டும்.

இங்கு இன்னொன்றையும் நாம் பார்க்கவேண்டும். மதுரையில் நடந்தவை ஒரு மக்கள் எழுச்சியாக இருந்து அதை அடக்க சேரன் செங்குட்டுவன் சென்றுகொண்டிருந்த வழியில் சாத்தனார் குறுக்கிட்டு அது ஒரு பெண்ணின் கற்புத்தீயால் நிகழ்ந்தது, மக்கள் எழுச்சி இல்லை என்று கூறி அவனைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். உண்மையில் அங்கு நடந்தவை என்று இளங்கோ அடிகள் அறிந்தவற்றுக்கு மாறாகச் சாத்தனார் கூற்று இருந்ததால் அவர் இந்தக் கேள்வியைக் கேட்டு விடையையும் பதிகத்தில் குறித்து கதையின் இந்தப் பகுதிக்குச் சாத்தனார்தான் பொறுப்பு என்று மறைமுகமாகக் கூறுவதாகக் கொள்ள இடமிருக்கிறது.

இங்கு இன்னொன்றையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும். மணிமேகலை காட்டுகிறவாறு புத்த சமய வெறியரான சாத்தனார் சிவன் கோயிலான வெள்ளியம்பலத்துக்கு ஏன் போனார், அதுவும் ‘நள்ளிருளில் கிடந்து’ என்ன செய்தார் என்ற கேள்விகளுக்கு நிறைவான விடை எதையும் நம்மால் காண முடியவில்லை.

மதுரையில் நடந்தது மக்களின் எழுச்சிதான் என்பதைச் சுட்டும் குறிப்புகளையும் நூலி்ல் இளங்கோ அடிகள் குறிக்காமல் விடவில்லை.

நாம் அவற்றை அந்தந்த இடங்களில் பார்க்கலாம்.

இலக்கியத்துக்கு குமுகப் பயன் உண்டா என்பது 20, 21, ஆம் நூற்றாண்டுகளில் தமிழக இலக்கியவாணர்கள் நடுவில் எழுந்திருக்கும் கேள்வியாகும். 20 ஆம் நூற்றாண்டின் முன்பாதியில் “கலை கலைக்கா, கலை வாழ்க்கைக்கா?” என்றொரு கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு விடை சொல்ல வந்த சாமி. சிதம்பரனார், தன் சிலப்பதிகாரத் தமிழகம் என்ற நூலில் (சுடர் பிரசுரம், திருவல்லிக்கேணி சென்னை- 5, இலக்கிய வரிசை 6, 1958) “இலக்கியம் இலக்கியத்துக்காகவே என்று சொல்லுவோர் பிறபோக்குவாதிகள். நாட்டில் தோன்றும் புதிய சமுதாய - அரசியல் கருத்துகளைக் கண்டு அஞ்சுகின்றவர்கள். இன்றுள்ள சமுதாய அமைப்பு மாறினால், அரசியல் அமைப்பு மாறினால் தங்கள் நிலை என்ன ஆகுமோ என்று அஞ்சுகின்றனர். இவர்கள் தங்களுக்குப பிடிக்காத கொள்கைகள் இலக்கியங்களில் இடம்பெறுவதைக் கண்டு நடுங்குகின்றனர். இவர்கள் எழுப்பும் கூச்சல்தான் இலக்கியம் இலக்கியத்துக்காகவே என்பது” என்கிறார்.

20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இதே சிக்கல் வேறொரு வடிவத்தில் முன்வைக்கப்பட்டது. இலக்கியத்துக்கு தூய இலக்கியம் என்றும் பரப்பல் இலக்கியம் என்றும் ஒரு வகைப்பாடு முன்வைக்கப்பட்டது. தூய இலக்கியம் என்பது எந்த விதக் குமுகக் குறிக்கோள்களையும் முன்வைக்காது மெய்ப்பாட்டுச் சிறப்பு ஒன்றையே தடம் பிடித்துச் செல்லும்; அந்த மெய்ப்பாட்டுச் சிறப்பே அந்த இலக்கியத்தைக் காலங்களை வென்று நிலைத்து நிற்க வைக்கும். அதே வேளையில் பரப்பல் இலக்கியத்தில் மெய்ப்பாட்டுச் சுவையே இருக்காது; வெறும் கொள்கைப் பரப்பலே இருக்கும்; எனவே அதனால் காலத்தை வென்று நிற்க முடியாது என்பது அவர்களது கூற்று.

இதற்கு மறுப்பு கூறுவோர் , “தூய” இலக்கியத்தைத் தூக்கிப் பிடிப்போர், நிலவுகின்ற அரசியல் - குமுகியல் நிலைமைகளை மறைமுகமாகப் போற்றி மாற்றங்களை எதிர்ப்பதைத் தம் படைப்புகளில் ஐயமின்றிச் செய்கின்றனர். எனவே அவையும் பரப்பல் செய்கின்றன என்பதாகும். எம் நிலைப்பாடோ, இவர்கள் கூறும் சுவை மிகுந்த “காலத்தை வென்று நிற்கும்” இலக்கியங்களை வெறும் திண்பன்டங்கள் என்றால் பரப்பல் இலக்கியங்கள் மருந்து போன்றவை, அவற்றின் நோக்கம் காலத்தை வென்று நிலைத்து நிற்பதல்ல, அது படைக்கப்படும் காலத்தில் குமுகத்துக்குத் தேவைப்படும் என்று படைப்போன் கருதும் கருத்துகளை முன்வைப்பதேயாகும் என்பதாகும்.

அதே வேளையில் வாழ்வுக்கான இலக்கியங்கள் என்று அழைத்தாலும் சரி பரப்பல் இலக்கியங்கள் என்று சொன்னாலும் சரி தமிழில் காலத்தை வென்று நிற்கும் இந்த வகைப்பாட்டினுள் வரும் இலக்கியப் படைப்புகள் குறைந்து இரண்டாவது உண்டு. ஒன்று திருக்குறள். இது எந்தக் காலத்துக்கும் பொருந்தும் மனித வாழ்வுக்காக அறங்கள் பலவற்றைத் தன்னுள்ளே கொண்டிருப்பதுடன்3 ஈடில்லாத மெய்ப்பாட்டுச் சிறப்பும் உடையது. ஓர் அறநூலை இத்தனை இலக்கியச் சிறப்புடன் படைக்க முடியும் என்பதே உலக மக்கள் யாவரினும் தமிழ் மக்களுக்குத் தனிப்பெரும் பெருமையைத் தருவதாகும்.

இன்னொரு இலக்கியம் சிலப்பதிகாரக் காப்பியம் ஆகும். அதன் பதிகத்திலேயே இளங்கோ அடிகள் நூலின் நோக்கத்தை ஐயத்திற்கிடமின்றிக் கூறி விட்டார் இவ்வாறு:

அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்...
நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்...

