2.6.08

சேணுயர் சிலம்பில்....

செந்தமிழ் நாடாக இருந்த சேர நன்னாடு இடைக்காலத்தில் வல்லரசுச் சோழர்களின் அதிகாரத்தின் எதிர்வினையாகத் தமிழ் மொழியைக் கைவிட்டு, கலப்புத் தமிழாக இருந்ததற்கு எழுத்தச்சன் என்பவர் வகுத்துத் தந்த அகர வரிசையை ஏற்றுக்கொண்டு இன்றைய மலையாள மொழியை உருவாக்கிக் கொண்டது. அந்தப் புதிய மொழிக்கும் தமிழுக்கும் இடையிலான போராட்டம் அவை இரண்டும் சந்திக்கும் நில எல்லை நெடுகிலும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வரலாற்றில், வெள்ளையர் இந்தியாவைக் கைப்பற்றுவதற்கு முன்புள்ள இறுதிக் காலத்தில் கொள்ளையையே நோக்கமாகக் கொண்டு இடைவிடாத போர்களை அரசர்கள் என்ற பெயர் தாங்கிய கொள்ளையர்கள் நடத்தியதால் ஒரே மொழி பேசும் மக்கள் பல்வேறு அரசுகளின் எல்லைகளுக்குள் சிதறிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. அவ்வாறுதான் தமிழகத்தின் பல பகுதிகள் திருவிதாங்கூர், கொச்சி, ஆந்திரம், கன்னடம் ஆகிய மாநிலங்களில் சிக்கிக் கொண்டன.

இது தமிழ் மொழி பேசுவோர் வாழும் பகுதிகளுக்கு மட்டும் உரிய சிக்கல் அல்ல. மலையாளிகள், தெலுங்கர்களை மட்டும் கொண்ட பகுதிகள் முன்பு பழைய சென்னை மாகாணத்துக்குள் சிக்கிக் கிடந்தன.

விடுதலைப் போராட்ட காலத்தில் மொழிவழி மாகாணங்கள் அமைப்போம் என்று வாக்குறுதி அளித்து மக்களின் ஆதரவைத் திரட்டியது காந்தியின் பேரவைக் கட்சி. அதன் அடையாளமாகத் தன் கட்சிக் கிளைகளுக்கு எதிர்கால மொழிவழி மாகாணங்களின் பெயரை விடுதலைக்கு முன்பே வைத்து விட்டது. அவ்வாறு தெலுங்கர்களின் பகுதிக்கு ஆந்திரப் பைதிர(பிரதேச)ப் பேரவைக் குழு என்றும் தமிழர்களின் பகுதிக்கு தமிழ் நாடு பேரவைக் குழு என்றும் பெயர் கொடுத்திருந்தது.

ஆனால் விடுதலைக்கும் பின்னர் பேரவைக் கட்சி தன் வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டது. அதை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர்கள் ஆந்திர மக்கள். பொட்டி சீறி இராமுலு என்பவர் உண்ணாநோன்பிருந்து உயிர்விட்டதன் விளைவாக உருவான புரட்சிகரமான மக்கள் எழுச்சிக்குப் பின் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது. அதில் சென்னை மாகாணப் பகுதிகளுடன் ஐதராபாத் போன்ற சமத்தானங்களும் சேர்ந்திருந்தன. தமிழகத்துக்குரிய சித்தூர், புத்தூர், நல்லூர், திருத்தணி, திருப்பதி என்னும் பகுதிகளும் சேர்க்கப்பட்டிருந்தன. தமிழக மக்களிடமிருந்து உருவாகிய எதிர்ப்பைத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் எவரும் கண்டு கொள்ளவில்லை. ம.பொ.சி. மட்டும் திருப்பதிக்கும் திருத்தணிக்கும் போராடி திருத்தணியை மட்டும் மீட்டார்.

அவ்வாறு வெள்ளையருக்கு முந்திய கொள்ளைப் போர்களின் விளைவாகத் திருவிதாங்கூருக்குள் சிக்கிக் கொண்டவை தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை, நெடுமங்காடு, தேவிகுளம், பீர்மேடு ஆகிய வட்டங்கள். இங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் பகுதி தாய்த் தமிழகத்துடன் இணைய வேண்டும் என்று போராடத் தொடங்கியிருந்தனர். குறிப்பாக கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை போன்ற மேற்கு வட்டங்களில் வாழ்ந்த மக்கள் மலையாளிகளின் கொடுமைகளினாலும் கிழக்கு வட்டங்களில் வாழ்ந்தவர்கள் அரசுப் பணிகளில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாலும் இந்தப் போராட்டத்தைத் தனித்தனியாகத் தொடங்கி வைத்தனர். இந்தப் போராட்டம் இந்த 6 அல்லது 7 மாவட்டங்களில் மட்டும் கூர்மை அடைவதற்கு ஒரு சிறப்பான காரணம் உண்டு.

திருவிதாங்கூர் சமத்தானத்தை விடுதலைக்கு முன் ஆண்ட மன்னர்களுக்குத் திவானாக இருந்தவர்களில் நடைமுறையில் இறுதியாக இருந்தவர் சி.பி. இராமசாமி ஐயர். (இவருக்குப் பிறகு உன்னித்தான் என்பவர் மிகக் குறுகிய காலம் பதவியில் இருந்தார்.) இவர் தமிழ் நாட்டில் வந்தவாசியைச் சேர்ந்த அத்துவைதப் பார்ப்பனர். அத்துவைதக் கோட்பாட்டின் படியே சாதி வேறுபாடுகளைப் புறக்கணித்துச் செயற்பட்டவர். ஆனால் தமிழர்கள் மேல் பரிவுகொண்டவர். திருவிதாங்கூர் சமத்தானத்தில் தமிழர்கள் செறிந்து வாழ்ந்த தெற்கு வட்டங்களில் ஆய்வு முன்னோடி என்ற பெயரில் கட்டாய இலவயக் கல்வித் திட்டம், மதுவிலக்கு, கன்னியாகுமரி -திருவனந்தபுரம், நாகர்கோயில் - ஆரல்வாய்மொழி சிமென்றுச் சாலைத் திட்டம் என்று பல திட்டங்களைச் செயல்படுத்தினார். நாகர்கோயில் நகரமைப்புத் திட்டம் என்ற பெயரில் நாகர்கோயிலை நடுவாக வைத்து இரண்டு சுற்றுச் சாலைகள் அமைக்கும் திட்டத்தைக் கொண்டுவந்து நிலம் கையகப்படுத்தி முடித்து வேலை தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்த போது ″விடுதலை″ வந்தது. பொதுமைத் தோழர்களின் கடுமையான எதிர்ப்பினால் சி.பி. இராமசாமியார் அகற்றப்பட்டார், திட்டம் கைவிடப்பட்டது. இன்றைய ஆட்சியில் வருவாய்த் துறையினர் பட்டையம் போட்டு விற்றது போக சுற்றுச் சாலைகளுக்காகக் கையகப்படுத்தியதில் பெரும்பான்மை நிலங்களும் இன்றுவரை புறம்போக்காகத்தான் கிடக்கின்றன. கன்னியாகுமரி -திருவனந்தபுரம், திருநெல்வேலி - திருவனந்தபுரம் போன்ற புறவழிச் சாலைகளுக்கு மிக வசதியாக இந்த நிலங்களைப் பயன்படுத்தலாம். ஆனால் ஆட்சியாளர்கள் ஏனோ புதிதாக நிலங்களைக் கையகப்படுத்த முனைந்துள்ளனர் என்று தெரிகிறது.

சி.பி. இராமசாமியார் திட்டமிட்ட இன்னொன்று பெருஞ்சாணி அணை. அதுவும் வேலை தொடங்கப்பட்டு அடிப்படை தோண்டிய நிலையில் ″விடுதலை″ பெற்றோம். காட்டு நிலத்தைக் கைப்பற்றிப் பெருந் தோட்டம் போட்டிருந்த ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களுக்காக அணை மேல் நோக்கி நகர்த்தப்பட்டு ஒரு குளமாக முடிந்துள்ளது. முன்பு தோண்டிய அணை அடிப்படையை(வாணத்தை) இப்போது கூட நாம் பார்க்க முடியும்.

இங்கு நாம் கூற வந்தது சி.பி. இராமசாமியாரின் கட்டாய இலவயக் கல்வியைப் பற்றித்தான். 1946 - 47 கல்வியாண்டுத் தொடக்கத்தில் அந்தந்தப் பள்ளிகளுக்கு அண்மை இடங்களில் வாழும் ஐந்து அகவை நிரம்பிய குழந்தைகளை உடனடியாகப் பள்ளியில் சேர்க்குமாறு ஆசிரியர்கள் நேரடியாகச் சென்று பெற்றோர்களை வலியுறுத்தினர். சேர்க்காத பெற்றோர்க்குத் தண்டனை உண்டு என்று அறிவிக்கப்பட்டது. பள்ளிகளில் காலையில் 1, 2 வகுப்புகளுக்கும் மாலையில் 3 - 5 வகுப்புகளுக்கும் என்று மாற்று முறை வகுக்கப்பட்டது. முன் 3 + 2 = 5 மணியாக இருந்த பள்ளி நேரம் 3 + 3 = 6 என்று கூட்டப்பட்டது. கூடுதல் கட்டடங்களைக் கட்டி புதிய ஆசிரியர்களை அமர்த்தியது வரை இந்த நடைமுறை செயல்பட்டது.

ஏழைக் குழந்தைகளுக்கு நண்பகல் தேங்காய்த் துருவல் இட்ட செழுமையான உளுந்தங்கஞ்சி தேங்காய்த் துவையலுடன் வழங்கப்பட்டது. தாய்மொழியில் கல்வி கற்ற தமிழ்ப் பகுதி மக்கள் விரைந்து கல்வியில் சிறந்த மக்களாக உயர்ந்தார்கள். 3ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் ஒரு மொழியாக கற்பிக்கப்பட்டது. கல்லூரிகளில் ஆங்கிலம் பாட மொழியாக இருந்தது.

திருவிதாங்கூரில் ஆட்சி மொழி மலையாளம். அதனால் புதிதாகப் பயின்று வந்த மாணவர்களுக்குத் திருவிதாங்கூரில் வேலைவாய்ப்பு கிடைக்காது. அடிமனதில் பதுங்கியிருந்த இந்த உள்ளுணர்வுதான் தென் திருவிதாங்கூர் மக்களைத் தாய்த் தமிழகத்துடன் இணைய வேண்டும் என்ற உறுதியான போராட்டத்துக்கு உந்தித் தள்ளிய அடிப்படைக் காரணமாகும்.

இதற்கு மாறாக ஆங்கிலம் ஆட்சிமொழியாக இருந்த இலங்கையிலும் கர்னாடகத்திலும் வாழ்ந்த தமிழர்கள் அப்போது போலவே எப்போதும் தாம் வாழும் இடங்களில் தொடர்ந்தும் அதிகாரிகளாக இருப்போம் என்று மெத்தனமாக இருந்தனர். இலங்கை அரசு நேரடியாகவே ஒடுக்குமுறையில் இறங்கியதாலும் அவர்களுக்கு நல்ல தலைமைகள் அமைந்ததாலும் காலம் கடந்தாவது களத்தில் இறங்கினர். கர்நாடகத்தில் அரசு அடியாட்களை ஏவி விட்டு கண்டு கொள்ளாமல் இருந்தது, தமிழ் மக்களுக்கு வீரார்ப்புள்ள ஒரு தலைமை கூட அமையாதது ஆகிய காரணங்களால் அவர்கள் கன்னடரிடம் மிதிபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பெரும்பாலும் வளர்ச்சி தடைப்பட்ட நாடுகளில் தேசிய விடுதலை இயக்கங்கள் படித்த ஒட்டுண்ணி வகுப்புகளாலேயே தொடங்கப்படுகின்றன. அவை மொழி, பண்பாடு என்ற களங்களிலேயே இயங்குகின்றன. நல்ல வேலை கொடுத்து விட்டால் இந்த வகுப்பு யார் எவர் என்று பார்க்காமல் அவர்கள் காலில் எந்தக் தயக்கமும் இன்றி விழுந்துவிடும்.

நிலம் அதன் வளம், அதில் உழைக்கும் மக்கள் அவர்களது உழைப்பு வளம், அவர்களால் உருவாக்கப்படும் செல்வப் பெருக்கம், அந்தச் செல்வப்பெருக்கத்தை மக்களுக்கு உரிய முறையில் பகிர்ந்து கொடுத்தல் என்று பொருளியல் உரிமைகளுக்கான போராட்டம்தான் நிலையான பயனை மக்களுக்குத் தரும்.

பொருளியல் உரிமைகள் என்றவுடன் நம் பொதுமைத் தோழர்கள் பாட்டாளியம் அதாவது கூலி உயர்வு பற்றி மட்டும் பேசுவார்கள். மாட்டுக்குத் தீனி போட்டு வளர்த்துச் செழுமையாக்கி பாலைக் கறந்து குடிப்பதற்குப் பகரம் பால் மடியை அறுத்துச் சுவைப்பதில் குறியாக இருப்பவர்கள் இவர்கள்.

இந்தப் பின்னணியில்தான் கண்ணகி கோயிலான பத்தினிக் கோட்டமும் பெரியாற்று அணையும் ஏலம், மிளகு, தேயிலை, காப்பி, கிராம்பு, இலவங்கம் என்று எண்ணற்ற விலை மதிப்பு மிக்க பண்டங்கள் விளையும் தோட்டங்களும் அமைந்திருக்கும் பகுதியாகிய தமிழர்கள் மிகுந்து வாழும் தேவிகுளம், பீர்மேடு வட்டங்களை அடக்கிய இடுக்கி மாவட்டத்திலிருந்து உரிமைக்குரல் உரிய வலிமையோடு எழும்பவில்லை. இங்கு உழைப்பவர்கள் அனைவரும் உள்ளூர்த் தமிழர்கள். நில உடைமையாளர்களில் கம்பம் போன்ற அண்மையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் தொலைவிலிருக்கும் பெருந்தோட்ட முதலாளிகளும் பெரும்பான்மை. இவ்விரு சாரருக்கும் இம்மாவட்டம் தமிழகத்தில் சேர வேண்டும் என்பதில் ஆர்வம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு பொறியாளனாக, பெரியாற்று அணையில் 1980 இல் ″பழுது″ ″பார்க்கும்″ பணிகள் தொடங்கிய காலத்தில் இருந்து 6 மாதங்கள் பணியாற்றியவன் என்ற வகையில் 172 அடி உயரமுள்ள அணையில் அடி முனையில் சிறிது ஈரமும் கொஞ்சம் பாசியும் மட்டும் படிந்திருந்தது, அந்த அணை நாட்டிலுள்ள வேறெந்த அணையையும் விட உறுதியானது என்ற உண்மையைப் பறைசாற்றிக் கொண்டிருக்க கேரள - தமிழக ஆட்சியாளர்கள் முறையே தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகவும் சொந்த ஆதாயங்களுக்காகவும் தமிழக மக்களின் வேளாண்மையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல தமிழக - கேரள எல்லை நெடுகிலும் மலை முகட்டுக்கு மேற்கே சிறு சிறு அணைகளைக் கட்டித் தண்ணீரைத் திருப்பித் தமிழகத்துக்குப் பாய்ச்சி வசதி ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர் தமிழகச் சிற்றரசர்களும் பாளையக்காரர்களும் இடைக்கிழார்களும்(சமீன்தாரகளும்). எனவே அந்த அணைப் பகுதி ஒவ்வொன்றும் தமிழகத்துக்குச் சொந்தமானது. ஆனால் மாநில மறுசீரமைப்புக்குப் பிறகு கேரள ஆட்சியாளர்கள் பழைய எல்லைக் கற்களைப் பிடுங்கி இந்த அணைகளுக்குக் கிழக்கே நட்டு வைத்திருப்பதுடன் அணைகளை உடைத்துத் தண்ணீரை மேலைக் கடலுக்குள் கொண்டு விடுகின்றனர். அந்தந்தப் பகுதி மக்கள் தங்கள் ச.ம.உ.., பா.உ.., கட்சிக்காரர்கள், பொதுப் பணித்துறை, வருவாய்த்துறை உயரதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் குறிப்பாகத் ″தமிழ்த் தேசிய″த் தலைவர்களிடமெல்லாம் முறையிட்டுப் பார்த்துவிட்டனர். காவிரி, பெரியாற்று அணைச் சிக்கல்களில் போல் குரல் எழுப்பிவிட்டு கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு அவர்கள் அமைந்துவிட்டனர். இவ்வாறு செல்வதறியாமல் திகைத்து நிற்கும் தமிழக மக்களைக் காப்பாற்ற அன்று பாண்டிய மன்னனின் கொடும்பிடிக்குள் சிக்கிக் கிடந்த மக்களை மீட்க சிலம்பைக் கையிலேந்திய கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் நெடுவேள் குன்றத்தில் எடுப்பித்த கோயிலுக்கு அவள் திருமுன் எங்கள் மனக்குறைகளை எடுத்துரைக்கச் சென்றிருந்தோம்.

பாண்டியனாகிய கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை இற்றெனக் காட்டி இறைக்குரைப் பனள் போல் தன்னாட் டாங்கண் தனிமையிற் செல்லான் நின்னாட் டகவையின் அடைந்தனள் நங்கையென்று(காட்சிக் காதை 87 – 90) சாத்தனார் செங்குட்டுவனை நோக்கி, தவறிழைத்த பாண்டியனைத் தண்டிக்குமாறு வேண்டிய போது சிக்கலைத் திசை திருப்பி கண்ணகிக்குக் கோயில் எடுத்தது போல் இன்றி மதுரையில் செய்தது போல் எமக்குத் தலைமை தாங்கி இழந்தவற்றை மீட்டுத்தர வழிகாட்டுவாய் என்று கேட்கச் சென்றிருந்தோம்.

இந்த ஆண்டு சித்திரை வெள்ளுவா அன்று (20-04-2008) காலையில் கம்பத்திலிருந்து குமுளி வழியாக மங்கல மடந்தைக் கோட்டத்துக்குச் சென்று அங்கிருந்து மறுபுறம் தமிழக எல்லை வழியாகக் கம்பத்துக்குச் செல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் சென்ற ஆண்டு சென்ற பட்டறிவு இருப்பதாகவும் கூறி நண்பர் தமிழினி வசந்தகுமார் 18-04-2008 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி அளவில் தொலை பேசினார். கண்ணகிக் கோட்டத்தைப் பார்க்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது ஒருபுறம் என்றால் இதுவரை நேரில் சந்தித்திராத வகுவைப் பார்த்துப் பேச முடியும் என்பது மறுபுறம். அத்துடன் தமிழினியுடன் தொடர்புடைய இலக்கியவாணர்கள் பத்துப் பேருக்கு மேல் வருகிறார்கள் என்பது என் ஆர்வத்தை மேலும் கூட்டியது. நண்பர் எட்வின் பிரகாசுடன் அவர் குறிப்பிட்டவாறு காலை 5.00 மணிக்குக் கம்பத்தில் இருப்பேன் என்று உறுதி கூறிவிட்டு எட்வினுக்கும் கூறினேன்.

நேரடியாக கம்பம் செல்லும் பேருந்தில் இடம் கிடைக்குமா, எத்தனை மணிக்குப் புறப்படும் என்ற கேள்விகள் எழுந்ததால் 19-04-2008 மாலை 6.45க்குப் புறப்பட்ட சேலம் பேருந்தில் ஏறினோம். இரவு 12.15க்கு திருமங்கலம் வந்தோம். அங்கிருந்து இரவுப் பணி பேருந்தில் ஏறி ஆரப்பாளையம் சென்று போடி வண்டியில் ஏறி அது புறப்பட 02-00 மணி ஆனது. இந்த ஒன்றே முக்கால் மணி நேர இழப்பும் இரவுப் பேருந்தில் இரட்டைக் கட்டணம் தண்டி நம்மிடம் கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் பண வெறியால் ஏற்பட்டதுதான். தடமில்லா(ஓம்னி)ப் பேருந்துகள் சுற்றுச் சாலையில் செல்லாமல் நகருக்குள் செல்லும் போது ஏற்படாத இரவு சாலை நெருக்கடி அரசுப் பேருந்துகளால் மட்டும் ஏற்படுமா? சுற்றுச் சாலைச் சுங்கம் தடமில்லாப் பேருந்துகளுக்குக் கிடையாதா? மக்களின் காலத்தின் மதிப்பை மதியாத அரசுப் பொறி என்று ஒழியும்?

காலை 5.00 மணிக்குத் திட்டமிட்டபடி கம்பம் சென்று சேர்ந்துவிட்டோம். காலைக்கடன்களை முடித்த பின் மொத்தம் பதின்மூன்று பேர் அங்கிருந்து புறப்பட்டு 9.00 மணி அளவில் குமுளியில் சிற்றுண்டியை முடித்துவிட்டோம். மலையுந்துகள்(சீப்புகள்) கோயிலுக்கு ஆட்களை ஏற்றிச் சென்றன. 12 பேர் கட்டாயம் ஏற வேண்டும் என்று அங்கு ஒரு குழு நின்று கண்காணித்தது. ஒவ்வொரு நடைக்கும் அக்குழுவுக்குத் தரகு உண்டாம். ஒரே வண்டியில் செல்ல முடியாது என்பதுடன் கூட்டமும் நெருக்கியடித்தது. எப்படியோ வெவ்வேறு வண்டிகளில் சென்று சேர்ந்தோம். கல் பாவிய தடம். எதையும் பார்க்க முடியாத பெரும் புழுதிச் செம்மல். உடம்பு, உடைகள், வைத்திருந்த பொருட்கள் என எல்லாமே அடையாளம் தெரியாமல் புழுதி நிறம் கொண்டன. கோயில் சென்றதும் இறங்கி உடலையும் உடைகளையும் உதறியவுடன் தூசி அகன்றது. மக்களின் நீண்ட வரிசை கோயில்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த கோயிலின் சிதைந்து கிடந்த வளாகத்தினுள் நுழைந்தோம்.

