4.5.09

முதலாளியமும் வல்லரசியமும் .....4

பெருமரபு முதலாளியம் (Clasical Capitalism)

முதலாளியம், வல்லரசியம் என்ற இந்த வகைப்பாட்டைப் பற்றிய ஓர் உரையாடல் 1982 இல் வெங்காளூரில் குணாவின் தோழர்களின் முயற்சியில் நடைபெற்ற ″தேனீக்கள் பட்டறை″ என்ற நிகழ்வில்ர நான் அப்போதுதான் முதன்முதல் சந்தித்த சத்தியமங்கலம் எசு.என்.நாகராசன் (இவர் தமிழகப் பொதுமை இயக்கத்தினுள் தமிழகத் தேசிய விடுதலைக் கருத்தை முதன்முதலில் முன்வைத்தவன் தான்தான் என்று உரிமை கொண்டாடும் பார்ப்பனர்), கோவை ஞானி ஆகியோரின் தனி உரையாடலில் வெளிப்பட்டது. வல்லரசியத்துக்குப் புறம்பான முதலாளியத்தை பெருமரபு முதலாளியம்(Classical Capitalism) என்ற சொல்லால் குறிப்பிடுவதை நான் அங்குதான் அறிந்தேன். ஆனால் பின்னால், எசு.என். நாகராசனின் நடவடிக்கைகள் அணைத்துக் கொடுப்பவை என்று தெரிந்தது. ஞானி அவர்களோ இன்று வல்லரசியத்தையும் முதலாளியத்தையும் ஒன்றாகவே காட்டி தான் முதலாளியத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று ″தமிழ்″ மேடைகளில் முழங்கிவருகிறார். நாகராசனைத் தன் கொள்கை ஆசான் என்று தான் கருதுவது போல் எனக்குத் தோற்றம் தந்துள்ளார்.

தமிழ்ப் பற்று காட்டுபவர்களைப் பெருமளவில் பகடி பேசியவர் இவர். இன்று இவரும் பெருஞ்சித்திரனார் குடும்பமும் அ.மார்க்சும் சேர்ந்து தமிழ்த் தேசியத்துக்காகவும் தமிழுக்காகவும் உயிரை விடப்போவதாகச் சொல்ல வேண்டியதுதான் குறை.

″மார்க்சியர்″களைப் பொறுத்தவரை, மார்க்சோடு பொருளியல் சிந்தனைகள் முற்றுப்பெற்றுவிட்டது. அதனால் மனித வரலாறும் அத்துடன் தேங்கிப்போய்விட வேண்டியதுதான். வேறெதாவது நடந்திருந்தாலும் அது வெறும் மாயை. எனவே கெயின்சு என்று ஒருவர் அவர்களைப் பொறுத்தவரை உலகில் பிறக்கவுமில்லை, வாழவுமில்லை.

ஆக, இதுவும் ஒரு சமயமாக இறுகிப் போய் விட்டது. முகம்மதியத்தில் ஒரு புதிய கிளையாக அகமதியம் என்பது பற்றி நாம் குறிப்பிட்டோம் (அக்டோபர் 2008 தமிழினி). அது பற்றிய ஒரு சுவையான நிகழ்ச்சி. நெல்லையில் வாழ்ந்த ஒரு முகம்மதியர் சென்னை சென்றிருந்தாராம். அண்ணா சாலையில் சென்ற போது நண்பகல் தொழுகைக்கான அழைப்பொலி கேட்டு ஒலிவந்த பள்ளிவாசலில் சென்று தொழுகையில் ஈடுபட்டாராம். சிறிது நேரத்தில் அவருக்குப் புரிந்துவிட்டது, தாம் அகமதியா பள்ளிவாசலுக்கு வந்திருப்பது. தொழுகை முறையிலுள்ள வேறுபாட்டை அவர் உணர்ந்தது போல் அங்கிருந்தவர்களும் இவரைப் பொறுத்து உணர்ந்து கொண்டனர். அரக்கப் பரக்கத் தொழுகையை முடித்து வெளியே வந்தவர் பள்ளிவாசலைத் திரும்பிப் பார்த்திருக்கிறார். அங்கே அவர் அமர்ந்து தொழுகை நடத்திய இடத்தை மட்டுமல்ல முழுப்பள்ளிவாசல் தளத்தையும் விறுவிறுவென்று கழுவிக் கொண்டிருந்தார்களாம். அவ்வளவு பெரிய ″தீட்டு″

நம் மார்க்சியர்களும் கெயின்சை இவ்வாறுதான் பார்க்கின்றனர் என்று நம்மால் கூற முடியாது. அவர்களின் எத்தனை பேர் அவரை அறிந்திருக்கிறார்களோ நாம் அறியோம். அப்படி அறிந்தால் நாம் மேலே முகம்மதியம் - அகமதியம் போன்ற வெறுப்புணர்ச்சியுடன்தான் பார்ப்பர். கெயின்சு மார்க்சைப் பற்றியும் மார்க்சியத்தைப் பற்றியும் என்ன கூறினார் என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால் மார்க்சைப் போலவே அவரும் ″இயற்கை தன் வழியில் செல்லட்டும்″(Laisses-faire)கோட்பாட்டை எதிர்த்தார். அதே வேளையில் மார்க்சின் மீத்த மதிப்புக் கோட்பாட்டின்படி மீந்து போகும் பண்டங்களாலும் அதன் விளைவான பட்டினிச் சாவுகளாலும் எதிர்பார்க்கப்பட்ட பொதுமைப் புரட்சியின் வாய்ப்பு கெயின்சால் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் வேறு வழிகளில் அதற்கான சூழல் உருவாகியது என்னவோ உண்மை.


வல்லரசு நாடுகளில் முதலாளியத்தின் அடிப்படைக் கட்டமைப்பான பெருந்தொழில்கள், பெரும் பண்ணைகள், அவற்றுக்குள் மிகப் பெரும்பான்மை மக்களும் தொழிலாளர்களாக ஒன்று திரளுதல் என்ற நிகழ்முறையில் தொழிலாளர்களுடைய பகரம் பேசும் திறன் அளவின்றிப் பெருகியது. பங்குச் சந்தை முறையால் தனிப்பட்ட முதலாளி முகமிழந்துவிட்டான். இயக்குநர் குழுவும் மேலாளர்கள், அதிகாரிகள் என்ற நிலையில் முதலாளி ஒரு அருவமாக மாறிக்கொண்டிருந்தான். இந்தச் சூழலில் தொழிலாளர்கள் தங்களுக்குத் தொழிற்சாலைகளில் பங்குகள் வடிவிலான பங்கேற்பைக் கேட்டனர். அது செயலுக்கும் வந்துகொண்டிருந்தது. மார்க்சு கூறிய பொதுமை நெருங்கிக் கொண்டிருந்தது. இதைத் தவிர்ப்பதற்கான வல்லரசுகளின் முயற்சிக்குத் தோதாக இருந்தது ″ஏழை″நாடுகளிலிருந்து அவற்றின் தலைவர்களும் அதிகாரிகளும் பதுக்கி வைத்திருந்த பணமும் வல்லரசு நிறுவனங்களில் இட்டிருந்த மூலதனமும். அவைதாம் உலகளாவுதல் என்ற நடைமுறைக்குத் தோற்றுவாயாகவும் நேரடி அயல் முதலீடு என்பதன் உட்கருவாகவும் இருக்கின்றன. இப்படிக் கூறுவதனால் ″ஏழை″ நாடுகளின் தலைவர்களுக்கு என்று தனித்தன்மையுடன் கூடிய முதலீடுகளும் தொழில்முனைவுகளும் இருப்பதாகப் பொருளாகாது. அவர்கள் அனைவரும் உலக வல்லரசியத்துடன் இரண்டறக் கலந்துள்ளார்கள். இருப்பினும் வல்லரசுகளை இருப்பிடமாகக் கொண்ட பொருள் வல்லரசுகளுக்கும் நம் ஆட்சியர்களாகிய ஊழல் வல்லரசியர்களுக்கும் முரண்பாடுகள் இல்லாமல் இல்லை. அவை ″வாணிக″ மாநாடுகளில் ஒவ்வொரு முறையும் ஒலிப்பதை நாம் காணலாம். தெற்கு உலகம் என்றும் கீழை உலகம் என்றும் மூன்றாம் உலகம் என்றும் வளரும் நாடுகள் என்றும் அவற்றுக்கான உரிமைகள் என்றும் அந்நாடுகளில் ″நம்″ தலைவர்கள் முழங்குவதே தங்கள் நலன்களுக்காகத்தான். தங்கள் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் அயல்நாடு சென்று மாநாடுகளில் கலந்துகொண்டு தங்கள் நலன்களுக்காக இவர்கள் வாதாடி வருகின்றனர். இந்த உண்மையை எந்த அரசியல் கட்சியும், குறிப்பாக ″புரட்சி″ பொங்கிவழியும் பொதுமைக் கட்சியின் அனைத்து வகையினரும் கூட வெளிப்படுத்துவதில்லை. முதலாளியத்தின் கைக்கூலிகள், வல்லரசியத்தின் அடிமைகள், நாட்டை விலை பேசிவிட்டார்கள் என்று பொதுப்படையாகவே பேசுகின்றனர்.

சிறப்புப் பொருளியல் மண்டலம் என்பது உட்பட நம் நாட்டின்(சீனத்திலும்தான்) தொடங்கப்படும் பல்வேறு வளாகங்களில், அவற்றில் கையெழுத்திடும்போது நம் ஆட்சித் தலைவர்களுக்குக் கிடைக்கும் பங்கு மூலதனத்துடன் அந்த நிறுவனத்தில் ஏற்கனவே அவர்களுக்கு இருக்கும் பங்குகளும் சேர்ந்துகொள்கின்றன. ″புரிந்துணர்வு″ ஒப்பந்தங்களின்படி இந்த வளாகங்களுக்குத் தடை இல்லாத மின்சாரம், குடிநீர் தரத்திலான தண்ணீர் எல்லாம் வழங்க வேண்டும். இவ்வாறு நாட்டின் சராசரி குடிமகனுக்கு எட்டாத அளவுக்கு நிலப்பரப்பு, முதலீட்டு வாய்ப்புகள், அவர்களது தேவைப்பாடுகளைப் பறித்துக் கட்டமைப்புகளையும் தேவைப்படும் அனைத்து வசதிகளையும் தமக்கு மட்டுமே பயன்படுத்தல் என்று பொருளியல் மற்றும் ஊழல் வல்லரசியம் நம் ஒவ்வொருவரின் வீட்டினுள்ளும் புகுந்து மடிபறித்து நிற்கிறது.

பங்கு முதலீட்டில் முற்றாளுமை:

பங்கு முதலீடு என்பது நாம் குறிப்பிட்டது போல் பங்காளிகள் சேர்ந்து தொழில்களைத் தொடங்கி அவை நொடித்துப்போனால் தம் மொத்தச் செல்வத்தையும் இழக்கும் நிலையைத் தவிர்க்க, தம் முதலீட்டு அளவுக்கு இழப்பை எல்லைப்படுத்தி அதனைப் பங்கீட்டாளருடன் பகிர்ந்துகொள்வது என்ற அடிப்படையில் முதலாளியத்தின் வளர்ச்சியோடு தோன்றி வளர்ந்தது. அவ்வாறு முதலிட்டவர்களில் ஒருசிலருக்கு உடனடியாகப் பணம் தேவைப்படும் போது அவர் தொழில் முனைவாளரிடம் போய் நின்றால், அல்லது போட்டியாளர் ஒருவர் பங்கீட்டாளர்களைத் தூண்டிவிட்டால் அல்லது நிறுவனத்துக்கு ஒரு சிறு இடையூறு நேர்ந்தவுடன் பங்கீட்டாளர்கள் தங்கள் தங்கள் முதலீட்டைக் கேட்டு வரிசையில் வாசலில் நின்றால் என்னாவது? அதனால்தான் இரண்டாம் நிலை பங்குச் சந்தை என்ற தரகாண்மை உருவானது. அதாவது நிறுவனத்தின் உள் நிகழும் சிறு சிக்கல்கள் பங்கு முதலீட்டாளர்களிடையில் ஏற்படுத்தும் எதிர்வினையால் நிறுவனத்தை முற்றிலும் வீழ்த்துவதாக மாறிவிடக் கூடாது என்பதுதான் இரண்டாம் நிலை பங்குச் சந்தை தோன்றியதன் பின்னணி.

ஆனால் முதலீட்டாளர்களின் பதற்றங்களிலிருந்து நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கென்று உருவான இந்தப் பங்குச் சந்தை, பங்கீட்டாளர்களுக்கு உரிய ஆதாயப் பங்கை நிறுவனங்கள் பெருமளவில் சுருட்டுவதற்கும் பங்கு முதலீடு என்ற கோட்பாட்டுக்குப் புறம்பாக குமுகச் செல்வத்தை நிறுவன முனைவாளர்கள் தங்கள் கைப்பற்றுக்குள் கொண்டுவருவதற்கும் அதைவிடப் பல மடங்கு குமுகச் செல்வம் பங்கு வாணிகம் எனும் சூதாட்டத்தினுள் சென்று விழுவதற்கும் வழியமைத்தது.

ஒரு நிறுவனத்தின் பங்கை சந்தையில் எத்தனை மடங்கு விலைக்கு நீங்கள் வாங்கியிருந்தாலும் உங்களுக்கு நிறுவனம் தரும் ஆதாயப் பங்கு அதன் முகவிலையின் நூற்றுமேனியில்தான். 10 உரூபாய் பங்கு உரூ 500/க்குச் சந்தையில் விற்கலாம். ஆனால் 100% ஈவு வழங்குவதாக நிறுவனம் அறிவித்தால் உங்களுக்கு உரூ10/-தான் கிடைக்கும். எனவே நீங்கள் கொடுத்த விலைக்கு உரிய வட்டி அல்லது ஆதாயம் வேண்டுமென்றால் விலை கூடும்போது சந்தையில் உங்கள் பங்கைக் விற்க வேண்டும். தொடர்ந்து வாங்கி விற்றுக் கொண்டிருக்க வேண்டும் அல்லது பண நெருக்கடி என்றால் அப்போதைய சந்தை விலையில் உங்கள் தேவைக்கேற்ற பகுதியை விற்றுக் கிடைத்தது ஆதாயம் என்று அமைய வேண்டியதுதான்.

உங்கள் பங்குக்குரிய நிறுவனமோ தன் ஆண்டைய நிகர ஆதாயத்தில் கிட்டத்தட்ட 80%க்கும் குறையாத அளவுக்கு ஒதுக்கம் அல்லது ஏமம் (Reserve) என்ற பெயரில் தன் கையில் வைத்துக்கொள்கிறது. சந்தை ஏற்ற இறக்கங்கள், எதிர்பாரா இழப்புகள், வளர்ச்சி என்ற பெயர்களில் அது ஒதுக்கும் தொகை முதலீட்டாளர்களை ஏமாற்றி முனைவாளர்கள் சுருட்டிக் கொள்வதாகும். மொத்தப் பங்குகளின் முகமதிப்புக்கும் நிறுவனத்தின் மொத்தச் சொத்துக்கும் ஒரு இயைபு இருக்க வேண்டும். இல்லை என்றால் பங்கீட்டாளர்களுக்கு உரிய பங்கைப் பணமாகவோ இலவயப்பங்குளாகவோ வழங்கி அதைச் சரிக்கட்ட வேண்டும் ஆனால் இரண்டுமே நடைபெறுவதில்லை.

இதைவிடப் பெரிய கொடுமை ஒரு குறிப்பிட்ட முகமதிப்புள்ள பங்குகளை அதைப் போல் பல மடங்கு விலைக்கு நிறுவனமே பட்டியலிடுவது. ஒரு இந்திய அரசுடைமை வங்கி சில ஆண்டுகளுக்கு முன் உரூ10/- முகமதிப்புள்ள பங்குகளை உரூ 70/- விலைக்கு வெளியிட்டது பங்கு ஒன்றுக்கு முகமதிப்புக்கும் வெளியீட்டு மதிப்புக்குமான இந்த உரூ60/- வேறுபாடு எந்த வகையில் எப்படி கணக்கு வைக்கப்படும்? அது யார் யாருக்குப் போய்ச் சேரும்? இந்தக் கேள்வியே எங்கும் எவரும் எழுப்பவில்லை. நம் மக்களின், குறிப்பாகப் பங்குச் சந்தையிலே முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துக் கொண்டிருக்கும் வல்லுநர்கள் கூட எதுவும் கூறவில்லை. தொடக்கத்தில் 7 மடங்காக இருந்த இந்த விகிதம் பிற நிறுவனங்களால் உயர்ந்து கொண்டே போகிறது.