அத்துடன் பதிகத்தில் குறிப்பிடாத ஒன்றை நூலின் பயனாக நூற்கட்டுரையில், தமிழகத்தின் பருப்பொருட் பண்பாட்டை ஆடிநன் நிழலின் நீடிருங் குன்றம் காட்டுவார் போல் காட்டிவிட்டதாகப் பெருமிதம் கொள்கிறார்.

இப்படி இலக்கியப் படைப்புகள் மட்டுமல்ல இலக்கணமும் கூட இலக்கியங்களின் நோக்கம் மனிதனை மேம்படுத்துவதுதான் என்று வரையறுத்துள்ளதையும் காணலாம்.
உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமைப்
புரத்தின் வளமுருக்கி பொல்லா - மரத்தின்
கனக்கோட்டம் தீர்க்குநூல் அஃதேபோல் மாந்தர்
மனக்கோட்டம் தீர்க்குநூல் மாண்பு.
மரத்தை வாள் கொண்டு அறுக்கும் முன் கழிவாகத்தக்க புறவெட்டு என்பதனை முடிந்த அளவு சுருக்கி நல்மரப் பகுதியை மிகுப்பதற்கு முதலில் ஒரு நூலைக் கரி கரைந்த நீரில் நனைத்து அறுக்க வேண்டிய மரத்தில் பிடித்து அடித்து அடையாளமிட்டுக் கொள்வர். அதைத்தான் மரத்தின் கனக்கோட்டம் தீர்க்கும் நூல் என்று கூறுகிறது மேலேயுள்ள நன்னூல் நூற்பா எண் 25.

அகத்தியர் என்ற ஆசிரியர் பெயர் அகத்தியம் என்ற இலக்கணத்தை வகுத்தவரின் பெயர் என்றும் கூறலாம். அகப்பொருள் அகத்தியல் → அகத்தியம் → அகத்தியர் என்று திரிந்து வந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த வகையில் தொல் பழங்காலத்திலேயே இலக்கியத்தின் நோக்கம் மனிதனை மேம்படுத்தவதுதான் என்ற கருத்து தமிழ் மரபில் நிலைநிறுத்தப்பட்டுவிட்டது புலனாகிறது. இதற்காக நாம் சிறப்பாகப் பெருமைப்படத் தேவையில்லை. இதில் கூறப்பட்ட பொருள் இறையனார் அகப்பொருளில் உள்ளதாகும் என்று கூறுகிறது வித்துவான் ச.தண்டபாணி தேசிகர் பதித்துள்ள நன்னூல் விருத்தியுரை, (பாரி நிலையம், சென்னை-1 1971, பக். 65). மனிதனின் முயற்சிகளும் செயல்களும் மனித குலத்தை மேம்படுத்துவதற்காகவே அமைய வேண்டுமென்பதுதானே பகுத்தறிவு உடைய எந்த ஒருவருடையவும் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி அல்ல என்றொரு குரல் எழுவது அதுவும், உலக அளவில் என்பதுதான் மறுக்கம்.

சில சிறந்த எழுத்தாளர்கள் இலக்கியம் பற்றிய இந்த எதிர்நிலைக் போக்கைப் பரிந்துரைக்கின்றனர். ஆனால் அவர்களுடைய படைப்புகளில் அவர்களது கருத்து என்று நாம் அறிவதற்கு மாறான, அதாவது குமுகம் பற்றிய பரிவுடனும் கவலையுடனும் குமுகத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் கருத்துகள் அடித்தளமாக அமைந்திருப்பதை அடிக்கடி பாக்கிறோம். இது அவர்களது அடிப்படை மன இயல்பின் நனவிலி வெளிப்பாடாகும். வெளிப்படையான அவர்களது சிந்தனைக்கு மாறான உள்ளுணர்வின் வெடிப்பாகும்.

இனி பதிகத்தின் உள்ளத்தினுள் செல்வோம்.

குணவாயில் கோட்டத்தில் அரசு துறந்திருந்த என்ற வரியில் அரசு துறத்தல் என்பது இல்லறம் துறத்தல் ஆகுமா என்பது தெரியவில்லை. பெண்களைப் பற்றியும் காமம் பற்றியும் மக்கள், நிலம், கடல், இயற்கை, கலைகள் பற்றியும் அவருடைய விரிந்த அறிவு துறவு பூணுவதற்கு முந்திய வாழ்க்கையின் பட்டறிவுகளிலிருந்து மட்டும் கிடைத்திருக்க முடியுமா என்றொரு கேள்வியை நம் முன் வைக்கிறது.

குணவாயில் என்பது வஞ்சியின் கீழ்த்திசையிலுள்ள திருக்குணவாயில் என்னும் ஊர் என்கிறார். அடியார்க்கு நல்லார். “குணவாயில் கோட்டத்து” அரசு துறந்திருந்த என்பது, அவர் முன்பு குணவாயில் கோட்டம் எனும் சேர நாட்டின் ஒரு பகுதியின் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கலாம். அரசர்கள் தங்கள் ஆண் மக்கள் பட்டம் ஏறுவதற்கு முன் அவர்களை நாட்டின் ஒரு பகுதிக்குப் பொறுப்பாளராக வைத்திருப்பது வழக்கம். அதன் மூலம் அவர்கள் நட்டின் ஆள்வினை குறித்த பட்டறிவுகளைப் பெற முடியும். போர்களிலும அவர்கள் படைப்பிரிவுகளுக்குத் தலைமை தாங்கி இருக்க வாய்ப்பிருக்கிறது. நாட்டின் ஒரு பிரிவின் ஆள்வினைத் தலைவர் என்ற வகையில்தான் இமயவரம்பன் அவையில் தமையன் செங்குட்டுவனோடு இருந்த போது நிமித்திகன் தன் புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டிருக்க வேண்டும்.

அரசு துறந்த என்ற கூற்றை இந்தப் பொருளில் எடுத்துக்கொண்டால் குணவாயில் கோட்டத்தில் அரசுப் பொறுப்பைத் துறந்து அங்கேயே வாழ்ந்து வந்தார் இளங்கோவடிகள் என்று பொருள் கொள்ள இடமிருக்கிறது.

சிலப்பதிகாரத்தின் ஒரு சிறப்பு இந்தக் காப்பியத்தில் நிகழ்ச்சிகள் நேர்கோட்டில் சொல்லப்படுவதில்லை என்பதாகும். இங்கு அரசு துறந்திருந்த என்று மொட்டையாகச் சொல்லியுள்ள அடிகள் தான் ஏன் “அரசு” துறந்தார் என்பதை நூலின் இறுதியில் வாழ்த்துக் காதையில் விரிவாகக் கூறியுள்ளார். இத்தகைய உத்தியை நூல் முழுவதும் பார்க்க முடியும். அவற்றை அங்கங்கே சுட்டிக் காட்டுவோம்.