இரண்டு கோயில்கள் இருந்தன. ஒரு மூலையில் நாகர் பீடம் ஒன்று ஏறக்குறைய 5′×5′×5′ அளவுள்ள கோயிலுக்குள் இருந்தது. பிற இரண்டு கோயில்களினுள்ளும் காத்திருந்து நுழைந்து பார்க்க நேரம் போதாது என்பதால் பார்க்கவில்லை .

கல்லால் ஆன சிதைந்த நிலையிலிருந்த சுற்றுச் சுவரில் ஒரு கல்வெட்டு. 12ஆம் நூற்றாண்டில் பாண்டியன் பொறித்த கல்வெட்டு என்று கூறினார்கள். கோயில்களில் ஒன்று இராசராசன் கட்டிய சிவன் கோயில் என்றும் இன்னொன்று கண்ணகி கோயில் என்றும் ஒருவர் இல்லை என்றும் கூறினர். தினமணி(21-04-08) இதழ் வளாகத்தினுள் இருக்கும் கேரள மாநிலப் பகுதியில் இருப்பது துர்க்கைக் கோயில் என்றும் தமிழ்நாட்டுப் பகுதிக்குள் இருப்பது கண்ணகி கோயில் என்றும் கூறுகிறது.

தமிழன்பர் ஒருவர் இமயமலையில் உறுதியான கல்லே கிடையாது என்றும் தான் நேபாளம் சென்றிருப்பதாகவும் அங்கே சுக்காம்பாறை கற்கள்தாம் இருப்பதாகவும் அடித்துக் கூறிக் கொண்டிருந்தார். எனவே சேரன் செங்குட்டுவன் இமயத்திலிருந்து கொண்டு வந்த கல் சிலை செய்யப் பயன்பட்டிருக்க முடியாது, வெறும் புடைப்புச் சிற்பம் செய்யத்தான் பயன்பட்டிருக்கும். எனவே இங்கு அவன் நிறுவிய சிலை சிதைந்து போயிருக்கும் என்று முடிவு கூறினார். கடவுள் எழுதவோர் கல் என்று இளங்கோ அடிகள் குறிப்பிட்டதற்கு இதுதான் பொருள் என்றும் கூறினார்.

ஆனால் அவர் கூற்று ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. உலகிலுள்ள பாறைகளை உருகு பாறைகள், உருமாற்றப் பாறைகள், அடுக்குப் பாறைகள் என்று இன்றைய நூலோர் வகைப்படுத்தியிருந்தாலும் எவ்விடத்திலும் தூய்மையான ஒரே வகைப்பாட்டினுள் எந்தப் பகுதியின் பாறைகளும் வரமுடியாது. புவியின் கடந்த 450 கோடி ஆண்டுகள் வாழ்வில் நிகழ்ந்த இடையறா புவியியங்கியல் மாற்றங்கள், காலநிலை மாற்றங்கள் வான் வெளியின் தாக்கங்கள் ஆகியவற்றின் விளைவாக உருகுபாறை உருமாற்றப்பாறையாகி இருக்க முடியும். உருமாற்றப் பாறையிலிருந்து அடுக்குப் பாறை உருவாகியிருக்கலாம். அத்துடன் இமயமலையின் உருவாக்கம் ஏறக்குறைய 8½ கோடி ஆண்டுகளுக்குள் என்று புவியியங்கியல் இன்று கணித்துக் கூறினாலும் அதிலுள்ள பாறைகள் அதற்கு எத்தனை கோடி ஆண்டுகள் முந்தியவை என்று வரையறுத்துக் கூறும் அளவுக்கு அதன் பரப்பு சிறியதல்ல. எனவே காலநிலையை எதிர்த்து நிற்கும் கல்லே இமயமலையில் கிடையாது என்று கூறுவது தீர ஆராயாத ஒரு அரைகுறை முடிவு.

கருங்கல்லுக்குப் பெயர் பெற்றதாகக் கூறப்படும் தமிழகத்தில் மாமல்லபுரம் கற்கோயில்களும், சென்னை உயர் நீதி மன்றக் கட்டடமும் இன்னும் எத்தனையோ காலத்தை வென்று நிற்கும் இயற்றங்களும் உள்ளன. ஆனால் நேற்று கட்டப்பட்ட குமரி முனை விவேகானந்தர் மண்டபத்தின் வெளிப்புறத் தளத்தில் பதிக்கப்பட்டுள்ள கற்களில் பரவலாக கடற்காற்றால் அரிப்பேற்பட்டுள்ளது. ஏன், புகழ் பெற்ற கணபதிச் சிற்பியால் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை வடிக்கப் பயன்பட்டிருக்கும் கல்லே தரமானதாக இல்லை. அண்டையிலுள்ள மைலாடியில் உலகின் சிறந்த கருங்கல் இருந்தும் அம்பாசமுத்திரத்தை ஏன் தேடிச் சென்றனர் என்று தெரியவில்லை. குமரி அம்மன் கோயிலின் கிழக்கு வாயிலை எப்போதுமே அடைத்து வைத்திருப்பதற்கு அம்மன் சிலையிலுள்ள மூக்குத்தியிலுள்ள வைரத்தின் ஒளிர்வால் கடலில் செல்லும் கப்பல்கள் திசை திரும்பி பாறைகளில் மோதுவதைத் தவிர்க்க என்று காரணம் சொல்லப்பட்டாலும் கடற்காற்றைத் தாங்கும் தன்மையுள்ள கல்லால் சிலை செய்யப்படாததுதான் உண்மையான காரணமா என்றொரு ஐயமும் எமக்கு உண்டு. ஆனால் கண்ணகிக் கோட்டம் என்று அடையாளம் காணப்பட்ட கட்டுமானத்தில் கல் தேர்வு மிகச் சிறப்பாக உள்ளது.

கண்ணிகியின் சிலை புடைப்புச் சிற்பம் இல்லை முழுமையான சிலையே என்பதற்கு,

மேலோர் விழையும் நூனெறி மாக்கள்
பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து
இமையவர் உறையும் இமையச் செவ்வரைச்
சிமயச் சென்னித் தெய்வம் பரசிக்
கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டி....

என வரும் சிலப்பதிகார வரிகள் (நடுகற்காதை: 224 - 230) தெளிவான சான்றாகும்.

கோயில்களின் பக்கத்திலே நின்ற போது அவை அமைந்திருப்பது அந்தப் பகுதியிலுள்ள மலை உச்சிகளில் மிக உயர்ந்தது என்பது புரிந்தது. ஆனால் சிலப்பதிகாரம், பத்தினிக் கோட்டம் அமைந்திருந்ததை விட உயர்ந்த ஒரு மலை உச்சி இருந்ததான குறிப்பைத் தருகிறது.

வரந்தரு காதையில் தேவந்தி மீது பாசண்டச் சாத்தன் தெய்வமேறி மாடல மறையோனை நோக்கிக் கூறிய,

மங்கல மடந்தைக் கோட்டத் தாங்கண்
செங்கோட் டுயர்வரைச் சேணுயர் சிலம்பிற்
பிணிமுக நெடுங்கற் பிடர்த்தலை நிரம்பிய
ஆணிகயம் பலவுள ...

இவ்வரிகள்(53 - 56) கண்ணகிக் கோட்டம் மலை உச்சியில் இருக்கவில்லை அதாவது கண்ணகி கோட்டம் இருந்த இடத்தை வேறாகவும் மிக உயர்ந்த மலைஉச்சியாகிய சேணுயர் சிலம்பை வேறாகவும் கூறுகிறது என்ற குறிப்பைத் தருகிறது.

கோயில்களை மலை உச்சிகளில் கட்டுவது ஓர் அரசியல் நடவடிக்கை. குறிஞ்சித் தெய்வம் முருகன். ஆதலால் மலை உச்சிகளில் முருகன் கோயில்கள் இருப்பது இயற்கை. ஆனால் மலை உச்சிகளில் உள்ள பெருமாள் கோயில்கள் திட்டவட்டமான அரசியல் நடவடிக்கையே. அதுபோல் முகம்மதியப் பெருமக்களின் சமாதிகளையும் சிலுவைகளையும் மலை உச்சிகளில் நிறுவுவதும். அந்தக் கண்ணோட்டத்தில்தான் இராசராச சோழன் நிறுவியதாகக் கூறப்படும் இன்றைய பத்தினிக் கோட்டத்தையும் அணுகத் தோன்றுகிறது.

திரும்பி கீழே இறங்கும் போது எதிர்ப்பட்ட ஒருவரிடம் இங்கு வேங்கை மரம் உள்ளதா என்று கேட்டபோது இன்னும் தாழ்ந்த மட்டத்தில் தான் உள்ளது என்று கூறினார். அவர் மலையாளி என்பது தெரிந்தது. அவரிடம் கண்ணகி வேங்கை மரத்தின் அடியில் அமர்ந்திருந்த வரலாற்றைக் கூறிய போது இப்போது கோயில் இருக்கும் இடத்துக்கு அப்பால் சற்றுப் பள்ளமான இடத்தில் ஒரு காட்டுப் பகுதி இருக்கிறது, அங்கு வேங்கை மரங்கள் இருக்கலாம், அங்கு கட்டடம் இடிந்த கற்கள் கிடக்கின்றன என்று கூறினார். எனவே இப்போதைய கோயிலுக்கு அண்மையில் உள்ள காடடர்ந்த பகுதிகளை ஆய்வுக்குட்படுத்துவது தேவை. அடுத்த ஆண்டு வரும்போது அதற்குரிய ஆயத்தங்களுடன் வரவேண்டும் என்று வகு அவர்களிடம் வேண்டியுள்ளேன்.

திரும்பும் போது குமுளி செல்லாமல் தமிழ்நாட்டுக்குள் இறங்க வேண்டும் என்பது முதல்முறை என்னை இது தொடர்பாகத் தொடர்பு கொள்ளும் போதே வகு கூறியது. உடன்வந்தவர்கள் என்னை மலையுந்தில் குமுளி வழியில் விடுத்து விடலாம் என்று கூறினர். வகுவுக்கு அதில் உடன்பாடில்லை என்பதைத் தெரிந்ததால் மட்டுமல்ல, அந்த அறைகூவலான வழியில் நடந்து பார்த்து விட வேண்டும் என்ற ஒரு விருப்பமும் என்னுள் இருந்ததால் ஒரு மலை உச்சியை ஏறி இறங்கும் போது குத்தான வழியைத் தவிர்த்து சிறிது மென்சாய்வான வழியைக் கண்டு நடந்தோம். அது போல் மூன்று மலைகளை ஏறி நான்காவது மலையின் முன் மார்புப் பகுதியில் ஒரு சாய்வான இடத்தில் தாண்டி அங்கிருந்த மலை மாளிகைப் பகுதியிலிருந்து பார்த்த போது ஓர் அரிய காட்சியைக் கண்டோம். நான்கு மலை முகடுகள் ஒன்று தாண்டி ஒன்றாக அதே நேரத்தில் அந்த இடத்திலிருந்து பார்க்கும் போது தொடர்ச்சியான ஒரே நீண்ட மலைபோல் சிறு வளைவுகளுடன் தோன்றியது. அதில் முதல் வளைவுக்கும் இரண்டாம் வளைவுக்கும் இடைப்பட்ட பகுதி யானையின் தலையும் பிடரியும் போன்ற தோற்றம் தந்தது. அதைத்தான், பிணிமுக நெடுங்கல் பிடர்த்தலை என்று அடிகள் சொல்லோவியமாக்கியுள்ளார். இந்தப் பிடர்த்தலைத் தோற்றத்தை நாங்கள் நிலத்தில் இறங்கிப் பேருந்திலிருந்து மலையைப் பார்த்த போதும் காண முடிந்தது. இங்கு காணப்படும் ஐந்து மலை உச்சிகளையும் அஞ்சுமலை என்று இப்பகுதியினர் வழங்குகின்றனர் என்ற செய்தியையும் அறிந்துகொள்ள முடிந்தது.

காட்சிக் காதையில் இந்த மலை முகடுகளை வைத்துத்தான் போலும் நூற்று நாற்பது யோசனை பரப்புள்ள யானை மீது இந்திரன் பெயர்வது போன்ற பெரியாற்றின் கரை என்று (வரிகள் 10 - 30) விளக்குகிறார் அடிகள்.

திரும்பும் போது எங்கள் கருத்தைக் கவர்ந்தது மலை மீது மரங்கள் அருகிக் காணப்பட்டதும் அதே நேரத்தில் மரமாக வளரத் தக்க பல மரங்கள் மிஞ்சிப் போனால் 5 அடிகள் உயரத்துக்குள் குறுகிப் போய் ஆங்காங்கே சிறு சிறு தொகுப்பாகக் காணப்பட்டதும் எஞ்சிய இடங்களில் உள்ள புல்வெளியில் அண்மையில் பெய்துள்ள மழையில் மண் கரைந்து புல்லுடன் பாறையிலிருந்து பெயர்ந்து உதிரும் நிலையில் இருந்ததும்தான். இதைப்பற்றி சிந்தித்த போது நமக்குக் கிடைத்த விடை அவ்வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழும் யானை, காட்டெருமை மற்றும் தழையுண்ணிகளின் பெருக்கத்துக்கு ஈடு செய்யும் வகையில் அங்கு தேவையான பரப்பிலும் அடர்த்தியிலும் காடுகள் இல்லை என்பதுடன் நிலைத்திணைகளையும் தழையுண்ணிகளையும் சமன் செய்யும் எண்ணிக்கையில் ஊனுண்ணிகளான கொல்விலங்குகளும் இல்லை என்பதுமாகும்.

முன்பு கேரள மாநிலத்தில் ஓரளவு நிலவுடைமை வைத்திருந்த அனைவரும் ஒன்றுக்கு மேற்பட்ட யானைகளை, குறிப்பாக சுமை தூக்குவதற்காகப் பயன்படுத்தி வந்தனர். இன்று சரக்கூர்திகள் அந்தத் தேவையை நிறைவு செய்துவிடுவதால் இப்போது மலைகளிலிருந்து யானைகளை ″அறுவடை″ செய்வதில்லை. முன்பு அறுவடை செய்யப்பட்ட யானைகளின் தீவனத்தை மனிதர்கள் திரட்டிக் கொடுத்ததால் காட்டு யானைகள் அழிக்கும் அளவுக்கு தழைவளம் அழியவில்லை. இன்று தானாகக் காட்டினுள் மேயும் யானைகளால் அழிவு பெருமளவில் இருக்கும். யானையின் இந்த இயல்பை விளக்கும்,

காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினுந் தமித்துப்புக் குணினே
வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும்.....

என்ற பிசிராந்தையாரின் புறனானூற்று 184ஆம் பாடல் கூற்று சூழியல் நோக்கிலும் அரசியல் நோக்கிலும் தமிழகம் எண்ணிப் பெருமைகொள்ளத்தக்கது.

கண்ணகி கோயில் பகுதியில் புலிகள் காப்பகம் இருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும் இயற்கைச் சமநிலை குலைந்துள்ளது தெரிகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து காட்டுப் பரப்புக்கும் தழையுண்ணிகளுக்கும் ஊனுண்ணிகளுக்குமான விகித முறையை அறிவியல் அணுகலில் நிறுவி அதைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியது மாநில - நடுவரசுகளின் சூழியல், கானியல் துறைகளின் பொறுப்பு.

தமிழக எல்லையைப் பொறுத்தவரை இந்த மலைப் பகுதியில் மட்டுமல்ல, பெரும்பாலான பிற இடங்களிலும் கான் பகுதியில் பெருமளவு நீலகிரி மரங்களே உள்ளன. அவை நிலத்தில் உள்ள நீரை உறிஞ்சி அதனை எண்ணையாக மாற்றி வானில் விடுபவை. அந்த எண்ணெய் ஆவி மீண்டும் மழையாக நிலத்தில் இறங்குவதில்லை. இது தமிழக நீர்வளத்தைப் பெருமளவில் பாதித்துக் கொண்டிருக்கிறது. இந்த நீலகிரி மரங்களை அகற்றிவிட்டு நமக்குரிய காட்டு மரங்களை உடனடியாக வளர்க்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

புவி வெப்பமாதல் என்ற பெயரில் வல்லரசிய தொழில் நுட்பங்களை சந்தைப் படுத்துவதற்காக இன்று உலகளாவிய அளவில் பெரும் கூக்குரல் எழுப்பும் சூழியல் ″சிங்கங்களு″க்கு புவி வெப்பமடைவதற்கு இதுவும் ஒரு முகாமையான காரணம் என்பது தெரியுமா?

பொதுப் பணித்துறைப் பொறியாளனாக குமரி மாவட்டம் முதல் வேலூர் மாவட்டம் வரை காடுகளுக்குள் அலைந்த காலத்தில் அங்கு நான் உணர்ந்து மகிழ்ந்த குளுமையை இந்தச் சேணுயர் சிலம்பு சென்று திரும்புவது வரை ஓரிடத்தில் கூட உணரவில்லை.

குருதி அடைப்பால் சிறிது தொலைவு நடந்தாலும் நெஞ்சுவலியுடன் வாழ்ந்துவரும் நான், ஒரு கிலோ மீற்றர் கூடத் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே நடப்பதைத் தவிர்த்து வந்திருக்கும் நான் ஒரே மூச்சில் ஏறக்குறைய 8 கிலோ மீற்றர் தொலைவுக்கு குத்துச் சரிவுடனும் நல்ல தடம் இல்லாமலுமிருந்த மலைச்சரிவில் இறங்கி பளியங்குடியில் சமநிலத்துக்கு வருவதுவரை தொடர்ந்து ஊக்கிய திரு. வசந்தகுமார் அவர்களுக்கும் மகன் போல் தோள் தந்த தோழர் எட்வின் பிரகாசுக்கும் துணையாக வந்த சீனிவாசன் அவர்களுக்கும் நன்றி.

சமநிலத்துக்கு வந்து கால் ஊன்றி நின்றதும் என் உடல் சுமையைத் தாக்குப் பிடித்து நின்று என்னைக் காத்த என் கால் செருப்புகளைத் தொட்டு வணங்க வேண்டும் என்ற உணர்வு எற்பட்டது.

எமது மனதை மிகவும் வருத்தியது தமிழ் பேசிய மக்களைக் குறிவைத்து குடிநீர் கொண்டுசென்ற ஞெகிழிக் குப்பிகளை சூழல்கேடு என்ற காரணம் சொல்லி நீருடன் பறித்து எறிந்த, குமுளி வழியில் கீழிறங்கிய தமிழ் மக்களை மலையுந்தில் ஏறவிடாமல் தடுத்து மலையாளிகளை மட்டும் ஏற்றிவிட்ட, தமிழகப் பகுதியில் இருக்கும் கோயிலில் கட்டியிருந்த தோரணங்களையும் பெயர்ப் பலகைகளையும் மட்டும் அறுத்தெறிந்த கேரளக் காவல்துறையினருடையவும் அரசுடையவும் காட்டுவிலங்காண்டித்தனமும் தமிழக ஆட்சியாளர்களின் நாட்டை விற்றுச் சுருட்டும் இயல்பை அறிந்திருந்தும் அவர்கள் நம் சிக்கல்களைத் தீர்த்துவைக்கட்டும் என்று நாம் காத்திருப்பதும்தான்.

(இக்கட்டுரை தமிழினி மே-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

தமிழினி மாத இதழ் (ஏப்பிரல் 2008) - ஒரு பார்வை

அன்புள்ள தமிழினி வசந்தகுமார் அவர்களுக்கு வணக்கம்.

″வல்லான் வகுத்ததே வாய்க்கால்″ ′ஊழ்′ எது உலகப் போரா? நன்று. ″காலம் உலர்த்திய கண்ணீர்த் துளி″ அண்ணாத்துரை தான் நினைத்தால் பெரியாருக்குப் போட்டியாக வரமுடியும் என்று ஒரு முறை கூறியதாக சென்ற தலைமுறைத் தலைவர் ஒருவர் நினைவு கூர்ந்ததைப் படித்துள்ளேன். அண்ணாத்துரையின் நெருக்கமான தோழர்கள் உட்பட பெரியாரிடம் சம்பளத்துக்குத்தான் வேலை பார்த்து வந்தனர். நூல் எழுதுவது, திரைப்படத்துக்குத் கதை - உரையாடல் எழுதுவது என்று எல்லாமே அவரது ஆணைக்கு உட்பட்டே என்ற நிலையிலிருந்து உடைத்து வெளியேற மணியம்மை திருமணம் உதவியது. என் தமிழ்த் தேசியம் ஆக்கத்தை வலையில் பாருங்கள்.

1961-62இல் உள்கட்சிப் பூசல் ஏற்பட்டு சம்பத்தோடு கண்ணதாசன் வெளியேறிய காலகட்டத்தில் ம.கோ.இரா. நடித்து வெளிவந்த தாய் சொல்லைத் தட்டாதே என்ற படத்தில் அவர் எழுதி இடம்பெற்ற ஒரு பாடல் வரிகள்,

கண்களிரண்டில் அருளிருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்
அது உடன்பிறந்தாரையும் கருவறுக்கும்

இது அண்ணாத்துரையைப் பற்றிய ஒரு துல்லியமான படப்பிடிப்பு என்பது என் கருத்து.