நம் பொதுமைத் தோழர்களுக்கு இதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. ″ஓம் மார்க்சாய நமக″, ″ஓம் லெனினாய நமக″ ″ஓம் மாவோயாய நமக″, ″ஓம் காசுட்டுரோவாய நமக″, ″ஓம் சேகுவராய நமக″,″ஓம் தமிழரசனாய நமக″, ″ஒம் அம்பேத்காராய நமக″, ″ஓம் திருவள்ளுவராய நமக″, ″ஓம் திருக்குறளாய நமக″, ″ஓம் பெரியாராய நமக″, ஓம் பாவாணராய நமக″, ″ஓம் பெருஞ்சித்திரனாராய நமக″ ″ஒம் பக்தவத்சலமாய நமக″, ″ஓம் சிறுபான்மையினராய நமக″ (இந்தச் சிறுபான்மையினரில் பார்ப்பன - பனியாக்கள் அடக்கப்பட்டுள்ளார்களா என்பது மந்திர உச்சடனம் செய்கிறவர்களுக்கு மட்டும் தெரிந்த உண்மை), ″ஓம் பண்பாட்டுப் புரட்சியாய நமக″.

இந்த நாமாவளியில் ஏங்கெல்சின் பெயரை மட்டும் நம் புரட்சி பொங்கி வழியும் தோழர்கள் கூறுவதில்லை. ஏனென்றால் மார்க்சை நேரடியாகக் குறைசொல்லத் துப்பற்றவர்கள் ஏங்கல்சின் மூலமாகத் தம் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள். இதை லெனின் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் மார்க்சும் ஏங்கல்சும் தங்கள் ஒவ்வொரு ஆக்கத்தையும் இருவரும் கலந்து முடிவெடுத்துத்தான் அச்சுக்குக் கொடுப்பார்கள் என்பதுதான் உண்மை.

17 ஆண்டுக்காலம் நூல் நிலையத்திலேயே அடைந்து கிடந்த மார்க்சின் பணத் தேவைகளை நிறைவேற்றியவர் ஏங்கெல்சு. எண்ணற்ற படைப்புகளை மார்க்சுடன் இணைந்தும் தனித்தும் எழுதியுள்ள அவர் போர்க் களத்திலும் இருந்துள்ளார், பணமும் ஈட்டியுள்ளார். மார்க்சுக்குத் தேவைப்படும் நூல்களையும் ஆவணங்களையும் திரட்டியும் தந்துள்ளார். பல்வேறு திறன்கள் கைவரப் பெற்ற ஒரு மாபெரும் வரலாற்று மனிதர் அவர்.

பங்கு முதலீட்டின் இந்தச் சிக்கல்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு எம்மைப் பொறுத்தவரை முன்வைக்கும் தீர்வு என்னவென்றால், ஒரு தொழிலைத் தொடங்க விரும்பும் முனைவாளர் தான் பட்டியலிடத் திட்டமிட்டிருக்கும் தொகைக்குச் சமமாக, அல்லது பட்டறிவிலிருந்து அக்குமுகம் எய்தும் ஒரு விகிதத்தில் ஒரு நிலை வைப்பை, அரசு நிறுவும் ஒரு நிலையான அமைப்பில் ஈடுசெய்ய வேண்டும். நிறுவனம் ஆண்டுதோறும் ஈட்டும் ஆதாயத்தில் உரிய பங்கைப் பணமாகவோ இலவயப் பங்குகளாகவோ வழங்கி நிறுவனத்தின் உண்மையான சொத்துக்களை விட பங்குகளின் மொத்த விலை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இலவயப் பங்குகள் வழங்கும்போது அவற்றுக்கு ஈடாக நாம் மேலே கூறிய நிலை வைப்பில் செலுத்த வேண்டிய தொகைக்கு முன்னமைவு செய்த பின்னர்தான் வழங்க வேண்டும். புதிய பங்குகள் வெளியிடும் போதும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். இரண்டாம் நிலை பங்குச் சந்தை தேவையில்லை. தேவையானால் தொழில் நிறுவனங்கள் தம் நிறுவனப் பங்குகளை விற்க வருவோருக்கும் வாங்க விரும்புவோருக்கும் அவற்றில் உதவுவதற்கான துணை நிறுவனங்களை அமர்த்திக் கொள்ள வேண்டும்.

இந்த நிலை வைப்புகளுக்கான பணம் செயற்படாத மூலதனமாகத் தேங்கிக்கிடக்காதா என்றொரு கேள்வி எழலாம். இன்று மூலதனப் பங்குகளை வெளியிட்டு மூலதனம் சேர்த்துச் செயற்படும் உலகின் அனைத்து நிறுவனங்களினதும் மொத்தச் சொத்து மதிப்புக்கும் கூடுதலான பணம் இரண்டாம் நிலை பங்குச் சந்தை என்ற சூதாட்டத்தில் புழங்குகிறதே, அதை இவ்வகையில் திருப்பி விடலாமே. எந்த நோக்கத்துக்காக இந்த இரண்டாம் நிலை பங்குச் சந்தை உருவானதோ அதற்கு எதிரானதொரு திசையில் அது சென்று கொண்டிருப்பதால் வரலாற்றிலிருந்து பாடம் பெற்று இப்புதிய முறையைக் களத்தில் இறக்கலாமே!

இவை தவிர, ஒரு குறிப்பிட்ட முதலீட்டு வரம்புக்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்கள் மொத்த மதிப்பில் பாதிக்கும் கூடுதலான முதலீட்டைப் பங்கு முதலீடாகவே திரட்ட வேண்டும் என்று வரையறுக்க வேண்டும்.

வங்கிகளைப் பொறுத்தவரையில் அது தொழில்களுக்கு முதலீட்டுக் கடன் கொடுப்பது கூடாது. சேமிப்புகள், சிறுவைப்புகள், பட்டியல் செல்லாக்குதல், பணத்தை ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு மாற்றுதல், நகைக்கடன், வீட்டுக் கடன், ஊர்திக் கடன் போன்ற சிறு கடன்கள் வழங்குதல், உள்ளூராட்சிகளுக்கான கட்டணங்கள், மின்கட்டணம், தொலை பேசிக் கட்டணம் போன்றவை செலுத்துதல் என்ற அளவில் தங்கள் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இது நாம் சில ஆண்டுகளுக்கு முன் வரையறுத்த ஒரு திட்டம். அமெரிக்காவில் தொடங்கிய இன்றைய நெருக்கடியைப் பற்றி அலசும் ஒரு கட்டுரை தரும் சில செய்திகள் இதனோடு ஒத்துப் போவதைப் பார்க்கலாம்.

"It is just as impartant that business keep out of government as that government keep out of business"

Herbert Hoover, Republican President of America between 1929, and 1933, the era of notorious in history as the Great Depression. (Quotation in Business Economy, 19 September to 2 October P.64)

(தொழில்-வாணிகத்துறை அரசில் தலையிடாமலிருப்பது எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு இன்றியமையாதது அரசு தொழில் - வாணிகத்துறையில் தலையிடாமலிருப்பது. சொன்னவர் பெரும்பெயர் பெற்ற மாபெரும் பொருளியல் வீழ்ச்சி ஊழியாகிய 1929 முதல் 1933 வரை அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கடியரசுத் தலைவர் எர்பர்ட்டு ஊவர்)

ஒருவேளை, அரசு தொழில் - வாணிகத்தில் தலையிடாமலிருக்கலாம். ஆனால் தொழில் - வாணிகம் அரசில் தலையிடாமல் இருப்பது கிடையாது என்பது உண்மை. எனவே மேலேயுள்ள இந்த முழக்கமே தொழில் - வாணிக குழுக்களின் முழக்கம் என்பது உறுதி.

ஊவரின் இந்தக் கருத்தை உடைத்து, கெயின்சின் தலையிடும் கொள்கையை ஏற்றுச் செயற்பட்டு, உலகப் பொருளியலில் ஒரு புதிய பார்வை பரவலான ஏற்பைப் பெற வழிவகுத்தவர் அவரை அடுத்து பதவிக்கு வந்த பிளங்கிளின் டி.ருசுலெட்டு. கிளாசு டீகால் சட்டம் (Glass - Steagall Act) மூலம் வாணிக வங்கிளையும் முதலீட்டு வங்கிளையும் தனித்தனியாகப் பிரித்தார். ஒரே வங்கி இரு பணிகளிலும் ஈடுபடுவதைச் சட்டம் தடைசெய்தது.

அதை உடைக்க 1988, 1996 ஆண்டுகளில் குடியரசுக் கட்சி இருமுறை முயன்று தோற்றது. ஆனால் 1990இல் அமெரிக்க ஏம வங்கித் தலைவர் ஆலன் கீரிசுப்பான் என்பவர் ஒரு வாணிக வங்கிக்கு உறுதி ஓலைகளை (Securities) வழங்கும் அதிகாரம் வழங்கி இதை உடைத்தார். பின்னர் 1999இல் கிராம் - லீக் - பில்லி சட்டம் வந்து கிளாசு டீகால் சட்டத்தின் பகுதிகளை அகற்றிய பின் அனைத்துமே மாறின. இந்தச் சட்டத்தின்படி, ″வீழ்ச்சியடைய முடியாத அளவுக்குப் பெரிய பண நிறுவனங்களி″டமிருந்து பணவியல் கட்டமைப்பையும் பண்டுகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கு அடிப்படுத்தபட்ட கடன்களைப் பயன்படுத்தலாம்.
[1] அடிப்படுத்தப்பட்ட கடன் என்றால் ஈடு -> மறுஈடு -> மறுஈடு என்று செல்வது. எடுத்துக்காட்டாக, செருமன் மக்களில் பலர் தங்கள் வாழ்நாள் சேமிப்புகளை அல்லது ஓய்வூதியப் பலன்களை அமெரிக்கப் பண நிறுவனங்கள் வழங்கிய சான்றுகளின் மீது பணம் கொடுத்து உறுதிச் சான்றுகளைப் பெற்று ஏமாந்துள்ளனர்.

பணம் என்பது ஒரு நிழல். பண்டங்கள் அல்லது பணிகளின் நிழல். ஒருவனிடம் ஒரு மாடு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை ஒரு செங்கல் சூளைக்காரரிடம் கொடுத்து 5 வண்டி செங்கல் வாங்குகிறான். செங்கல் சூளைக்காரன் தன் மனைவிக்கு ஒரு பட்டுச் சேலை வேண்டும் என்பதற்காக ஒரு பட்டுச் சேலை நெய்வோனிடம் மாட்டைக் கொடுத்துவிட்டுச் சேலையைப் பெற்றுச் செல்கிறான். இவ்வாறு மாடு கைமாறிக் கொண்டே இருக்கும்.

மாடானதால் அதுவாகவே நடந்து சென்று விடும். மாறாகச் செங்கல் சூளைக்காரனுக்குப் பட்டுச் சேலை வேண்டுமானால் அவன் 5 வண்டிகளில் செங்கல்லை ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டும். பட்டுச் சேலைக்காரனுக்கு நெல் வாங்க வேண்டுமென்றால் அந்தச் செங்கல்லை அவன் வண்டியிலேற்றிக் கொண்டுசெல்ல வேண்டும். ஒரு சந்தை இருந்தால் இந்தக் கொடுக்கல் வாங்கல், அதாவது பகருதல்((Barter) எளிதாக இருக்கும். ஆனால் பணம் போன்று சுமை குறைந்த ஒரு பொருள் இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்?

மாடு ஒரு காலத்தில் பண்டமாற்று ஊடகமாக இருந்தது என்பது தமிழறிஞர்களின் கருத்து. மாடு என்ற சொல்லுக்குச் செல்வம் என்ற பொருளுண்டு. மாடல்ல மற்றயவை என்ற வள்ளுவர் சொல்லாட்சியும் உள்ளது.

உப்பு ஒரு காலத்தில் பண்டமாற்று ஊடகமாக இருந்தது என்ற கருத்து உள்ளது. ஆனால் கொண்டு செல்லும் வழியில் மழை வந்து நனைந்தால் அது கரைந்து இல்லாமல் போய் விடுமே! அதைத் தவிர்க்க எந்த உத்தி கையாளப்பட்டிருக்கும் என்ற பெருங்கேள்வி அந்த வாய்ப்பை மறுதலிக்கிறது.

இறுதியில் பொன் அந்த இடத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. அதன் சந்தை விலைக்கும் பண்டமாற்று மதிப்புக்கும் முதலில் தொடர்பிருந்தது. நாளாவட்டத்தில் அந்தத் தொடர்பு அறுந்து நாணயம் ஒரு அடையாளமானது. அப்போதே பணம் அல்லது நாணயம் பண்டங்களின் அல்லது பணிகளின் நிழலாகியது.

பணத்தைப் பண்டங்களின் பண்டம்(Commodity of commoditive) என்பார் மார்க்சு. நாணயம் தாள்பணமாக மாறிய போது முழுமையான நிழலாகப் பணம் மாறிவிட்டது. இந்தப் பணத்தை ஒரு வங்கியில் கொடுத்து அதற்கு ஒரு சான்றிதழைப் பெற்றுக் கொண்டால் அந்தச் சான்றிதழ் நிழலின் நிழலாகிறது. பணத்தைப் பெற்றுக்கொண்ட நிறுவனம் உடைந்து போனால் அந்தச் சான்றிதழ் வெறும் தாளாகிப் போகிறது. பணத்தாளுக்கு நாட்டின் அரசு பொறுப்பேற்றுள்ளது போன்ற பொறுப்பேற்பு அரசின் பொறுப்பேற்றைப் பெறாத நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ்களுக்கு இல்லை என்றால் இதுதான் முடிவு. அமெரிக்க அரசு அத்தகைய பொறுப்பை ஏற்றுக்கொள்வதில்லை.

அங்கே பெரும் சிக்கலை உருவாக்கியுள்ள வீட்டுக் கடன்கள் இது போன்ற சான்றிதழ்களைப் போன்றவை அல்ல. வீடுகளை விற்றுப் பணத்தை உடனடியாக மீட்க முடியாமைதான் உண்மையான சிக்கல். ஆனால் அத்தகைய பத்திரங்களையும் குறைந்த விலைக்கு வாங்கி ஆதாயம் பார்க்கச் சில பண நிறுவனங்கள் முன்வந்துள்ளனவாம். இவை நீண்டகால அடிப்படையில் செயற்படும் நிறுவனங்களாக இருக்கலாம். அல்லது பணத்தின் உடனடித் தேவை இல்லாத பெரும் பணம் படைத்தவர்களின் முதலீட்டில் இயங்குபவையாக இருக்கலாம். ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டுதானே! அப்படி மதிப்பிடப்பட்ட வங்கிகள்தாம் வீழ்ந்துள்ளன.

நீண்ட கால முதலீடு என்றதும் நாம் கேள்விப்பட்ட வரையில் பிரான்சிலுள்ள சேம்பெய்ன் எனும் சீமைச் சாராய நிறுவனம்தான் நினைவுக்கு வருகிறது. இவர்கள் சாராயம் வடிப்பதற்கான ஊறலை (குமரி மாவட்டத்தில் இதனைக் கோடை போடுதல் என்பார்கள்) நூறாண்டுகள் நொதிக்க வைப்பார்களாம். மரப்பறைகளில் (பீப்பாய்களில்) கோடையை நிரப்பி மண்ணைத் தோண்டிப் புதைத்து மேலே நாளைக் குறித்து விடுவார்களாம். அவர்களது முதலீடு 100 ஆண்டுகளுக்குத் திட்டமிட்ட ஒன்று.

நம் நாட்டிலும் பனை நடுவோர்களைப் பற்றிக் கூறுவார்கள், பனை, நட்டதிலிருந்து பலன் தர 40 ஆண்டுகள் ஆகுமாம். ஆனால் பின்னர் தொடர்ந்து நூறாண்டுகளுக்கு மேல் பலன் தந்துகொண்டிருக்கும். தென்னை மரத்தின் பழைய வகைகளும் அத்தகையவே. பயன்தர 20 வருடங்கள் வரை ஆகும். தொடர்ந்து நூறு ஆண்டுகளுக்கு மேல் பலன் தரும். ஆனால் தேங்காய் வெட்டுகிறவர்கள் அவ்வளவு உயரம் ஏற மாய்ச்சல் படுகிறார்கள். எனவே அதற்கு மாற்றாக சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது 5 ஆண்டுகளில் காய்த்து 10 ஆண்டுகளில் ஓய்ந்துவிடும் குறுகிய கால குட்டை வகை. இது காய்க்கத் தொடங்கியதும் மரங்களுக்கு நடுவில் புதிய கன்றுகளை நட்டுவிட வேண்டும். கன்றுகள் காய்க்கத் தொடங்கியதும் முதியவற்றை வெட்டி அகற்றிவிட்டுப் புதிய கன்றுகளை நடவேண்டும். இவ்வாறு இடைவிடாத வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் பாருங்கள், இப்போது உடலுழைப்புக்கு ஆள் கிடைக்கவில்லை.