குன்றக் குறவர் என்பதில் வரும் குன்றம் செங்குன்றம் என்னும் மலை என்று அடியார்க்குநல்லார் கூறியுள்ளார். அது கண்ணகி மதுரையிலிருந்து சென்ற வையைக் கரை வழியே அதன் ஒரு கிளை தோன்றும் முனையாகும். அந்த முனையின் எதிர்ப்புறத்தில்தான் பெரியாற்றின் ஒரு கிளையின் முனை உள்ளது. அந்த மலைப் பகுதியை வண்ணாத்திப் பாறை என்று அந்த வட்டாரத்து மக்கள் அழைப்பதாக 20-04-2008 அன்று சித்திரை வெள்ளுவாவன்று கண்ணகிக் கோட்டத்துக்குச் சென்றிருந்த போது அறிய முடிந்தது. இப்பொழுது கண்ணகிக் கோட்டம் என்று காட்டப்படும் இடம் இளங்கோவடிகள் கூறும் இடமல்ல என்ற எமது இந்தக் கருத்து பற்றிய விரிவுக்கு சேணுயர் சிலம்பில்…. என்ற தலைப்பில் தமிழினி 2008 மே இதழ் கட்டுரை பார்க்க.

காவிரிப்பூம்பட்டினம் என்பது காவிரி புகும் பட்டினம் என்பதிலிருந்து திரிபடைந்திருக்கலாம். புகார் என்பது புகு + ஆறு என்பதன் மரூஉவாய் இருக்க வேண்டும். பூம்புகார் என்பது பொலிவுடைய ஆறு புகும் பட்டினம், அதாவது ஆறு புகும் பொலிவுடைய பட்டினம் என்றும் பொருள்படலாம்.

கோவலன் என்ற பெயருக்கு ஆயன் என்பது பொருள். கோவலன் என்பதை விரித்தால் மாட்டை மேலாண்மை செய்ய வல்லவன் என்று பொருள் தரும். சமற்கிருதச் சொல் என்று பொதுவாகக் கருதப்படும் கோபாலன் என்ற சொல்லின் ஒரு வடிவமே கோவலன். இன்றும் மாட்டிலிருந்து பால் கறப்பதற்கு மிகப் பெரும்பாலோர் ஆயர்களையே சார்ந்திருப்பதைப் பார்க்கிறோம். சிலப்பதிகாரத்திலும்

குழல் வளர் முல்லையில் கோவலர் தம்மொடு
மழலைத் தும்பி வாய்வைத் தூத... (அந்திமாலை சிறப்புச் செய்காதை 15-16)
என்று கூறுவதைப் பார்க்கிறோம். ஆக, வாணிக வகுப்பைச் சார்ந்த ஒருவனுக்கு ஆயர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்குரிய பெயரைச் சுட்டியிருப்பது மக்கள் தொழில்களில் மாறிமாறி ஈடுபட்டிருந்ததைக் காட்டும் தடயமாகக் கொள்ள முடியுமா அல்லது வெவ்வேறு தொழில் சார்ந்தவர்களிடையில் தொழில் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு அன்று கடைப்பிடிக்கப்படவில்லையா என்ற கேள்விகள் எழுகின்றன. அல்லது நிலம் வழி வாணிகம் பொதிமாடுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கியதால் ஆயர்களே நிலவழி வாணிகர்களாக மலர்ந்ததன் ஓர் எச்சமாகக் கோவலனின் பெயரைக் கொள்ளலாமா?

கண்ணகி என்ற பெயர் ஓர் அரிய பெயராகத் தோன்றுகிறது. கண்ணகி என்பதை கண் + நகை, அதாவது நகைக்கும் கண்களை உடைய இனிய பெண் என்று பொருள் படுமா என்பது கருதத்தக்கது. நான் ஆணையிட்டால் என்ற திரைப்படத்தில் கதைத் தலைவியின் இதே பெயருக்கு கதைத் தலைவன் இத்தகைய விளக்கம் கொடுப்பதாக ஓர் உரையாடல் வருகிறது. கண்களை நகையாகக் கொண்டவள் என்றும் விளக்கலாம்.

கணிகையொடு ஆடிய (வரி 15-16க்கு) என்பதற்கு தன் பொறுப்புகளை மறந்து களியாட்டம் நடத்திய என்று பொருள்.

சில்லரிச் சிலம்பு (வரி 25) சில அரிகளை - பரல்களை உடைய சிலம்பு என்று வேங்கடசாமியார் உரை கூறுகிறார். “சில்” என்ற சொல்லுக்கு கழகத் தமிழ் அகராதி தரும் பொருட்களில் ஆரவாரம், ஒலிக்குறிப்பு, நுண்மையான என்பவை உள்ளன. “சில்லரி” என்ற சொல்லுக்கு சிலம்பின் பருக்கைக் கல் என்று பொருள் உள்ளது. எனவே சில்லரிச் சிலம்பு என்பதற்கு ஒலிக்கின்ற நுண்ணிய பரல்களைக் கொண்டது அல்லது ஓலிக்கின்ற பரல்களைக் கொண்டது என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

கன்றிய காவலர் (வரி29) என்பதில் வரும் “கன்றிய” என்ற சொல்லுக்கு தழும்பேறிய, மிகுந்த, முதிர்ந்த என்ற பொருட்களும் “கன்றுதல்” என்ற சொல்லுக்குரிய பொருள்களில் கன்றல், இரங்கல், கோபித்தல், விசனப்படல், அடிப்படுதல், சினக் குறிப்பு கொள்ளுதல், மனமுருகுதல், நோதல், வாடுதல், முற்றுதல் என்ற பொருட்களும் கன்றல் என்ற சொல்லுக்குள்ள பொருள்களில் சினத்தல், கடுப்பு என்பவையும் உள்ளன.

வேங்கடசாமியார் அடிப்படுதல் என்ற பொருளைக் கொண்டுள்ளார். அடிமட்டத்திலுள்ள கீழ்நிலைக் காவலர் அல்லது கீழ்த்தரமான காவலர் என்று கொண்டுள்ளார். அடியார்க்குநல்லார் “கன்றிய காவலர் என்றார், அவரும் முன்னர்த் தீது செய்யார் என்பது தோன்ற” என்று கூறியிருக்கிறார். பாண்டியன் ஊழ்வினைப் பயனால் தன் நல்லியல்பை மறந்து செயற்பட்டான் என்ற கருத்தில் அவர் கூறியுள்ளார். ஆனால் பாண்டியனின் நடவடிக்கைகள் அத்தகைய ஓர் இயல்பை அவனுக்குக் காட்டவில்லை. எனவே பட்டறிவு மிகுந்த முதிர்ந்த கொடுமையான காவலர்கள் என்றுதான் அதற்குப் பொருள் கொள்ள வேண்டும். அரசர்களுக்கு அண்மையில் அப்படிப்பட்டவர்கள்தாம் அமர்த்தப்படுவார்கள்.