கே.பி.எசு.கில் அழித்தது பஞ்சாப் போராளிகளை மட்டுமல்ல, கொக்கிப் பந்து விளையாட்டையும்தான். நம் ஊர்ப்புறங்களில் அண்மைக் காலம் வரை விளையாடப்பட்டு வந்த எத்தனையோ ஆட்டங்களை இன்றைய ″இறக்குமதி″ ஆட்டங்களில் இனம் காண முடிகிறது. இந்திய ஆட்சியாளர்கள் நம் விளையாட்டுகளை மட்டுமல்ல, இந்திய மக்களுக்கு உரிமைப்பட்ட அனைத்தையுமே அழித்து வருகின்றனர்.

ஆட்சியாளர்களின் அரசின்மையால்(அரசகத்தால்) மண்ணின் மீதுள்ள உயிர்கள் அனைத்தையும் விரைவில் அழித்து விடுவார்கள். அதன் ஒரு படிதான் யானைகளுக்கு வந்துள்ள நெருக்கடி. படங்கள் மிகச் சிறப்பு. கட்டுரையாளரின் புகைப்படத் தொகுப்புக்குப் பாராட்டுகள்.

குமரி மாவட்ட நாஞ்சில் குறவனைப் பற்றிய ஒரு கட்டுரையை நண்பர் எட்வின் எழுதக் கூடும்.

″சிறுத்தை″, கணிணி பயன்படுத்துவோருக்குப் பயன்படும். எனக்கு இன்னும் போதிய பயிற்சி இல்லை.

″π வாழ்த்துக்கள்″இல் πயில் இந்தியர்களுக்கு எந்தப் பங்கும் கிடையாது என்று கூறியிருக்கிறார். சில உண்மைகள்:

வண்டிச் சக்கரம் 6 பகுதிகளைக் கொண்டது. ஒரு ஆரைக்காலும் ஒரு வட்டத் துண்டும் கொண்டது ஒரு பகுதி. சக்கரத்தின் வெளிவிளிம்பு வரை ஆரத்தின் அளவு 21 ஒன்றிகள். வட்டத் துண்டின் நீளம் 22 அலகுகள். ஆக ஒரு சக்கரத்தின் சுற்றளவு 6 x 22 = 132 அலகுகள். இதை ஆரையின் நீளத்தால் வகுத்தால் கிடைப்பது 132/21 = 44/7 = 2 x 22/7 = 2π. வட்டத்தின் சுற்றளவுக்கான வாய்ப்பாடு: 2 π x ஆ(ரை) = π x வி(ட்டம்). வண்டிச் சக்கரம் செய்யும் கொல்லர்கள் இதற்கென்று ஒரு அளவுகோலை வைத்துள்ளனர். செங்கம் வளையாம்பட்டைச் சேர்ந்த நடுவரசு அளவைத்துறையிலிருந்து பணி நிறைவு பெற்ற திரு.கு.வெங்கடாசலம் என்பார்(நன்னன் நாடு என்ற இதழை நடத்தியவர்) ஒரு நிகழ்ச்சியின் போது அதைக் காட்டி விளக்கினார். தன் ஆய்வுகளைத் தமிழ் பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளும் விருப்பத்தை அவர் தெரிவித்த போது துணை வேந்தராயிருந்த திரு.வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள் ″எம் பேராசிரியர்களே அதைச் செய்வர்″ என்று மறுத்துவிட்டதாகக் கூறினார்.

வட்டத்தில் பாதியை விட்டத்தில் பாதியால் பெருக்கினால் பரப்பு கிடைக்கும் என்பது கிணறு தோண்டுகிறவர்கள் கையாளும் ஓர் எளிய வாய்ப்பாடு. இதைச் சரிபார்ப்போம்:

வட்டத்தில் பாதி என்பது π x ஆ
விட்டத்தில் பாதி என்பது ஆ
எனவே பரப்பளவு = π x ஆ x ஆ = π x ஆ²

பழைய திருவிதாங்கூர் சமத்தானத்தில் ஒரு நாணயத்தின் பெயர் சக்கரம். வண்டி உருளைப் பைதா அல்லது பைசா என்றனர். தமிழ்நாட்டில் அவற்றை முறையே பைசா, சக்கரம் என்ற சொற்களால் இன்று குறிக்கின்றனர். எனவே இந்தப் பைதா அல்லது பைசாவோடு πக்கு தொடர்பு இருக்க வேண்டும் என்பது நண்பர்கள் வெள்ளுவன், எட்வின் ஆகியோர் கருத்து.

இன்னும் ஒரு செய்தி. மாட்டுவண்டிச் சக்கரத்தின் விட்டம் 5¼அடி, அதாவது 63 அங்குலங்கள். அதன் சுற்றளவு 16½ அடிகள். சக்கரம் 4 சுற்றுகள் சென்றால் செல்லும் தொலைவு 66 அடிகள், அதாவது ஒரு அளவுத் தொடரி(சங்கிலி). பத்து தொடரி நீளம் ஒரு படைசால்(பர்லாங்). 8 படைசால் ஒரு மைல் என்பதுதான் தெரியுமே. ஒரு சதுர மைல் 640 ஏக்கர். ஒரு ஏர் உழவு என்பது 2½ ஏக்கர் எனபது முன்னாள் நடைமுறை. இன்றைய எக்டேர் 2.47 ஏக்கர்கள். ஒரு மீற்றர் 3.28அடிகள் என்பதற்குப் பகரம் 3.3 என்றிருந்தால் நமது பழைய ஏர் அளவும் இன்றைய எக்டேரும் ஒன்றாகவே இருந்திருக்கும்.

சக்கரவர்த்தி என்ற சொல் சக்கர வழுதி என்பதன் திரிபாகலாம் என்பது குணா கருத்து. குயவர்களின் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பின் மண்பாண்டங்கள் பண்டங்களின், குறிப்பாக நீர்மங்களின் போக்குவரத்தில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியிருக்கும். அதனால் விளைந்த செல்வப் பெருக்கும் வலிமையும் ஒரு பேரரசை உருவாக்க உதவியிருக்கும். அதனால்தான் ஆணை உருள்(ஆக்கினா சக்கரம்) ஆழி என்ற சொல்லாட்சிகள் அரசனின் ஆட்சி அதிகாரத்தைச் சுட்டுவதற்குக் கையாளப்படுகின்றன என்று தோன்றுகிறது. இவ்வாறு உருளால் வலிமை பெற்று உருளை அடையாளமாகக் கொண்டு ஆண்டவர்களைச் சக்கராசுரன் என்றும் அவர்களை அடக்கியதை கண்ணன் சக்கராசுரனை வதைத்தான் என்றும் தொன்மங்கள் கூறுகின்றன என்பது என் கருத்து. இன்னொரு சக்கரம் நெசவாளர்களின் நூல் சுற்றும் இராட்டை(நூல் நூற்கும் இராட்டையை இங்கு குறிப்பிடவில்லை). நெசவினால் வலிமை அடைந்த கலிங்கர்களின் அடையாளமாக அது இருந்திருக்கும் போலும். கலிங்கம் என்ற சொல்லுக்குத் துணி என்ற பொருள் தமிழில் உண்டுதானே! அசோகன் கலிங்கத்தை வென்ற பின் அங்கிருந்த சக்கர அடையாளத்தைத்தான் தன் இலச்சினையில் பொறித்தான் என்று படித்த நினைவு. அதுதான் இன்று இந்திய அரசின் இலச்சினையில் பெருமை தரும் உறுப்பாக விளங்குகிறது.

போதுமா நமக்கும் πக்கும் உள்ள உறவு பற்றி. சரியான வரலாற்றுக் கருப்பொருள்களைப் பற்றிய தெளிவே இல்லாத நிலையில் நம் பண்டை வரலாற்றின் உண்மையான வரைவு இன்றுவரை தொடங்கப்படவே இல்லை. இந்நிலையில் நம் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை நூல்களிலிருந்து தெரிந்துகொள்ள முடியாது, மக்களிடமிருந்துதான் அறிந்துகொள்ள வேண்டும்.

கம்பனை என்னால் சுவைக்க முடிவதில்லை. இலக்கியத்தில் வடிவத்தை விட உள்ளடக்கத்துக்கும் கட்டடத்தில் தோற்றத்தை விட பயன்பாட்டுக்கும் முதன்மை கொடுப்பது என் வழக்கம்.

விபுலானந்தரைப் பற்றிய செய்திகள் ஆர்வமூட்டுவனவாக இருந்தன. ஆனால் சிலப்பதிகாரத்தின் கானல் வரியில் உளங்கோ விளக்கும் யாழ் இன்றைய வீணையே என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதுதான் பேரியாழ்.

இராமானுசன் பற்றிய புதினத் திறனாய்வு என்னை ஈர்த்தது. என் ″ஆய்வு″ முறைகளும் பிறர் அறிவியல் அடிப்படையில் அமைந்தது என்று ஏற்றுக் கொள்ளும் வகையில் அவர்கள் ஏற்கும் சான்றுகளைக் கொண்டு அமைவதில்லை. ஆனால் பல முடிவுகளுக்கு பின்னால் சான்றுகள் கிடைத்துள்ளன. என் பல முடிவுகளை மனத்தூய்மையுடன் சரிபார்த்து உறுதிப்படுத்தவும் அல்லது மறுக்கவும் வரும் தலைமுறையினரை எதிர்பார்க்கிறேன்.

சார்லசு டிக்கன்சின் ஆலிவர் டிவிச்டு காட்டுவது போன்ற சூழலை நோக்கி திருப்பூர் சென்று கொண்டிருக்கிறதா? அல்லது பழமைகள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றனவா? ″மணல் கடிகை″.

எனக்கு சோதிடத்தைக் கற்றுக் கொள்ள அடிப்படைத் தேவையான ஓரை, நாண்மீன்கள் பெயர்களையும் அவற்றின் வரிசை எண்களையும் மண்டையில் புகுத்திக் கொள்ளும் திறமை முற்றிலும் கிடையாது. நம் பண்டை வானியல் அறிவைப் பற்றி மட்டுமல்ல உடலியல், உளவியலில் வான் பொருட்கள் கொள்ளும் தாக்கம் என்பது பற்றியும் ஆய்வு செய்யத் துணை புரியும் ஒருவரை நெடுநாட்களாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். ″கூட்டம்″ நன்றாக இருக்கிறது. இரண்டு ″செல்″லக் கட்டுரைகள்.

அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒருவர் பள்ளியுலா ஒன்று சென்றாராம். ஒரு வகுப்புள் புகுந்தாராம். தொடக்கப்பள்ளி மாணவனைப் பார்த்து ′நம் நாட்டில் பிறந்த பெரிய மனிதர்கள் யார், யார்? சொல்லு′ என்றாராம். அவன் எழுந்து, ′ஐயா, நம் நாட்டில் குழந்தைகள்தாம் பிறக்கின்றன. பெரிய மனிதர்கள் பிறப்பதில்லை′ என்றானாம். அது போல் பாரதி மட்டுமல்ல இராமலிங்க அடிகள், பாரதிதாசன் அனைவருக்கும் பருவத்துக்கேற்ற வளர்ச்சி அதாவது திரிவாக்கம் - படிமுறை வளர்ச்சி- உண்டு. முருகனைப் பற்றி எழுந்த அடிகளார் சிவன் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து ஒரே கடவுளை நோக்கி ஓடி முடித்து கடவுளே இல்லை என்று முடிக்க இருந்த நிலையில் அவரை முடித்துவிட்டனர் என்கிறார்கள்.

பாரதிதாசன் ′எங்கு நோக்கினும் சக்தியடா′ என்று தொடங்கியவர் இறை மறுப்பாளரானார். குடும்ப விளக்கை ஏற்றியவர் பின்னர் பெண்ணை வீட்டுக்குள்ளேயே அடைத்து விட்டதை எண்ணி வருந்தினார். தன் ஆக்கங்களைத் தூய தமிழுக்கு மாற்றி எழுதினார்.

அதுபோல்தான் பாரதியும். அத்துடன் நமக்குத் தெரிந்த அவரது தனித்தன்மை நீண்ட நெடுங்காலமாகப் பழமையில் ஊறிய நம் குமுகத்தின் மிக பிற்போக்குத் தன்மையிலுள்ள ஒரு குழுவில் தோன்றி அது தன்னை மூடிவைத்திருந்த, காலங்களால் உறைந்து இறுகிப் பாறையாகிக் கிடந்த போர்ப்புகளை உடைத்து வெளியே வர முழு மனதுடன் பாடுபட்டதுதான். இந்த வளர்ச்சி நிலையில் தொடக்க காலத்திலும் பின்னர் தவறான கோட்பாடுகளாலும் நேர்ந்த தவறுகளைச் சிலர் அவருடைய சாதி சார்ந்த நிலைப்பாடு என்று பழிசுமத்துகிறார்கள் என்பது என் கணிப்பு. வள்ளலாரைப் போல் அன்றி தன் கனவுகள் நிறை வேறா என்ற நிலை வந்த போது நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்வாராடி என்று மனம் நொந்தவர் நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்விடும் அறிவுடன் படைத்து விட்டாய் என்ற கையறு நிலைக்கு வந்து மதம் பிடித்திருக்கிறதென்று தெரிந்திருந்தும் அதன் முன் சென்று தன்னை முடித்துக் கொண்டார்.

படைப்பாளிகளிடம் நாம் காணும் ஒரு முரண்பாடு புனைவு அல்லது செய்யுள் படைப்பாளிகளாக செயற்படும்போது வெளிப்படும் கருத்துகளுக்கும் கட்டுரைகள் அல்லது மேடைப் பேச்சுகளில் வெளிப்படும், கருத்துகளுக்கும் உள்ளவையாகும். பொன்னீலனின் கரிசல் புதினத்திலும் கருணாநிதியின் வெள்ளிக் கிழமையிலும் இதைப் பார்க்கலாம். ஏன், செயமோகனின் ரப்பர் புதினம் பரிவ பெற்றதே சுற்றுச் சூழல் குறித்த அதன் பரப்பல் பயனுக்காகத்தானே! பாரதியார் எழுத்து நடையில் ஆரியம் – இந்தியம் - சமற்கிருதம் தூக்கலாகத் தெரிந்தாலும் செய்யுள்களில் தமிழ், தமிழன், தமிழ் நாடு பற்றிய பெருமிதம் நிறையவே இருக்கிறது என்பது என் கணிப்பு.

அன்புடன்,
குமரிமைந்தன்.

தமிழினி 2008 மார்ச்சு மாத இதழ் ஒரு பார்வை

நாகர்கோயில்,
11.04.2008.

அன்புள்ள தமிழினி வசந்தகுமார் அவர்களுக்கு வணக்கம்.

2008 மார்ச்சு மாத தமிழினி பற்றிய கருத்தைத் தாங்கள் கேட்டிருந்தீர்கள். அம்மாதம் முழுவதும் இருந்த பணிச்சுமைகளால் அது இயலவில்லை. இப்போது அதை நிறைவேற்றுவதில் தவறில்லை என்று கருதுகிறேன்.

திரு. கரு. ஆறுமுகத்தமிழன் அவர்கள் நம் பெரும்பான்மை தமிழார்வலர்களைப் போல் மொழியை ஒரு தனித்த பொருளாகவே பார்க்கின்றார். மொழி என்பது மக்களின் வாழ்வோடு இணைந்ததாக, அவர்களை வாழவைப்பதாக இருக்க வேண்டும். கல்வியும் அவ்வாறே இருக்க வேண்டும். அப்போதுதான் மொழி மீதும் கல்வி மீதும் மக்களுக்கு இயல்பான ஆர்வம் ஏற்படும். கல்வி என்பதே சராசரி குடிமக்களை விட, மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றும் எண்ணிறந்த துறைகளில் பணியாற்றும் மக்களைவிட, அம்மக்களிலிருந்து மேம்பட்டு அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவோராகத் தங்களை வளர்த்துக் கொள்ளும் வழி என்ற நிலையில்தான் பிற மொழிகளின் நுழைவு தொடங்குகிறது. நாமறிந்த வரலாற்றில் நேற்று சமற்கிருதம், இன்று ஆங்கிலம், நாளை இந்தி என்று சராசரி மனிதனுக்குப் புரியாத ஒரு மொழி ஆட்சியிலும் ஆலயத்திலும் இவ்வாறுதான் பயன்பட்டிருக்கிறது. பயன்பட இருக்கிறது. இரண்டு மூன்று நூற்றாண்டுகள் முந்திய ஐரோப்பாவிலும் கிரேக்கமும் இலத்தீனமும் இவ்வாறுதான் பயன்பட்டன. வளர்ச்சியடைந்த முதலாளியமும் அதன் விளைவான மக்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வும் அம்மொழிகளை ஆய்வுக் கூடங்களுக்குள் அடைத்துவிட்டன.

நம் நாட்டின் வளர்ச்சி தடுக்கப்பட்டிருக்கிறது. கல்வி அரசதிகாரம் பெறுவதை மட்டும் நோக்கமாக கொண்டுள்ளது. அந்தத் தேவையை ஈடு செய்ய முடியாதவனைப் பார்த்து ஆசிரியக் கூட்டம் கூச்சலிடுகிறது, நீ மாடு மேய்க்கத்தான் போவாய் என்று. அந்த இந்த ஆசிரியக் கூட்டத்தை அடித்துத் துரத்திவிட்டு மாடு மேய்ப்பதை, சிரைப்பதை, வெளுப்பதை என்று பள்ளிக் கூடங்களில் சொல்லித் தருகிறோமோ அன்று தமிழும் வாழும் தமிழகமும் வாழும் தமிழனும் வாழ்வான்.

அதைப் போலவே நமது பொருளியல் அனைத்தும் மேலை நாடுகளை, குறிப்பாக ஆங்கிலம் பேசும் நாடுகளை முற்றிலும் சார்ந்து நிற்பதால் அவர்களுடைய பண்பாட்டுக் கூறுகள் நம்மவற்றை அழிக்கின்றன. நம் அறிவு″சீவிகள்″ அன்று பிரிட்டன் அடுத்து உருசியா அதற்கடுத்து சப்பான் இன்று அமெரிக்க மக்களின் பண்பாட்டு உயர்வுகளை வானளாவப் புகழ்ந்து வந்திருப்பதும் வருவதும் இதனால்தான். நம் பொருளியல் வளவாழ்வு என்று நம் சொந்த மண்ணின் மீது வேரூன்றி நிற்கிறதோ அன்றுதான் நம் மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் தம் தேசியத் தன்மைகளைப் பேண முடியும் என்பது எனது கருத்து.

கோசொவா அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ஒரு ″விடுதலை″ பெற்ற நாடு என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார் அகில்.

உள்ளூர் முனைவுகளை பாட்டாளியம் பேசி நசுக்கிவிட்டு அயலாரை அமர்த்துவதற்காக மண்ணின் மக்களைக் கூசாமல் கொலை செய்த கட்சிக்கும் அவர்களின் ஆட்சிக்கும் மனச்சாட்சி இல்லாமலிருக்கலாம். நம் ஊர் தோழர்களாவது பழைய தவறை உணர்ந்து உள்ளூர் மக்களின் முனைவுகளுக்குத் தடைக்கற்களாயிருப்பதிலிருந்து விலகி நிற்பார்களா?

இந்தியாவில் ஒரேயொரு குழு, மார்வாரிகளும் குசாரத்திகளும் முழுப் பொருளியலையும் தன் கைப்பிடிக்குள் வைத்துள்ளது. அதனோடு இன்று ஆட்சியாளர்களும் உலக விசைகளுடன் கூட்டுச் சேர்ந்து மக்களின் நிலங்களை அரசியல் - பொருளியல் நெருக்குதல்களால் மறைமுகமாகவும் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் நேரடியாகவும் பறித்து வருகின்றனர். வாழ்விழந்த மக்கள் தங்கள் தேசங்களை(மாநிலங்களை) விட்டு ஓடுகிறார்கள். அரசியல்வாணர்கள் தங்கள் வாக்கு வேட்டைக்காக எல்லை தாண்டிய மக்கள் மீது போர் தொடுக்கின்றனர். இந்தச் சூழலில் இந்திய - உலக அளவிலான பொருளியல் விசைகளிடமிருந்து தத்தம் நிலத்தைக் காக்க, 1956 நவம்பர் 1ஆம் நாள் அமைக்கப்பட்ட மாநில எல்லைகளுக்கு வெளியிலிருந்து நிலம் வாங்கியவர்கள், தொழில் அமைத்தவர்கள், பெருவாணிகத்தில் நுழைந்தவர்களை அப்புறப்படுத்த வேண்டும். வேலை செய்ய வந்த மக்களுக்குத் தங்கள் சொந்த மாநிலம் தவிர வேறெங்கும் முழுக் குடியுரிமை கூடாது என்பது எமது தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகத்தின் வரைவுத் திட்டத்தின் ஒரு பகுதி. அத்துடன் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரையில் பாதி, சித்தூர், திருப்பதி என்று மாநிலச் சீரமைப்பின் போது அண்டை மாநிலங்களிடம் பறிகொடுத்த பகுதிகள் மீட்கப் பட வேண்டும் என்பதும் அதில் அடக்கம். 1956 நவம்பர் 1 வரையறையை அப்பகுதிகளிலும் நிறைவேற்ற வேண்டும். இதுதான் இந்திய மக்களின் உண்மையான தன்னாட்சிக்கான வழி என்பது எமது கருத்து. இன்றைய செய்திப்படி மராட்டிய முதல்வர் இதே கருத்தை நேற்று முன்வைத்திருக்கிறார்.

பாமயனை நன்றாகத் தெரியும். உழவனின் துன்பங்களுக்கெல்லாம் சீமை உரமும் பூச்சிக் கொல்லி மருந்தும்தாம் காரணம் என்பவர். அரசியல் காரணியைச் சுட்டிக் காட்டினால் திசை திருப்புவார். ஏழை நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காகவே அமெரிக்கா பொதிந்து காப்பாற்றி வரும் கியூபாவை முன்சுட்டாகக் காட்டுபவர்.