உடனடிப் பலன் என்று இப்போது எங்கும் வாழை பயிரிடுகிறார்கள். ஆனால் வாழைக்காயை அறுவடை செய்வது, வண்டியில் ஏற்றுவது, பழுக்க வைப்பது, சந்தைக்குக் கொண்டுபோவது, அங்கிருந்து சில்லரைக் கடைக்கு வருவது, சில்லரைக் கடையிலிருந்து நுகர்வோரின் வீட்டுக்கு வருவதுவரை அதை மென்மையான, பக்குவமாகக் கையாள வேண்டிய பொருள் என்று எவருமே கருதாமல் குப்பை கூளத்தைக் அள்ளிக் கொட்டுவது போலவே கையாளுகின்றனர்.

சரக்கி(லாறி)களில் பண்டங்களை ஏற்றி இறக்கும் ″சுமை தூக்கும்″ தொழிலாளர்கள், 50 ஆண்டுகளுக்கு முன்பு சரக்கு முட்டைகளை அந்தந்தப் பொருளுக்கேற்ற பக்குவத்துடன் கையாண்டதைக் காண முடிந்தது. ஆனால் இன்று, ″பாட்டாளியக் கோட்பாடு″ வலுப்பெற்று சங்கங்களும் அமைந்த பின் அவர்களது கொடியே கொக்கிப் படத்தைக் கொண்டதாக மாறிவிட்டது. கொக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்று எழுதியிருக்கும் சரக்கையே ஒற்றைக் கையால் கொக்கியை ஓங்கி ஒரு குத்துக் குத்தி ஒற்றைக் கையாலேயே இழுத்துப் போடும் இந்தப் பொறுப்பற்ற செயலைப் பார்க்கும் போது அந்தக் கொக்கி நம் நெஞ்சில் குத்தியது போன்ற நொம்பலத்தை உணர்வோம்.

பாளையங்கோட்டையிலிருக்கும் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வு அலுவலர் ஒரு முறை ஒரு கனத்த சிலையை ஒரு கை வண்டியில் ஏற்றி அலுவலகத்துக்கு விடுத்தார். வண்டிக்காரன் அலுவலகம் வந்ததும் வண்டியின் முன்பக்கத்தைத் தூக்கி சிலையை உருட்டிவிட்டான். சிலை இரண்டாக உடைந்துவிட்டது அலுவலர் கேட்டார், என்னப்பா சிலையை உடைத்துவிட்டாயே என்று, ஆமாம், உடைந்துவிட்டது, அதற்கு இப்போது என்ன செய்ய? இது விடை.

நாம் மேலே கூறிய வாழைக் குலையின் நேர்வுக்கு வருவோம். அதிகக் கேடு இல்லாமல் ஒப்பேறிய 20 நூற்றுமேனியும் வெளிநாட்டினருக்கும் நாட்டின் உயர் அடுக்கிலிருக்கும் ஒரு மிகச் சிறுபான்மையினருக்கும் போகும். இறுதியில் ஏழைகளாகிய சுமை தூக்கிகள் போன்றவர்களுக்கு அழுகல்கள்தானே வந்து சேரும்! இவர்கள் கொக்கியால் சாக்கைக் கிழிக்கும் போது சிந்தும் சீனியும் மாவும் அரிசியும் கோதுமையும் போன்ற பண்டங்களைக் கூட்டிப் பெருக்கி அவையும் இந்தக் கடைக்கோடி மக்களுக்குத்தானே போய்ச் சேரும்? இந்த உண்மையை அவர்களுக்கு எடுத்துச் சொல்வது யார்? அவர்கள் தங்களது அடையாளமாக வைத்திருக்கும் கொக்கி இறுதியில் குத்துவது அவர்களது வயிறுகளைத்தான் என்பதை யார் அவர்களுக்குப் புரியவைப்பது? ″பாட்டாளி″க் கட்சிகளின் தலைவர்கள் கூறுவார்களா? மாட்டார்கள் என்று உறுதியாகக் கூறலாம். பாட்டாளிகள் அனைவரிடமும் இருந்தும் மகைமை தண்டுவதும் தேவைப்படும் போது ஆர்ப்பாட்டம் செய்யவும் ஊர்வலம் போகவும் குறைந்த அளவில் ஒரு ″தொண்டர் படை″ யும் போதுமே அவர்களுக்கு.

பாட்டாளி என்பவன் கலைந்த தலை, அழுக்கேறிய கிழிந்த உடை, குளிக்காத உடம்பு, குடித்துச் சிவந்த கண்கள், பொறுப்பற்ற கொச்சையான பேச்சு, அடிதடி, வன்முறை, ஊதாரித்தனம் இப்படித்தான் பாட்டாளியக் கட்சியரும் ஊடகங்களும் அவனது படிமத்தைப் படைத்து உலவவிட்டுள்ளன. அவனும் அதைப் பார்த்து அவ்வாறே தன்னைத் ″தகவமைத்து″க் கொள்கிறான்.

இந்த நிலையை எப்படி மாற்றுவது?

ஈடு வைக்கப்பட்ட சொத்துகளை விற்பது என்பதை எடுத்துக் கொண்டால் நாம், இந்தியர்கள், இதில் கைதேர்ந்தவர்கள். நம் நாட்டுப் பெருமக்கள் வாங்கிய பல இலக்கம் கோடி உரூபாய்களை இந்திய அரசுடைமை வங்கிகள் ″வாராக்கடன்″களாகக் அறிவித்துள்ளன அல்லவா? அதன் உள்ளரங்கம் என்ன?


அரசியல் கட்சிப் பெருமக்கள் தங்கள் சொத்துகளை அடமானமாகக் கொடுத்துப் பெருந்தொகையைக் கடனாகப் பெற்றிருப்பார்கள். திரும்பச் செலுத்த மாட்டார்கள். வங்கி முறைப்படி அடமானச் சொத்தைத் திறந்த ஏலத்துக்குக் கொண்டுவரும். பெருமகனாருடைய சொத்தை எவரும் ஏலம் கேட்கப் போக மாட்டார்கள், கேட்க முடியாது, கேட்டால் கேட்டவர் உயிருடன் இருக்க மாட்டார். அதுதான் வாராக்கடனின் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் கடன் வாங்கியவரும் கொடுத்தவரும் பங்கு போட்டுக் கொள்ளையடிப்பது, இராயப் பேட்டை ″ஒருவருக்கொருவர்″ (பரசுப்பர) பணப் பண்டு போல்.

இப்படிப்பட்ட வாராக்கடன்கள் அந்த வங்கியில் பணம் சேமிக்கும் அல்லது வைப்பில் இட்டிருக்கும் பொதுமக்களை வெளிப்படையாகப் பாதிப்பதில்லை. இந்த இழப்புகளைத் தள்ளுபடி செய்வதில் உருவாகும் இழப்பு அனைத்துக் குடிமக்களையும் பாதிக்கும்.

இவ்வாறு பண்டத்தின், பணியின் நிழலாகிய பணம், பணத்தின் நிழலாகிய பல்வேறு பத்திரங்கள், சான்றிதழ்கள் என்று மெய்ம்மையிலிருந்து விலக விலக மக்களின் பண முதலீடுகளுக்குப் பாதுகாப்பு குறைகிறது. இவ்வாறு நிழல்களின் அடுக்கு கூடும் தோறும் அரசின் பொறுப்பு பெரிதாகிறது. எனவே அத்தகைய ஆவணங்களை வழங்குவதனை எல்லைப்படுத்தி அதற்கு இணையான பணத்தை அத்தகைய நிறுவனங்கள் நாம் முன்பு குறிப்பிட்டது போல நிலையான கண்காணிப்பு நிறுவனத்திடம் செலுத்தும் ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.


(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] None too big to fall, Business world, 13 october 2008, P.32.

முதலாளியமும் வல்லரசியமும் .....3

தேசிய முதலாளியத்தை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

சிறு நில உடைமைகளை ஒன்றிணைந்து பெரும் பண்ணைகள் உருவாவதற்குத் தடங்கலாக இருக்கும் நிலவுச்சவரம்புச் சட்டங்களைக் கைவிட வேண்டும். குத்தகை வேளாண்மைக்கு முடிவுகட்ட வேண்டும். குத்தகைப் பயிரிடுவோருக்கு தாங்கள் பயிரிடும் நிலத்தில் பாதியை உரிமையாக்க வேண்டும். நேரடியாகப் பயிரிட முடியாதவர்கள் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் தங்கள் நிலங்களை விற்றுவிட வேண்டும். அல்லது அரசு அவற்றை விலைக்கு வாங்கிப் பண்ணையாளர்களுக்கு ஏலத்தின் மூலமோ தன்வரைவுகள் (டெண்டர்கள்) மூலமோ விற்றுவிட வேண்டும்.

சிறுதொழில்களுக்கான ஊக்குவிப்புகளைக் கைவிட வேண்டும். உள்ளூர்த் தொழில்முனைவோருக்கு ஊக்குவிப்பு வேண்டும். பாதிக்கப்படும் சிறுதொழில் முனைவோருக்கு உரிய மீட்பு நடவடிக்கைகளை எடுத்து அவர்களின் பணியைப் பெருந்தொழில்கள் பயன்படுத்த வகை செய்ய வேண்டும்.

அது போல் கைவினைத் தொழிலில் ஈடுபட்டிருப்போரையும் பெருந்தொழில்களில் பங்கேற்கத் தேவையான பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கும் மீட்பு உதவிகள் செய்ய வேண்டும். இவ்வாறு நாட்டின் அனைத்து மக்களையும் முதலாளிய நீரோட்டத்தினுள் கொண்டுவந்து அதன் பயன்கள் அனைவரையும் சென்றடையச் செய்ய வேண்டும்.

ஏழை நாடுகளில் மனித உறவுகள் மிகத் தாழ்ந்த நிலையில் உள்ளன. உழைப்பவர்களை எவ்வளவு இழிவாகவும் கொடுமையாகவும் நடத்த முடியுமோ அவ்வளவு இழிவாக நடத்துவது இங்கு மரபு. எனவே தொழில்நுட்ப உயர்வால் தொழிலாளர்களின் உடலுழைப்பின் கடுமை குறைவதை நம் ஒட்டுண்ணி வகுப்பினர் வெறுக்கின்றனர்.

குமரி மாவட்டத்திலுள்ள கொட்டாரத்தில் ஒரு மாட்டுச் சந்தை வரவிருந்ததை நாட்டார்கள் எனப்படும் ஊர்த்தலைர்கள் எதிர்த்துப் போராட்டம் நடத்தியதாக ஒரு குறிப்பு உள்ளது. (நாஞ்சில் நாடு, ப-ர் தே.வேலப்பன் 2000, பக்.19, மேற்கோள், குமரிமாவட்டம் பிறந்த வரலாறு, புலவர். கு.பச்சைமால், 2001, பக்.38.) அதாவது மனிதனை வைத்து கலப்பையை இழுக்கும் போது உண்டாகும் கிளுகிளுப்பு இல்லாமல் போகும் என்பது மட்டும் காரணமாக இருக்க முடியாது. மாடு செத்துப் போனால் இன்னொன்று வாங்கப் பணம் செலவாகும். மனிதன் செத்தால் செலவில்லாமல் இன்னொருவன் தானாகவே வந்து நிற்பான். நோய் நொடி என்றும் தீவனம், தொழுவம், அதைப் பராமரித்தல் என்றும் செலவுகள் கிடையாது. எல்லாவற்றையும் விட பெரும்பான்மை மக்களை அடக்கி வைக்க இது தவிர அவ்வளவு எளிய வழி வேறு இல்லை.

இன்று மட்டும் என்னவாம்? ″நம் நாட்டுத் தட்பவெப்ப நிலைக்கு உடலில் குறைவான ஆடையுடன் வேலை செய்வதுதான் உகந்தது″ என்று கூற ஒரு படித்த கூட்டம், ஒட்டுண்ணிக் கூட்டம், எந்தச் சாதியிலிருந்து வந்ததாயிருந்தாலும் நிலையாக நம்மிடையில் உள்ளது. ஆனால் இந்தக் கூட்டம் காலில் உறையணி(சூ), முழுக்கால் சட்டை, முழுக்கைச் சட்டை, முகத்தில் கருப்புக் கண்ணாடி, தலையில் தொப்பி அணிந்து நிழலில் பணியாற்றும் கூட்டம்.

உண்மையில் எந்த தட்பவெப்பமாக இருந்தாலும் காற்று, மழை, வெயில், புழுதி, சேறு, வானிலிருந்து இறங்கும் பல்வேறு கதிர்வீச்சுகள் ஆகியவற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வெட்ட வெளியில் பணி புரியும் ஒவ்வொருவரும் தங்கள் உடலை உரிய போர்ப்பினால் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் இந்த மேதாவிகளின் ″அறிவுரைகளை″ எவரும் ″சட்டை″ செய்யவில்லை என்பது மகிழ்ச்சி. முன்பு வெற்றுடம்புடன் வேலை பார்த்த பணிகளிலெல்லாம் ஆடவரும் பெண்டிரும் சட்டை, தொப்பிகளுடன் வேலை பார்க்கின்றனர்.

முன்பு மேலே துப்பட்டாவைச் சுற்றிக்கொண்டு, உடன் வரும் கையாள் ஒருவன் குடை பிடிக்க வரும் பண்ணையாரைக் கண்டதும் வயலிலோ வெளியிலோ வேலை செய்யும் கூலியாள் தலையிலிருக்கும் தலைப்பாகையை அவிழ்த்து இடுப்பில் கட்டிக்கொண்டு அல்லது முன்னங்கையில் தொங்கப் போட்டுக்கொண்டு குனிந்து வணங்கினான். இன்று தொழிலாளர்கள் அருகிப் போய் உழுவுந்தில் ஓட்டுவோன் உயரத்தில் சட்டை தொப்பியுடன் அமர்ந்திருக்க முன்னாள் பண்ணையாரின் பிறங்கடைகள் இன்று கீழே நின்று அவனை அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறதென்றால் அதனைச் செய்தது புதிய தொழில்நுட்பம்தானே?

மலை உச்சிகள் வரை இந்த வளர்ச்சி எட்ட வேண்டும். அப்போதுதான் மனிதனை மனிதன் மதிக்க வேண்டிய கட்டாயம் நம் மேற்குடியினருக்கும் படித்த ஒட்டுண்ணிகளுக்கும் வரும்.

இதே மனப்பான்மையிலிருந்து வந்தவர்கள்தாம் நம் பொதுமைத் தோழர்கள். இவர்கள் பின்னால் கைகட்டி நிற்பவர்களாக வேளாண் கூலிகள், ஒருங்கிணைவு பெறாத பல்வேறு தொழிலாளர்கள் இருக்க வேண்டும். அவர்களுக்காக இலவய மனைப்பட்டா என்ற பெயரில் தோழர்கள் அசையாகச் சொத்து வாணிகம் செய்ய வேண்டும் அல்லது அதில் தரகு பார்க்க வேண்டும்.

ஒருங்கிணைந்த தொழில்களில் உள்ளூர் மக்கள் ஈடுபட்டிருந்தால் அங்கு வேலை நிறுத்த நெருக்கடியை உருவாக்கி பனியாக்களுக்கும் பார்சிகளுக்கும் நுழைய வழியமைத்துக் கொடுக்க வேண்டும்.

முதலாளியத்தின் வளர்ச்சியை ஊக்கி நிலக்கிழமைப் பொருளியலின் மனித நேயமற்ற உறவுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய பாட்டாளியக் கட்சியினர் பழைய நிலக்கிழமைப் பொருளியலையும் குமுக அமைப்பையும் சாதி சார்ந்த தொழில்களையும் நிலைப்படுத்துவதற்காக செம்மார்களுக்கும் சக்கிலியர்களுக்கும் செருப்புத் தைக்கும் கருவிகளை இலவயமாக வழங்கவும் வண்ணார்களுக்கு தேய்ப்புப் பெட்டி இலவயமாக வழங்கவும் முன்முயற்சிகளை எடுத்துள்ளனர்.

இது போதாதா, பார்ப்பனர்களுக்கு அடுத்த சாதியிலிருந்து வந்த கருணாநிதிக்கு? மக்கள் தாங்களாகவே ஊர்ப்புறங்களிலிருந்து, சாதி சார்ந்த குடியிருப்புகளிலிருந்து வெளியேறி நகர்களிலும் புதிய குடியிருப்புகளிலும் கலந்து வாழத் தொடங்கி சாதியத்தின் ஒரு முகாமையான கூறு நொறுங்குவது பொறுக்காமல், தோழர்களின் துணையோடு நெசவாளர்களின் குடியிருப்பு என்றும் விசுவகர்மர்களின் குடியிருப்பு என்றும் தாழ்த்தப்பட்டோருக்கான குடியிருப்பு என்றும் இலவயங்களைக் காட்டி மீண்டும் சாதி சார்ந்த குடியிருப்புகளை அமைத்துக் கெடுத்து வைத்துள்ளனர். ஆட்சியாளர்களுக்கு வீடுகள் கட்டுவதில் கைக்கூலி. ஆளும் கட்சியினருக்கும் அதிகாரிகளுக்கும் தோழர்களுக்கும் மக்களிடமிருந்து ″அன்பளிப்பு″. புரட்சி ஓங்குக!