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது (வரி 91) என்ற வரியில் சிலப்பதிகாரம் தமிழகம் முழுவதையும் நிலைக்கானாகக் கொண்ட காப்பியம் என்பதைப் பதிகமும் உறுதிசெய்கிறது. அதற்கேற்றாற் போல்தான் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் எனும் பெரும் பிரிவும் உறுதி செய்கின்றன. எனவே பதிகமும் வஞ்சிக் காண்டமும் பின்னர்ச் சேர்த்தது என்பதற்கான அறிகுறி நூலில் எங்குமே இல்லை. இக் காண்டங்களுக்கிடையிலான இசைவு பற்றிய தெளிவான சான்றை அது வருமிடத்தில் சுட்டுவோம்.

காதைகளின் தலைப்புகள் ஏறக்குறைய அனைத்தும் பல்வேறு மகளிரின் செயற்பாடுகளையே குறிப்பதைக் காணலாம். இந்த வகையிலும் சிலப்பதிகாரம் ஒரு பெண்ணியக் காப்பியம் என்பதைப் பறைசாற்றி நிற்கிறது.

காதை என்ற சொல்லுக்கு, “கதையை உடையது காதையாம் ஆதலாலும்” என்ற அடியார்க்குநல்லாரின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளார் வேங்கடசாமியார் அவர்கள். ஆனால் காது என்ற சொல் அடிப்படையில் காதை என்ற சொல் உருவாகி இருக்க வேண்டும். அது பின்னர் கதை என்று திரிந்திருக்க வேண்டும். முதலில் இலக்கியங்கள் ஒருவர் சொல்ல பிறர் கேட்க நிகழ்ந்து பின்னர் எழுத்து உருவான காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். பேசுதல் என்பதைக் “கதைத்தல்” எனும் ஈழத்துச் சொல் வழக்கை நோக்க.

அடிக்குறிப்புகள்:

1. சிலப்பதிகாரம், 22, 18,

2. சிலப்பதிகாரம், 23, 173-4,

3. காலத்துக்கு ஒவ்வாத கருத்துகளும் திருக்குறளில் உள்ளன என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.


13.10.15

சிலப்பதிகாரப் புதையல் - 1

மனந்திறந்து……….

தமிழகத்து நிகழ்ச்சிகளைக் கூறும் காப்பியம் என்பதால் சிலப்பதிகாரத்தின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. அதனால் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் பதிப்பித்த சிலப்பதிகாரம் கழக வெளியீட்டை 1970இல் வாங்கிப் படித்தேன். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் நான் முழுமையாகப் படித்தது சிலப்பதிகாரம் மட்டும்தான் என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

1980களின் தொடக்கத்தில் மதுரையில் ஓர் அறையில் நான் தங்கியிருந்த போது இன்னோரறையில் தங்கியிருந்த அக் கட்டடத்துக்குப் பொறுப்பாளரான ஏசுதாசு என்பவர் ஒரு கேள்வியை முன்வைத்தார். மதுரை தீக்கிரையாகி மன்னனும் அரசியும் மாண்டு 14 நாட்களுக்குப் பின்னரே கண்ணகி தேவருலகம் செல்கிறாள். அதன் பின்னரே சேரன் செங்குட்டுவன் மலைவளங்காண வருகிறான். அப்போதுதான் ஒரு பெண் தங்கள் இருப்பிடத்துக்கு வந்து தேவருலகம் சென்றதைக் குன்றக் குறவர்கள் சொல்ல, அப்போது அரசனுடன் இருந்த சாத்தனார் கோவலன் – கண்ணகி குறித்த செய்திகளைச் சொல்கிறார். அப்படியானால் அண்டை நாட்டில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சி ஒன்றை சேரன் அறியாமல் இருந்தான் என்பது நம்பும்படி இல்லை. எனவே சிலப்பதிகாரக் கதை வெற்றுக் கற்பனை என்று அவர் கூறினார்.

அவர் கேட்ட கேள்வி ஞாயமானதே, அதுவும் சேரன் செங்குட்டுவன் வடநாடு செல்வது குறித்து அங்குள்ள அரசர் அனைவருக்கும் ஓலை விடச் சொன்ன போது நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்றுநம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா(காட்சிக் காதை வரி. 173 – 4), எனவே தலைநகரில் பறையறைந்தால் போதும் அனைத்து அரசர்களுக்கும் செய்தியை அந்நந்நாட்டு ஒற்றர்கள் தெரிவித்து விடுவார்கள் என்று அமைச்சன் அழும்பில் வேள் கூறும் ஓர் அரசிடை உறவு நிலை உருவாகிவிட்ட சூழலில் என்பதில் எனக்கு எந்த ஐயமும் எழவில்லை.

ஆனால் சிலப்பதிகார நிகழ்ச்சி கற்பனையல்ல என்று கூறுவதற்கு தமிழகத்திலும் வெளியேயும் குறிப்பாக கேரளத்திலும் ஏராளமான சான்றுகள் உள்ளன. அப்படியானால் நண்பர் கேட்ட கேள்விக்கு விடையை மனம் தேடியது.

அப்போது மார்க்சியம் எனக்கு வழிகாட்டியது. தனி மனிதர்களுக்கும் குமுகத்துக்கும் உள்ள உறவைப் பற்றிய மார்க்சியப் புரிதலே அது. குமுகம் தன் சிக்கல்களுக்குத் தீர்வுகாண முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் சூழலில் அங்கு தோன்றும் ஒரு தனி மனிதனின் செயற்பாடுகளைப் பற்றிக்கொண்டு மக்கள் அம் மனிதனின் பின் திரண்டு தங்கள் நெடுநாள் கொதிப்பை ஆற்றிக்கொள்கிறார்கள் என்பதுதான் அது. கண்ணகியின் நேர்வில் இது போன்ற பின்னணி இருந்ததா என்ற கேள்வி என்னுள் எழுந்த போது ஆம் என்று விடை தந்தது கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்ட என்ற ஊர் சூழ்வரியின் 29ஆம் வரி, அதாவது தன் கணவன் கொலைப்பட்டுக் கிடக்கும் இடத்தைத் தேடிப்போன கண்ணகியின் பின்னே ஆர்ப்பரிக்கும் மக்களின் கூட்டம் ஒன்று தொடர்ந்து சென்றது என்ற செய்தி மேலும் என் தேடுதலை ஊக்கியது. அதன் பயனாக உருவானதே மதுரையை எரித்தது யார்? என்ற என் கட்டுரை .