நாட்டிய சரசுவதியின் சிற்பநூல் விளக்கம் அத்தெய்வத்தின் பின்னணியில் ஒரு நீண்ட வரலாறு புதைந்து கிடப்பதைக் காட்டுகிறது. ″மாடன் - ஒரு தெய்வத்தின் தோற்றமும் வளர்ச்சியும்″ என்று ஒரு கட்டுரை அரைகுறையாக நிற்கிறது. இதில் அத்தெய்வத்தின் பின்னணியில் மறைந்து கிடக்கும் எல்லைக்கெட்டாப் பழம் வரலாற்றை மீட்க முயன்றிருக்கிறேன்.

இன்றைய வேலூர் - சேலம் மாவட்டங்களுக்கு இடையில் ஏறக்குறைய 100 கி.மீ. நீண்டு கிடக்கும் மலையாளக் காடுகளில்(இதனைச் சவ்வாது மலை என்பர்) வாழும் பழங்குடி மக்கள்(தமிழர்களான அவர்களை அப்பகுதியில் மலையாளிகள் என்று அழைப்பர்) சித்திரை முழு நிலவன்று ஆற்றில் கூடி தத்தம் விருப்பத்துக்கேற்ற இணையரைக் கூடுவர் என்று அப்பகுதியில் பணியாற்றிய போது 1968இல் அறிந்திருக்கிறேன். மதுரையில் அதே நாளில் அழகர் ஆற்றில் இறங்குவது போல் தமிழகமெங்கும் நடைபெறுகிறது. திருவிதாங்கூரில் அது ஆறாட்டு என்ற பெயரில் பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகிறது. உண்மையில் இது மார்ச்சு 21இல் நடைபெற வேண்டிய நிகழ்ச்சியே. ″தமிழன் கண்ட ஆண்டு முறைகள்″இல் நான் குறிப்பிட்டது போல் தென்மதுரையிலிருந்து கபாடபுரத்துக்குத் தலைநகர் மாறியதால் வந்த குழப்பத்தின் விளைவாகும் இது. இது குறித்து ″பங்குனி உத்திரமும் சித்திரை வெள்ளுவாவும்″ என்ற கட்டுரையை நானும் நண்பர் வெள்ளுவனும் இணைந்து எழுதியுள்ளோம். வேர்கள் என்ற இதழில் அது வெளிவந்துள்ளது.

″பாபா ஆம்தே″ ″கால்களின் கடவுள்″ இரண்டு கட்டுரைகளும் ஒரு குறிப்பிட்ட துறையில் உலக மக்களுக்குப் பெருந் தொண்டாற்றிய உயர்ந்த மனிதர்கள் என்ற வகையில் சிறந்த படைப்புகள். சுசாதாவின் படைப்புகள் எத்தனை காலம் நிலைத்திருக்கும் என்று கூற முடியாது. ஆனால் அவர் அறிமுகம் செய்த நடை ஒரு சுற்று வரும் என்று நம்பலாம். குமுதம் இதழில் அவர் எழுதத் தொடங்கிய கருப்பும் சிவப்பும் என்ற தொடர்கதையில் ″கள்ளச் சாணான்″ என்று அவர் பயன்படுத்திய ஒரு சொல்லால் அவருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் அவரது எழுத்தின் திசையையே மாற்றியிருக்குமோ என்றொரு ஐயம். தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?
விளையாட்டுக்கென்று ஒரு கட்டுரை வருவது மகிழ்ச்சியே. இந்தியாவில் தெருக்களில் அலைந்து திரிந்து வித்தைகாட்டும் உடல்திறன் பெற்ற சிறுவர்களை ஊக்கினாலே உலகின் மிகத்திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கிவிடலாம். இருப்பதிலேயே இவ்வளவு ஆதாயம் பார்க்கிறவர்களுக்கு எதற்கு இந்த வீண் வேலை என்கிறீர்களா?

உணர்ச்சிப் பாக்களாக அரசியல் சார்ந்து பாடியவை தரங்குறைந்தவை என்றும் அவர் பொதுவாழ்வில் நுழையாமலிருந்ததால் மேலான படைப்புகளை உருவாக்கியிருப்பார் என்றும் கூறியுள்ள கட்டுரை ஆசிரியரின் கலை இலக்கியங்கள் பற்றிய கண்ணோட்டம் மிகக் கண்டிக்கத் தக்கது. நூலின் நோக்கம் நல்ல மனிதனை உருவாக்குவது என்று இறையனார் அகப்பெருள் கருத்தின் அடிப்படையில் நன்னூல் ஆசிரியர் தந்துள்ள மிக உயர்வான கருத்தைப் பாருங்கள்.

உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமைப்
புரத்தின் வளமுருக்கி பொல்லா - மரத்தின்
கனக்கோட்டம் தீர்க்குநூல் அஃதேபோல் மாந்தர்
மனக்கோட்டம் தீர்க்குநூல் மாண்பு.

பாரதியாரைப் பற்றிய இந்தக் கருத்துரைப்பு கலை இலக்கியங்களைப் பற்றிய இரக்கமற்ற ஓர் இழிவுபடுத்தலாகும்.

கவிதை எந்தப் பிரசாரத்துக்கும் போகாது என்பது இலக்கியத்தைப் பற்றிய ஒரு மிகவும் அரைகுறையான பார்வை. பரப்பல் இலக்கியம் மருந்து போன்றது, அறிவு இலக்கிய உணவு போன்றது, சுவை இலக்கியம் தின்பண்டம் போன்றது என்று சொல் புதிதுவில் வெளிவந்த ″அழகியலும் மெய்ப்பாட்டியலும்″ கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.

செயமோகன் கிண்டல் செய்கிறாரா உண்மையைக் கூறுகிறாரா என்று புரியவில்லை. அதே நேரத்தில் புதுக் கவிதை எழுத வேண்டும் என்று நினைப்போருக்குத் தேவையான உதவியும் ஊக்குவிப்பும் உள்ளன. கழக இலக்கியங்கள் என் பார்வையில் புதுக்கவிதைகளே. அவற்றுக்கு நான் கொடுக்கும் விளக்கம் தனி மனிதர்கள் தங்கள் உணர்வுகளை வெளியிடப் பயன்படுத்திய வடிவம் அது என்பது. பொதுவாக இலக்கணச் செய்யுள்கள் அதனுடைய வரிகளின் நீளத்தின் அடிப்படையில் ஒரு செவ்வகத்தைப் போல் இருக்கும். புதுக்கவிதைகள் அவ்வாறு இருப்பதில்லை. ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும்.

புதுக் கவிதை தனிமனித உணர்ச்சிகள் என்றால் வெண்பா போன்ற இறுக்கமான செய்யுள்கள் பலர் சேர்ந்து அல்லது தனியாள் இசையுடன் பாடுவதற்காக யாத்ததிலிருந்து திரிவாக்கம் பெற்றிருக்கலாம் என்பது எனது கருத்து.

″நூற்றுவர் கன்னர் - சிலம்பில் வரலாறு″ என்ற கட்டுரையில் உள்ள செய்தியை ″பெருஞ்சோற்று உதியஞ்சேரல்″ என்ற கட்டுரையில் சுருக்கமாகச் சுட்டிக் காட்டியுள்ளோம் நானும் நண்பர் வெள்ளுவனும். கட்டுரை இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள், வானியல் என்ற நூலில் வெளிவந்துள்ளது.

அன்புடன்,
குமரிமைந்தன்.

1.6.08

பொய்யிலே பிறந்து....

தமிழக அரசின் வரவு - செலவுத் திட்டம் 2008 – 2009

தமிழ்நாட்டில் பேரவைக் கட்சி பெருமகனார் எசு.ஆர் பாலசுப்பிரமணியம் தவிர ஒருவரைக் கூட சிக்குன் குனியா எனப்படும் மொழி முறிச்சான் நோய் தாக்கவில்லை.
தமிழகத்தில் இந்த ஆண்டு மின்வெட்டே கிடையாது.
தமிழக அரசு போக்குவரத்து நிறுவனப் பேருந்துகளில் மறைமுகமாகவோ நேரடியாகவோ எந்தக் கட்டண உயர்வும் கிடையாது.

இது போன்று தமிழக மக்களுக்கு உள்ளங்கைப் புண்ணாகத் தெரிந்த ″உண்மை″களைக் கூறிய தமிழக அரசு முன்வைத்துள்ளது 84 கோடி மிச்சமாகக் காட்டும் ஒரு மீத, அதாவது ″உபரி″ வரவு செலவுத் திட்டத்தை.

″கெட்டிக்காரன் புளுகு எட்டே நாள்″ என்பது மிகத் தொன்மையான பழமொழி. இன்று அது எட்டு மணிநேரம் கூட நிலைக்கவில்லை. தினமணி 21-03-2008 நாளிதழின் நான்காம் பக்கத்தில் தமிழகத்தின் மொத்தக் கடன்தொகை 2008 – 09 ஆம் ஆண்டின் இறுதியில் உரூ 74,641.35 கோடியாக இருக்கும் என பணச் செயலர் கு.ஞான தேசிகன் கூறினார் என்று செய்தி வெளியாகியுள்ளது. 2007-08 ஆம் ஆண்டின் மொத்தக் கடன் தொகை உரூ 65,750.91 கோடியாம். ஆக, இந்த ஆண்டில் தமிழக மக்கள் மீது ஏறியுள்ள கடன் 74,641.35 - 65,750.91 = உரூ 8,890.44 கோடி ஆகும். ஆனால் இத்தொகை நடுத்தர கால நிதித் திட்டம் என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள அட்டவணையில் நிதி உபரி(+) / பற்றாக்குறை(-) (சரிக்கட்டப்பட்டவை) என்ற இன விளக்கத்தில் உரூ (-)9752.00 கோடி எனக் காட்டப்பட்டுள்ளது. அடிக்குறிப்பில் ″இவை சரிக்கட்டப்பட்ட எண்கள் என்பதால் இந்த மதிப்பீடுகள் நிதிக் கணக்குகள் மற்றும் ஆண்டு நிதி விபர அறிக்கையுடன் பொருந்தாது″ என்று தரப்பட்டுள்ளது.

நாம் ஒரு பணம் திட்டமிடல் வல்லுநர் அல்ல என்பதால் இதன் உண்மையான பொருள் நமக்கு விளங்கவில்லை. ஆனால் உரூ 9752.00 கோடி பற்றாக்குறை வ.செ.திட்டத்தை உரூ 84.00 கோடி மீத வ.செ. திட்டமாக சட்டமன்றத்தில் அரங்கேற்றியுள்ளனர். இதன் பொருள் இப்படியும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. இவர்கள் செலுத்த வேண்டிய கடன் தொகைக்குச் சமமாகக் கடனை வாங்கத் திட்டமிருப்பார்கள் என்று தோன்றுகிறது. அவ்வாறு செலுத்திய பிறகு நிலுவையிலிருக்கும் பழையகடனாகிய உரூ 65,750.91 கோடியுடன் கூடுதலாக 8890.44 கோடி நிகரக் கடன் வாங்கியிருக்கிறார்கள். அப்படியும் பற்றாக்குறையாக 9752.00 – 84.00 – 8890.44 அதாவது உரூ 777. 56 கோடியை வ,செ. திட்டத்தினுள் எங்கோ மறைந்திருக்கிறார்கள்.

ஆக, வெட்டவெளியில் மக்களின் முன்னால் நோய் பற்றியும் மின்வெட்டு பற்றியும் பேருந்துக்கட்டணம் பற்றியும் கூசாமலும் தயங்காமலும் அச்சமின்றியும் திமிராகவும் பொய் கூறியவர்கள், அரசியல் சட்டத்தின்படி ச.ம.உக்களும் பா.உ.க்களும் மிகப் பாதுகாப்பாகக் குற்றங்கள் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களில் ஒன்றில் இப்படி சட்டத்துக்கு உட்பட்டதாகக் கருதப்படும் அல்லது கணக்கீடு உத்திகளின் படி அமைந்த ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டதில் வியப்பில்லை. மாநில, நடு பேராளர் மன்றங்களில் நிகழும் குற்றச் செயல்களில் தலையிட நாட்டின் பொது சட்ட ஒழுங்கு துறைக்கு அதிகாரம் இல்லை அல்லவா? நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் வாக்களிக்க கைக்கூலி வாங்கியவர்கள் அவ்வாறு வாக்களித்தது அவர்களது கடமையும் உரிமையும்; அதில் தாங்கள் தலையிட முடியாது என்று நாட்டின் நயன்மையைக் காக்கும் உச்ச நிறுவனம் தீர்ப்புக்கூறி இதை உறுதி செய்யவில்லையா? பண அமைச்சரின் பெயரின் முன்னொட்டாகிய பேராசிரியர் எனும் மதிப்பை மட்டும் பகடி செய்யும் எதிர்கட்சித் தலைவருக்கு இந்த வ.செ.திட்டத்தில் உள்ள குறைகள் அல்லது ஓட்டைகள் தெரியாது என்று கூறிவிடுவதற்கில்லை. நேற்று தான் செய்தவை, மீண்டும் தான் செய்ய இருப்பவற்றை விளம்பரம் செய்து தன் தலையிலேயே மண்னை யாராவது அள்ளிப் போட்டுக் கொள்வார்களா? ஊழல் தொழில் நுட்பத்திலும் அறிவியலிலும் வல்லவர், ஊழல் கலையின் நடமாடும் பல்கலைக் கழகம் காட்டியுள்ள புதிய வழியில் ஆசானை மீஞ்சிய மாணக்கராக அவர் மிளிரப் போகிறார் என்பது உறுதி.

இனி, வ.செ.திட்டத்திலுள்ள சிறப்பான சில கூறுகளைப் பார்ப்போம். அமைச்சரின் உரையில் எல்லா இனங்களுக்கும் உரிய ஒதுக்கீடுகள் முழுமையாகத் தரப்படவில்லை. ″பணி தொடர்ந்து நடைபெறுகிறது″ என்ற வகையில் செல்கிறது உரை. இருப்பினும் கிடைத்த தொகைகளை வைத்துப் பார்க்கும் போது மொத்த மதிப்பீட்டில் உதவிகள், மானியங்கள், இலவயங்கள் 15 நூற்றுமேனி அளவுக்கு உள்ளன. ஏறக்குறைய 58 ஆண்டுகளுக்கு முன் ஒரு முழு உரிமை பெற்ற குடியரசாக மலர்ந்ததாகக் கூறப்படும் நம் நாட்டில் நாளுக்கு நாள் முதியவர்களும் கைம்பெண்களும் நல்லவர்களென்று எந்தக் கோணத்திலிருந்தும் மதிப்பிட முடியாத ஆட்சியாளர்கள் முன் கையேந்தி நிற்கும் நிலைமை ஏன் தொடர்கிறது? 37 ஆண்டுகளுக்கு முன் 1971 ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் முதல்நாள் நள்ளிரவில் திறந்து ஓடவிடப்பட்ட அரசின் சாராயத்துக்கு இதில் எவ்வளவு பங்கு? அரசின் சாராய வாணிகத்தில் வரி வருவாய் மட்டும் ஏறக்குறைய பத்தாயிரம் கோடி உரூபாய். அப்படியானால் அதன் விலை அதைப்போல் எத்தனை மடங்கு இருக்கும். அரசின் ஒட்டுமொத்த ″உதவிகள், மானியங்கள்″, ″இலவயங்கள்″ கிட்டத்தட்ட ரூ 7500 கோடி தான். மக்களின் வருவாயிலிருந்து இந்த ஒழுக்கு நிகழாமலிருந்தால் இவை தேவைப்பட்டிருக்காதே! மக்கள் எப்போதும் ஏழைகளாக இருக்க வேண்டும், அதாவது கிழவனும் சாகக் கூடாது, கட்டிலும் அதாவது மருத்துவமும் ஓயக்கூடாது. அந்த ஏழைகளைச் சிரிக்க வைத்து அதில் இவர்கள் பணமாகிய இறைவனைக் காண்பார்கள்; கொடைவள்ளல்கள் என்று போற்றவும் படுவார்கள். அன்பான அண்ணன் காட்டிய அழகான வழியில் அயராது உழைக்கும் அருமைத் தம்பிகளுக்கு நம் உளம் கசந்த சாபங்கள்.

குடியிருக்க வீடு கூட இல்லாதவர்களுக்கு கறவை மாடுகளாம். அவை இருக்கின்ற புல் பூண்டுகளையும் கறம்பித் தின்றுவிடும். இந்த மாடுகளை வாங்குவதிலும் வழங்குவதிலும் கட்டாயம் நல்ல வரும்படி கிடைக்கும், இலவய மிதிவண்டி, தொ.கா.பெட்டி, எரிவளி இணைப்பு ஆகியவற்றில் போன்று. இது ஒரு பக்கம் என்றால் உரூ. கோடி செலவில் மரம் நடப்போகிறார்களாம். என்றாவது மரம் வளர்த்தல் என்று இவர்கள் சொல்லி நாம் கேட்டிருக்கிறோமா?

இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம்.

நெசவாளர்களுக்குக் குடியிருப்புகள் என்று சொல்லி பிற மக்களோடு கலந்து வாழ்ந்து, வசதி உள்ளவர்கள் நகர் விரிவாக்கங்களில் புதிய மனைகளை வாங்கி கலந்து வாழத் தொடங்கியது பொறுக்காமலே அவர்களைப் பெயர்த்துத் தனிக் குடியிருப்புகளில் அமர்த்தினார்கள். அது போல் சமத்துவபுரங்கள் என்ற பெயரில் கட்டப்படும் வீடுகளில் ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனித் தொகுப்புகளை வழங்க அங்கும் வலுவிழந்தது வரும் சாதியத்துக்குப் புத்துயிரூட்டி வருகிறது இந்த அரசு. இதற்குக் காரணம் தமிழகத்தில் உருவான அரசுகளெல்லாம், மேல் சாதித் தலைவர்களிடையில் உருவான முரண்பாடுகளால் தற்செயலாக கட்சி, ஆட்சிப் பதவிகளில் அமர்ந்து விட்ட காமராசர் தவிர மேல்சாதியினரின் பிடியிலேயே இன்றும் இருந்து வருவதுதான். அத்துடன் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும் வள்ளல் என்ற பட்டத்தைப் பெறுவதற்கு மக்கள் மீது வரி கூட விதிக்காமல் அவர்கள் பெயரில் கடன் எடுத்து வட்டியையும் அவர்கள் தலைமேல் சுமத்தவும் முடிகிறதே!

சமச்சீர் கல்வியைப் புகுத்தி கல்வியில் புரட்சிகர மாற்றம் கொண்டு வரப்போகிறார்களாம்! உள்ள பள்ளிக்கே இருந்த ஆசிரியர் – மாணவர் விகிதத்தைப் பாதியாக்கி ஓய்வு பெற்ற ஆசிரியப் பணியிடங்களை உரிய காலத்தில் நிரப்பாது, காலாகாலத்தில் கட்டமைப்புகளை உருவாக்காது ஆசிரியர் சங்கங்களுக்கு அளவுக்கு மீறி செல்லம் கொடுத்து அவர்களைப் பிரித்து மோதவிட்டு எதற்குமே உதவாக்கரைகளாக அவர்களை ஆக்கிக் கெடுத்துக் கல்வித் துறையையே குட்டிச் சுவராக்கிவிட்டு அதற்கு மாற்றாக உயர் குடிப் பள்ளிகளை உருவாக்கிய பின் இப்போது அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் பள்ளிகளுக்கு இறுதி அடி கொடுக்க ″அங்கு மட்டும்″ ″சமச்சீர்″ கல்வியை அறிமுகம் செய்யப் போகிறார்களாம். அடித்தளத்திலிருந்தே புதிதாகக் கட்டியெழுப்ப வேண்டிய திட்டம் இது. பச்சிளம் குழந்தைகளில் இயல்பாக அமைந்திருக்கும் திறமையை இனம் கண்டு அதை மிகுக்கவும் அதே நேரத்தில் அதனிடம் பதுங்கியிருக்கும் குமுக வாழ்வுக்குப் பொருந்தாத பண்புகளைக் கண்டுபிடித்து அவற்றின் இடத்தில் குமுக மனிதனை உருவாக்கும் பண்புகளை நடவும் தேவைப்படும் பெரும் திறன்களை வளர்த்துக் கொண்ட ஆசிரியர்களைத் தொடக்க கல்வியில் புகுத்துவதிலிருந்து இதைத் தொடங்க வேண்டும். மேல் சாதியினரான ஆட்சியாளர்கள் இதைச் செய்வார்களா? அல்லது கல்வியாளர்கள் என்று தன் பட்டம் அடிப்பவர்கள் தாம் இதைப்பற்றிச் சிந்தீத்திருப்பார்களா? இதைப் பற்றி விரிவாக நாம் தனியாகப் பேசலாம்.

அனைவருக்கும் கல்வி, தொடக்கக் கல்வி அனைத்தும் அரசே பொறுப்பேற்க வேண்டும் என்ற கட்டாயத்துடன் செயற்பட்டாலன்றி இவர்கள் புகுத்தும் இந்தச் ″சமச்சீர்″ கல்வியால் தமிழக மக்களின் கல்வி நிலை இன்னும் ஒரு தலைமுறையில்18 ஆம் நூற்றாண்டில் போய் நிற்கும் என்பதில் ஐயமில்லை.