1953இல் தாலின் காலமானார். அவருக்குப் பின் உலகில் மூத்த பொதுமைத் தலைவரான தனக்குத்தான் உலகப் பொதுமை இயக்கத்தின் தலைமை கிடைக்கும் என்று மா சே துங் எதிர்பார்த்தார். ஆனால் தாலினுக்குப் பின் வந்த குருச்சேவ் தனக்கே அப்பொறுப்பை வைத்துக்கொண்டார். அத்துடன் தாலினை மனிதத் தன்மையைக் கைவிட்டு நாகரிகமற்ற முறையில் இழிவுபடுத்தினார். பாடம் செய்து வைத்திருந்த அவர் உடலை எடுத்துப் புதைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டார். இரண்டாம் உலகப் போரில் இட்லருக்கு இறுதி அடி கொடுத்ததிலும் அவரது படையெடுப்பிலிருந்து சோவியத்தின் தொழில் துறையைக் காப்பதற்காக ஐரோப்பாவை ஒட்டி மேற்கு எல்லை அருகில் செறிந்திருந்த தொழிலகங்களை முழுமையாகப் பெயர்த்தெடுத்து கிழக்கிலிருந்த தேசங்களுக்குக் கொண்டு சென்று சோவியத் நாட்டின் கட்டமைப்பை, உலகப் பொதுமை இயக்கத்தின் மதிப்பை நிலைநாட்டியவர் என்று உலகப் பொதுமை இயக்கத்தின் பெரும்பான்மையினர் தாலின் மீது பெருமதிப்பு வைத்திருந்தனர். எனவே குருச்சேவ் மீது உலகப் பொதுமை இயக்கத்தின் ஒரு கணிசமான பகுதியினர் வெறுப்புற்றனர். இதைப் பயன்படுத்தி மா சே துங் உருசியத் தலைமை மீது குற்றச்சாட்டுகளை வைத்தார். இவ்வாறு சோவியத்துக்கும் சீனத்துக்கும் இடையிலான முரண்பாடு வெளிப்படையாக வெடித்தது.

இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்த திட்டமிட்டது அமெரிக்கா. மா சே துங்கை ஒரு கடவுள் போலவும் பொதுமைச் சீனத்தை ஒரு தேவருலகமாகவும் தீட்டிக் காட்டியது. இந்தப் பரப்பலில் சியார்சுத் தாம்சன் போன்ற அறிவுசீவிகள் முன்நின்றனர். சீனத்தில் ஈரும் பேனும் மூட்டைப்பூச்சியும் பரத்தைமையும் முற்றாக ஒழிந்து போயின என்றெல்லாம் கூட நம் நாட்டுத் தாளிகைகள் செய்திகளைத் தாங்கி வந்தன ஒரு காலகட்டத்தில்.

இந்தக் காலகட்டத்தில் காதல் பாக்கள் யாத்துக் கொண்டிருந்த மா சே துங்கை அவரது அரசியல் எதிரிகள் கிட்டத்தட்ட சுற்றி வளைத்த நிலையில் அவர் தன் சொந்த மாநிலத்துக்குத் தப்பி ஓடினார். பண்பாட்டுப் புரட்சி என்ற பெயரில் தன் ஆதரவாளர்களைத் திரட்டித் தன் அரசியல் எதிரிகளை ஒடுக்கினார்.

இந்த நேரத்தில்தான் ஊழல் குற்றச்சாட்டால் பதவி இழந்த முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் நிக்சன் சீனத்துக்குச் செலவு மேற்கொண்டு மா சே துங்குடன் உரையாடினார்.

இந்தப் பின்னணியில் உருவானவர்கள்தாம் மூன்றாம் அணி என்று கூறப்படும் அறிவு ″சீவி″களும் நக்சலிய வடிவிலான ஆயுதம் ஏந்திய புரட்சியாளர்களும்.

முரண்பாடுகள் பற்றி ஏற்கனவே மா சே துங் எழுதியிருந்த கருத்துகளுக்கு முரணாக எப்போதும் அக முரண்பாடுகளே முதன்மையானவை என்ற கருத்து அவர் பெயரால் முன்வைக்கப்பட்டது. ″முதல்″ உலகப் போரின் பின்னணியில் உருசியப் புரட்சியும் இரண்டாம் உலகப் போரின் தொடர்சசியாக உருசிய உதவியுடன் சீனப் புரட்சி நடைபெற்றதும் ஆன உலகப் பொதுமை இயக்கத்தின் மீமுகாமையான பட்டறிவுக்கும் வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் பட்டறிவதற்கும் முற்றிலும் எதிரான முன்வைப்பாகும் இது.

இதன்படி ஏழை நாடுகளில் நிலவுவது அரை நிலக்கிழமையியமும் அரை முதலாளியமுமே; அவற்றை அழித்தால்தான் அதாவது உள் முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்தால்தான் பொதுமைக் குமுகத்தை அமைக்க முடியும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. எனவே புரட்சியாளர்களின் பணி உள்நாட்டிலுள்ள நிலக்கிழார்களையும் சிறு முதலாளிகளையும் அழித்தொழிப்பதுதான் என்று புகட்டப்பட்டது. இங்கிருந்த நிலக்கிழமையாளர்களும் சிறுதொழில் முனைவோரும் பெரும்பாலும் உயர்சாதி மற்றும் பிற்பட்ட சாதியினராக இருப்பர். அவர்களது குமுகியல் - பொருளியல் ஒடுக்குதல்களால் கொதிப்புற்றிருந்த அடித்தள மக்களிலிருந்து வெளிவந்த படித்த நல்லுணர்வுள்ள இளைஞர்களைத் திரட்டி அவர்கள் கையில் துப்பாக்கியையும் கொடுத்தது அமெரிக்காவின் ந.உ.மு. (நடு உளவி முகவாண்மை - சி.ஐ.ஏ.) சீனத்தின் வழியாக.

இந்தியாவில் சாரு மசூம்தார் தொடங்கி வைத்த நக்சலிய அமைப்பு, இலங்கையில் சனதா விமுக்தி பெரமுன, அர்சென்றீனாவில் ஒளிரும் பாதைகள் போன்றவை பெருமளவில் வளர்ச்சியடைந்தவை. உள்நாட்டு வளங்களில், மக்களில் வேர்கொள்ளாமல் அயல்விசையாகிய ந.உ.மு.வால் ஊட்டப்பட்டுச் செயற்பட்ட இந்த இயக்கங்கள் இயல்பாகவே தேசியங்களின் வலுமிக்க விசைகளிடமிருந்து அயற்பட்டே நின்றன. தேசிய விடுதலைக்குப் பின்னணியில் நிற்க வேண்டிய சிறு உடைமை, சிறு முதலாளிய விசைகளுக்கு எதிராக அதே தேசியத்திலுள்ள உணர்வும், அறிவும் நேர்மையும் ஆற்றலும் கொண்ட இளைஞர்களை நிறுத்தினர். அவர்களுக்குப் பதுங்க இடமில்லை. அவர்களுக்குக் காட்டப்பட்ட தாழ்த்தப்பட்டோரின் சேரிகள் வலுக்குறைந்தவை. அடுத்த வேளை கஞ்சிக்காக ஒடுக்குவோரின் வாயிலில் கையேந்தி நிற்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள். ஆக, மொத்தத்தில் வெட்ட வெளியில் அமைந்திருந்த கட்டபொம்மன் கோட்டை போன்று இந்த இளைஞர்களைஅவ்கள் நாட்டு காவல்துறைகள் தெரு நாய்களைப் போல் சுட்டுவீழ்த்தின. தமிழ்நாட்டுத் தமிழரசன், போலி மனித நேயத்தால் உயிரைப் பறிகொடுத்தார்.

தமிழகத்தில் இந்த இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பதற்காகத் திராவிட இயக்கத்திலிருந்தும் தனித்தமிழ் இயக்கத்திலுமிருந்து கவடில்லாத இளைஞர்களைப் பொறுக்கி எடுத்துக் களத்தில் விட்டுக் களையெடுப்பது போல் களைந்தனர்.

இலங்கையில் ஒன்றரை இலக்கம் இளைஞர்களை இரண்டு கட்டங்களில் இலங்கைக் காவல்துறையும், போர்ப்படையும் கூலிப்படைகளும் அழித்து ஒழித்தனர். அந்தக் காலகட்டங்களில் இந்தியப்படை இலங்கையின் பாதுகாப்புக்காகப் பயன்பட்டது. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் உலக மூன்றாம் அணியின் செயற்பாடு ஏழை நாடுகளின் தேசியத் தற்கொலை என்றே கூற வேண்டும்.

ஆயுதம் தாங்கி மட்டுமல்ல, பேனா தாங்கிய கூட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அறிவு″சீவி″கள் மார்க்சின் நூல்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டியே மார்க்சியத்துக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தனர். இருத்தலியம்(Existentialism), அமைப்பியம்(Structuralism), அயலாதல்(Alienation) போன்ற கருத்துகளை முன்வைத்தனர். தமிழகத்தில் எசு.வி.இராசதுரை, வெங்காளூரைச் சேர்ந்த தமிழவன் என்போர் இக்கருத்துகளைத் தங்கள் மொழிபெயர்ப்புகள், ஆக்கங்கள் மூலம் தமிழில் வழங்கினர். இது தவிர ந.உ.மு. மூலம் எண்ணற்ற தாளிகைகளுக்குப் பணம் வழங்கப்பட்டு அவை பாட்டாளியக் கோட்பாடுகளை இளைஞர்களுக்கும் படித்தவர்களுக்கும் இலவயமாக வழங்கிவந்தன. இந்த இதழ்களை நடத்தியோர் வேறு பணிகளை நாடாமல் இந்த அயல் பணத்தை நம்பித் திருமணம் செய்து பிள்ளை குட்டிகள் என்று ஆன நிலையில் திடீரென்று ஒரு நாள் அவர்களுக்குப் பணம் வழங்கிய ந.உ.மு.வின் நிழல் நிறுவனங்கள், ″இனி நீங்களே உங்கள் இதழை நடத்திக் கொள்ளுங்கள்″ என்று பண உதவியை நிறுத்திவிட்டன.

இதழாளர்களில் ஓரிரு விதிவிலக்குகளைத் தவிர பிறரனைவரும் திகைத்துத் திண்டாடிவிட்டனர். நல்ல வாய்ப்புகள் கிடைத்த ஓரிருவர் தவிர பிறரனைவரும் செய்வதறியாமல் தெருவுக்கு வந்த நிலையில் அவர்களை நாடித் ″தொண்டு நிறுவனங்களை″ அமைக்கும் பணியில் ந. உ.மு. ஈர்த்தது. அமெரிக்காவின் அட்டுழியங்களைத் திட்டுவதற்கென்று அமெரிக்காவே கூலி கொடுத்துக்கொண்டிருக்கிறது.

இந்தத் ″தொண்டு நிறுவனங்கள்″, குறிப்பாக பழஞ்சபை (கத்தோலிக்க), சீர்த்திருந்த சபைக் கிறித்துவம் சார்ந்தவை, பாட்டாளியக் கோட்பாட்டை இளைஞர்கள் நடுவிலும் பொதுவாக ஏழைகள் நடுவிலும் பரப்புவதைத் தங்கள் நடவடிக்கைகளில் முதன்மையான ஒன்றாகக் கொண்டுள்ளன. நாம் அக்டோபர் 2008 தமிழினியில் குறிப்பிட்டிருந்த மதுரை இறையியல் கல்லூரியின் தியாபலசு அப்பாவு என்ற பரட்டடைச் சாமியார் கலை வடிவங்களில் பாட்டாளியக் கோட்பாட்டைப் பரப்புவதைப் பணியாகக் கொண்டவர். ஏசுவே ஒரு பொதுமைப் போராளி என்பது இவர்களது பரப்பல்.

இந்தத் ″தொண்டு″ நிறுவனங்கள், சமய வடிவிலும் பிறவழியிலும் ″ உலகில் ஏழைகள் நிறைந்த பெரும் பணக்கார நாடான″ இந்தியாவின் மூலை முடுக்குகளெல்லாம் நுழைந்துள்ளன. 2004 திசம்பர் 26 ஆம் நாள் தமிழகத்தை உலுக்கிய சுனாமி எனப்படும் ஓங்கலைப் பேரழிவை அடுத்து கிறித்துவர்கள் அல்லாத மீனவர்கள் வாழ்ந்த பகுதிகளில் நுழைந்து படகு வைத்திருப்போருக்கும் அதில் பணியாற்றுவோருக்கும் இடையில் பகைமையை வளர்த்துவிட்டுள்ளது அமெரிக்க சார்பான தொழிற்சங்க அமைப்பு. இந்த அமைப்புதான் முதன்முதலில் ″அமைப்பு சாரா″த் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு நல வாரியங்கள் அமைப்பதில் தமிழக அரசுக்கும் ″இந்திய″, ″இந்திய மார்க்சிய″ பொதுமைக் கட்சிகளுக்கும் வழிகாட்டியது.

இப்பொழுது இந்த ″வழிகாட்டிகள்″ பரப்பிவரும் ″கொள்கை″ கடற்கரையிலுள்ள மீனவர்களுக்கு கடல்சார் பழங்குடிகள் என்றும் மலையில் வாழும் மக்களுக்கு மலைசார் பழங்குடிகள் என்றும் பெயரிட்டு அவர்களைப் பிற மக்களிலிருந்து பிரித்து அவர்களுக்குத் தனித் தேர்தல் தொகுதிகளும் சிறப்புரிமைகளும் வழங்க வேண்டுமாம். அவர்களுடைய வாழ்க்கைமுறை, அதாவது ″பண்பாடு″ பேணப்பட வேண்டும் என்பது, அதாவது அவர்கள் தங்கள் தொழில்நுட்பத்தையும் உள்நாட்டு மக்களுடனுள்ள உறவு முறைகளையும் மாறாமல் பேண வேண்டுமாம். என்னென்ன வகைப்பாடுகளாகப் பிரித்துத் தனித்தனிச் சிற்றறைகளில் நாட்டு மக்கள் அனைவரையும் பிரித்து வைக்கத் திட்டமிட்டுள்ளார்களோ தெரியவில்லை. வின் தொலைக்காட்சியில் டி.எசு.எசு.மணியின் நிகழ்ச்சிகளை ஊன்றிப் பாருங்கள் தெரியும்.

குமரி மாவட்டத்தில் மலைப்பகுதியில் வாழும் காணிக்காரர்களிடையிலிருந்து படித்து கிறித்துவத்தைத் தழுவி சாமியாராக இருக்கும் ஒருவர் ஓர் அரங்கில் உரையாற்றினார். அவர் தங்கள் மக்களின் சிக்கல்களை எடுத்துரைத்தார். அவர் தொண்டு நிறுவனம் மூலம் தம் சாதி மக்களுக்குத் ″தொண்டுகள்″ செய்து வருவதாகக் கூறினார். நான் கேட்டேன், உங்களைப் போலவே படித்து நல்ல உடையணிந்து சமநிலத்தில் வாழ்பவர்கள் போலவே அவர்களும் மேம்பட அவர்களைப் சமநிலத்துக்குக் கொண்டுவர ஏன் முயலக் கூடாது என்று. அவர் விடை கூறத் திணறிக் கொண்டிருந்த போது அரங்குக்குள் இருந்த மேல்சாதிப் பெரியவர்கள் ஒரே குரலாக, ″அவர்களது பண்பாடு என்னாவது?″ என்று எனக்கு விடையிறுத்தனர், இவர்கள் என்னவோ தங்கள் அப்பன்களும் பாட்டன்களும் கட்டிக்காத்த பண்பாடுகளை இம்மி பிசகாமல் கடைப்பிடிப்பது போலவும் இவர்களது மக்களும் பிறங்கடைகளும் இவர்கள் மேடைகளில் போற்றிவரும் "பண்பாடுகளை"க் காப்பதற்காகவே அமெரிக்காவுக்கும் ஆத்திரேலியாவுக்கும் குறைந்தது ஆண்டுக்கு இரண்டு முறை பறந்து திரும்புவதையும் போல.