சேரன் செங்குட்டுவன் படையோடு வந்து அமரத்தக்க, மலை மீதிருக்கும் பெரியாற்றின் கரை பெரும்பாலும் வண்டிப்பெரியாறாகத்தான் இருக்கும். அதாவது வஞ்சிக்கும் மதுரைக்கும் இடைப்பட்ட ஓரிடம் இது. மதுரையில் மக்கள் கலகம் மூண்டு அரசனும் அரசியும் கொலைப்பட்டுவிட்டனர் என்பதறிந்து அதை அடக்கவென்று புறப்பட்டவனுக்கு வழியில் குறவர் சொன்ன சேதியும் சாத்தனார் மதுரையில் மக்கள் கலகத்தில் கண்ணகியின் பங்கு பற்றி கூறியதும் மதுரையில் நெடுஞ்செழியனின் தம்பி வெற்றிவேற்செழியன் நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதும் அவனது வேலையை எளிதாக்கிவிட்டது. மதுரையில் நடந்தது மக்கள் கலவரமல்ல, ஓரு பத்தினிப் பெண்ணின் சினத்தீயின் விளைவே என்று மக்களைத் திசைதிருப்ப கண்ணகிக்குக் கோயில் எடுப்பதென்றும் அதற்குச் சிலை செய்ய இமயம் செல்வதென்றும் அந்தச் செல்கையின் போதே தமிழ் மன்னர்களை இழிவாகப் பேசிய “ஆரிய” மன்னர்களைத் தண்டிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. மக்களைத் திசைதிருப்ப கோயில் கட்டுவதும் சிலை நிறுவுவதும் மணிமண்டபம் அமைப்பதும் ஆகிய நடைமுறையை நம் ஆட்சியாளர்கள் அன்றே தொடங்கிவிட்டதையும் சிலப்பதிகாரம் காட்டுகிறது.

அதாவது மதுரைக் கலகத்தில் கண்ணகியின் பங்கு பற்றித்தான் சேரன் செங்குட்டுவன் பெரியாற்றங்கரையில் அறிந்தான் என்பதுதான் நண்பர் சேசுதாசு எழுப்பிய கேள்விக்கு விடையாக எனக்குக் கிடைத்தது.

இந்தத் தேடலில் எனக்குத் தெரிய வந்தது வெளிப்படையாகக் கூறப்படும் கதைக்கு மாறான இன்னொரு கதை நூலினுள் மறைக்கப்பட்டிருக்கிறது என்பதாகும். அரசர்களின் கொடுங்கோன்மைகள், இயலாமைகள், மக்களிருந்து அயற்பட்டுவிட்ட சமயத் தலைமைகள் என்ற நுட்பமான செய்திகள் ஒருபுறம் என்றால் மக்களிடமிருந்து அரசர்கள் முற்றிலும் அயற்பட்டு நின்ற சூழலில் அம்மண அநாகரிகர்கள் இங்குள்ள மலைவாழ் மக்களையும் முல்லை நில மக்களையும் அரசர்களுக்கு எதிராகத் திரட்டி தமிழர்களின் பண்பாட்டுச் செல்வங்கள் அனைத்தையும் தடந்தெரியாமல் அழித்துவிடுவார்கள் என்பதை முன்னறிந்து எழுத்தில் புதைக்கத்தக்கவை அனைத்தையும் புதைப்பதற்காக இளங்கோவடிகள் இக் கதையைப் பயன்படுத்தியிருப்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது. அப் பண்பாட்டுக் கூறுகளை, குறிப்பாக இசை – நாடகங்களைப் பொறுத்தவரை தன் நூல் ஒரு பாடநூலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக வெவ்வேறு காதைகளில் பகுதி பகுதியாகப் பிரித்துவைத்துள்ளார். அவ்வாறு அன்று பெரியாற்றங்கரையில் தீர்மானிக்கப்பட்டதற்கு மாறாக உண்மைகளை வெளிப்படையாக அடிகள் எடுத்துவைத்திருந்தால் இன்று இந் நூல் நமக்குக் கிடைக்காதபடி அழிக்கப்பட்டிருக்கும். இத்தகைய இலக்கிய உத்திக்கு எடுத்துக்காட்டாக உருசிய நாடகமான INSPECTOR GENERALஐக் கூறலாம். சார் மன்னனின் ஆட்சிக் குறைபாடுகளை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தி அவனைக் குலுங்கக் குலுங்க நகைக்கவைத்த ஆசிரியரின் உத்தியை இலக்கிய உலகம் போற்றுகிறது. ஆனால் இளங்கோவடிகள் எடுத்துக்கொண்ட பணி இதனோடு ஒப்பிட மிக மிகக் கடினமான ஒன்று. அதை அவர் மிக மிகச் சிறப்பாக முடித்துள்ளது அவரது மிகுந்த திறமையையும் கடின உழைப்பையும் மட்டுமல்ல தமிழ் மண் மீதும் மக்கள் மீதும் அவருக்கு இருந்த கலப்பில்லாத ஈடுபாட்டையும் காட்டுகிறது.

அவர் அஞ்சியது போலவே அம்மணர்களால் அழிக்கப்பட்ட நாகரிகத்தைச் சார்ந்து வாழ்ந்த மக்களும் தத்தம் துறைகளைக் கைவிட்டுவிட அல்லது நாட்டை விட்டே வெளியேறிவிட, பின்னர் அம்மணத்திலிருந்து விடுபட்ட பல்லவர்களும் பிறரும் கோயில்களைக் கட்ட முற்பட்ட போது புதிதாக உருவான கலைஞர்கள், குறிப்பாக சிற்பக் கலைஞர்கள் பழையவர்களின் தரத்திற்கு உயரவில்லை என்பது வட இந்தியாவிலும் தமிழர்க்குரியனவாகக் கூறப்படும் கம்போடியா போன்ற கிழக்காசிய நாடுகளில் அண்மை ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோயில்களோடு இப்போது தமிழகத்தில் இருக்கும் கோயில்களை ஒப்பிடும் போது தெரிகிறது. நிகழ்த்து கலைகளைப் பொறுத்தவரை ஆடலுக்கு ஆந்திரத்தின் கணிகையர் இறக்குமதியாயினர். பாடலுக்கு மூவர் எனப்படும் தெலுங்கு இசை முன்னவர்களை அகற்றி தமிழிசை மூவரை நிலைநிறுத்தும் முயற்சி இன்றும் வெற்றி பெறவில்லை.

நாடகம் என்ற கலையைப் பற்றி இளங்கோவடிகள் தந்துள்ள வரையறைகளைத் திரைத்துறையினர் உன்னிப்பாகப் பயின்று பின்பற்றுவார்களாயின் அவர்களின் படைப்புத் திறன் மேம்பட வாய்ப்புண்டு.

ஆனால் அடிகள் கடைப்பிடித்த ஒன்றை மட்டும் இன்று தவறாமல் கையாள்கிறார்கள். அதாவது ஒவ்வொரு படத்திலும் ஐந்து பாடல் காட்சிகள், அதற்குக் குறையாத எண்ணிக்கையில் ஆடல் காட்சிகள், காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என்ற கலவை வாய்பாட்டைத்தான் குறிப்பிடுகிறேன்.

இவ்வாறு கண்டவற்றை ஒரு நூலாக்க வேண்டும் என்று விரும்பிய நான் என் வாழ்க்கைச் சூழலில் இவ்வளவு பெரும் பணியை நிறைவேற்ற முடியுமா என்ற மலைப்பில் இருந்தேன்.