பள்ளிகளில் கட்டணங்களையும் சிறப்புக் கட்டணங்களை ஒழித்தாயிற்று. இதுவரை இந்தப் பணத்தில் இருந்துதான் பள்ளிக்குத் தேவையான விளையாட்டுத் தளவாடங்கள், நூலகத்துக்குத் தேவையான நூல்கள் போன்ற இன்றியமையாச் செலவுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள் தலைமையாசிரியர்கள். கட்டணங்கள் ஒழிக்கப்பட்ட நிலையில் இந்தச் செலவுகளை எதிர்கொள்ள அரசு எந்த ஒதுக்கீடும் செய்ததாகத் தெரியவில்லையே என்கின்றனர் கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள்.

1940களில் தமிழகத்தில் நெசவாளர்கள் பட்டினி கிடக்கிறார்கள் என்று திராவிட கழகத் தலைவர்கள் கைத்தறித் துணியைச் சுமந்து சென்று விற்று கட்சி வளர்த்தார்கள். மூன்று தலைமுறை ஆகியும் அவர்களுக்கு மாற்று வாய்ப்புகளை உருவாக்கி நெசவை முழுவதும் மேம்பட்ட தொழில் நுட்பத்தின் கீழ் கொண்டுவர எந்த முயற்சியும் எடுக்காமல் அவர்கள் எப்போதும் இவர்களை நோக்கி கையேந்தி நிற்கும் நிலையில் வைத்துவிட்டு மானியம், உதவி என்று பேசிவருகின்றனர். அவ்வாறே உழவன் நிலையும்.

உழவனுக்கும் நெசவாளிக்கும் வழங்கும் இலவய மின்சாரத்துக்கு அரசு மின்வாரியத்துக்கு ″மானியம்″ வழங்கிவிடுகிறது. அது போல் மாணவர்களுக்கான இலவய பேருந்து கட்டணத்துக்கும். அப்படி இருக்கும் போது பேருந்து வாங்கவும் மின்வாரியத்துக்கும் அரசு ஏன் தனியாக மானியம் வழங்க வேண்டும்? பொதுமக்கள் நடத்தும் பேருந்து நிறுவனங்களில் ஒவ்வொரு பேருந்திலிருந்தும் கிடைக்கும் வருமானத்திலிருந்து இரண்டாண்டுகளில் ஒரு புதிய பேருந்தை வாங்கி விடுகிறார்களே? அரசு நிறுவனத்திலிருந்து வரும் ஆதாயம் எங்கே போகிறது? அரசுடைமைக்காக ஊழிக் கூத்தாடும் பொதுமைத் தோழர்களே, உங்களுக்கு இதில் எவ்வளவு பங்கு? புதிதாக அமர்த்தப்பட்ட ஓட்டுநர், நடத்துநர் பணி இடங்களுக்கு உரூ. இரண்டு இலக்கத்துக்கும் மேலாகப் பறிக்கப்பட்டதே இதுதான் நீங்கள் கூறும் நிகர்மையா? இதையே பொதுமக்கள் செய்திருந்தால் 5 பேரிடம் வாங்கிய பணத்திலிருந்து ஒரு புது பேருந்து வாங்கி ஓட விட்டிருப்பார்களே!

கடன்களில் வெளிநாட்டு கடன்களாக உலக வங்கியிடமிருந்து 1286 கோடி உரூபாய்களுக்குச் செய்தி அமைச்சரின் உரையிலிருந்து கிடைக்கிறது. சப்பானின் பன்னாட்டு ஒத்துழைப்பு வங்கியிடமிருந்தும் செருமானியின் கடன் வழங்கு நிறுவனத்திலுமிருந்தும் பெற்ற கடன்களுக்குத் தொகைகள் இல்லை. நபார்டு வங்கியிலிருந்து 150 கோடியும்(உரையின் இப்பகுதியில் வேறு பல இடங்களையும் போல் செய்திகள் தெளிவாக இல்லை) தமிழ்நாடு நகர்ப்புறச் சாலைக் கட்டமைப்பு நிதியக் கடன் பத்திரம் மூலம் 853 கோடியும் உரூபாய்களை இனம் காண முடிகிறது.

எண்ணற்ற சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் புலனத் தொழில்நுட்ப வளாகங்கள் உட்பட பலவகை தொழில்நுட்ப வளாகங்கள் அமைப்பதற்கான செலவு அவற்றில் முதலிடுவோர் பற்றிய செய்திகளும் உரையில் இல்லை.

அரசு என்பது எப்போதுமே ஊழல் பதுங்கியிருக்கும் ஓர் இருள் மண்டபம். அதனைத் திருந்துவதென்பது கடினம். அது இல்லாமல் வாழ்கின்ற ஒரு வளர்ச்சி நிலையை மனிதன் இன்னும் எய்தவில்லை. இந்த நிலையில் அரசோடு குமுகம் வாழ வேண்டுமாயின் அதன் அதிகாரங்களை, குறிப்பாகப் பொருளியல் நடவடிக்கைகளை முடிந்த அளவுக்குக் குறைக்க வேண்டும். அதைத்தான் மார்க்சும் ஏங்கல்சும் ″அரசு உதிர்வது″ என்று கூறினர். ஆனால் அவர்கள் ″பாட்டாளியரின் ஓர் அரசு″ என்று கூறிய இடைநிலைக் கருத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு அரசைப் பேயாக வளரத் துணை நின்று உலகையே அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளனர் பொதுமைக் கட்சியினர்.

மக்களாட்சி என்பது மக்களின் பண்பாட்டை மேம்படுத்தும் ஒரு நடைமுறை. அங்கு ஒவ்வொரு மனிதனும் தன்மானம், தற்சார்பு, தன்னம்பிக்கை, பிறரை மதிக்கும் தன்மை பழிக்கு அஞ்சுதல் போன்ற பண்புகளை உடையவனாக மேம்பட்டு வர வேண்டும். ஆனால் நம் நாட்டிலோ தான் கண்காணித்து வழி நடத்த வேண்டிய ஆட்சியாளர் முன் அவன் எச்சிலுக்காக கையேந்தி நிற்பவனாக, ஏழைகளை மட்டுமல்ல, பணம் படைத்தவர்களைக்கூட, ஒரு வேட்டி சேலைக்காக, ஒரு வண்ணத் தொ.கா. பெட்டிக்காக, ஒரு எரிவாயு அடுப்புக்காக மகிழுந்தில் வந்து இரக்க வைத்துவிட்ட தி.மு.க. அரசின் அருஞ்செயலைப் போற்றி மகிழ்வோம்!

சாராயம், அதை ஈடுகட்ட உரூ 2/-க்கு அரிசி வழங்கி உழவனின் உச்சியிலடித்து கள்ள விலைக்கு வெளி மாநிலத்துக்கும் வெளிநாட்டுக்கும் கடத்தி விற்பது, அது போலவே இலவய வண்ணத் தொ.க.பெட்டி, அதையும் விற்றுக் கொடுக்க அமைப்பு, அடுத்து எரிவாயு அடுப்பிலும் அவ்வாறே தொடர இருக்கும் இது போன்ற பல்வேறு நலத் திட்டங்கள் என்ற பெயரில் நிகழும் பண வழங்கல்களில் கிடைக்கும் சிதறல்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, புதிதாகக் களத்தில் நுழைந்த திரை நடிகர்களின் கட்சி, அவர்களுக்குப் பின்புலத்தில் இருப்போர் ஆகியோரிடமிருந்தும், சமயங்களின் பெயரிலும் சாதிகளின் பெயரிலும் ″தொண்டு″ நிறுவனங்களுக்கென்றும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்தும் பாயும் கணக்கில்லாத கள்ளப் பணம், கருப்புப்பணம் அல்ல, அது சட்டப்படி ஈட்டப்பட்டு வருமானவரித் துறையினால் இழி பெயர் சூட்டப்பட்டது, மக்களிடையில் குறிப்பாக இளைஞர்களிடையில் புகுந்து, உழைப்பை மதிக்காத, எந்த நன்னெறிகளையும் புகட்டாத கல்வியுடன் சேர்ந்து பண்பாடறியாத ஓர் இளம் தலைமுறையை உருவாக்கி வைத்துள்ளது நமது ″சனநாயகம்″. மூத்தவர்களும் அதே மனப்பான்மைக்கு உள்ளாகி விட்டனர். அதனால் வேலை செய்வதற்கு இன்று ஆட்கள் கிடைக்கவில்லை. கூலியை எவ்வளவோ உயர்த்தியும் விளைந்த நெல்லை அறுக்கவும் தேங்காயை வெட்டவும் ஆள் இல்லாமல் விளைபொருட்கள் வீணாகின்றன. சக்கரவர்த்தித் திருமகள் என்ற திரைப்படத்தில் ஒரு பாட்டுப் போட்டியில் ″அன்ன சத்திரம் என்பது எதற்காக″ என்ற கேள்விக்கு ″சில திண்ண தூங்கிப் பசங்களுக்காக″ என்று கலைவாணர் விடை கூறுவார். இன்று அனைத்து சமய அனைத்துக் கோயில்களிலும் மதச்சார்பில்லாத அமைப்புகளிலும் அன்ன தானம் என்பது கள்ளக் கணக்கு எழுதி கொள்ளை அடிக்கும் ஒரே நோக்கத்துக்காக தவறாமல் இடம் பெற்று ஒரு பெரும் திண்ணை தூங்கிக் கூட்டம் உருவாகியிருக்கிறது. இவற்றிலும் மகிழுந்தில் வந்து உண்டு செல்வோரைக் காண முடியும். இவ்வாறு மக்கள் தொகையில் பெரும்பகுதியினர் புற்றுநோயின் கண்ணறைகளாக மாறி நிற்கின்றனர். அவற்றின் வெளிப்பாட்டை சாலையிலுள்ள தேநீர்க்கடையின் தொ.கா.பெட்டியில் குருவிப் பந்துப் போட்டி ஒளிபரப்பாகும் போது பார்க்கலாம். 28–03–2008 அன்று அதன் ஒரு குவியலைச் சேப்பாக்கம் திடலில் பார்க்க முடிந்தது. இந்த புற்றுநோய் கண்ணறைகளை எப்படி அகற்றுவது?

இந்தப் பண்பாட்டுச் சீரழிவை வளர்க்கும் இன்னொரு வ.செ. திட்டம் இது.

நடுவின் பண அமைச்சர் திருக்குறளை மேற்கொண்டது போலவே தமிழகப் பண அமைச்சர் தனக்கு நிலையான இரண்டாம் இடம் கொடுத்து வந்திருப்பதற்கு நன்றிக் கடனாக 1997 - 98 ஆம் ஆண்டு பணப் பொறுப்பையும் தானே நேரடியாகப் பார்த்த முதலமைச்சர் அப்போது அவை முன் வ.செ. திட்டத்தை வைத்த போது மேற்கொண்ட ஒரு திருக்குறளைச் சொல்லி தலைவர் வாழ்த்துப் பாடிவிட்டுத் தொடர்ந்திருக்கிறார். அந்தக் குறள் பா இதோ:

படுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து

இதில் எருமை மாடு கரடு முரடான பாதையில் பெரும் பாரத்தை இழுத்துச் செல்வது போல் ஆட்சியாகிய பாரத்தை மக்களின் நலன் என்ற ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு சுமப்பதாகப் பெருமிதப் பட்டாராம். ஆனால் இந்தக் குறளைப் படித்த உடன் எமக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. ஆண்டு முழுவதும் நீர் இருக்கும் குளங்களில் ஆழ் மதகை ஒட்டி ஆழமான சேற்றைக் கொண்ட வயலில் உழ முடியாது, ஏனென்றால் கலப்பையோடு உழவனும் சேற்றினுள் அமிழ்ந்து போவர். எனவே நெல்லை விதைத்துவிட்டு எருமையைக் கட்டி பரம்பு மட்டும் அடிப்பர். எருமை சேற்றில் நீந்திக்கொண்டே பரம்பையும் உழவனையும் இழுத்துச் செல்வது ஓர் அரிய காட்சி. இந்தக் குறளையும் படித்து இந்த வ.செ.திட்ட உரையையும் படித்தபோது அந்த எருமை இருக்கும் இடத்தில் மக்களும், குறிப்பாக உழவர்களும் உழவன் இருந்த இடத்தில் எருமை வடிவில் ஆட்சியாளரும் இருப்பதான ஒரு காட்சியே மனக்கண் முன் விரிகிறது.

மொத்தத்தில், வல்லரசியத்தின் ஓர் உறுப்பாக மாறிவிட்ட இந்திய ஆட்சியாளர்கள் – அவர்களது கூட்டாளிகள் நலனுக்காக வெள்ளையர்கள் வகுத்துத் தந்ததும் நம் பொதுமைப் ″புரட்சியாளர்″களால் நாறடிக்கப்பட்டதுமான இன்றைய வ.செ. திட்ட நடைமுறைகளை இதுவரை உள்ள பட்டறிவின் அடிப்படையில் மேம்பட்ட ஒரு தரத்தில் மாற்றி அமைப்பது உடனடித் தேவை.

(சிற்சில திருத்தங்களுடன் இக்கட்டுரை தமிழினி ஏப்பிரல்-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

புல்லுக்கிறைத்த நீர்!

நடுவரசின் வரவு - செலவுத் திட்டம் 2008 – 2009

2008 – 2009 ஆண்டுக்கான நடுவரசு வரவு – செலவுத் திட்டத்தை ″மரபுப்படி″ பிப்ரவரி மாதம் கடைசி நாளில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் அமெரிக்க ஆர்வார்டு பல்கலைக் கழகத்தில் பயின்றவருமான ப.சிதம்பரம் பாராளுமன்றத்தின் முன் வைத்துள்ளார்.

பாராளுமன்றமும் அதில் வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து ஒப்புதல் பெறுவதும் ஐரோப்பாவில், குறிப்பாக பிரிட்டனில் உருவான நடைமுறைகளாகும்.

தமிழ்நாட்டில் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில், அதிராசேந்திரன் என்ற சோழ அரசனை மக்கள் கொன்று கோயில்களைத் தகர்த்து பார்பபனப் பூசாரிகளை வெட்டி வீசிப் புரட்சி நடத்தியதற்கு அடுத்த நூற்றாண்டில், பிரிட்டனில் அரசன் தான் விதித்த வரிகளுக்கு நாட்டு மக்களின் இசைவைப் பெற வேண்டும் என்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பேராளர்களை வரவழைத்ததிலிருந்து இன்றைய பாராளுமன்ற மக்களாட்சிக்கு விதை ஊன்றப்பட்டது என்பர் வரலாற்று ஆசிரியர்கள்.[1] இதன் பொருள் அரசின் வரிவிதிப்புகளுக்கு மக்களின் இசைவைப் பெறுவதற்காகத்தான் பாராளுமன்றம் என்ற அமைப்பு தோற்றம் கொண்டது என்பதுதான். இதைத் தெளிவாகக் கூறுவதாயின் ஓர் அரசின் வரவுகள், செலவுகள் என்ற பணம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது பாராளுமன்ற மக்களாட்சியின் அடிப்படை. ஆனால் அரசே தொழில் - வாணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் இன்றைய சூழலில் இது இயல்கிறதா?

எடுத்துக்காட்டாக பெட்ரோலியம் எனப்படும் கன்னெய்யம் முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் விலையை ஏற்றுவதும் இறக்குவதும்(இது ஒரு கற்பனை, உலக ″மக்களாட்சி″ நடைமுறையில் இவை போன்ற அடிப்படைத் தேவைப் பொருட்களுக்கு விலை இறங்குவது என்பது நடைமுறையில் இல்லாத ஒன்று) மிஞ்சிப்போனால் அமைச்சரவையில் முடிவு செய்யும் ஒன்றுதானே ஒழிய பாராளுமன்றத்திலோ அல்லது வ.செ.திட்டத்திலோ முடிவு செய்யப்படுவதில்லை. உலகச் சந்தை விலை மாறுபாடுகளால் உள்நாட்டிலும் மாற்றங்கள் வருகின்றன என்று கூறுவதும் கடந்த காலங்களில் பொருந்தி வரவில்லை. எனவே பாராளுமன்றத்தின் முன் வைக்கப்படும் வ.செ. திட்டத்திக்குப் புறம்பாக அரசின் வரவு செலவு நடைமுறைகளை இயலச் செய்வதாக பொதுமைக் கட்சியினர் தங்கள் அருஞ்செயல்(சாதனை) என்று மார்தட்டிக் கொள்வதும் ஆனால் உண்மையில் அமெரிக்காவின் நிகர்மை அனைத்துலகியத்தின் செயல்திட்டத்தின்படி ″ஏழை″ நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டதுமான அரசுடைமையாக்கம் செயற்படுகிறது. இதன் மூலம் பாராளுமன்ற நடைமுறைகள் அனைத்துமே கேலிக்கூத்துகளாக இங்கு இழிவுபட்டு நிற்கின்றன. நிற்க,

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அனைவராலும், குறிப்பாக ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்டது உரூ.60ஆயிரம் கோடிக்கு வேளாண் கடன்கள் தள்ளுபடி என்பதாகும். ஆகா! உழவர் பெருமக்களின் துன்பங்கள் துயரங்கள் அனைத்துக்கும் இன்றோடு முடிவு கிட்டிவிடும் என்று எவரும் ஆறுதல் பெருமூச்சு விடவில்லைதான். இருந்தாலும் பணக்கார உழவர்களுக்குத்தான் ஆதாயம், ஏழை உழவர்களுக்கு இதனால் உண்மையான பயன் இல்லை என்று கூறுவதும் உண்மைதான். ஆனால் இதனை விடவும் கசப்பான உண்மை ஒன்று உண்டு. அது, இதனால் ஆதாயம் பெற இருப்பவர்களில் மிகப் பெரும்பகுதியினர் உழவர்களே அல்ல என்பதுதான்.

பொதுவாக வேளாண்மைக் கடன் என்பது குறுகிய காலக் கடன்களாக விதை, உரம், பூச்சிக் கொல்லிகள் என்ற வகையில் அறுவடை முடிந்தவுடன் விளைபொருளை விற்றுவிட்டுக் கடனை அடைப்பதாக இருந்தது. தொடக்கத்தில் வேளாண் விளைபொருள் உணவுத் தவசங்களின் விலையை முடிவு செய்யும் ஓர் அமைப்பாக வேளாண் விளைபொருள் விலை ஆணையம் உருவெடுத்து, உணவுப் பொருளை ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குக் கொண்டு செல்வதற்கு ஏன், வயலிலிருந்து வீட்டுக்குக் கொண்டு செல்வதற்குக் கூட தடைகள் ஏற்படுத்தப்பட்டு, உழவன் தன் விளைபொருளை எவரிடமும் விற்க முடியாமல் அரசு இசைவாணை(பெர்மிட்) வழங்கிய வாணிகர்களிடமே விற்க வேண்டும் என்ற நிலையும் இவ்வளவுக்கு மேல் இருப்பு வைக்கக் கூடாது என்ற தடையும் மான்குட்டியைச் சூழ்ந்து கொண்ட ஓநாய்களைப் போல் உழவனைச் சூழ்ந்து கடித்துக் குதறின. அவர்களுடைய எதிர்ப்புக் குரலை, அவர்களது ஓலத்தை அந்த ஓநாய்களுடன் சேர்ந்து கொண்டு எச்சிலுக்காக அலைந்து கொண்டிருந்த பொதுமைக் கட்சிகள் அமைத்த விவசாயத் தொழிலாளர் சங்கங்களாகிய நாய்களின் குரைப்புச் சத்தங்கள் எவர் காதுக்கும் எட்டாமல் அமுக்கின.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் போன்ற அமைப்புகளை உருவாக்கியது அரசு. இவை முற்றிலும் வாணிகர்களுக்கு உதவுபவையாயிருந்தன. உழவர்கள் தங்கள் விளைபொருளை நல்ல விலை கிடைக்கும் காலம் வரை இருப்பு வைத்திருந்து விற்பதற்கு இவை பயன்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் நம் ஏழை உழவர்களால் வருவாய்த் துறையினரிடமிருந்து இவர் உழவர் என்று சான்று வாங்க முடியவில்லை. ஆனால் வாணிகர்கள் எளிதில் பொய்ச்சான்று பெற முடிந்தது. அத்துடன் இந்தக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும் தவசங்களுக்கு 75% விலையை முன்பணமாக அரசு கொடுத்தது. எனவே ஒரு குறிப்பிட்ட தொகையை மூலதனமாக வைத்திருக்கும் அரசின் இசைவாணை பெற்ற ஒரு வாணிகன் மீண்டும் மீண்டும் தானியத்தை ஈடாகவைத்து 1+ ¾ + 9/16+ 27/64 + 81/256 அதாவது 1, 1¾, 2 ⁵/₁₆, 2⁴⁷/₆₄, 3 ¹³/₂₅₆ அல்லது கிட்டத்தட்ட 3 மடங்கு தவசத்தை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாங்கிக் குவிக்க முடியும். நிலவுடைமையாளர்கள் தங்கள் விளைச்சலை அல்லது வாணிகர்கள் அதை வாங்கிப் பதுக்குகிறார்கள் என்று பொதுமைக் கட்சியினர் கூக்குரலிட்டதன் விளைவாகவும் அதனால் உழவன் எதிர்கொண்ட சிக்கல்களுக்குத் தீர்வு என்று சொல்லி மேற்கொண்ட நடவடிக்கைகளாலும் அரசே வாணிகனை உருவாக்கி அவனது மூலதனத்தைப் போல் இரண்டு மடங்கு பணத்தை அவனுக்கு முன்பணமாகக் கொடுத்து மூன்று மடங்காகப் பெருக்கி அதைக் கொண்டு தவசத்தை வாங்கி அவன் இருப்பு வைப்பதற்கும் கட்டமைப்புகளை உருவாக்கிப் பாரமரித்து வருகிறது. இந்தியா ″வேளாண்மை சார்ந்த″ நாடல்லவா? அதனால் இதற்கெல்லாம் தேவைப்படும் பணம் எங்கிருந்து வந்தது? இந்த உழவன் வயலில் சிந்திய உயிர்த்துளிகளிலிருந்தல்லவா? எவ்வளவு கருணை உள்ள அரசு?