ஆக, "பண்பாட்டைப் பாதுகாப்பது" என்ற இந்த முழக்கமும் சாதி உயர்வு பறிபோய்விடக் கூடாது என்ற தவிப்பின் வெளிப்பாடுதான். இது போன்று எத்தனையோ தனிப்பட்ட நிகழ்வுகளை நினைவுக்குக் கொண்டுவர முடியும்.


(தொடரும்)

முதலாளியமும் வல்லரசியமும் .....2

மார்க்சு, ஏங்கல்சு ஆகியோரைத் தொடர்ந்து வந்தவர் லெனின்.

உருசியா ஐரோப்பாவின் பிற்போக்கின் குப்பைத் தொட்டி என்று கூறப்பட்ட ஒரு நாடு. அங்கு சார் மன்னனின் கொடுங்கோன்மை தலைவிரித்தாடியது. ஐரோப்பிய முதலாளிகள் தங்கள் முதலாளிய வேட்டையை அங்கும் நடத்தினர். அதன் விளைவாக உருசியாவின் மேட்டுக்குடிகளிடையில் மக்களாட்சிக் கருத்துகள் பரவத் தொடங்கியிருந்தன. அது ஒரு கட்டத்தில் வன்முறை சார்ந்ததாக, சாரை ஒழித்துக்கட்டும் திட்டத்துடன் வளர்ந்து நின்றது. அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது. அதில் மரண தண்டனை அடைந்த இளைஞர்களில் ஒருவர் லெனினின் தமையன். இந்த நிகழ்ச்சி லெனினை அரசியல் களத்துக்குக் கொண்டு வந்ததில் முகாமையான பங்கேற்றது.

மக்களாட்சிக்காகப் போராடியவர்களிடையில் மார்க்சியம் பரவியது. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பரந்து கிடந்த இயக்கங்களை ஒன்று திரட்டி உருசிய குமுகியல் தொழிலாளர் மக்களாட்சிக் கட்சி என்ற அமைப்பு உருவானது. 1903இல் லண்டனில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி பெரும்பான்மையினர் கட்சி(போல்சுவிக்) சிறுபான்மையினர் கட்சி(மென்சுவிக்) என்று இரண்டாகப் பிரிந்தது. பெரும்பான்மை - சிறுபான்மை என்றது, அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் அணி பிரிந்து நின்ற போது இருந்த பேராளரின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைந்ததுதான். அமைப்புகளின் ஒட்டுமொத்த உறுப்பினர் எண்ணிக்கை இதற்குத் தலைகீழாக இருந்தது.

1905இல் இரண்டு பிரிவினரும் முன்வைத்த செயல்திட்டங்களை அலசி உருசிய குமுகியல் தொழிலாளர் மக்களாட்சி கட்சியின் இரு போர்த்தந்திரங்கள் என்ற நூலை லெனின் எழுதினார். அதில் இப்பொழுது நடக்க இருக்கும் புரட்சியில் முதலாளியருக்கே கூடுதலான நன்மைகள் கிடைக்கும்; ஆனால் பாட்டாளியருக்குத் தாங்கள் அமைப்பு வழியில் செயற்படுவதற்கான உரிமைகள் கிடைக்கும்; இது ஒரு புதுவகை மக்களாட்சி என்று அறிவித்தார்.

ஆனால் 1913இல் அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். உருசியாவில் முழுமையான முதலாளியம் உருவாகி விட்டது என்று நிறுவும் வகையில் உருசியாவில் முதலாளியத்தின் வளர்ச்சி என்ற நூலை எழுதினார். அவரது போட்டியாளர்களை எதிர்கொள்ள வேண்டி இந்த நிலைப்பாட்டை அவர் கொண்டிருக்கலாம்.

இந்தக் காலகட்டத்தில் லெனின் எழுதிய குறுநூல் ஒன்று மிக முகாமையானது. முதலாளியத்தின் மீஉயர்ந்த படிவம் வல்லரசியம் (Imperialsim is the Highest Form of Capaitalism) என்பது அதன் பெயர். மார்க்சின் காலகட்டத்துக்குப் பின் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள பெரும் தொழில் நிறுவனங்கள் ஒன்றிணைந்து கூட்டிணைவுகளை (Cartels) உருவாக்கி இருந்தன; அவற்றுக்கிடையில் உலகை மறு பங்குவைக்க அவை முயன்று கொண்டிருந்தன; இந்தப் போட்டியிலிருந்து ஓர் உலகப் போர் வெடிக்கும் என்று அவர் முன்கணித்தார். அது போலவே நடந்தது.

உலகப் போரைத் தொடங்கிய செருமனியின் வரலாறு பல பாடங்களைக் கொண்டது. உலகத்தின் கூரையில் விரிசல் என்ற கட்டுரையில் (தமிழினி, ஏப்பிரல், 2008) குறிப்பிட்டது போல் செருமன் மொழிபேசும் மக்கள் பல அண்டை நாடுகளுக்கிடையில் பிரிந்துகிடந்தார்கள். அவர்கள் வாழ்ந்த பகுதிகளை அந்தந்த நாடுகளிலிருந்து பிரித்து ஒரே நாடாக்குவதற்குப் பாடுபட்டவர் இளவரசர் பிம்மார்க்கு. ஆனால் இந்தியாவைப் போலவே வெவ்வேறு பகுதி மக்களுக்கிடையில் உணர்வு ஒன்றிய ஒற்றுமை உருவாகவில்லை. அதற்காக, பிம்மார்க்கு வேண்டுமென்றே பிரான்சின் அரசனாக இருந்த மூன்றாம் நெப்போலியனை அவன் அவையிலேயே இழிவுபடுத்தி ஒரு போரை உருவாக்கினார். அதன் மூலம் செருமனி உறுதியான நிலையடைந்தது.

இந்தப் பின்னணியில் நாடு பிடிப்பதில் இங்கிலாந்தும் பிரான்சும் உலகமெல்லாம் போரிட்டுக் கொண்டிருந்தன. இந்தப் போட்டியிலிருந்து பிரான்சைத் திசைதிருப்ப, பிரிட்டனின் தலைமை அமைச்சாராயிருந்த பிட்சு என்பவர் செருமனிக்குப் பணம், படைக்கலன்கள், கருத்துரைகளை வழங்கி பிரான்சின் மீது ஏவிவிட்டார். நீண்டநாள் நடைபெற்ற இந்தப் போருக்காகப் பிரான்சு வெளியே இருந்த தன் படைப் பிரிவுகளைத் திரும்ப அழைக்க வேண்டியதாயிற்று. இருப்பினும் இந்தியாவை நீக்கிவிட்டுப் பார்த்தால் இங்கிலாந்துக்கு அடுத்தபடி கூடுதலான குடியேற்ற நாடுகளைக் கொண்டிருந்தது பிரான்சுதான். ஐரோப்பாவில் செருமனிக்கும் பிரான்சுக்கும் போர் முடிந்தபோது உலகையெல்லாம் ஐரோப்பிய நாடுகள் தமக்குள் பங்கு போட்டு முடித்துவிட்டன. தான் இங்கிலாந்தால் கொடுமையாக, இழிவாக ஏமாற்றப்பட்டுவிட்டதைச் செருமனி அப்போதுதான் உணர்ந்தது. இந்தச் சூழலில்தான் மாக்சுமுல்லர் மனித இனத்துக்கே கேடு பயக்கும் தன் ஆரிய இனக் கோட்பாட்டை முன்வைத்தார். ஆரியர்களின் உடலமைப்பு என அவர் விரித்துரைத்தது முழுமையாகச் செருமானியரை மனதில் கொண்டே ஆகும். இதைப் பற்றிப் பிடித்துக்கொண்டுதான் உலகில் உள்ள தூய்மையான, கலப்பற்ற ஆரிய இன மக்கள் செருமானியரே, அவர்களே, உலகை ஆளத் தகுந்தவர்கள் என்ற இனவெறி அரசியலை இட்லர் உருவாக்கினார்.

ஆக உலகப் போர் உலகை மறுபங்கீடு செய்வதையும் இங்கிலாந்தைப் பழிவாங்குவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

தன் வினை தன்னைச் சுடும் என்பதற்கேற்ப, தன் நாட்டை ஒற்றுமைப்படுத்த பிரான்சுடன் பகைமை உணர்வை வளர்த்த பிம்மார்க்கின் செயலால் செருமனி ஒரேயொரு குடியேற்ற நாடுகூட பெறாமல் போனது. செருமனியைப் பிரான்சின் மீது ஏவிவிட்டுத் தான் உருவாக்கிய பேரரசை அதே செருமனியின் தாக்குதலில் நிலைகுலைந்த இங்கிலாந்து இழந்து நிற்கிறது. தான் உருவாக்கிய உலகப் போரின் இறுதியில் தானே இருகூறாக உடைந்து அரைநூற்றாண்டு காலம் செருமனி துண்டுபட்டுக் கிடக்க வேண்டி வந்தது.

உலகப் போரின் உச்ச கட்டத்தில் உருசியப் புரட்சி நடைபெற்றது. போரில் உருசியாவை ஈடுபடுத்திய சார் மன்னனால் படைவீரர்களுக்குத் தேவையான உணவு, உடை முதலியவற்றை வழங்க முடியவில்லை. எனவே போர்க்களத்தைக் கைவிட்டு ஓடிவந்த படைவீரர்கள் திரும்பிவந்து நாட்டினுள் நடமாடிக்கொண்டிருந்தனர். நாட்டில் வறுமையும் பிணியும் தாண்டவமாடின. இந்த நிலையில் ″சிறுபான்மை″க் கட்சியினர் புரட்சி செய்து சாரைத் தளை செய்து மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டனர். இது 1917ஆம் ஆண்டு பிப்ருவரியில் நடைபெற்றதால் இதனை பிப்ருவரிப் புரட்சி என்பர். புரட்சி தொடங்கிய போது லெனின் சாரின் ஒடுக்குமுறையிலிருந்து தப்பி சுவிட்சர்லாந்தில் இருந்தார். அவர் அங்கிருந்து உருசியாவுக்குச் சென்றார். அவர் பாதுகாப்பாகச் சென்று சேர்வதற்குச் செருமனி ஏற்பாடு செய்தது என்று வரலாறு கூறுகிறது. அங்கு புரட்சி நடந்து அரசின் வலிமை குறைந்தால் தன் படையெடுப்பு எளிதாக இருக்கும் என்பது செருமனியின் கணிப்பு.

உருசியா சென்றடைந்த லெனின் சிறுபான்மைக் கட்சி அரசிடம் சில திட்டங்களை முன்வைத்தார். புதிய அரசியலமைப்பு அவை கூட்டப்பட வேண்டும், புரட்சியை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளான சோவியத்துகளுக்கு முழுமையான ஆட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்பவை முகாமையான திட்டங்கள். இவற்றை அரசு ஏற்காவிட்டால் புரட்சி நடத்த வேண்டும் என்றார். இதுபற்றி ஆய்ந்து முடிவு செய்வதற்காக 1917ஆம் ஆண்டு அக்டோபர் 26
[1] ஆம் நாள் அனைத்து சோவியத்துகளின் பேராளர்களின் குழு கூட இருந்தது. ஆனால் லெனின் தன் கட்சியினருக்கு ஓர் அறிவுரை வழங்கினார். 25 ஆம் நாள் இரவிலேயே புரட்சியை நடத்திவிட வேண்டும். அதற்கு முன்பு நடந்தால் சோவியத்துக்களின் பேராளர்கள் புறப்பட்டு வரமாட்டார்கள். 26ஆம் நாள் விடிந்துவிட்டால் பேராளர்கள் வந்து சேர்ந்துவிடுவர். அப்போது அவர்கள் இசைவு இன்றி புரட்சி நடத்த முடியாது என்று கூறினார். எனவே 25 ஆம் நாள் இரவே அமைச்சர்களைத் தளையிட்டு பெரும்பான்மைக் கட்சியைச் சேர்ந்த சிறு எண்ணிக்கையிலான செயின்று பீட்டர்சுபர்க்குத் தொழிலாளர்களும் போர்க்களத்திலிருந்து திரும்பிவந்த படைவீரர்களும் கொண்ட ஒரு குழு கிரெம்ளின் அரண்மனையைக் கைப்பற்றியது. அடுத்த நாள் சோவியத்துகளின் பேராளர் கூட்டத்தில் புரட்சி நடந்துவிட்டது; நீங்கள் உங்கள் ஊர்களுக்குச் சென்று புரட்சியைத் தொடர்ந்து நடத்துங்கள் என்று அறிவுரை கூறப்பட்டது. சிறுபான்மைக் கட்சியினருக்கு பேரவையில் பெரும்பான்மை இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்து உருசியா முழுவதும் பழமையாளர்களுக்கும் புரட்சியாளருக்கும் போர் நடந்து 1919இல் முடிவுக்கு வந்தது. இந்த வகையில் இது ஓர் ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்த புரட்சி என்றே வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

ஆட்சி கைக்கு வந்த பின் சிறுபான்மைக் கட்சி அரசிடம் கேட்டபடி அரசமைப்புச் சட்டப் பேரவை கூட்டப்படவில்லை. லெனினின் வரைவான சட்டமே நடைமுறைக்கு வந்தது.

உருசியப் புரட்சி பாட்டாளியரின் புரட்சி என்று கூறப்பட்டாலும் ″பாட்டாளியரின் முன்னணிப் படையாகிய″ பொதுமைக் கட்சியின் வழிகாட்டலிலும் தலைமையிலும் நடந்த தேசியங்களின் விடுதலைப் போரின் வடிவமாகவே அது இருந்தது.

உருசியாவின் நிலவுடைமைகள் அனைத்துமே மாருசியா எனப்படும் நடுப் பகுதியின் உயர்குடியினரின் சொத்துகளாகவே இருந்தன. ஆங்காங்குள்ள மக்கள் அந்நிலங்களில் பயிரிட்டுத் தங்கள் ஆண்டைகளான மாருசியர்களுக்கு வாரம் அளக்கும் கொத்தடிமைகளாகவே இருந்தனர். மாருசியா தவிர்த்த பெரும்பாலான தேசங்களும் அவற்றுக்கு, ″பிரிந்து செல்லும் உரிமையுள்ள தன்னாட்சி″ வழங்குவதாக வாக்குறுதி அளித்துத்தான் அத்தேசியங்களின் குடிமக்களைப் புரட்சியினுள் இட்டுவந்தார் லெனின். அந்த வகையில் உருசியாவில் நடைபெற்றது நிலக்கிழமை விளைப்பு முறையை எதிர்த்து நடந்த முதலாளியப் புரட்சியே. அதைத் தொடர்ந்து நிலங்கள் உழவர்களுக்கு உடைமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த உடைமையாளர்கள் தமக்குள் ஒப்புக்கொண்டோ மூலதனத்தால் வாங்கப்பட்டோ இணைந்து பெரும் பண்ணைகள் ஆகியிருக்க வேண்டும். பெரும்பான்மை முன்னாள் உழவர்களும் அப்பண்ணைகளில் கூலித் தொழிலாளர்களாக மாறி இருக்க வேண்டும். கூலித் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பண்ணைகளைத் தங்கள் கூட்டு ஆளுமையில் கொண்டுவந்திருக்க வேண்டும். இந்த இயல்பான மாற்றத்துக்கு இடம் தராமல் அதிகாரிகளும் கட்சியினரும் கட்டாயப்படுத்தி அல்லது பேசி இணங்கவைத்துக் கூட்டுப் பண்ணைகளையும் கூட்டுறவுப் பண்ணைகளையும அமைத்து அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். முதலாளியச் சுரண்டலை விடக் கீழான ஊழல் சுரண்டல் உருவானது. தேசிய மக்கள் போராடினர். அது ஒடுக்கப்பட்டது. இவை நிகழ்ந்த போது லெனின் நோய்ப் படுக்கையில் இருந்ததால் அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை.

சீனத்திலும் ″புதிய சனநாயகப் புரட்சி″, ″ஒன்றிய கூட்டணி″ என்றெல்லாம் பேசினாலும் இறுதியில் அரசின் ஊழல்தான் ஆட்சி செய்தது. இவ்வாறு, உருசியாவின் ஊர்ப்புறப் பொது நிலஉடைமை அடிப்படையிலான பழங்குமுகத்திலிருந்து நேரடியாக பொதுமைக்கு வரமுடியுமா என்ற மார்க்சின் குழப்பத்துக்கு வர முடியாது என்ற விடை உருசியாவிலிருந்தும் முதலாளியத்துக்குள் நுழையாமல் பொதுமைக் குமுகத்துக்குச் செல்ல முடியாது என்று அவர் முதலில் சொன்னதற்குச் சான்று உருசியாவுடன் சீனத்திலிருந்தும் கிடைத்துள்ளன.