குடும்பப் பொறுப்புகளில் பெரும்பாலானவை முடிந்துவிட்ட நிலையில் எஞ்சியிருந்த மகளின் திருமணத்திற்காக குமரி மாவட்டத்தில் சொந்த ஊரிலுள்ள சொத்துகளை விற்க திருநெல்வேலியிலிருந்து மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில் சொந்த ஊர் சென்றேன். அங்கு ஈத்தாமொழி தியாகராசன் என்ற நண்பர் தன் அமைப்பாகிய இலக்கியச் சோலையின் சார்பில் சனிக்கிழமை தோறும் நடக்கும் நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்தார். அந் நிகழ்ச்சியில் விசுவதிலகம் என்ற ஓய்வுபெற்ற பள்ளியாசிரியர் கம்பராமாயண வகுப்பு நடத்தினார். அதைப் பார்த்த நான் சிலப்பதிகார வகுப்பு நடத்தும் என் விருப்பத்தை நண்பர் தியாகராசனிடம் வெளியிட்டேன். அதை உடனே ஏற்றுக்கொண்ட நண்பர் வியாழக் கிழமை தோறும் தமிழ்க் கேணி என்ற பெயரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இந் நிகழ்ச்சிகள் வல்லன்குமாரன்விளை வழக்கறிஞர் இராசகோபால் அவர்களுக்குச் சொந்தமாக கோட்டாற்றில் இருந்த வளாகத்தில் அமைந்திருந்த அவரது அலுவலகத்தில் நடைபெற்றன.

வகுப்பில் பேசுவதைப் பதிவு செய்து பின்னர் அதை எடுத்தெழுதுவது என்பது எனது திட்டமாக இருந்தது. அதற்காக மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணியாற்றும் நண்பர் தங்கராசு ஒரு நாடாப் பதிவியையும் நாடாச் சுருள்களையும் வாங்கித் தந்தார். ஆனால் பதிந்தவற்றை எடுத்தெழுத ஆள் அமர்த்துவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. எனவே பதிவுசெய்து கொண்டோம். அந்தப் பணியை நிகழ்ச்சிக்கு தவறாது வந்துகொண்டிருந்த பள்ளியாசிரியர் திரு.எட்வின் பிரகாசு ஏற்றுக்கொண்டார். கிட்டத்தட்ட 100 வகுப்புகள் நடந்து நிகழ்ச்சி இனிதாக நிறைவேறியது.

சிறிது காலத்துக்குப் பின் நாகர்கோயிலில் நான் ஓர் அலுவலகம் அமைக்க வேண்டி வந்தது. அங்கு மீண்டும் ஒரு முறை வகுப்பு நடத்தினேன். இப்போது பேச்சை நேரடியாக கணினியில் பதிந்தோம். அந்தப் பொறுப்பையும் நண்பர் எட்வின்தான் ஏற்றுக்கொண்டார். வகுப்புகளை மீண்டும் ஒருமுறை நடத்தும்படி நண்பர்கள் கேட்டுக்கொண்ட போது அடுத்த நாள் பேச இருப்பவற்றுக்கு முதலில் குறிப்புகள் எடுத்தேன். இந்தக் குறிப்புகளை தட்டச்சர் கொண்டு தட்டச்சு செய்து அதை மேம்படுத்தி கணினியில் பதிந்துகொண்டோம். இதற்கிடையில் நான் முடித்து வைத்திருந்த COLLEGE OF ENGINEERING MANUAL - IRRIGATION by Col.W.M.ELLIS என்ற தமிழக அரசு வெளியீட்டின் தமிழாக்கத்தைத் தங்கள் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் வெளியிட இருப்பதாக தமிழ்நாடு பொறியியல் சங்க(பொ.ப.து.) பொறுப்பாளர்கள் கூறி அதனை முடித்துத் தருமாறு கேட்டுக்கொண்டதால் அதற்கான வரைபடங்களைக் கணினியில் வரைவதற்கும் புத்தக வடிவமைப்புக்கும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நானும் நண்பர் எட்வினும் செலவு செய்ய வேண்டியிருந்தது. எனக்கும் என் துணைவிக்கும் உடல்நலக் குறைவினால் இன்னும் மூன்றாண்டுகள் ஓடிவிட்ட நிலையில் அவற்றிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு இந்தப் பணியை முடித்துள்ளேன்.

இதை எழுதுவதற்காக நான் சிலப்பதிகாரம் பற்றி எழுதப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான நூல்களில் எவற்றையும் பார்க்கவில்லை. மேலே குறிப்பிட்ட வேங்கடசாமி நாட்டார் அவர்களின் உரையில் தரப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையிலேயே என் கருத்துகளை முன்வைத்துள்ளேன். கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்ததற்கான காரணங்களாக என் இளமையில் நான் படித்த சிலரது கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் யார் யார் என்பது இப்போது நினைவிலில்லை. வகுப்புகளில் கலந்துகொண்டோர் தாங்கள் எழுப்பிய கேள்விகள் மூலம் என் தேடலை ஊக்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக, கோவலன் – கண்ணகியின் புணர்ச்சியை பாம்புகளின் புணரச்சியோடு ஒப்பிட்டு அடிகளார் கூறியிருப்பது அருவருப்பான உவமை என்று நாகர்கோயிலைச் சார்ந்த பேரா.சுந்தரலிங்கம் குறிப்பிட்டதைக் கூறலாம். வகுப்புகளில் தவறாது கலந்துகொண்டு அன்றன்றைய நிகழ்ச்சி முடிவில் கருத்துரைகள் வழங்கிய பேராசிரியர் சிவமுருகன் அவர்களின் வழிகாட்டல் பெரிதும் பயன்பட்டது. பள்ளியாசிரியர் ஆபிரகாம் லிங்கன், புலவர் கா.சு.பிள்ளை, தங்க துமிலன், சின்னத்தம்பி, தங்கசாமி, புலவர் வே.செல்லம் முதலியோரும் கருத்துகளை வழங்கியுள்ளனர்.

இந்த நூலை எழுதும் முயற்சியில் நான் ஈடுபட்டிருப்பதை அறிந்ததும் நண்பர் தமிழினி வசந்தகுமார் அதைத் தான் வெளியிட விரும்புவதாகக் கூறி புலவர் ஆ.பழனி அவர்கள் எழுதி தான் வெளியிட்ட சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு என்ற நூலை அதிலுள்ள கருத்துகள் எனக்குப் பயன்படும் என்று தந்து உதவினார். அதில் சில அரிய செய்திகள் எனக்குக் கிடைத்தன.