இவ்வளவு வஞ்சகங்களையும் தாங்கிக் கொண்டு இந்திய உழவன் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது உரூ 60,000 கோடியையும் தாண்டிய ஒரு கேள்வி. இது இருக்கட்டும்.

இதில் வங்கியில் கொடுக்கப்பட்ட கடன் உழவனுக்குத்தான் கிடைத்ததா? உழவனிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு, அனைத்தையும் ஆட்சியாளர்களிடம் பறிகொடுத்து வெறுங்கையனாக நிற்கும் அவனிடமிருந்து எந்த வித்தையைக் காட்டி வங்கிகள் பணத்தை மீட்கும்? அதனால் நகைக் கடனாகத்தான் வங்கிகள் தங்கள் வேளாண்மைக் கடன்களைக் கொடுத்தன. தாங்கள் பொதுமக்களிடமிருந்து பெறும் வைப்புகளுக்குக் கொடுக்கும் வட்டியை விடக் குறைந்த வட்டியில் வேளாண்மைக் கடன் என்ற பெயரில் நகைக் கடனைக் கொடுத்ததால் எஞ்சிய வட்டியை அரசே வங்கிக்குக் கொடுத்துவிடும். இது சென்ற ஆண்டுவரை இருந்த நடைமுறை. இந்த முறை முதலுக்கே நாமம்தான். தள்ளுபடி செய்த கடனை வங்கிக்குச் செலுத்துவது பற்றி பண அமைச்சர் எதுவுமே கூறவில்லை. கடன் பத்திரங்களைக் கொடுக்கக் கூடும் என்று ஒரு பேச்சு. அவற்றை வைத்துக்கொண்டு தொன்னை பிடித்துத் தேநீர் ஊற்றிக் குடிக்கவா?[2] வங்கியை எப்படி நடத்துவது? நம் பொருளியல் மேதை ப.சிதம்பரம்தான் விடை கூற வேண்டும். இந்தக் கடன்களில் மிகப் பெரும்பான்மை உழவர்கள் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டவை என்ற உண்மையையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வங்கிக் கடனால் உழவர்கள் தற்கொலை செய்யவில்லை; கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்கியவர்கள்தாம் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றொரு பெருங்குரல் எதிர்த்தரப்பிலிருந்து எழுந்தது. உடனே வேளாண்துறை அமைச்சர் சரத்பவார், கந்துவட்டிக்காரர் கடன்களை அரசே செலுத்திவிடும் என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். இதைப் பயன்படுத்தி அவருக்கும் அவரைச் சார்ந்த ஒரு கும்பலுக்கும் அரசுப் பணத்தைக் கொள்ளை அடிக்கும் வாய்ப்பு ஒன்று கனிந்திருக்கிறது. குருவிப் பந்து[3](கிரிக்கெட்) விளையாட்டில் கிடைப்பதை விட பெருமளவில் இது இருக்கும். இப்போது துணிச்சலாக அவரது கட்சியை அனைத்திந்திய அளவில் வளர்த்துவிடலாம்!

உழவனுக்குக் கடனெல்லாம் தேவையில்லை, அவனைப் பிணைத்து வைத்திருக்கும் விலங்குகளை அகற்றினால் போதும் என்று ஆட்சியிலிருக்கும் பெரிய தலைகளுக்கு தெரியாதா?

அறிவியல் இயக்கம் வைத்திருக்கும் திருவாளர் குருமூர்த்தி அவர்களுக்குத்தான் இவையெல்லாம் தெரியாதா? (தினமணி 09-03-2008 அரசியல் அரங்கம் பார்க்க.) அவருக்குத் தெரியும். ஆனால் வெளியே சொல்லமாட்டார். சொன்னால் அவரது கட்சி(பா.ச.க.) ஆட்சிக்கு வரும் போது விடை சொல்ல வேண்டியிருக்குமே!

இவர்களின் நோக்கம் உழவர்களைக் காக்க வேண்டுமென்பதல்லவே! வேளாண்மையை துண்டு துக்காணி நிலங்களில், காலங்கடந்துபோன உத்திகளில் நடைபெறுவதிலிருந்து விடுவித்து பெருந்தொழிலாக, குறிப்பாக, பன்னாட்டு நிறுவனங்களின், அம்பானி வகையறாக்கள் போன்றோரின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதல்லவா? அதற்காக ஏழை உழவர்களை ″அகற்றுவதற்கு″ இதைவிடச் சிறந்த வேறு வழியிருந்தால் நம் ஆட்சியாளர்களுக்குக் கூறுங்களேன்! அதற்கு முன் எதற்கும் நம் பொதுமைத் தோழர்களை ஒரு சொல் கலந்துகொள்ளுங்கள். அவர்களுக்குத்தான் ″நந்திகிராம பட்டறிவு″ உண்டே. அதிலிருந்து மேம்பட்ட உத்தி எதையாவது சிந்தித்து வைத்திருக்க மாட்டார்களா?

உள்ளூர் விசைகள் பெருங்கொண்ட வேளாண் பண்ணைகளை உருவாக்கும் வாய்ப்பை நிலச் சீர்த்திருத்தம், நில உச்சவரம்பு, வருமானவரி என்ற பெயர்களில் அழித்துவிட்டு இப்போது அயலாருக்கு விலைபேசி உள்ளூர் மக்களைக் கொன்று குவிக்கும் இவர்களுக்கு எதிர்காலம் என்ன தண்டனை கொடுக்கும்?

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம். அவ்வை கூறினாள். இங்கு நெல்லுக்கு என்று சொல்லி புல்லுக்கு மட்டும் நீர் பாய்ச்சியிருக்கிறார்கள் இந்தியாவை ஆளவந்தவர்கள்.

அடுத்து நம் கவனத்துக்கு வரவேண்டியது இந்தியப் பொருளியலின் வேரில் வெந்நீரை ஊற்றும் வருமானவரி. 1998 – 99 ஆம் ஆண்டு வ.செ.திட்டத்தில் வரி இல்லா வருமானம் உரூ 50 ஆயிரமும் வரையறைக் கழிவுகள் 25 ஆயிரமுமாக இருந்தவை இப்போது உரூ 1.5 இலக்கமாக ஆகியுள்ளதை உயர்வு என்று கொள்ள முடியவில்லை. இந்த இடைவேளையில் பண மதிப்பு வீழ்ச்சி பெருக்கல் ஏறுவரிசை(Geometrical Progression)யில் சென்று கொண்டிருக்கும் சூழலில் இந்த தொகை உண்மையில் முன்பிருந்ததைவிடக் குறைவுதான் என்று உறுதியாகக் கூறலாம் .

மொத்த வரவில் வருமான வரி 15% என்று கூறப்பட்டுள்ளது. இது நம்பும்படியாக இல்லை. நமக்கு ஐயம் என்னவென்றால் நம் ஆட்சியாளர்கள் ″சுக்ராம் வாய்ப்பாட்டை″ப் பயன்படுத்தி தங்கள் ஊழல் வருவாய் அனைத்துக்கும் ″வரி″ செலுத்திவிட்டு நல்ல பணம் ஆக்கிவிட்டார்களோ என்பதுதான். அம்பானிகள் கூட தாங்கள் பல்வேறு ஏமாற்று நடவடிக்கைகளால் சேர்ந்த பணத்தில் வரியைக் கட்டிவிட்டு சொத்து மதிப்பை உயர்த்திக் கொண்டார்களோ என்று தோன்றுகிறது.

வருவாயில் கடன் 14%உம் செலவு வகையில் கடனுக்கான வட்டி 21%உம். கடன் வாங்கியும் வட்டியைச் செலுத்தப் போதாத நிலை. இன்னும் சரியாகச் சொன்னால் செலவினத்தில் வருவாயுடன் பற்றாக்குறையையும் சேர்க்க வேண்டும். மொத்த வரவு 6,17,597 கோடியில் 14% என்பது உரூ 86,464 கோடி. மொத்தச் செலவு 7,50,884 கோடியில் 21% என்பது 1,57,686 கோடி. இவ்வாறு கடன் வாங்கும் தொகையைப் போல் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வட்டியாகச் செலுத்துகிறோம் என்பது விளங்கும். நாடு விளங்குமா?

இங்கு அரசு வாங்கும் கடன்களைப் பார்ப்போம். அவற்றில் உள்நாட்டுக் கடன்கள் எனப்படுபவை பணமாகச் செலுத்துபவை. ஆனால் வெளிநாட்டுக் கடன்களும் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற உலகக் கடன் நிறுவனங்களும் வழங்கும் கடன்கள் பணக் கடன்கள் அல்ல. அவற்றில் மிகப் பெரும்பான்மையும் காசாகக் கைமாறுவதில்லை. அனைத்தும் பண்டங்களின் பரிமாற்றமே.

நம் நாட்டில் இறக்குமதியாகும் முகாமையான பண்டங்கள் போர்த் தளவாடங்களும் கன்னெய்யமுமே(பெட்ரோலியமுமே). ஏறக்குறைய இரண்டு இலக்கம் கோடி உரூபாய் அளவுக்கு அவற்றின் இன்றைய மொத்த மதிப்பு. போர்த்தளவாடங்கள் வாங்கத் தேவைப்படும் அயல் செலவாணிக்கு இணையான உரூபாய் மதிப்பிலான தொகையை வரவு – செரவுத் திட்டத்தினுள் வரும் பாதுகாப்புக்கான ஒதுக்கீட்டிலிருந்தும் அந்தக் குறிப்பிட்ட கடன் நிறுவனங்களின் திட்டம் என்ற பெயரில் உள்நாட்டில் நடைபெறும் பல்வேறு திட்டங்களிலிருந்தும் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் என்னவோ அந்தக் கடன் நிறுவனங்கள் பெரிய மனது வைத்து நமக்கு இலவயமாக எல்லாவற்றையும் செய்வது போன்று நம் நாட்டு அரசுப் பொறியின் மீது பலவகையான கெடுபிடிகளைக் காட்டி உண்மைகளை அதனுள் புதைக்கப் பார்க்கின்றனர் நமது ஆட்சியாளர்களும் கடன்வழங்கு நிறுவனங்களும். ஆனால் மேலிடங்களுக்கு நிறையவே ஆதாயங்கள் உள்ளன.

இந்தக் ″கடன்″ வாங்குவதிலும் திருப்பிச் செலுத்துவதிலும் கொள்முதல் விலையையும் விற்கும் விலையையும் கடன்வழங்கு நிறுவனமே முடிவு செய்கிறது. நடப்பிலுள்ள சந்தை விலைக்கும் இந்த விலைகளுக்கும் நமக்கு இழப்பு வரும் வகையிலும் கடன் நிறுவனத்துக்கு கொள்ளை கொள்ளையான ஆதாயம் வரும் வகையிலும் ஏற்றத்தாழ்வு உண்டு. அதாவது நாம் வாங்கும் போது சந்தை விலையை விடப் பல மடங்கு கூடுதலாகக் கொடுக்கிறோம். விற்கும் போது சந்தை விலையின் ஒரு சிறு விகிதத்தைத்தான் பெறுகிறோம். எடுத்துக்காட்டாக 1990 ஆம் ஆண்டு சர்க்கரை கிலோவுக்கு உரூ10/- ஆக இருந்த போது சர்க்கரைப் பாகை கிலோவுக்கு வெறும் தொண்ணூறு காசுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்தோம். இந்தக் கொள்ளைக்கும் மேலாக வட்டி செலுத்துவது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத கயமை. அதாவது உரூ.12363.83 கோடி மதிப்புக்கு நம் நாட்டின் புதுப்பிக்க முடியாத, புதுப்பிக்கத் தக்க மூலப் பொருட்களையும் அவற்றிலிருந்து செய்யப்பட்ட பண்டங்களையும் கள்ள விலைக்கு அதாவது திருடர்கள் திருட்டுப் பொருட்களை விற்பதை விடவும் குறைவான ஒரு விலையில் விற்கப் போகிறார்கள், இந்த ஆண்டுக்குள் மட்டும்.

இவை எதுவும் நம் கண்ணுக்குப் படக் கூடாது என்பதற்காக அரசியல்வாணர்களும் ஊடகங்களும் பொய்யான உரூ. 60,000 கோடி வேளாண் கடன் தள்ளுபடியை ஊதி ஊதிப் பெருக்கிப் பெருக்கிக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆக, ஏழை உழவர்கள் பெயரில் எவரெவரோ உரூ 60,000 கோடியைக் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டாயிற்று.

உலக வங்கியை முதன்மையாகக் கொண்ட பெருங்கடன் நிறுவனங்களுடன் உரூ.12363.83 கோடிகள் கடனையும் வட்டியையும் செலுத்துவதற்கான அயற் செலவாணியை ஈட்டுவதற்கென்று பண்டங்களைக் கடத்திப் பங்கு போடுவதென்று திட்டமிட்டாயிற்று.

கல்வித் துறையினருக்கென்று என்ன செய்துள்ளார் ப.சிதம்பரம் என்று பார்ப்போம்.

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் கிட்டத்தட்ட 6,000 கோடி உரூபாய்கள்(34,400 - 28,674) கூடுதலாக ஒதுக்கியுள்ளனர். இது பணமதிப்பு வீழ்ச்சியை ஈடுசெய்யவே போதாது என்று தோன்றுகிறது. சரி, கிடைத்த பணத்தை வைத்து என்ன செய்வார்கள்?

தொடக்கக் கல்வியில் ″அனைவருக்கும் கல்வி″(″சர்வ சிக்சா அபியான்″ என்று வாசுபேயி ஆட்சிக் காலத்தில் பெயர் சூட்டப்பட்டது) என்றொரு திட்டம் உள்ளது. இதை வைத்துக்கொண்டு பள்ளிகள் இல்லாத இடங்களில் பள்ளிகளைத் திறந்து ஆசிரியர்களை அமர்த்தி கட்டடங்களைக் கட்டுவார்கள் என்று நினைத்தீர்களாயின் நீங்கள் ஒரு முழு முட்டாள். அடித்தட்டு மக்கள் கல்வியே கற்றுவிடக் கூடாது என்று நம் தெய்வத் தந்தையர் காட்டிவிட்டுச் சென்ற தங்கத் தடத்தை, ஒன்றரை நூற்றாண்டு ஆட்சியில் ஆங்கிலேயன் கலைத்துவிட்டுப் போன அந்த அரிய பாதையை அப்படியே அழிய விட்டுவிடுவார்கள் நடுவிலும் விளிம்பிலும்(மாநிலங்களிலும்) ஆள்கின்ற நம் அறத்தின் காவலர்கள் என்று நீங்கள் கற்பனை கூட செய்யத் துணியலாமா?

அப்படிப்பட்ட முட்டாள்தனங்களிலெல்லாம் நம் ஆட்சியாளர்கள் ஈடுபட்டுவிடவில்லை. ஊருக்கு ஊர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைத் திரட்டிப் பயிற்சி அளிப்பார்கள். பார்வையற்றவன் இன்னொரு பார்வையற்றவனுக்குப் பாதை காட்டுவது போல் எங்கிருந்தோ வந்த ஒருவர் ″ஆய்வுரை″கள் நிகழ்த்துவார். அவருக்கு அதற்கென்று கட்டணம் உண்டு. பயிற்சி பெறுபவர்களுக்கு உண்டியும் படிகளும் உண்டு.

கட்டடங்களும் கட்டுவார்கள். ஒரு பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் தேவையா என்று பார்த்துக் கட்டுவது முட்டாள்களின் செயல். எந்தப் பள்ளிக்கூடத்தில் கட்டடம் கட்ட இடம் இருக்கிறதோ அங்கு கட்டுவது கல்வியாளர் செயல்!

சரி, இந்தக் கட்டடத்தையாவது முறைப்படி மதிப்பிட்டு பொறியாளர் மேற்பார்வையில் செய்வார்கள் என்று எதிர்பார்க்கும் முட்டாளா நீங்கள்? ஏமாந்து போவீர்கள்! இத்தனை சதுர அடி, இத்தனை உரூபாய் என்று தில்லியில் இருந்துகொண்டு கூறுவார்கள், என்ன செய்வீரோ, தலைமையாசிரியரே உம் சமர்த்து!

ஆமாம்! பயிற்சி கொடுக்கிறார்களே அதை எப்படி நடைமுறைப் படுத்துகிறார்கள்? என்னய்யா இது! கிறுக்குத்தனமாக எல்லாம் கேள்விகள் கேட்டுக் கொண்டு? கல்வி மாநில அதிகாரம் அல்லவா? அவர்கள் உரிமையில் நாங்கள் தலையிடுவோமா? அதுவேறு, இதுவேறு, ஆமாம்!

உயர்கல்வி என்பது இதை விட உயர்வானதாகத்தானே இருக்க வேண்டும்! அப்படித்தான் இருக்கிறது. பாராட்டுவோம்! நிறைய கருத்தரங்குகள், மாநாடுகள் நடக்கும். போக்குவரத்துச் செலவு, தங்கும் இடம், இருக்கைப்படி, கட்டுரை படிக்கும் படி, மரக்கறி உணவினரா, புலால் உணவினரா நீங்கள்? கற்பனை செய்யமுடியா தரத்தில் உணவு. அப்புறம் கட்டுரைகளை நூலாக வெளியீடு. அதை அப்படியே மறந்து விட வேண்டும். ஆனால் பதவி உயர்வு, கல்வி அமைப்புகளில் பதவி பெறல் என்பவற்றுக்காக, ஒரு குறிப்பிட்ட கல்வியாளர் பங்கேற்ற கருத்தரங்குகளின் எண்ணிக்கைக்கு, படித்த கட்டுரைகளின் எண்ணிக்கைக்கு, கட்டுரைகள் வெளிவந்த புகழ் பெற்ற இதழ்கள் என்ற பட்டியலுக்கு கணக்குக் காட்ட இவை கட்டாயம் உதவும்.

அது மட்டுமா, பல்கலைக் கழகத்தில் ஆய்வு நூல்கெல்லாம் வெளியிடுவதைப் பொறுத்த வரையில் அவற்றில் பணி புரிவோருக்கு மட்டுமே அறிவின் மொத்தக் குத்தகை. ஆதலால் வெளியிலுள்ளோர் எழுதிய குப்பைகளை எல்லாம் பொதுப் பணத்தில் வெளியிட்டு வீணடிப்பதில்லை என்பதில் நாங்கள் மிக உறுதியாயிருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

என்னங்க இது, ஒரே அடியாகத் தாக்குகிறீர்களே? நம் நாட்டில் கல்வி கற்றவர்கள் உலகெலாம் புகழ்க்கொடி பறக்கவிடுவதைச் சோற்றினுள் பூசணிக்காயை மறைப்பதுபோல் மறைக்கப் பார்க்கிறீர்களே என்று நீங்கள் ஆத்திரமாகக் குமுறுவது தெரிகிறது. இந்த ஆங்கிலர்கள் செய்த கொடுமையால் விளைந்த கேடு இது. அதைச் சீர் செய்து நின்று நிலைத்துவிட்ட பழைய பார்ப்பனர்களையும், தலையெழுத்து என்ன செய்வது, இந்த ஐம்பதாண்டுக் காலத்தில் புதிதாக உருவாகிவிட்டு இன்னும் பூணூல் அணியத் தொடங்காத புதிய பார்ப்பனர்களின் பிள்ளைகளையும் தேற்றிக் கரையேற்றுவதற்கென்று கூடுதலாக இந்த ஆண்டில் 6000 உயர்தர ″மாதிரி″ப் பள்ளிகள் தொடங்க உரூ. 650 கோடி ஒதுக்கியிருக்கிறோமே பார்க்கவில்லையா?

ஐயா, ஊரக மக்கள் நலனுக்காக என்ன செய்யத் திட்டம் உள்ளது?

தெரியாதா? பத்து ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து பேரவைக் கட்சியின் தலைவராக இருந்து அருஞ்செயல் புரிந்தவர் சோனியா காந்தி. எங்கோ இத்தாலியில் பிறந்து இந்திய ஆளும் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு, ஊழ்வினையை என்னவென்று சொல்ல, மாமியாரும் கணவரும் அவரவரும் சொல்லி வைத்ததுப்போல ஆட்சியிலிருக்கும் போதே வன்கொலையாய் மாண்டுவிட வருங்கால மன்னனுக்கு மங்கம்மாவைப் போல காப்பாட்சியாளராக விளங்குவதை விடவா இது ஓர் அருஞ்செயல் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. இதோ என் மறுமொழி, வாழ்க பாரதம்! வாழ்க மக்களாட்சி! அத்தகையவரது கனவுத் திட்டமாக உரூ 16,000 கோடியில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதே! அரைச் சாண் அகலத்தில் 2½ அடி ஆழத்தில் (அப்போதுதான் நிறைய கான்கீரீட் போட முடியும்) சாய்க்கடைகளும் மூன்றரை அடி அகலத்தில் சாலைகளும் கண்ட இடங்களிலெல்லாம் செம்முந்துக் கான்கிரீட்டில் போட மலைகளை ஒவ்வொன்றாக உடைத்தும் ஆறுகளிலுள்ள மணலை எல்லாம் கொட்டியும் அமைத்துக் கொண்டிருக்கிறோமே! நம் குடிமக்கள் கண்டபடி எல்லாம் வீசும் குப்பைகள் தடுக்க கழிவுநீர் தேங்கி எழும் நறுமணத்தில் ஊரக மக்களெல்லாம் மனமும் அறிவும் மயங்கி இருக்கையில் அங்கு பெருகி வழியும் கொசுவளம் கடிப்பது எப்படித் தெரியும்?