முதலாளிய உருவாக்கமும் வல்லரசியமும்:

இயற்கையான வரலாற்று ஓட்டத்தில் உருவானது ஐரோப்பிய முதலாளியம். ஆனால் இதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது ஐரோப்பா உலகின் பிறநாடுகளின் மீது செலுத்திய வல்லரசிய மேலாளுமை. முதலாளியத்துக்குத் தேவையான மலிவான மூலப்பொருட்களையும் மேலும் மேலும் பெருகிக் கொண்டிருந்த பண்டங்களுக்குச் சந்தையையும் ஐரோப்பாவின் குடியேற்ற நாடுகள் தந்தன. ஆனாலும் முதலாளிய வளர்ச்சி ஐரோப்பியப் பெருங்கொண்ட மக்களுக்கும் குடியேற்ற நாடுகளின் மக்களுக்கும் நலம் பயப்பதாக இல்லை.

பொதுவாக ஒரு மனிதன், தன் உழைப்பினால், தன்னையும் தன் குடும்பத்தையும் பராமரிப்பதற்குத் தேவையானவற்றைப் போல் பலமடங்கு பண்டங்களைப் படைக்கும் ஆற்றல் உள்ளவன். மேம்பட்ட தொழில்நுட்பங்களால் இந்தப் படைக்கும் ஆற்றல் மேலும் உயர்கிறது. அவன் தேவைக்கு மிஞ்சியதை, முதலாளியத்துக்கு முந்திய நிலக்கிழமைக் குமுகத்தில் வாணிகனும் கந்துவட்டிக்காரனும் பறித்துக்கொள்கின்றனர். நம் நாட்டில் கூட்டுறவுகள், அரசுடைமை, வங்கிக் கடன்கள், ஊழல் ஆகியவை மூலம் ஆட்சியாளர்கள் பறித்துக்கொள்கின்றனர். முதலாளியத்தில் முதலாளி தன் தொழிலகத்தினுள் பறித்துக்கொள்கிறான். இந்த மிகுதிப் பண்டத்தை, அதன் மதிப்பாகிய மிகுதி மதிப்பை, அதாவது மீத்த மதிப்பைப் பெற வேண்டுமானால் அப்பண்டங்களை விற்க வேண்டும். பெரும்பாலான மக்கள் பாட்டாளிகளாகிவிட்ட முதலாளியக் குமுகத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் கூலியைக் கொண்டு இந்த மிகுதிப் பண்டங்களை வாங்க பெரும்பான்மை மக்களைக் கூலித் தொழிலாளர்களாகக் கொண்ட அக்குமுகத்தால் முடியாது. எனவே பண்டங்கள் தேக்க மடையும். எனவே தொழிலகங்கள் விளைப்பைக் கட்டுப்படுத்தும். மக்களின் வாங்குதிறன் இன்னும் குறையும். ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட எல்லாத் தொழிலகங்களும் மூடப்படும். பாட்டாளிகளின் பட்டினிச் சாவுகள் பெருகும். எங்கும் பண்டங்களின் தேக்கம்; வாங்கத்தான் மக்களிடம் பணம் இருக்காது.

விளைப்பு நின்று போனதால் மேலடுக்கிலுள்ள மக்களின் நுகர்வால் பண்டங்களின் தேக்கம் சிறிது சிறிதாகக் குறையும். மீண்டும் சிறுகச் சிறுக தொழிலகங்கள் திறக்கும். வாங்கும் திறன் மீளும். மீண்டும் விளைப்பும் வளமும் உச்சத்துக்குச் சென்று மீண்டும் இறங்கும். இது பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மீண்டுகொண்டிருந்தது. இவற்றை மாபெரும் பின்வாங்கல்கள் என்றும் மாபெரும் பொருளியல் நெருக்கடிகள் என்றும் கூறுவர். இந்த நெருக்கடிகளிலிருந்துதான் பாட்டாளியப் புரட்சிகள் நடைபெறும் என்று மார்க்சும் ஏங்கல்சும் எதிர்பார்த்தனர். ஆனால் அடிமை நாடுகளைச் சுரண்டிய செல்வம் அங்கு பெரும் சிக்கல்கள எழாமல் பார்த்துக்கொண்டது. ஆனால், மார்க்சு, ஏங்கல்சு, லெனின் ஆகியோர் தொழிலாளர் தலைவர்களைக் குறை கூறினர்.

20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளில் சான் மேனார்டு கெயின்சு என்பவர் இந்த பின்வாங்கல் நச்சுச் சூழற்சியை முடிவுக்குக் கொண்டுவர ஒரு திட்டத்தை அறிவித்தார். அது மார்க்சின் மீத்த மதிப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் அதன் அடுத்த கட்டத்தினுள் பொருளியல் சிந்தனையைக் கொண்டுசெல்வது.

மார்க்சு பண்ட விளைப்பு சார்ந்த தொழில்களையும் அது சார்ந்து உருவாகும் தேக்க நிலைமையையும் மட்டுமே கூறினார். கெயின்சு பண்ட விளைப்பு சாரா, அதே நேரத்தில் பண்டங்களை நேரடியாகவும் கூலி பெறும் தொழிலாளர்களின் வாங்கும் திறனைப் பெருக்குவதன் மூலம் மறைமுகமாகவும் இருவழிகளிலும் நுகர்வை உருவாக்கும் அடிப்படைக் கட்டமைப்புகளில் அரசு பணத்தாள்களை அச்சிட்டு முதலிட வேண்டும் என்று கூறினார். அதாவது அதுவரை இயற்கை தன் வழியே செல்லட்டும் என்று பொருள்படும் laissez - faire என்ற அணுகலைக் கைவிட்டு அரசு தலையிட வேண்டும் என்றார்.

இதனை ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. செருமனியின் இட்லர் ஏற்றுச் செயற்பட்டிருக்கலாம். 1919இல் முடிவுற்ற″முதல்″
[2] உலகப்போரின் முடிவில் செருமனி மீது விடுத்த பொருளியல் தாக்குதல்கள் அந்நாட்டு மக்களைச் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாக்கின. வீசி எறிந்துவிட்ட செருப்புகளிலிருந்த தோலை வேகவைத்து உண்ணும் நிலையில் அவர்கள் இருந்தனர் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்தச் சூழலில்தான் இட்லரின் நடவடிக்கைகளுக்கு ஒரு தகுந்த களம் அங்கு அமைந்தது. கெயின்சின் கோட்பாடுகளை நடைமுறைப் படுத்தியிருக்கவில்லையாயின் மிகக்குறுகிய காலத்தில் உலக நாடுகளை அச்சுறுத்தத்தக்க ஒரு வலிமையையும் வளர்ச்சியையும் அந்நாடு எய்திருக்க முடியாது.

கெயின்சின் கோட்பாடு வல்லரசு வடிவம் எடுத்துவிட்ட முதலாளியத்தினால் உருவாகும் நெருக்கடிகளை ஒரு தேசிய முதலாளியத்தால் தீர்க்க முடியும் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டுகிறது. தொழில்கள் இயங்குவதற்குத் தேவையான மூலப்பொருட்களே இல்லாமல் மாபெரும் பொருளியல் வல்லரசாக வளர்ந்து நிற்கும் சப்பானைப் போல் அல்லாமல் அனைத்து வளங்களும் உள்ள இந்தியா, தமிழ்நாடு போன்ற பகுதிகளில் எந்த வெளி உதவியும் இன்றிப் பொருளியல் நெருக்கடிகளை உருவாக்காத ஒரு தேசிய முதலாளியத்தை உருவாக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளது.

அமெரிக்காவிலும் அதைத் தொடர்ந்து பிற பணக்கார நாடுகளிலும் உருவாகியிருக்கும் பொருளியல் நெருக்கடிகளால் மிகப் பாதிப்படைய இருப்பவை பாக்கித்தானம், இந்தியா, சீனம் போன்று பெருமளவு ஏற்றுமதி சார்ந்து, அத்தனாலேயே தாம் வளர்ந்துவிட்டதாகக் கொட்டம் அடிக்கும் நாடுகள்தாம் எனபது சரியான கணிப்புதான். இந்தியாவின் மொத்த வாணிகத்தில் எற்றுமதி 40 நூற்றுமேனிக்கும் மேல் என்றொரு கணிப்பு கூறுகிறது. இந்த நெருக்கடியை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?

நாட்டிலுள்ள அனைவரின் வாங்குதிறனை உயர்த்தி இங்கு உருவாகும் அனைத்துப் பண்டங்களுக்கும் பணிகளுக்கும் இங்ககேயே சந்தையை உருவாக்குவதுதான் ஒரே வழி. அனைவரின் வாங்குதிறனை உயர்த்த நம்நாட்டின் பொருளியல் வளர்ச்சி கடற்கரை முதல் மலை முகடு வரை இடைவெளி இன்றிப் பரவலாக வேண்டும். அத்தகைய, மூலப்பொருள் இறக்கிமதி தேவைப்படாத, சந்தைக்காக ஏற்றுமதியை நம்பி இருக்காத தேசிய முதலாளியம்தான் ஒரே வழி.

தேசிய முதலாளியத்தை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும்?


(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1] புரட்சிக்கு முன்பு உருசியாவில் சூலியன் ஆண்டுமுறை நடப்பிலிருந்தது. புரட்சிக்குப்பின் அது கிரிகோரியன் ஆண்டு முறைக்கு மாற்றப்பட்டது. பார்க்க, தமிழன் கண்ட ஆண்டு முறைகள், தமிழினி, பிப்ருவரி 2008 எனவே புதிய ஆண்டுமுறையின் படி இது நவம்பர் 7 ஆனது.

[2] நடைபெற்றது இரண்டு உலகப் போர்கள் அல்ல, ஒன்றேதான் என்கிறார் Dynamic Europe நூலின் ஆசிரியர், C.F.Strong. முதல் உலகப் போர் பிரான்சில்தான் முடிந்தது அது முதல் கூட்டம். இரண்டாம் கட்டத்தில் செருமனிக்குள் தேசப்படைகள் நுழைந்ததுதான் போரின் இறுதி என்கிறார் அவர் தன் நூலில்.

முதலாளியமும் வல்லரசியமும் .....1

... நாளது சின்மையும் இளமையது அருமையும்
தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும்
இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும்
அன்பினது அகலமும் அகற்சியது அருமையும்
ஒன்றாப் பொருள்வாயின் ஊக்கிய பாலினும்.....
தொல். பொருள்.41

வாழ்க்கையின் எட்டுவகை அடிப்பபடைகளையும் புறக்கணித்துவிட்டுப் பொருள் சேர்ப்பது ஒன்றையே குறியாகக் கொண்டவர்களைப் பற்றியது மேலே தரப்பட்டுள்ள நூற்பா பகுதி

"Capitalism is the astounding belief that the most wickedest of men will do the most wickedest of things for the greatest good of everyone."
-John Maynard Keynes, Economist and founding father of IMF and World Bank

ஒவ்வொருவரினதும் மீப்பெரிய நன்மைக்காகவே மீக்கொடிய வஞ்சகர்கள் மீக்கொடிய வஞ்சகச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்ற திகைக்கவக்கும் நம்பிக்கைதான் முதலாளியம் என்பது மேலே தரப்பட்டிருக்கும் ஆங்கில மேற்கோளின் பொருள்.

அமெரிக்க அரசு 70,000 கோடி (700பில்லியன், 1000 மில்லியன் 1 பில்லியன். ஒரு மில்லியன் 10 இலக்கம்; 1 பில்லியன் = 100 கோடி) டாலர் கொடுத்து அந்நாட்டின் மிகப்பெரிய பண நிறுவனங்களை அவற்றின் செல்லாக்கல் சிக்கல்களை ஓரளவுக்குச் சீரமைப்பதற்கான ஒரு முன்வரவை அதன் பேராளர் அவையில் முன்வைத்தது. ஆனால் அதனைப் பேராளர் அவை ஒப்பவில்லை

இந்தச் சிக்கல் தொடங்கியதே மீளச் செலுத்தும் திறன் உறுதிப்படாத இனங்களை ஈடாகப் பெற்று கடன் கொடுத்ததிலிருந்து உருவானது. அமெரிக்க ஏழை அடித்தட்டு மக்களுக்கு வீடமைப்புக் கடன் வழங்குவதற்கென்று பண வழங்கு நிறுவனங்கள் ஈடாகப் பெற்ற ஈட்டு ஆவணங்களைப் பணம் கொடுத்து இந்தப் பெரும் நிறுவனங்கள் வாங்கின. ஆனால் வீடு கட்டியவர்களால் கடன் தவணைகளைச் செலுத்த முடியவில்லை. அதனால் நிறுவனங்களில் பணம் கையிருப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. மேற்கொண்டு கடன்கள் கொடுத்து வட்டியும் பெற முடியாத நிலைக்கு வங்கிகளை இது தள்ளியது. ஊழியர்களுக்குச் சம்பளம் முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை வழங்குதல் என்று நெருக்கடிகள் உருவாயின.

இதில் ஒரு விந்தை என்னவென்றால், சரியாக ஓராண்டுக்கு முன்னால் (2007இல்) இந்த நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் ஊழியர்களுக்கு இந்த ஆவணங்களைக் கொள்முதல் செய்ததை ஆதாயமாகக் காட்டி 3600 கோடி டாலர்கள் அளவுக்கு நல்லூதியம்(போனசு) வழங்கியுள்ளன. பொருளியல் அடிப்படை விதிகளுக்கு இது பொருந்திவரலாம். நிறுவனம் செலுத்திய தொகையை விட அதற்கு ஈடாகக் கிடைத்த வீடுகளின் மதிப்பு கணிசமான மிகுதியைக் கொண்டிருக்க வேண்டும். இந்த வீடுகளாகிய சொத்துகளை விற்று முதல் கைக்கு வந்தால்தான் பண நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட முடியும். ஆனால் அங்கு ஏற்கனவே உருவாகிவிட்ட பொருளியல் மந்த நிலையில் இது இப்போது நடைபெற வாய்ப்பில்லை.

இப்போது நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் மதிப்பு இறங்கிப் போயின. எனவே அப்பங்குகளில் முதலிட்ட எளிய மக்களும் தங்கள் ஓய்வுகாலப் பயன்களை முதலிட்ட முதியவர்களும் பெரும் இழப்புக்குள்ளாகியுள்ளனர். கடனை வாங்கி வீடுகட்டி, கொஞ்சம் கடனைத் திருப்பியும் செலுத்திய அடித்தள மக்கள், அமெரிக்காவில் உருவாகி வரும் தொழில் மந்தத்தால் வேலைகளை இழந்ததாலும் உயர்ந்துவரும். விலைவாசியால் பணத்தை மிச்சம் பிடிக்க முடியாததாலும் கடன் தவணைகளைச் செலுத்த முடியாமலே போனதால் கட்டிய வீட்டையும் செலுத்திய தவணைப் பணத்தையும் இழந்து நிற்கின்றனர்.

அமெரிக்காவில் பணப்புழக்கத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் அங்கு நுகர்வு மிகவும் குறைந்துள்ளது. எனவே அமெரிக்காவுக்கு பண்டங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளிலும் பொருளியல் நெருக்கடிகள் தோன்றியுள்ளன. அமெரிக்காவில் இந்தக் கடன் விழாக்கள் நடந்த காலத்தில் அங்கு முதலிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் பொருளியல் நெருக்கடிகள் தோன்றியுள்ளன. அங்குள்ள அரசுகள் நலிவுற்ற வங்கிகளை அரசுடைமையாக்கி பங்கு முதலீட்டாளர்களைப் பாதுகாத்துள்ளன. ஆனால் அமெரிக்கா, இது போன்ற நிகர்மை(சோசலிச) நடவடிக்கைகளைத் தவிர்ப்பதைக் கொள்ளையாகக் கொண்ட, கட்டற்ற, அரசின் தலையீடற்ற பொருளியலைக் கடைப்பிடிக்கிறதாம்; எனவே நலிவுற்ற பண நிறுவனங்களின் பங்குகளை வாங்கி முதலீட்டாளர்கள் நலன்களைக் காப்பதற்குப் பகரம் செல்லாமல் போன ஈட்டுப் பத்திரங்களை விலை கொடுத்து வாங்கி வங்கிகளுக்குத் தற்காலிக மீட்பு வழங்கப்போகிறதாம். முதலீட்டாளர்களுக்கும் வீடுகட்டிய அடித்தள மக்களுக்கும் பயன்படாத திட்டம் என்றுதான் கட்சி வேறுபாடுகளைக் கைவிட்டு அமெரிக்கப் பேரவைப் உறுப்பினர்கள் இத்திட்டத்தை ஏற்க மறுத்துள்ளனர்.

இதைக் காட்டி முதலாளியம் தோற்றுவிட்டது என்றும் படைப்பாக்கமுள்ள முதலாளியம் வேண்டும் என்றும் கட்டுப்பாடற்ற முதலாளியம் செத்துவிட்டது, கிழட்டு முதலாளியம்தான் உயிருடன் இருக்கிறது என்றும் பல்வேறு வகையான திறங்கூறல்கள் வெளிப்பட்டுள்ளன.