சாதிப் பின்புலம், அரசியல் பின்புலம், உயர் பதவிகளில் ஏற்கனவே இடம் பிடித்துவிட்ட குடும்பப் பின்புலம் முதலியவற்றுடன் கண்டிப்பாகப் பணப் பின்புலமும் உள்ளவர்களுக்கு, சராசரிக் குடிமகன் எண்ணிப் பார்க்க முடியாத உயர் சம்பளத்துடன் பலவகைப் படிகளுடன் கணிசமான சட்டத்துக்குட்பட்ட பக்க வருமானங்களுடன் ஓய்வூதியமும் சட்டத்துக்குப் புறம்பான வரும்படிகளும் ஈட்ட வாய்ப்புள்ள பதவிகளைத் தரும் நிறுவனங்களாக இன்றைய பல்கலைக் கழகங்கள் ஒடுங்கிக் கிடக்கின்றன.

இந்தப் பல்கலைக் கழகங்களுக்கு பல்கலைக் கழக நல்கைக் குழு மூலமும் வெளிநாடுகளிலிருந்தும் பல்வேறு திட்டங்களின் பெயரில் பெருந்தொகைகள் வருகின்றன. அவற்றில் ஒரு தம்பிடியைக் கூட பல்கலைக் கழகச் சம்பளப் பட்டியலில் கையைழுத்திட்டுச் சம்பளம் வாங்குவோர் தவிர வேறெவருக்கும் எந்தத் திட்டத்துக்காகவும் வழங்குவதில்லை என்பதை நடைமுறையாக வைத்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக அசாம் மாநிலத்தில் பேராய்வு(Survey)த் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற, செங்கம் கு.வெங்கடாசலம் என்ற பெரியவர் சிந்து சமவெளி அகழ்வில் கிடைத்த எடைக் கற்களை ஆய்ந்து அவற்றின் எடைகள் தமிழர்களிடம் இருந்த காணி வாய்பாட்டில் இருப்பதைக் கண்டறிந்தார் தமிழகத்திலுள்ள இந்த வாய்பாடு நீட்டல், முகத்தல், நிறுத்தல் ஆகிய அனைத்துக்கும் பொதுவாக இருப்பதை வெளிப்படுத்தினார். மாட்டு வண்டி செய்யும் கொல்லுத்தொழில் வல்லோரிடமிருந்துதான் அவர் வண்டிப் பைதா(சக்கரம்)வின் ஆரை, சுற்றளவு ஆகியவற்றை அறிந்து பிரிட்டீசு நீட்டலளவையில் தொடரி(சஙஙகிலி), படைசால்(பர்லாங்கு) ஆகியவற்றுக்கும் அவற்றுக்குமுள்ள உறவை வெளிப்படுத்தினார். பண்டைத் தமிழ்க் கணித நூலான கணக்கதிகாரம் பற்றிய ஆய்வை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடத்துவதற்கு இசைவு கேட்டு அப்போது துணை வேந்தராக இருந்த, தமிழ்ப் பேராசிரியர்களில் ஒரு சாரரால் மிகவும் போற்றப்படும் ப-ர்.திரு.வ.அய்.சுப்பிரமணியம் அவர்களை அவர் அணுகியுள்ளார். ஆனால் அவரோ “எங்கள் பேராசியர்களே அதைச் செய்வர்” என்று திருப்பிவிட்டார் அவரை. அவர் பின்னர் மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக்காகச் செயற்பட்ட தொண்டு நிறுவனம் ஒன்றில் இணைந்து தன் செயற்பாடுகளைத் திருப்பிக்கொண்டார்

இந் நிகழ்ச்சியை இங்கு சுட்டிக்காட்ட காரணம், 19ஆம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் சென்ற நூற்றண்டின் தொடக்கத்திலும் சிங்காரவேலு முதலியார், நா.கதிரைவேற்பிள்ளை போன்றவர்கள் தமிழ் இலக்கிய – இலக்கணங்கள், நிகண்டுகள், மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்த நூற்கள், சமற்கிருத நூற்கள், தொன்மங்கள், இற்றை அறிவியல் ஆகியவற்றிலிருந்து கடுமையான உழைப்பில் முறையே அபிதான சிந்தாமணி, தமிழ்மொழி அகராதி என்ற கலைக் களஞ்சியங்களைத் தொகுத்து வெளியிட்டனர். மு.ஆபிரகாம் பண்டிதர் தானே இசை மாநாடுகள் நடத்தி கர்நாடக இசைக்கு மூலம் பழந்தமிழ் இசைதான் என்பதை இந்நிய அளவில் நிலைநாட்டியதுடன் கருணமிர்த சாகரம் என்ற அரிய ஆய்வுநூலையும் வெளியிட்டார். தொடக்க முயற்சிகளாகிய முதல் இரண்டு கலைக்களஞ்சியங்களையும் எத்தனையோ வகைகளில் மேம்படுத்த வேண்டியுள்ளது. பல்லாயிரங்கள் என்று சொல்லும் வகையில் பண்டிதர்(முனைவர்)களை நம் பலைகலைக் கழகங்கள் படைத்துக்கொண்டிருக்கின்றன. அவர்களில் எவரும் இத் திசையில் சிந்திக்கவில்லை. மலையாளத்தில் அத்தகைய சான்றுகளைக் காட்டும் கலைக்களஞ்சியங்கள் வெளிவந்துவிட்டதென்று நண்பர் செயமோகன் கூறினார்.

இந்த நூலை நான் எழுதிய போது வாசனைப் பொருள்களைப் பொறுத்தவரை பெயர் முரண்பாடுகள் பல வெளிப்பட்டன. இதில் முடிவு எடுக்க முடியாததால் மேற்படி கலைக்களஞ்சியங்களும் கழகத் தமிழ் அகராதியும் தந்துள்ள பொருள்களை பட்டியலிட மட்டும்தான் என்னால் முடிந்தது. இது பற்றி தமிழ் மருத்துவக் குடும்பத்தில் தோன்றி இன்றும் மருத்துவம் பார்க்கும் பள்ளி ஆசிரியர் நண்பர் திரு.ஆபிரகாம் லிங்கன் அவர்களிடம் கூறிய போது அவர் கொடுத்த பட்டியலை இணைத்துள்ளேன். உண்மையில் தமிழ்ப் பல்கலைக் கழகம், சித்த மருத்துவக் கல்லூரிகள் போன்றவை இந்தத் திசையில் செயற்பட வேண்டும். ஆனால் பிற “தொழிற்” படிப்புகளுக்கு இடம் கிடைக்காமல் வேண்டா வெறுப்பாகச் சேர்ந்து பட்டம் பெற்றுவிட்ட இவர்களுக்கு அரசு மருத்துவமனையில் உயர் சம்பளத்தில் வேலையும் வெளியே தனித் தொழிலும் செய்ய வாய்த்த பின் மேற்கொண்டு உடம்பையோ மனதையோ ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?