ஆமாம் இதையெல்லாம் வடிவமைக்க பொறியாளர் யாரும் கிடையாதா? யாரது பொறியாளரா? அவர்கள் எல்லாம் எதற்கு? தேவையே இல்லை! எங்க ஐ.ஏ.எசு. கலெக்டர் துரைக்கு இதெல்லாம் தெரியாதாக்கும். இப்போதானே அவரைப் பார்த்து கவனிச்சி கைகுலுக்கி விட்டு வருகிறேன்!

நீங்க இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தால் எப்படி? போன தேர்தலில் நாங்கள் எல்லாரும் எங்கள் கட்சியும் சும்மாவா அவ்வளவு பணம் செலவு செய்தோம்? அப்புறம் அடுத்த தேர்தலுக்கெல்லாம் சேர்க்க வேண்டாமா?

இனி, இறுதியாக, வரி விதிப்பு என்று கூறுகிறார்களே அதைப் பார்ப்போம். சாணக்கியன் எனப்படும் கவுடில்லியன் கூறியிருக்கிறானாம், அரசானது பூவிலிருந்து வண்டு தேனை உறிஞ்சுவது போல் பூவுக்கு நோவாமல் வரியைத் தண்ட வேண்டுமாம். பூவுக்கு வலிக்குமா என்று நமக்குத் தெரியவில்லை. இயான் பிளமிங்கைக் கேட்டுப் பார்ககலாம். அவருடைய புதினம் ஒன்றில் சேம்சு பாண்டு இதே கேள்வியைக் கேட்கிறார் தன் காதலியை நினைத்துக் கொண்டு. அது கிடக்கட்டும் சாணக்கியனிடம் வருவோம். அரசின் வருவாய்க்குத் கள் வாணிகத்தையும் பரத்தைத் தொழிலையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சத்திரகுப்த மெளரியன் காலத்தில் செயல்படுத்தினானாம். பண்டை இந்தியா என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து நியூசெஞ்சரி புத்தக நிலையம் வெளியிட்டுள்ள டி.டி.கோசாம்பியின் நூல் கூறுகிறது. இவ்வளவையும் செய்துவிட்டு சந்திரகுப்தன் போகிற வழிக்குப் புண்ணியம் தேடி சமணத்தில் சேர்ந்துவிட்டான்.

நம் ஆட்சியாளர்கள் தவறாமல் இந்த இரண்டு தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டாவது தொழில் எப்படி என்கிறீர்களா? அது தான் சுற்றுலா! வெளிநாட்டுக்காரர்களுக்குக் கூட்டிக் கொடுக்கும் தொழில்தானே அது?

வரி விதிப்பை விட்டு விலைமகளிரின் வரிப்பாடல்களைக் கேட்கச் சென்றுவிட்டோம். பொறுத்தருள்க.

மக்களை நோகடிக்காமல் தண்டுகின்ற வரியை மறைமுக வரி என்றும் அவர்களைத் துன்புறுத்தி ஆட்சியாளர்கள் தங்கள் அதிகார வெறியையும் ஆட்சித் தினவையும் பணப் பசியையும் ஊழல் உறுத்தலையும் தணித்துக் கொள்ளப் பயன்படுவது நேரடி வரிகள் என்றும் கூறுவர். அதிலும் மிகக் குறிப்பாக வருமான வரி. நிலவரி, சொத்துவரி, போன்றவை திட்டவட்டமான அளவைகள், தரப்படுத்தல்கள் கொண்டு உறுதியான தளத்தில் நிறுவப்பட்டவை. சுங்க வரி என்பது ஓரளவு சரியாக மதிப்பிடத்தக்கதாகும். ஆனால் வருமான வரியை மதிப்பிடுவது இயலாதது என்றே கூறிவிடலாம். அதையே காரணமாக வைத்து வீட்டினுள் பகல் கொள்ளையர்கள் போல் புகுந்து வாயில்களில், ஏன் புகைபோக்கியில் கூட ஆட்களை நிறுத்தி, தொலைபேசிகளை முடக்கி, கட்டிலை, மெத்தையைக் கிழித்து பேழைகளையும் பெட்டிகளையும் சுவர்களையும் தளங்களையும் உடைத்துப் பார்க்கும் காட்டுவிலங்காண்டித்தனமான ஒரு வரிவிதிப்பை நாகரிகம் படைத்ததாகக் கூறப்படும் 21ஆம் நூற்றாண்டு உலகில் தொடர வேண்டுமென்பது எந்தப் பகுத்தறிவு அல்லது மக்களாட்சியின் பால் பட்டதென்று எமக்கு விளங்கவில்லை.

பண்டைத் தமிழ் இலக்கியங்களில் வரும் பொற்கைப் பாண்டியனின் கதை பண்டைத் தமிழர்கள், அவர்களது எல்லாக் குறைகளையும் மீறி மனித உரிமைகளை குறிப்பாக, மக்களது தனி வாழ்க்கையில் தலையீடு குறித்த ஓர் உயர் பண்பை எவ்வாறு போற்றினர் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. கணவன் வெளியூர் சென்ற வீட்டில் ஆடவன் குரல் கேட்க, கதவைத் தட்டிய அரசன் உள்ளிருப்பவன் ஊர் திரும்பிய கணவன் என்பதறிந்து மறுநாள் முறையீடு வந்ததும் கையை வெட்டிக் கொண்டான் என்ற இந்த நிகழ்ச்சிக்கு ஈடாக மனித வரலாற்றில் ஒன்றைக் கூட கூற முடியாது. ஒருவேளை இது கற்பனையாகவே இருக்கட்டும். இப்படி ஒரு கற்பனை செய்வதற்கும் ஒரு பண்பாட்டுப் பின்புலம் வேண்டுமே! நம் பொதுமைத் தோழர்களிடம் கேட்டால், கழகக் கால இறுதியில்தான் தமிழர்கள் ″இனக்குழு″ நிலையிலிருந்து நாகரிகக் கட்டத்தின் நுழைவாயிலில் கால் வைத்திருந்தார்கள் என்பார்கள்.

நேர்மையாளர்களான மார்க்சுக்கும் ஏங்கெல்சுக்கும் இந்திய மரபுகளை ஆழமாகப் பயில வாய்ப்பிருந்திருந்தால், இவர்கள் ″இனக்குழு″ என்று குறிப்பிடும் குக்குலக் காலத்திலேயே நாகர்கள் எனும் குக்குலத்தைச் சேர்ந்த தெக்கன், காலன், இயமன் முதலியோர் வானியலின் அடிப்படையை நிறுவிவிட்டனர் என்பதை அறிந்து மனிதனின் நாகரிக வளர்ச்சியைப் பற்றி வேறு வகை முடிவுக்கு அவர்கள் வந்திருப்பர். அப்படி வந்திருந்தால் இன்றைய பொதுமைத் தோழர்களில் பலர் அந்தப் பக்கமே எட்டிப் பார்த்திருக்க மாட்டார்கள். மார்க்சியமும் உலகமும் தப்பியிருக்கும்.

காட்டுவிலங்காண்டிகள் கூட எண்ணத் துணியாத வகையில் மதிப்பீடு செய்வதற்கென்று குடிமக்களை இழிவுக்கும் கொடுமைக்கும் ஆட்படுத்தும் வருமான வரியை நம் தோழர்கள் அதுவொன்றே புரட்சிக்கு வழி என்று கூறுவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதை மறுத்துப் பேசும் நாகரிக உணர்வுள்ள ஒரு ஒற்றை அறிவு″சீவி″ கூட இல்லையே என்பதைத்தான் நாம் இங்கு சொல்ல வந்தது.

இந்த நிலையில் நம் பண அமைச்சர் மறைமுக வரிகளைக் குறைத்துவிட்டு காட்டுவிலங்காண்டித் தனமான நேரடி வரிகளை கூட்டியிருப்பது நம்மை ஆளும் அரசியல் சட்டம் சுட்டும் நாகரிக வளர்ச்சிக் கட்டத்தைத் தெளிவுறக் காட்டுகிறது.

வரி விதிப்பைப் பற்றிய ஓர் அடிப்படைக் கேள்வி. ஏன் அனைத்து வரிகளையும் ஒரே குறிப்பிட்ட விகிதத்தில் வைத்திருந்தால் என்ன? ஒரு வேளை வரி வருமானம் போதாமல் இருந்தால் ஒட்டுமொத்த வரி விகிதத்தையும் உயர்த்தினால் போதுமே!

அதுபோல் அந்த ஒட்டுமொத்தமான விகித்ததில் மாற்றம் ஏற்படுத்துவதாய் இருந்தால் அதை முன் கூட்டியே மக்களுக்கு விளக்கிவிடலாமே! ஏன் கமுக்கமாக வைத்திருக்க வேண்டும்?

ஓகோ, பணக்காரர்களுக்குக் கூடுதல் வரி விதித்து ஏழைகளைக் காப்பாற்றுகிறோம் என்கிறீர்களா? ஆமாம், செல்வத்தைப் படைப்பவன் அடித்தட்டு மனிதன் தானே, பணக்காரனுக்கு வரிவிதித்தால் அதைக் காட்டி அதைவிடக் கூடுதல் ஒரு மடங்கு ஏழையைப் பணக்காரன் சுரண்டி விடுவானே! தோழர்கள் பரிந்துரைத்த வருமான வரியை இதுவரை வந்த அரசுகள் முடிந்த அளவு காட்டுவிலங்காண்டித்தனமாகத் தண்டியும் இரு கோடியில் உள்ளோருக்கும் இடைவெளி விரிந்து கொண்டிருப்பது நடந்திருக்கக் கூடாதே!

அதுபோல் அந்த ஒட்டுமொத்தமான வரி விகிதத்தில் மாற்றம் ஏற்படுத்துவது எப்போதாவது தேவைப்பட்டால் அதை முன்கூட்டியே மக்களுக்கு விளக்கிவிடலாமே? வாணிகர்கள் விலையை ஏற்றிவிடுவார்கள், பதுக்கிவிடுவார்கள் என்பது கையாலாகாதவன் சொல் அல்லவா?.

இப்படி வரிகளைக் கமுக்கமாக மாற்றும் போதும் அது ″எப்படியோ″ தொடர்புடைய துறையினருக்கு மட்டும் தெரிந்து அப்பண்டங்களைப் பதுக்கிவைத்துக் கொள்ளையடிக்கிறார்களே, அது எப்படி?

இன்னொன்று, வ.செ. திட்டத்தை அவையின் முன் வைக்கும் போது உள்ள சில வரிகளை இறுதியில் குறைக்கவோ அல்லது முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ செய்கிறார்கள். ஆனால் வ.செ. திட்டத்தை அமைச்சர் படித்த உடனேயே குறிப்பிட்ட துறையினர் விலைகளையோ கட்டணங்களையோ உயர்த்தி விடுகிறார்கள். வரிவிதிப்பைக் குறைக்கவோ அல்லது நீக்கவோ செய்த பின்னர் உயர்த்திய விலை அல்லது கட்டணம் மட்டும் குறைவதில்லை. இது என்ன மாயமோ? நம் ஆட்சியாளர்களுக்கு இவற்றை எல்லாம் புரிந்துகொள்ளும் அறிவில்லையா, அல்லது நமக்கா?

உண்மையான காரணம் என்னவென்றால் ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் முறைப்படி வாதிட்டு, ″ஒதுக்கீடுகளை″ மாற்ற, திருத்த இடம் கொடாமல் வரவு – செலவுத் திட்டம் நிறைவேறும் கடைசி அரை நாள் தவிர கத்தி, கூச்சலிட்டு ஒத்துழைக்க வேண்டுமானால் அவர்களைக் கவனிக்க வேண்டாமா? அதற்கு தொழில் – வாணிகத் துறைகளைச் சேர்ந்த ஒவ்வொரு தரப்பினரும் பணத்துறையுடன் ″இடைகழியாட்டம்″(lobbying) நடத்த வேண்டாமா? அதற்குத்தான் ஒவ்வோர் ஆண்டும் வரி வீதங்களை, ஒவ்வொரு இனத்துக்கும் வேறு வேறாக மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த ″இடைகழியாட்டம்″ பற்றி நம் பண அமைச்சரே குறிப்பிட்டுள்ளார். (பார்க்க தினமணி 14-6-1998.)

ஒரேயடியாக நம் பண அமைச்சரை இப்படிக் குறை கூறிவிட்டாயே என்று கேட்கிறீர்களா? தப்புதான். அவர்தான் என்ன செய்வார், மக்களாட்சி என்ற ஒய்யாரமான பெயரில் வாக்குப் பெட்டி அரசியலில் இப்படித்தான் செய்ய முடியும், செய்ய வேண்டும். சரியாகத்தான் செய்வேனென்று அடம்பிடிக்கும் எந்தப் பயலும் அந்த இடத்துக்குப் போக முடியாது.

இருந்தாலும் நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. கடந்த சில பத்தாண்டுகளாக பாராளுமன்றக் கூட்டங்களில், அதுவும் குறிப்பாக வ.செ. திட்ட அமர்வில் பண அமைச்சர் திட்ட அறிக்கையைப் படித்து முடித்த பின்னர் திட்டமிட்டுச் சொல்லிவைத்தது போல் கூச்சலும் கொந்தளிப்பும் உருவாகி கடைசி நாள் முற்பகல் வரை தொடரும். ஆனால் அதற்குப் பிறகு அனைவரும் நல்ல பிள்ளைகளாய் வ.செ.திட்டம், பணச் சட்ட வரைவு ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு கை உயர்த்துவதற்கு மட்டும் தடங்கலிராது. அண்மைக் காலங்களில் பிற அமர்வுகளும் இவ்வாறுதான். கடைசி நாளின் இறுதி மணித்துளிகளில் தீர்மானங்களைப் படிக்கக் கூட நேரமின்றி அவற்றின் எண்ணிக்கையைச் சொல்லி நிறைவேறியனவாக அறிவிப்பது மிக இயல்பான நடைமுறையாகிவிட்டது. பஞ்சாயங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இன்று இதில் உள்ள அடிப்படை வேறுபாடு, பஞ்சாயத்தில் எழுத்தர் தீர்மானங்களை நிகழ்வுக் குறிப்பேட்டில் எழுதி அதை எடுத்துக்கொண்டு ஒவ்வோர் உறுப்பினர் வீட்டுக்கும் சென்று அவருக்கு உரிய பங்கை ″வெட்டி″ கையெழுத்து வாங்கி வருகிறார் எனபதுதான்.

வெண்சுருட்டுக்கு வரி விதித்திருக்கும் கொடுமை பார்த்தீர்களா, ஏழை குடிக்கும் எளியவற்றுக்கு வரியாம் என்று கேட்கிறீர்களா? பாட்டாளிகள் கள்ளச் சாராயம் குடிக்கக் கூடாது என்று விடாப்பிடியாகப் போராடி அனைவரும் நல்ல சாராயம் குடிக்க வைத்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய இடது பொதுமைக் கட்சியின் கூட்டணி அரசு, தப்பு தப்பு அணைப்பிலிருக்கும் அரசு செய்தது சரிதானே! இதன் மூலம் பாட்டாளிகளின் வாழ்க்கைத் தரம் உயர்வது உங்களுக்குப் புரியவில்லையா? அல்லது பிடிக்கவில்லையா? உங்களைப் பாட்டாளியரின் எதிரி என்று முத்திரை குத்திவிடப் போகிறார்கள். இன்னொன்று, இந்த வரியைப் பற்றியே பேசிவிட்டு மற்ற வரிகளைக் கவனிக்கமாட்டார்கள் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையே!

விற்பனை வரியைக் குறைத்திருக்கிறார்களாம். ஆனால் பண்டப் பரிமாற்ற வரி என்ற புது வரியை அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் உதிரிகளாக பல பத்தாயிரம் கோடிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதை வைத்துத்தான் இந்த வ.செ. திட்டத்தைத் தேர்தல் வ.செ. திட்டம் என்று எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின. மருமகள் உடைத்தால் பொன் குடம்!

ஆனால் இந்த நலத் திட்டங்களுக்கு எந்த வரைமுறையும் இல்லாமல் போய்விட்டது. ஒரு பயனாளிக் குழுவுக்குப் பத்து முனைகளிலிருந்து உதவிகள். ஆனால் அவை அனைத்தையும் பெறுவது அந்தக் குழுவில் ஒரு மிக மிகச் சிறு கூட்டம்தான். ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை தாங்கள் செய்ததை விளம்பரப்படுத்தி மக்கள் குழுக்களிடையில் பகைமையை மூட்டுவது ஓர் ஆதாயம் என்றால் ஒதுக்கீட்டில் தங்களுக்கென்று பெரும்பகுதியை ″ஒதுக்கி″க்கொள்வது உண்மையான ஆதாயம். சிறுபான்மையருக்கு என்று நலத் திட்டம் தனியாக ஒதுக்கிவிட்டார்கள் என்று பா.ச.க. உரக்கக் கூச்சல் போடுகிறது. இதில் அதற்கு உண்மையில் ஆதாயம் இருக்குமா? குசராத்து வாய்ப்பாடு அப்படியே எல்லா இடங்களிலும் செல்லுபடியாகுமா?

அனைத்து மக்களுக்கும் ஒரே அடிப்படையில் பயனளிக்கத் தக்கவாறு நல்ல முறையில் திட்டமிட்டு செயல்முறையில் நன்கு கண்காணிக்கப்பட்ட நலத்திட்டங்கள்தாம் நமது தேவை. அதை நடைமுறைப்படுத்த இன்றைய நம் ஆட்சியாளர்களால் இயலுமா என்ற கேள்விக்கு நம்பகமான ஒரு விடை நமக்கு இல்லை.

ஒய்யாரக் கொண்டையிலே தாழம் பூவாம் அதன் உள்ளே இருக்கிறது ஈரும் பேனும்

இன்னும் கூறவேண்டியது நிறைய இருக்கிறது. வரிகளைப் பற்றியே வரிவரியாகக் கூறலாம். தமிழினி ஆசிரியர் இடமில்லை என்று கையை விரித்துவிட்டார். இருந்தாலும் ஒரு குறளைக் கூறி முடித்து விடுகிறேன், ஏனென்றால் திரு.ப.சிதம்பரம் ஒவ்வொரு முறை வ.செ. திட்டம் படிக்கும் போதும் ஒரு குறளையும் ஒரு பெருமகனாரின் சொல்லையும் மேற்கொள் காட்டுவாராம். ″சிதம்பரமும் மேற்கோள்களும்″ என்ற தலைப்பில் தினமணி ஒரு செய்தியை 01-03- 2008 அன்று தந்துள்ளது.

என் பங்குக்கு நம் நாட்டுச் ″சொலவடை″ ஒன்றை மேலே தந்துவிட்டேன். அடுத்து குறள், ஒன்றுக்கு இரண்டாகவே தருகிறேன்!

வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

இரண்டாவது குறளுக்குப் பொருள் தெளிவு. முதல் குறளுக்குக் கொஞ்சம் சிக்கல்.

ஆட்சி அதிகாரத்தோடு வரி தண்டுவதற்கு நம் வீட்டு வாசலில் வந்து நிற்கும் அரசுக்கும் அல்லது அரசு அதிகாரிக்கும் செல்லும் வழியில் துப்பாக்கியைக் காட்டி மறித்துக்கொண்டு நிற்கும் வழிப்பறிக்காரனுக்கும் வேறுபாடு இல்லையாம். ஆக, அவர் காலத்திலும் இப்படிப்பட்ட அரசர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறதே!

(சிற்சில திருத்தங்களுடன் இக்கட்டுரை தமிழினி ஏப்பிரல்-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

அடிக்குறிப்புகள்:

[1] Dynamic Europe – A Background of Ferment and Change – British Constitutionalism – C.F.Strong, Hodder and Stoughton Ltd, University of London, London 1945.

[2] குமரி மாவட்டத்தில் ′இத வச்சிக்கிட்டு கூப்பனி கோரி குடிக்கவா?′ என்று கேட்பார்கள். கூப்பனி=கூழ்ப் பதநீர் – காய்ச்சிய பதநீரில் கருப்புக்கட்டிக்கு முந்திய பதம், கோருதல்=முகத்தல்

[3] கிரிக்கெட்(cricket) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு குருவி அல்லது பூச்சி என்பது பொருள். தமிழ்நாட்டில் ஊர்ப்புறங்களில் மிக அண்மைக் காலம் வரை விளையாடப்பட்டு இன்று கிரிக்கெட்டால் அகற்றப்பட்டுள்ள விளையாட்டு ″கெட்டிப்புள்″, ″கட்டாம்புள்″ எனப்படுவது. புள் என்ற சொல்லுக்கு குருவி என்பதே பொருள். இவ்விரண்டு விளையாட்டுகளிலும் பொதுவான பல கூறுகளைக் காணமுடியும்.

உலகத்தின் கூரையிலே விரிசல்

அண்மைக் காலத்தில் திபேத் மீண்டும் ஒரு முறை உலகத்தின் கவனத்தைத் தன்பால் ஈர்த்துள்ளது. 1959இல் தலை லாமா இந்தியாவுக்கு ஓடி வந்ததும் அவருக்கு இந்தியா அரசியல் அடைக்கலம் வழங்கியதும். ″இந்தி - சீனி பாய் பாய்″ என்று கட்டி அணைத்துக் கொண்டு இந்தியாவுக்கு நட்பு வருகை தந்த சீனத் தலைவர்கள் இந்தியா மீது சீனத்தின் ″மக்கள் விடுதலைப் படை″யை ஏவியதும், அதனால் இந்தியப் பொதுமைக் கட்சியில் ஒரு சாரார் சீனத்துக்குச் சார்பாகக் குரலெழுப்பியதும் அதனால் கட்சிக்குள் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்ததும் இறுதியில் சீனச் சார்பாளர் பிரிந்து இந்திய மார்க்சியப் பொதுமைக் கட்சியை அமைத்ததும் போர் முடிவில் சீனம் இந்திய எல்லைக்குள் புகுந்து கணிசமான பரப்பைக் கைப்பற்றித் தன் வசம் கொண்டு சென்றதும் பழங்கதைகள்.