மனித வரலாற்றில் பெரும்பாலான அறிவியல் - தொழில் நுட்பங்களும் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளின் பல்வகை வடிவங்களும் பண்பாட்டுக் கோலங்களும் இயற்கையில் மனிதக் குமுகத்துக்கு வெளியிலும் குமுகத்தினுள்ளும் நடைபெறும் நிகழ்வுகளிலிருந்து இறுத்தெடுத்து பதப்படுத்தி மேம்படுத்தப்பட்டவையே. அவ்வாறு ஐரோப்பாவில் 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் உருவானதே முதலாளியம்.

சிலுவைப் போர்களால் சோர்ந்திருந்த ஐரோப்பாவில் துருக்கியர்கள் புகுந்து ஆதிக்கம் பெற்றதும் காண்டாண்டிநோபுளைக் கைப்பற்றியதால் ஐரோப்பியரின் கீழைநாட்டு வாணிகம் பறிபோனதும் போப்பரசரின் சமய அடக்குமுறைகளுக்கு எதிராக உருவான சீர்திருத்த இயக்கங்களும் ஐரோப்பிய மூலதனத்தைக் கட்டவிழ்த்துவிட்டு அறிவியல் வெளிச்சத்தில் உலகை வலம் வர வைத்தது. அதில் கிடைத்த செல்வப் பெருக்கு அறிவியல் - தொழில்நுட்பங்களை வளர்த்து வாணிகத்திலும் படைவலிமையிலும் ஐரோப்பாவைப் பூதமாக வளர்த்தன. இவ்வாறு உருவான முதலாளியம் பண்டைய இருண்ட கால ஐரோப்பியப் பண்பாட்டிலிருந்து முற்போக்குடைய ஒரு குமுகத்தை உருவாக்கியது என்பதை காரல் மார்க்சும் பிரடரிக் ஏங்கெல்சும் தாம் வடித்த பொதுமைக் கட்சியின் கொள்கை அறிக்கையில் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார்கள்.

பொதுவாக, தனியுடைமையின் அனைத்து வடிவங்களையுமே முதலாளியம் என்ற வகைப்பாட்டினுள் வைத்து நாம் பார்க்கிறோம். ஆனால் பொருளியல் கண்ணோட்டத்தில் முந்தியல் பொதுமை(Primitive Communism) என்று அநாகரிக மனிதன் எனும் கட்டத்தில், உடைமைகளைக் குழு முழுவதற்குமான பொதுச் சொத்தாக வைத்திருந்த நிலைமையிலிருந்து தனி மனிதர்களுக்குச் சொத்துகளுடன் அடிமைகள் என்ற நிலை வந்ததிலிருந்து தனியுடைமை தொடங்குகிறது. முதலில் அடிமைக் குமுகம் அடுத்து நிலக்கிழமைக் குமுகம் அடுத்துத்தான் முதலாளியக் குமுகம் என்று மார்க்சு வரையறுத்தார்.


நமக்குத் தெரிந்த வரலாற்றில் கிரேக்கத்திலும் உரோமிலும் அடிமை முறை இருந்தது. உரோமிலிருந்த அடிமைகள் கிளர்ந்தெழுந்து கிறித்துவ சமயம் நிலைப்பட்டபின் நிலக்கிழமைக் குமுகம் உருவானது. முன்னாள் அடிமைகளில், மேனிலை அடைந்தவர்கள் தவிர ஏனையோர் கொத்தடிமைகள், அதாவது குத்தகை உழவர்கள் ஆனார்கள்.

நிலக்கிழார் ஆகிய படைமானியத் தலைவர்களுக்கு நிலங்கள் சொந்தமானவை. அவர்களது நிலங்களில் உழுது பயிரிட்டு நிலக்கிழார்களுக்கு உரிய பங்கைக் கொடுத்துவிட்டு எஞ்சியதில் வாழ வேண்டியது கொத்தடிமையாகிய உழவனின் நிலை. அந்த நிலத்திலிருந்து வெளியேற அவனுக்கு உரிமை கிடையாது. இந்த கொத்தடிமைகளின் கிளர்ச்சியிலிருந்துதான் பிரெஞ்சு புரட்சி நிகழ்ந்தது.

இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவில் குடியேறிய மக்களிடமிருந்து பெற்ற உணவுத் தவசங்களால் இங்கிலாந்தில் வேளாண்மை தேவையற்றுப் போய்விட்டது. எனவே அங்கிருந்த நிலங்களில் பயிரிட்டுக்கொண்டிருந்த உழவர்களை வெளியேற்றி வேலியிட்டு பெரும்பண்ணைகளை உருவாக்கினர் அங்கிருந்த மேட்டுக்குடியினர். அதில் கம்பளி ஆடுகளை வளர்த்தனர்.

அங்கிருந்து வெளியேறிய மக்கள் நகரங்களில் உருவாகிக் கொண்டிருந்த தொழிற்சாலைகளில் கூலிகளாகச் சேர்ந்தனர். அவர்கள் பட்ட துன்பங்களை மார்க்சு தன் மூலதனம் முதல் மடலத்தில் விளக்கியுள்ளார்.

பிரான்சில் குத்தகை முறை ஒழிக்கப்பட்டது. உழவர்களுக்கு, அதாவது கொத்தடிமைகளாகிய குத்தகைப் பயிர் செய்வோருக்கு நிலம் சொந்தமானது. இப்போது நிலத்தை விற்றுவிட்டு அவர்கள் வெளியேறலாம். இது சிறு சிறு உடைமைகளாக, மூலதனம் போன்று எந்த வலிமையும் இல்லாத, கையாலாகாத கொத்தடிமைகளிடமிருந்த நிலங்கள் புதிய தொழில்நுட்பத்தில் செயற்படும் முதலாளியப் பெரும்பண்ணைகளாக மாற வழியமைத்தது. வெளியேறிய முன்னாள் கொத்தடிமைகள் இப்போது தொழிலகக் கூலிகளாக மாறினர். வெளிநாட்டு வாணிகத்தில் செல்வம் சேர்த்திருந்தவர்கள் பண்ணை முதலாளிகளாயினர்.

இவ்வாறுதான் தனி உடைமையின் ஒரு வடிவமான நிலக்கிழமையிலிருந்து அதைவிட மேம்பட்ட வடிவமான முதலாளியம் உருவானது.

இந்த முதலாளியத்தில் புதிய தொழில்நுட்பங்களும் கருவிகளும் புகுத்தப்பட்டு மிகுந்த விரைவுடன் பண்டங்கள் பெருமளவில் படைக்கப்பட்டன. அவற்றுக்கு மூலப்பொருட்கள் ஐரோப்பிய நாடுகள் ஆசியாவிலும் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் கைப்பற்றியிருந்த நாடுகளில் இருந்து இறங்கின. படைக்கப்பட்ட பொருட்களை விற்பதற்கான சந்தையாகவும் அவை பயன்பட்டன.

நிலக்கிழமைப் பொருளியலில் வேளாண்மை தவிர கைவினைஞர்களும் சிறு பட்டறைகளும் பண்டப்படைப்பில் ஈடுபட்டிருந்தனர். சிறு வாணிகர்கள், சில்லரை வாணிகர்கள், கூவி விற்பவர்கள் படைத்த பண்டங்களைக் கொள்முதல் செய்து விற்றுப் பங்கீட்டு(விநியோக)ப் பணியை மேற்கொண்டனர். கந்துவட்டிக்காரர்கள் இரு சாரரிலும் தேவைப்படுவோருக்கு மூலதனத்தை வழங்கினர். விரிவான வாணிகம் செய்வோர் முன்பணம் கொடுத்துப் பண்டங்களைப் பெறுவதும் உண்டு. ஒரு பட்டறையில் பணியாற்றும் கூலித் தொழிலாளரின் எண்ணிக்கைக்கு வரம்பு இருந்தது.

முதலாளியம் இந்த வரையறைகளை உடைத்தது. சிறுதொழில் முதலாளிகளும் வாணிகர்களும் புதிய பெருந்தொழிலகங்களில் மேற்பார்வையாளர்களாகவும் பிற வேலைகளுக்கும் மாறினர். மூலதனம் முதலில் கூட்டு நிறுவனங்களாகப் பலர் சேர்ந்து முதலிடுவதிலிருந்து தொடங்கியது. இழப்புகள் வந்த போது பங்காளிகள் அனைவரும் தங்கள் சொத்துகளை இழந்தனர். தற்கொலைகளும் நிகழ்ந்தன. அதன் அடுத்த கட்டமாகத்தான் ″எல்லைப்பட்ட கடப்பாடுடைய″ முதலீட்டு முறை (Investment with limitted liabilities) உருவானது.

புதிய தொழிலகங்களில் தொடக்கத்தில் வேலை நேரத்துக்கு எல்லை கிடையாது. தொழிலாளி உயிர்வாழ்வதற்குப் போதிய அளவு கூடக் கூலி கிடைக்கவில்லை.

புதிய தொழிலகங்களின் சிறப்புக்கூறு என்னவென்றால் ஒரே முதலாளியின் ஒரு கட்டமைப்புக்குள் ஒரே கூரையில் பல தொழிலாளர்கள் தங்கள் பணியின் தேவைக்காக இணைந்து வேலை செய்யும் சூழல் ஆகும். எனவே அவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் குறைகளை முதலாளியிடம் எடுத்துச் சொல்ல முடிந்தது. இதனால் எடுத்த எடுப்பில் பயன் எதுவும் இருக்கவில்லை. ஆனால் பல்வேறு தொழிலகங்களிலுள்ள தொழிலாளர்கள் இணைந்து போராடும் போது அதற்கு வலிமை மிகுதி. இவ்வாறுதான் தொழிற்சங்கங்கள் உருவாயின. ஆயினும் தொழிலாளர்களின் போராட்டங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டன.

இங்கிலாந்தில் ஒரு சிறப்புச் சூழல் நிலவியது. அமெரிக்காவில் பெரும் பண்ணைகளைக் கொண்டவர்களும் இங்கிலாந்தில் பெரும் தொழிலகங்களைச் சேர்ந்தவர்களும் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் நடைபெற்ற மோதல்களால் அங்குள்ள தொழிலாளர்கள் பயனடைந்தனர். 1838இல் தங்கள் உரிமைகளுக்கான பட்டயத்தை பெரும் போராட்டத்தின் முடிவில் அரசரிடமிருந்து பெற்றனர்.

செருமனியில் பிறந்த மார்க்சு பயின்றது சட்டம். வெவ்வேறு பொருளியல் வளர்ச்சிக் கட்டங்களில் சட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தடம் பிடித்ததிலிருந்துதான் விளைப்புப் பாங்குக்கேற்ப குமுகத்தின் சமயம், மண உறவுகள், அறிவியல் - தொழில் நுட்பங்கள், சட்டம், அரசியல், கலை போன்ற ″குமுகத் தன்னுணர்வு″ அமைகிறது என்ற முடிவுக்கு அவர் வந்தார். அவர் வாழ்ந்த காலத்து ஐரோப்பாவில் நிகழ்ந்துவந்த முதலாளிய வளர்ச்சியால் உருவான குமுக முரண்பாடுகளிலிருந்து பாட்டாளியரே வரலாற்றின் அடுத்த கட்டத்தில் உலகில் மேலோங்கிய வகுப்பினராக இருப்பர் என்று கணித்து பாட்டாளியரின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான கருத்தியலை முன்வைத்தார். அதனால் அவரைச் செருமனி அரசு நாடு கடத்தியது. அவர் பிரிட்டனில் குடியேறினார்.

பிரிட்டன் அன்று உலகில் மிக மேம்பட்ட அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் முதலாளியத்திலும் முழுமை பெற்றிருந்தது. எனவே பொருளியல், பாட்டாளியர்களின் நிலை, முதலாளியத்தின் வளர்ச்சி நிலைகள் ஆகியவற்றைத் தடம்பிடிக்க அந்நாடு மார்க்சுக்கு மிக உதவியாக இருந்தது.

மார்க்சின் கண்ணோட்டத்திலிருந்து மாறுபடாத ஒரு கண்ணோட்டத்தை அதே செருமானியைச் சேர்ந்த பிரெடரிக் ஏங்கெல்சு என்பாரும் கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் இணைந்தே இறுதிவரைச் செயற்பட்டனர்.

ஒவ்வொரு குமுகமும் பொதுமைக் குமுகத்தை எய்துமுன் குக்குலம் -> அடிமை -> நிலக்கிழமை -> பொதுமை என்ற வரிசையில்தான் முன்னேற முடியும். இந்த வரிசையிலிருந்து எந்தக் கட்டத்தையாவது தொடாமல் மேம்பட்ட இன்னொரு கட்டத்தினுள் தாவிச் செல்ல முடியாது என்று தன் நூலான மூலதனம் முதல் மடலத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பின் முன்னுரையில் கூறியவர், ஏங்கல்சோடு சேர்ந்து தான் படைத்த பொதுமைக் கட்சி அறிக்கையின் உருசிய மொழி பெயர்ப்பின் முன்னுரையில் உருசியாவிலிருக்கும் ஊரகப் பொது நில உடைமையிலிருந்து மேம்பட்ட பொதுமைக் குமுகத்தை எய்த முடியுமோ என்றொரு ஐயத்தைத் கிளப்பி இருந்தார்.

....And even when a society has got upon the right track for the discovery of the natural laws of motion - and it is the ultimate aim of this work, to lay bare the economic law of motion of modern society - it can neither clear by bold leaps, nor remove by legal enactments, the obstacles offered by the successive phases of its normal development. But it can shorten and lessen its birth - pangs.
[1]

....The country that is more developed industrially only shows, to the less developed, the image of its own future.[2]

........Now the question is: can the Russian obshchina(Village community), though greatly undermined, yet a form of the primeval common ownership of land, pass directly to the higher form of communist common ownership? Or, on the contrary, must it first pass through the same process of dissolution as constitutes the historical evolution of the West?
[3]

மார்க்சு, ஏங்கல்சு ஆகியோரைத் தொடர்ந்து வந்தவர் லெனின்.


(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1] Preface to the first German Edition, Capital, Vol.Ⅰ,Progress Publishers, Moscow,p.20.
[2] ibid. P.19.
[3] Karl Marx and Frederick Engels, Manifesto of the Communist Party, Progress Publishers Moscow, 1973, P.12

நரிதனைப் பரியாக்கி பரிதனை நரியாக்கி......

கவர்ச்சித் திட்டங்கள் தமிழக வ.செ.திட்டத்தை உறிஞ்சுகிறது (Populism eats into Tamilnadu Budget) என்ற தலைப்பில் 29-9-2008 டைம்சு ஆப் இந்தியா, சென்னைப் பதிப்பு ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. பொய்யிலே பிறந்து ... என்ற தலைப்பில் நாம் ஏப்பிரல் 2008 தமிழினியில் எப்படி உரூ 9752.00 கோடி பற்றாக்குறை வ.செ.திட்டத்தை உரூ 84.00 கோடி மீத வ.செ.தி. என்று அரங்கத்தில் சாற்றினார்கள் என்பதைக் குறிப்பிட்டிருந்தோம்.

அந்த வ.செ.தி. உரையை நிகழ்த்திய ″பேராசிரியர்″ எப்படி சாராய வாணிகத்தில் கிடைக்கும் வருமானத்தில் அரசின் நலத்திட்டங்களை, அதாவது இலவயத் திட்டங்களை நிறைவேற்றுகிறோம் பாருங்கள் என்று பெருமிதம் கொண்டார். எனவே சாராய விலை உயர்வு அதனால் கூடுதல் வரவு என்பதில் வியப்பில்லை. ஆனால் இன்னொரு சிக்கல், தமிழினத் தலைவர் அறிவித்த திட்டங்களில் தொ.கா.பெட்டி பல இடங்களில் இன்னும் வழங்கப்படவில்லை. எரிவளி தட்டுப்பாட்டினால் வளி இணைப்பு நடுவில் நின்று போயுள்ளது. இவை எல்லாம் கட்டுரையாளருக்குத் தெரியாது போலும். களத் தொடர்பு சரியில்லை.

இன்னொரு உண்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். உங்களை மனமகிழ வைத்துத்தான் உங்களிடமிருந்து வாக்குகளைப் பெற வேண்டுமென்ற தலை எழுத்து எங்கள் தலைவருக்கு இல்லை. பின் எதற்கு இதெல்லாம் என்கிறீர்களா? தொ.கா.பெட்டியும் எரிவளி அடுப்பும் கொள்முதல்வதில் ஏதாவது கிடைக்காதா? அதற்காகத்தானே அரசியல் நடத்துகிறோம். கட்டடம் கட்டுவோம். அதில் பணியாற்ற ஆள் அமர்த்த மாட்டோம். கப்பல் வாங்குவோம், பூம்புகார் போக்குவரத்துக் கழகத்துக்கு. மாலுமி அமர்த்த மாட்டோம். அது கடலில் மிதந்து கிடந்து துருப்பிடிக்கட்டும். அது ஓடி எங்களுக்கு என்ன ஆகப் போகிறது?