எவரையும் தனிப்பட்ட முறையில் குறை சொல்வது என் நோக்கமல்ல. மழலைப் பருவத்திலிருந்தே குழந்தைகளின் இயற்கையான ஆர்வங்கள், திறைமைகளை இனங்கண்டு படிப்பு – செயலறிவு என்று மாற்றி மாற்றி கல்வியைப் புகட்டி ஒவ்வொரிடமிருந்து பெறத்தக்க மீப் பெரிய ஆற்றலை வெளிப்படுத்தி நாட்டுக்குக் கிடைக்கத்தக்க மீப் பெரிய மனித வளத்தை உருவாக்குவதற்கு மாறாக குழந்தைப் பருவத்திலிருந்தே சிந்திக்கும் திறனை அழிக்கும் ஒரு கல்வித் திட்டத்தை வகுத்து வல்லரசியத்துக்குத் தேவைப்படும் சிந்திக்கத் தெரியாத மனித இயந்திரங்களை உருவாக்கும் இன்றைய கல்வி முறையின் பால் நம் கவனத்தை ஈர்க்கவே இதை இங்கு கூறுகிறேன்.

நூல்களை அதிகாரம் அதிகாரமாகப் படித்து செய்தியை உள்வாங்கித் தேர்வில் விடை எழுதுவதற்குப் பகரம் வரி வரியாகப் பிரித்து மாணவனின் புரிதல் திறனைக் கருவறுக்கும் கேள்வி வங்கி முறை என்றும் நான்கு விடைகளைக் கொடுத்து ஒற்றையா இரட்டையா என்று எழுதவைக்கும் புறவகை (Objective type) வினாக்கள் முறையும் பள்ளிக் கல்வியின் போதே மாணவர்களின் சிந்தனைத் திறனை முடக்கிவிடுகின்றனர். இரண்டாண்டு மூன்றாண்டுகளுக்குரிய பாடங்களை மனதில் வைத்து இறுதித் தேர்வில் எழுதுவதை நிறுத்தி பருவமுறை என்று கல்லூரிக் கல்வியைப் பயனற்றதாக்கினர். ஆய்வேடுகளில் மாணவர் கூறும் ஒவ்வொரு கருத்துக்கும் முன்னவர் ஒருவரை மேற்கோள் காட்டுவது இன்றியமையாதது, அதாவது மாணவர் தன் சொந்தக் கருத்து அல்லது முடிவு என்று எதையும் கூறிவிடக்கூடாது என்பது கண்டிப்பான நடைமுறை. எனவே ஆய்வேடுகள் என்பவை வெறும் செய்தித் தொகுப்புகளாகவே இருக்கின்றன. இந்தப் பின்னணியில் ஆய்வேடு எழுதிக் கொடுத்து பணம் ஈட்டும் ஒரு கூட்டமே பல்கலைக் கழகங்களின் தாழ்வாரங்களில் ஆட்சி செலுத்துகிறது. இந்த உத்திகள் அனைத்தும் அமெரிக்காவின் வழிகாட்டுதலில் புகுத்தப்பட்ட நடைமுறைகள். இவ்வாறு திரட்டப்பட்ட புலனங்களை(தகவல்களை) வரிசைப்படுத்துவதற்கு என்றே கணினிப் பணியாளர்கள் அமெரிக்காவுக்கு தொடக்க காலங்களில் தேவைப்பட்டார்கள். அதற்கேற்பவே நம் ஆட்சியாளர்களை கல்வித் துறைக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை என்றும் இங்கிருந்து ஊழியர் படை செல்வதற்கு மனிதவள ஏற்றுமதி என்றும் இழிவான பெயர் சூட்ட வைத்தனர் அமெரிக்க ஆண்டைகள். ஆனால் அமெரிக்கக் கல்வி முறை மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்ப்பதாகத்தான் இன்றும் இருக்கிறது. ஆங்கிலர் நம்மை ஆண்ட போது அங்கே வழக்கிலிருந்த கல்வி முறையைத்தான் இங்கும் கடைப்பிடித்தார்கள். ஆனால் அங்கிருந்த வளர்ச்சி நிலைக்கும் இங்கிருந்த நிலைக்கும் இருந்த எட்டிப்பிடிக்க முடியாத ஏற்றத்தாழ்வால் அக் கல்வியும் நமக்குப் பயனளிக்கவில்லை.

கடலாடு காதையில் அடிகளார் தரும் இன்னொரு பட்டியல் மாதவி சூடிய அணிகலன்கள் பற்றியது. இது பற்றி தெரிந்துகொள்ளப் பொருத்தமானவர் திரு.செந்தீ நடராசன் என்று அவரை நண்பர் ஆபிரகாம் லிங்கனுடன் சென்று பார்த்தோம். அவர் சில அணிகலன்களின் படத்தை வரைந்து விளக்கங்களுடன் தந்தார். கடலாடு காதையில் மட்டுமல்ல சிலப்பதிகாரம் முழுவதிலும் கூறப்படும் பலவேறு அணிகலன்களை அவற்றை அணிந்து காணப்படும் சிலைகளின் புகைப்படங்களுடன் விளக்கும் ஒரு தனி நூல் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.

இந் நூல் இன்றைய வடிவம் பெறுவதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கேற்ற மேலே கூறப்பட்ட அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். எனக்கு மாணவர் போலவும் பல சூழல்களில் வழிகாட்டியாகவும் விளங்கும் நண்பர் ம. எட்வின் பிரகாசு அவர்களுக்கு நன்றி கூறுவது எனக்கு நானே நன்றி கூறுவதாக அமையும் என்றாலும் அவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர் தமிழினி வசந்தகுமார் அவர்கள் என் மீது அளவற்ற நம்பிக்கையுடன் இந் நூல் முடிவடையும் முன்பே வெளியிட முன்வந்ததற்கு அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை அவருக்கு அறிமுகம் செய்ததன் மூலம் தமிழினி இதழில் படைப்புகள் வெளிவரக் காரணமான நண்பர் செயமோகன் அவர்களுக்கு நான் பட்டிருக்கும் நன்றிக் கடன் பெரிது.

இறுதிக் கட்ட வகுப்புகளின் போது அவ்வப்போது நான் எழுதி வந்த குறிப்புகளையும் அவற்றில் அவ்வப்போது செய்யும் மாற்றங்களையும் பொறுமையுடன் தட்டச்சு செய்து உதவிய திருமதி பிந்துமதி நாகரானுக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்த நூல் ஒரு கருத்துப் போரை உருவாக்கும் என்று நம்புகிறேன். நின்று நிலைத்துவிட்ட கருத்துகளையும் கொள்கைகளையும் மறுபார்வைக்கு உட்படுத்துவது குமுகம் முன்னேறி அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கு ஓர் அடிப்படைத் தேவை என்பதில் உறுதியாக இருக்கும் நான் அறிஞர் பெருமக்களிடமிருந்து வளமான எதிர்வினையை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
குமரிமைந்தன்.
திருமங்கலம் (மதுரை மாவ.)
26 - 07 - 2014.