யானை வாங்கியவர்கள் துறட்டி வாங்கவில்லை என்று சொல்கிறார்களே! அதன் பொருள் என்ன? யானையில் கிடைக்கும் தரகுக்கும் துறட்டியில் வாங்கும் தரகுக்கும் எவ்வளவு வேறுபாடு. இதற்கென்று துறட்டிக்கெல்லாம் தரகு கேட்டு இழிவுபட்டு நிற்க முடியுமா? பொதுப் பணித்துறையில் ஒரு செயற்பொறியாளர். மொத்தத்தில் நல்லவர்தான். எண்ணற்ற சின்னஞ்சிறு ஒப்பந்தக்காரர்களிடமெல்லாம் சல்லிக்காசு வாங்கமாட்டார். அங்குள்ள ஒரேயொரு பெரிய ஒப்பந்தக்காரரிடம் தாராளமாக வாங்கிக் கொள்வார். அனைவரிடமும் தூய்மையானவர் என்று பெயரெடுத்து விட்டார். ஆனால் இங்கு இன்று நாட்டில் ஊழல் பேர்வழி என்று பெயர் வாங்கினால் என்ன கெட்டுவிட்டது?

1977- 78 இல் பெரியகுளத்தில் ஓர் 6 மாதம் பணியாற்றினேன். ஒரு நாள் காலையில் வராகநதி எனப்படும் பன்றியாறாகிய பழனியாற்றின் பாலத்தில் நடந்து சென்ற போது இருவர், அவர்களைப் பார்த்தால் பள்ளி ஆசிரியர்களைப் போல் தோன்றியது, பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் கூறுகிறார், ″கருணாநிதி கொள்ளையடித்தாலும் பரவாயில்லப்பா, நமக்கும் நிறையக் கொடுத்தான்″ (ஒற்றைப்படைக் குறிப்பு உரையாடிவருக்குரியது, எனவே பொறுத்தருள்க) என்றார். அப்போது ஆட்சியிலிருந்த ம.கோ.இரா. நம் தமிழினத் தலைவரைப் போல இந்த ஒட்டுண்ணிகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கவில்லை போலும். இந்த ஒட்டுண்ணிகளுக்கு ஏற்றவர்களாகத்தானே நம் ஆட்சியாளர்கள் இருப்பார்கள்? விதை ஒன்று போட்டால் கரையொன்று முளைக்குமா?

யானையிலிருந்து திடீரென்று வேறெங்கோ போய் விட்டோம். பொறுத்தருள்க. யானை அன்று ஒரு போர்க் கருவி அல்லவா? அதனால் இன்று போல் அன்றும் ஆயுத பேர ஊழல் நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? நன்று, நன்று, பாராட்டுகள். உங்களுக்கு ஏதாவது ஐயமிருந்தால் சேக்கிழார் பெருமானைக் கேட்டுப்பாருங்கள். அமைச்சராயிருந்த மாணிக்கவாசக அடிகளார் குதிரை வாங்க என்று அரசுக் கருவூலத்திலிருந்து பணத்தை எடுத்துச் சென்று சிவனுக்கு ஆலயம் எடுப்பித்தது ஆயுத பேர ஊழல்தானே! போபோர்சு பகரத்தில் 20% மேல் ஆட்சியாளர்களுக்குக் கிடைத்தது என்று போபர்சு நிறுவனத்தின் போட்டி நிறுவனம் கூறியது. உலகச் சந்தையில் ஆயுத பேரத்தில் குறைந்தது 20%க்கு தரகு, உண்டாம். அவர்களும் 20% தரகு கொடுக்க முன்வந்தார்களாம். ஆனால் போபோர்சு கூடுதல் தரகு கொடுத்ததால் அங்கே போய்விட்டார்கள் என்பது அந்த நிறுவனத்தின் மனக்குறை. அடிகளார் செய்தது 100% ஊழல் அல்லவா?

சரி, அவர் சிக்கியதும் என்ன நடந்தது? அசல் சிவபெருமானே முன்வந்து அவரைக் காக்கவில்லையா? யார் சொன்னது சிவன் சொத்து குல நாசம் என்று? வாருங்கள் அடியவர்களே! சமயத் தொண்டர்களே! துணிந்து சிவன் தொண்டில் ஈடுபடுங்கள். எவ்வளவு ஊழல் செய்தாலும் சிவன் உங்களைக் காப்பார்.

ஆனால் ஒரு சின்ன ஐயப்பாடு. மாணிக்கவாசகர் ஊழல் செய்தது அதே சிவனுக்குக் கோயில் கட்டத்தானே. வேறு நோக்கத்துக்காக அல்லது கோயில் கட்டுபேர்வழி என்று அதிலும் கொஞ்சம் சுருட்டியிருந்தால் சிவன் விட்டிருப்பாரா? நம் கடவுள்கள், துட்ட நீக்கி இட்ட பரிபாலம் செய்பவர்களன்றோ, அதாவது தீயவர்களை அழித்து தமக்கு வேண்டியவர்களைப் பாதுகாப்பவர்கள் அல்லரோ? காப்பது நல்லவர்களை அல்ல வேண்டியவர்களை என்றால் அப்போது அழிக்கப்படுபவர்கள், அதாவது துட்டர்கள் எனப்படுவர்கள் தமக்கு வேண்டாதவர்கள், அதாவது வேறு கடவுள்களை வழிபடுபவர்கள் அல்லது தன்னை வழிபடாதவர்கள் என்று பொருளாகுமல்லவா? அப்படியானால் தன் அடியவர்கள் தனக்குச் செய்யும் பணியில் தவறுகள் செய்தாலும் பொறுத்துக்கொள்வார்கள் நம் கடவுள்கள் என்று தேறலாம். மொத்தத்தில் ஊழல், வேண்டியவர் - வேண்டாதவர் பார்த்து ″நயன்மை″, நன்மை, தீமை, செய்தல் என்பவை எல்லாம் முறை என்றும் நெறி என்றும் கடவுள் பண்பாகவும் காட்டப்பட்டு நம் குருதியினுள் ஏற்விட்டது. இந்தக் குருதியை மாற்ற வேண்டும் ஈழத்தில் நடைபெறுவது போல்.

அண்மைக் காலமாக தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் நுழைந்தாலே பொய் பேசும் கலை நன்றாகக் கைவந்துவிடுகிறது. சிக்குன் குனியா, பேருந்துக் கட்டண உயர்வு,″மீத″ வ.செ.தி. பற்றிய பொய்களை எல்லாம் விட்டுவிடுவோம். பெரியவர் மின்வெட்டார், மன்னிக்க, ஆர்க்காட்டர் அடுக்காத பொய்களை விடவா இலவயத் திட்டங்களால் எந்தப் பணவியல் இல்லை என்று சொன்ன இந்த அதிகாரி சொல்லிவிட்டார்?

பொய்யே பிழைப்பாகக் கொண்ட ஒருவன் தன் மகனைப் பொய் சொல்லச் சொன்னானாம். அவன் சரியாகச் சொல்லவில்லையாம். நீ பிழைச்சுக்க மாட்டலே என்று கூறி அவனைக் கிணற்றுக்குள் எறிந்துவிட்டுப் போய்விட்டானாம். சிறுவன் எப்படியோ கரை ஏறிவிட்டான். தந்தை கேட்டான், எப்படிடா மேலே வந்தே என்று. மகன் சொன்னான் தண்ணீரில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு ஒன்னுக்கு அடிச்சேன்பா, அதைப் பிடிச்சுக்கிட்டே மேலே ஏறிட்டேன் என்று. மகனைத் தந்தை மகிழ்ச்சிப் பெருக்கால் கட்டிப் அணைத்துக் கொண்டானாம். அந்தச் சிறுவனெல்லாம் நம் தலைமைச் செயலக வாழுநர்களின் முன் எம்மாத்திரம்?

கல்வித்துறையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் ஐந்தாண்டுகளுக்கு எழுத்தும் கிடையாது ஏடும் கிடையாது. ஆனால் அந்த ஐந்து வகுப்புகளுக்காகவும் 25 கோடி செலவில் புத்தகம் அச்சடித்து வைத்துள்ளனர். நோக்கம் என்ன?

எழுதப் படிக்கச் சொல்லித் தராத பள்ளியில் படித்து எதற்கு என்று ஏழை மக்கள் ஒன்றிரண்டு தலைமுறைகளுக்கு முன்பிருந்ததைப் போல் படிக்காமலே இருந்து விடுவோம் என்று முடிவு கட்டிவிடுவார்கள். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் பார்ப்பனர்கள், அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களின் தலைமையில்தான் ஆட்சி நடைபெறுகிறது. எனவே அடித்தள மக்களுக்கு எழுத்தறிவு தேவையில்லை என்று அவர்கள் நினைப்பது சரிதான். அவர்கள் மட்டுமல்ல எல்லாச் சாதியின் மேல்மட்டத்தில் இருப்பவர்களுமே தாங்களும் தங்கள் மட்டத்திலுள்ளவர்களும் மட்டும் கல்வி கற்றால் போதும் என்று நினைக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, நாடார் மகாசன சங்கத்தின் பொறுப்பாளர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடும் பனையேறிகளுக்கு கள்ளிறக்கும் உரிமையும் வேண்டும் என்று கேட்கவில்லையா?

தமிழக வரலாற்றைப் பார்த்தால் ஏதோவொரு வெளிவிசை தமிழகத்தைப் பிடிப்பதற்காக மத வடிவில் நுழைந்து அடித்தள மக்களுக்கு எழுத்தறிவு வழங்கிவிட்டு வந்த வேலை முடிந்ததும் கைவிட்டு விட்டிருப்பதை உய்த்தறிய முடிகிறது. அத்தகைய ஒரு நிகழ்முறை வெள்ளையர் வந்த பிறகு தொடங்கி முடிவுகாலத்தை நெருங்குவதை இப்போது உணர முடிகிறது.

கல்வித்துறையில் முதன்மைக் கல்வி அலுவலர் போன்ற பதவிகளில் நேரடி அமர்த்தல் நடைமுறையிலிருக்கிறது. 30 அகவைக்கு உள்ளடங்கிய இளைஞர்கள் தங்கள் தந்தை அகவையுள்ள ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மேல் ஆளுமை செய்ய வந்துவிடுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் ஆங்கில வழிப் பள்ளிகளில் பயின்ற மேட்டுக்குடி (எந்தச் சாதியாயினும்) மக்களிலிருந்து வந்தவர்கள். இவர்களில் எவரும் சேரிப் பிள்ளைகள் படிக்கும் இந்த அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் பக்கமே எட்டிப் பார்த்திருக்க மாட்டார்கள். அத்துடன் தங்கள் வாழ்நாளில் ஒரு நாள் கூட ஒரு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய பட்டறிவுப் இருக்காது. பட்டறிவில் பழுத்த மூத்த ஆசிரியர்களுக்கு எப்படி கற்பிப்பது என்று இவர்கள் அறிவுறுத்துவார்கள். எவராவது உண்மை நிலையை எடுத்துரைக்க முயன்றால் அவர்களுக்குத் தண்ணீர் இல்லாக் காட்டுக்கு மாறுதல் கிடைக்கும். இவர்கள் அனைவரும் சேர்ந்து சேரிப் பிள்ளைகளுக்கான இந்தப் பள்ளிகளை இழுத்து மூடாமல் ஓயப்போவதில்லை.

இனி, பாசனத்துறையை எடுத்துக்கொள்வோம். பாசன அமைப்புகளைப் பராமரிப்பது இல்லை; உரிய பொறியாளர்களை அமர்த்துவதில்லை. உழவர்களும் இதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஓர் உரூபாவுக்கு ஒரு கிலோவென்று அரிசி விற்கும் போது, அது தீட்டப்பட்டு மலிவாகச் சந்தைக்கு வரும்போது, ஒரு நாளைக்கு உரூ 250/- கூலி கொடுத்து வேளாண்மை செய்து கிடைக்கப் போவதென்ன? தமிழினத் தலைவர் நடுவரசில் தனக்கிருக்கும் செல்″வாக்கை″ வைத்து வேண்டிய அளவு நெல்லை நடுத் தொகுப்பிலிருந்து பெற்று ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி வழங்கிவிடுகிறார். ஆக, அதிலும் செலவு மிச்சம். அத்துடன் அரியினால் வரும் அரிசியல் சிக்கலையும் தவிர்த்துவிடலாம். ஆளுவோருக்கோ எத்தனையோ வகைகளில் வருமானம்.

தமிழகத்தில் கரும்பு வேளாண்மை செய்வோருக்கு உரிய விலை வழங்காததால் இங்கு சீனி விளைப்பு குறைந்து வருகிறது; கருநாடகத்தில் கூடுதல் விலை வழங்குவதால் அங்கு வளர்ச்சியடைகிறது என்றும் கரும்பிலிருந்து சீனி எடுத்தபின் வெளியேறும் கசடைச் சாராய ஆலைகளுக்கு வழங்கி ஆதாயம் பெறுகின்றனர்; அதில் ஒரு பகுதியை உழவர்களுக்குக் கொடுத்தால் என்ன என்றும் கேட்கிறது 25-10-2008 தினமணியின் ஆசிரிய உரை (அடிக்கரும்பும் நுனிக்கரும்பும்).

தமிழகத்தில் பாசன நீரை அண்டை மாநிலங்களுக்கு வழங்கி ஆதாயம் பார்த்தது போல் கரும்பு வேளாண்மையையும் சீனி ஆலைகளையும் சாராய வடிப்புத் தொழிற்சாலைகளையும் கர்னாடகத்துக்கு மாற்றி ஆதாயம் பார்க்கத் திட்ட மிட்டுள்ளார்களோ என்னவோ?

ஆக, இதனால் எல்லாம் செலவை மிச்சம்பிடித்து மக்களுக்கு இன்னும் எத்தனையோ ″நலப்பணிகளை″ச் செய்ய இருக்கிறார் தமிழினத் தலைவர்.

தான் என்னென்ன பணிகள் செய்யப் போவதாகச் சொல்வதை விட்டு எத்தனை கோடிகளுக்குப் பணிகள் செய்யப்போவதாக அரசு என்று அறிவிக்கத் தொடங்கியதோ அன்றே அந்த ″ஒதுக்கீட்டின்″ பொருள் வேறாகிவிடுகிறது. இந்த ஒதுக்கீட்டில் தத்தமக்கு எவ்வளவு எவ்வளவு கிடைக்கும் என்பது கட்சித் தொண்டர்கள் வரை இப்போது தெரிந்து போய்விடுகிறது. ஆகவே எனது அருமை உடன் பிறப்புகளே, இரத்தத்தின் இரத்தங்களே ஆயத்தமாகுங்கள்; கட்டுப்பாட்டோடு பாடுபட்டு அடுத்த தேர்தலில் வெற்றி தேடித் தாருங்கள்; உங்களுக்கு வளமான ஓர் எதிர்காலம் காத்திருக்கிறது. ″ஒதுக்கீடு″ பற்றிய இந்த அறிவிப்புகளின் நோக்கம் இதுத்தான்.

நாங்கள் பொய்களைச் சொன்னால் நீங்கள் எங்களை என்ன செய்ய முடியும்? இதுவரை சொல்லிய பொய்களுக்காக எங்களை என்ன செய்துவிட்டீர்கள்? ஏதோ ஆங்கிலன் எழுதிய அரசியல் சட்டத்தைப் படியெடுத்து உருவாக்கிய புதிய அரசியல் சட்டமும் சொல்கிறது என்பதற்காக ஆண்டுக்கு ஒரு வ.செ. திட்டத்தையும் ஒரு திருந்திய மதிப்பீட்டையும் அவையில் வைத்து நிறைவேற்றித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

எம் மூதாதைகளான சேரனும் சோழனும் பாண்டியனும் வ.செ.தி.யும் திருந்திய மதிப்பீட்டையும் போட்டா ஏரி, குளங்கள், கோயில்கள் கட்டினார்கள்? சத்திரங்கள், சாவடிகள், சாலைகள் அமைத்தார்கள்? மரங்கள் நட்டார்கள்? அந்த உயர்ந்த, ஒப்பற்ற பீடும் பெருமையும் கோலோக்சும் ″உன்னத″ நிலையை விரைவில் எய்துவோம் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறோம்!

ஓங்குக அய்யன் திருவள்ளுவர் புகழ்!

(இக்கட்டுரை தமிழினி நவம்பர்-2008 இதழில் வெளிவந்துள்ளது.)