இந்தியாவைப் பொறுத்தவரை திபேத் ஒரு தனிநாடு, அதைக் கைப்பற்றியது இந்தியாவும் சீனமும் வகுத்துக் கொண்ட பஞ்ச சீலக் கொள்கைக்கு முரண்பட்டது என்பது நிலை. சீனமோ வரலாற்றில் திபேத் சீனத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. தலை லாமா சீனக் குடிமகன். எனவே எங்கள் நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல் தலைவருக்கு இந்தியா அரசியல் அடைக்கலம் கொடுத்தது எங்கள் உள்நாட்டுச் சிக்கல்களில் தலையிடுவதாகும் என்று வாதிட்டது. தலை லாமா தொடர்ந்து இந்தியாவிலேயே தர்மசாலா என்ற இடத்தில் ஒரு நாடு கடந்த அரசை நடத்தி வருகிறார்.

இந்த நிகழ்வுகளில் உள்ள வரலாற்றுப் பின்னணியைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

உலகின் மனிதன் வாழும் பீட நிலங்களில் மிகுந்த உயரத்தில் உள்ளது திபேத். அதன் சராசரி எழுமம் 4900 மீற்றர்கள் - 16,000 அடி. எனவே அதனை உலகத்தின் கூரை என்று அழைக்கின்றனர். இதனை நடு ஆசியாவின் ஒரு பகுதி என்று சிலரும் தெற்காசியப் பகுதி என்று இன்னொரு சாரரும் கூறுகின்றனர்.

திபேத்தில் வழங்கும் ஒரு பழங்கதை, கடல் மேலெழும்பி வந்துகொண்டிருந்ததாகவும் அப்போது கடவுள் வங்கத்தில் உடைப்பை உண்டாக்கி நீரை வடியவிட்டதுடன் நாகரிகம் மிக்க மக்களை விட்டு குரங்கு மனித நிலையிலிருந்த தங்களுக்கு நாகரிகம் கற்பித்ததாகவும் கூறுகிறது. இது இந்திய நிலத்துண்டு தெற்கிலிருந்து ஆசியப் பகுதி நோக்கி வந்து அதனுடன் மோதி இமயமலையை உருவாக்கிய புவி இயங்கியல் நிகழ்வை நமக்கு நினைவூட்டுகிறது. இவர்கள் கூறும் கடல் டெத்தீசு கடல் என்று புவி இயங்கியலாளர்கள் குறிப்பிடும் கடலாகலாம். வங்காளத்தில் உடைப்பெடுத்துச் சென்ற இடமே இன்றைய கங்கைக் கழிமுகமாக உருவாகி இருக்க வேண்டும்.

இந்தப் புவி இயங்கியல் நிகழ்ச்சி நடந்தது ஏறக்குறைய 8.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்று இந்த ஆண்டு எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் நூல் கூறுகிறது.

இந்த நிகழ்வைத் திபேத்திய மக்கள் கண்டிருப்பதால் 8.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உலகில் நாகரிகம் உள்ள மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று கொள்ள முடியுமா?

திபேத்தியப் பழங்கதை பற்றிய செய்தி திரு.சு.கி. செயகரன் என்பார் எழுதியுள்ள குமரி நில நீட்சி என்ற நூலில் உள்ளது.
திபேத்தை கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து 11 ஆம் நூற்றாண்டு வரை அரசர்கள் ஆண்டுள்ளனர். சில வேளைகளில், அவர்களின் ஆட்சி தெற்கே வங்காளத்திலிருந்து வடக்கே மங்கோலியா வரை பரந்திருக்கிறது. இப்பகுதிகளில் வலிமையான அரசர்கள் இன்றி வெறும் குறுநில மன்னர்கள் ஆண்ட காலங்களில் இவை நிகழ்ந்திருக்கலாம். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டிலும் பேரரசுகள் உருவாவதும் அவை அழிந்து குறுநில மன்னர்களும் படைமானியத் தலைவர்களும் செல்வாக்குப் பெறுவதும் மாறி மாறி நிகழ்ந்துள்ளதைக் காண முடியும்.

இதற்குத் தலைமாறாக, சீனத்தில் வலிமையான அரசுகள் உருவான போது திபேத் அவர்களுக்கு அடங்கிய பகுதியாக மாறியதும் உண்டு. இவ்வாறு சீனத்தினுள் ஏற்பட்ட அரசியல் சூறாவளிகளில் திபேத்தும் அலைக்கழிந்து வந்தது. சீனத்திலும் திபேத்திலும் வரலாற்றுக் காலத்தில் புத்த சமயத்தில் பிளவுகளும் பூசல்களும் தொடர்ந்து இடம் பெற்றன. அவற்றின் விளைவுகள் திபேத் அரசியலிலும் ஏற்பட்டன.

16 ஆம் நூற்றாண்டின் மங்கோலியர்களின் ஆட்சிக் காலத்தில் ஒரு புத்த சமயப் பிரிவின் தலைமைக் குருவான லாமா சானம் கியாட்சோ என்பவனை மங்கோலியனான அல்டான் கான் என்பவன் வரவழைத்து அவனுக்கு தலை லாமா என்ற பட்டத்தை வழங்கினான். இவன் தலை லாமாக்களில் மூன்றாமவனாவான். தலை லாமா என்பவர் புத்தர்களில் ஒருவரான அவலோகிதேசுவரரின்[1] தோற்றரவாக(அவதாரமாக)க் கருதப்படுகிறவர். அவரை சமயத் தலைவராகவும் ஆட்சித் தலைவராகவும் சீன அரசு பயன்படுத்தியது.

1903 இல் பிரிட்டனின் படைத் தலைவன் எங்கசுப்பண்டு என்பவன் ஒரு படையுடன் வந்து திபேத்தியப் படைத் தலைவனுக்கு ஒரு பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி ஏறக்குறைய 1300 திபேத்திய வீரர்களைக் கொன்று குவித்தான். கி.மு. நான்காம் நூற்றாண்டில் அலெக்சாந்தர் இந்தியாவிலும் பின்னர் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பியர்கள் உலக முழுவதும நடத்திய அதே காட்டு விலங்காண்டித்தனத்தைத் திபேத்திலும் செய்தனர். திபேத்தியர்களோடு ஒரு தரப்பான ஓர் ஒப்பந்தத்தை ஆங்கிலரே வகுத்துக் கொண்டனர். திபேத் மக்கள் வாழ்ந்த பகுதிகளை இந்தியாவுக்குள்ளும் இருக்குமாறு மக்மோகன் எல்லைக் கோட்டை வகுத்துக் கொண்டனர். ஏற்கெனவே திபேத் மக்கள் தலை லாமாவின் கட்டுப்பாட்டிலிருந்த லாசாவைத் தலை நகராகக் கொண்டிருந்த பகுதிகள் நீங்கலாக சீனாவின் வேறு சில மாகாணங்களிலும் பிரிந்து கிடக்கின்றனர்.

உலகில் பெரும்பாலான மொழித் தேசியங்களும் ஆட்சியாளர்களின் கொள்ளைப் போர் வெறியினால் இவ்வாறு சிதைந்து கிடக்கின்றன. ஐரோப்பாவில் செருமானியர்கள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில்தான் ஒரே அரசின் கீழ்வர முடிந்தது. ஆனால் அந்த ஒருங்கிணைவுக்கு அவர்களின் தலைவர்கள் கையாண்ட உத்திகளின் விளைவாக அவர்கள் இரு உலகப் போர்களை உருவாக்க வேண்டியிருந்தது.

இப்படிப்பட்ட சூழலில் மா சே துங் தலைமையில் நடைபெற்ற சீனப் புரட்சிக்குப் பின் 1951 இல் சீன மக்கள் விடுதலைப் படை திபேத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதற்கு தலை லாமா எந்தத் தடையும் சொல்லவில்லை. உள்ளூர் மேற்குடியினர் வரவேற்றனர். இது தலை லாமாவுக்கும் அவர்களுக்கும் இருந்த முரண்பாடுகளின் விளைவு. திபேத் அரசுக்கும் சீன நடுவரசுக்கும் உள்ள உடன்பாட்டின்படி தலை லாமாவின் கட்டுப்பாட்டில் இருந்த, லாசாவைத் தலைநகராகக் கொண்ட நிலப்பகுதிக்குப் பெருமளவு தன்னாட்சி இருக்கும் என்று வரையறுக்கப்பட்டது.

1956இல் சீன அரசு மேற்குடியினரிடத்திலும் புத்த மடங்களிலும் இருந்த நிலங்களைப் பிடுங்கி அவற்றில் வாரத்துக்குப் பயிரிட்ட உழவர்களுக்குப் பகிர்ந்தளித்தது. அதற்கு எதிர்ப்பு முதலில் திபேத்துக்கு வெளியிலிருந்த திபேத்திய மேற்குடியினரிடத்திலிருந்தும் மடங்களிலுமிருந்தும் தொடங்கி லாசாவுக்குப் பரவியது. அதற்குப் பின்புலமாக அமெரிக்க நடுவண் உளவு நிறுவனம் (சி.ஐ.ஏ.) செயல்பட்டது. அந்த எதிர்ப்புகளை 1959இல் சீன அரசு கடுமையாக ஒடுக்கியது. பல்லாயிரக்கணக்கான திபேத்தியர்கள் கொலைப்பட்டனர். தலை லாமா இந்தியாவுக்கு ஓடி வந்தார். திபேத்திலும் சீனாவிலும் உள்ள திபேத்தியர்கள் சீன அரசை எதிர்த்து நடத்திய வன்முறை போராட்டங்கள் இடைமுறிந்து போகாமல் உதவி வந்த ந.உ. நி. 1972இல் அதைத் திடீரென்று நிறுத்தியது. அதற்குக் காரணம் வாட்டர் கேட் ஊழல் புகழ் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் நிக்சன் சீனத் தலைவர் மா சே துங்குடன் உடன்பாடு கொண்டதுதான்.

இருப்பினும் ஒவ்வோர் ஆண்டும் திபேத்தியர்கள் தோல்வியடைந்த தங்கள் 1959 போராட்டத்தின் நினைவு நாளைத் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு மார்ச்சு 10 அன்று திபேத்தில் புத்தத் துறவிகள் பட்டினிப் போராட்டங்கள், தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டனர். சீனப் படை மடங்களைச் சூழ்ந்து கொண்டு போராட்டங்களை ஒடுக்கியது.

இது தலை நகர் லாசாவிலும் வன்முறை எதிர்ப்புகளை உருவாக்கியது. சந்தைகள் கொளுத்தப்பட்டன. அரசு அலுவலகங்களும் தீயணைப்பு ஊர்திகளும் அழிக்கப்பட்டன, மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டன. சீனர்களின் கடைகளும் ஊர்திகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வன்முறையில் 100 பேருக்கு மேல் இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன.

திபேத்துக்கு முழு விடுதலை வேண்டுமென்ற வேண்டுகைக்குத் தலைமை தாங்குபவராகத் தோற்றமளித்த தலை லாமா 2005 இல், அவ்வேண்டுகையைக் கைவிட்டால், பேசுவதற்கு ஆயத்தமாக இருப்பதாக சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவோ அழைத்தபோது தாங்கள் சீனத்தின் ஒரு பகுதியாக இருக்க ஆயத்தமாக இருப்பதாகவும், ஆனால் தங்கள் பண்பாடு, சமயம் ஆகியவற்றில் தங்களுக்கு முழுத் தன்னாட்சி வேண்டுமென்றும் சொன்னார். தமிழகத்தில் சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்தவற்றை இது நமக்கு நினைவூட்டுகிறது.

2007 சனவரியில் ஒரு தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் திபேத்தியர்கள் பண்டை வரலாற்று நினைவிலேயே மூழ்கி இருக்காமல் திபேத் சீனத்தின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

இன்றும் அதையே சொல்லி வருகிறார். ஆனால் நாடுகடந்த அரசில் அவரோடு இடம் பெறும் பெரும்பாலான பிறரும் குறிப்பாக இளைஞர்களும் திபேத்திலும் (இதனை திபேத்திய தன்னாட்சிப் பகுதி என்று குறிப்பிடுவர்) சீனத்தினுள்ளும் வாழும் திபேத்தியர்களும் இதை ஏற்கவில்லை. அதாவது இப்போது முரண்பாடுகளில் தலை லாமாவுக்கும் திபேத்தியர்களுக்கும் இடையிலான முரண்பாடு முகாமை பெற்று வருகிறது.

அமெரிக்கா, தலை லாமாவின் மனப்போக்கை மாற்றுவதில் மிகுந்த பங்காற்றியிருக்க வேண்டும். அதனால்தான் அண்மையில் அவரை அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு வரவழைத்து மதிப்புச் செய்துள்ளது. 2008 மார்ச்சு 14க்குப் பிறகு பேசிய தலை லாமா திபேத்தியர்கள் வன்முறைப் போராட்டங்களைக் கைவிடவில்லையானால் தான் தன் பதவியிலிருந்து விலகி ஒரு சராசரிக் குடிமகனாகத் திபேத்தில் வாழ்வேன் என்று திபேத்தியர்களைப் பார்த்து மிரட்டியதிலிருந்து நமக்கு இந்த உண்மைகளெல்லாம் வெளிப்படுகின்றன..

இப்போது அமெரிக்கா – தலை லாமா கூட்டணியில் வெளித்தோன்றாத கூட்டாக சீனமும் இணைந்து செயல்படுகிறது. இந்தக் கூட்டணியின் நோக்கம் திபேத்தியர்களிடையில் தலை லாமாவின் பக்கம் சாயத்தக்க ஒரு குழுவை உருவாக்கி திபேத்திய மக்களுக்கு இரண்டகம் செய்வதற்குத் தலை லாமாவுக்கு உதவ வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் தலை லாமா முழு விடுதலை கேட்கவில்லை என்று சொன்னாலும் அவர் உள்ளத்தில் அந்த நோக்கம் மறைந்துள்ளது என்று சீனம் குற்றம் சாட்டி வருகிறது. தலை லாமா திபேத்திய மக்களுக்கு நாணயமாகப் பாடுபடும் ஒரு தலைவர் என்ற ஒரு பொய்ப் படிமத்தை திபேத்திய மக்களிடையில் உருவாக்கி அவரது முழுத் தன்னாட்சிச் சரக்கைச் சந்தைப்படுத்தப் பார்க்கிறது சீனம். அப்படியானால் தலை லாமாவின் மிரட்டலைப் பொருட்படுத்தாத அளவுக்கு அவரை மிஞ்சிய விசைகள் திபேத்தியர்களிடையில் உருவாகிவிட்டன என்று தோன்றுகிறது.

சென்ற நூற்றாண்டிலிருந்து நம் நினைவுக்கு உட்பட்ட காலத்துக்குள்ளேயே இது போன்ற இரண்டகங்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளன. அவற்றைத் தொடங்கிவைத்தவர் காந்தி. தமிழ்நாட்டில் வ.உ.சி. இந்தியத் தேசிய விடுதலை விரும்பிகளின் முழு ஒத்துழைப்புடன் வெள்ளையர்களுக்கு எதிராக்க் கப்பலோட்டி அவர்களது சட்டத்துக்கு உட்பட்ட அனைத்து முயற்சிகளையும் முறியடித்து வென்று நின்றதால் தங்களுடைய வல்லரசின் அடித்தளமான பொருளியல் சுரண்டலுக்கு வந்த இந்த அறைகூவலை எதிர்கொள்ள தென்னமெரிக்காவிலிருந்த காந்திக்கு கெய்சர் - இ - இந்த் (Kaisar - I – Hind, இந்தியாவின் பேரரசர் – 1876 முதல் 1947 வரை பிரிட்டிஷ் பேரரசருக்குரிய ஒரு விருது பார்க்க Chambers Twentyeth Century Dictionary-1972) என்ற பட்டத்தை வழங்கிக் கொண்டு வந்து இறக்கி, அவரது ஒப்பற்ற திறமையைப் பயன்படுத்தி அன்றைய முனைப்பியத் தலைர்வகள் ஒவ்வொருவரையும் அவரவர்க்குரிய வெவ்வேறு உத்திகளில் அகற்றியது ஆங்கிலப் பேரரசு.

தென்னாப்பிரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டம் உருசியாவின் உதவியுடன் வலிமை பெற்று வருவதைக் கண்டு 25 ஆண்டுக் காலம் சிறையில் இருந்த நெல்சன் மண்டேலாவுடன் பேசி அவரை வெளியில் கொண்டு வந்து ஆட்சியில் அமர்த்தி அங்கு தனக்குள்ள பொருளியல் நலன்களைக் காத்துக் கொண்டது அமெரிக்கா.

சிம்பாபுவே, பாலத்தீனம் என்று எத்தனையோ நிகழ்வுகள், அவற்றின் தொடர்ச்சியில் ஒன்றுதான் திபேத்தில் இப்போது நடைபெறுகிறது. அமெரிக்காவின் இந்த உத்தியின் சிறு சிறு திவலைகள்தாம் நம் நாட்டில் மரண தண்டனை பெற்றுச் சிறையிலிருந்த அதிமுனைப்பியர்களிடம் பேசி இணக்கம் கண்டு வெளியில் கொன்டுவந்து ஆட்சியாளர்களின் உதவியோடு அவர்களைத் தமிழ்த் தேசியம் பேச வைத்து ஏமாற்றும் ″மனித உரிமைத்″ ″தொண்டு″ செய்யும் பெரிய மனிதர்களின் நடவடிக்கைகள் என்பதை இங்கு இடைக்குறிப்பாகக் குறித்துக் கொள்கிறோம்.

அமெரிக்காவின் இது போன்ற திருவிளையாடல்கள் ஊடுருவ முடியாத ஒரு பாசறையாக ஈழ விடுதலைப் போராட்டம் இருக்கிறதென்று தோன்றுகிறது.

மொழியை அடையாளமாகக் கொண்டு தொடர்ச்சியுள்ள நிலப்பரப்புகளில் வாழும் தேசிய மக்களின் எழுச்சிகள் 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வெளிப்படத் தொடங்கின. முதலாளி – பாட்டாளி முரண்பாடுதான் ஒரே முரண்பாடு என்று கருதிக் கொண்டிருந்த மார்க்சும் ஏங்கெல்சும் பாட்டாளிகளுக்கு நில எல்லைகள் கிடையாது என்றுதான் நினைத்தனர். ஆனால் ஐரிசு மக்கள் விடுதலை வேண்டி போராட்டங்கள் நடத்திய போது இங்கிலாந்தினுள் ஐரிசுத் தொழிலாளர்களை ஆங்கிலத் தொழிலாளர்கள் தாக்கியதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆங்கிலத் தொழிலாளர்கள் ஐரிசுத் தொழிலாளர்களோடு இணைந்து நின்று ஐரிசு விடுதலைக்குப் போராடினால்தான் இரு தேசியத் தொழிலாளர்களும் விடுதலை பெறுவார்கள் என்றெல்லாம் சொல்லிப் பார்ததனர். எதுவும் நடைபெறவில்லை.

உருசியப் புரட்சியில் முதன்மையான பங்கேற்றவர்கள் மாருசியர்களால் சுரண்டப்பட்டுவந்த உருசியப் பேரரசின் பிற தேசிய மக்கள்தாம். அவர்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமையுள்ள தன்தீர்மானிப்புரிமை வழங்கப்படும் என்று லெனின் அளித்த உறுதி மொழியை நம்பித்தான் தங்கள் இன்னுயிர்களை ஈந்து அவர்கள் புரட்சியை வெற்றிபெற வைத்தனர். லெனின் தன் வாக்குறுதிக்கு நாணயமாக நடந்துகொள்ள முயன்றாலும் அவர் படுக்கையில் இருந்த போதே தேசிய ஒடுக்கல் முனைப்படைந்துவிட்டது. அதன் விளைவாக அவர் உருவாக்கிய ஒன்றிணைந்த சோவியத் உருசியா முக்கால் நூற்றாண்டு கூட நிலைக்க முடியவில்லை.

ஐரிசுப் புரட்சிக்கு முன் பல்வேறு நாடுகளுக்குள் சிதறிக் கிடந்த சிலாவிய மக்கள் தாங்கள் வாழ்ந்திருந்த நிலப் பரப்புகள் ஒருங்கிணைந்த தேசமாக விடுதலை பெற வேண்டுமென்று போராடிக்கொண்டிருந்தனர். அவர்களை வரலாற்றிலிருந்து மறைந்துவிட்ட தேசியங்கள் என்று மார்க்சும் ஏங்கல்சும் அப்போது புறக்கணித்தனர். ஆனால் அத்தேசியங்களின் விடுதலைப் போர்களின் ஒரு பக்க விளைவாகவே முதல் உலகப் போர் தொடங்கியது. இரண்டாம் உலகப் போர் முடிந்த கையோடு தேசிய அரசியல் எல்லைகளைப் பெற்ற அவை சோவியத் உருசியா உடைந்ததும் அதன் மேலாளுமையிலிருந்தும் விடுபட முடிந்திருக்கிறது. ஆனால் பொருளியல் மேலாளுமையிலிருந்து விடுபட வேண்டியிருக்கிறது. ஆனால் செக்கோசுலொவேக்கியாவைத் துண்டு துண்டாக உடைத்து கொசவோவாவைத் தன் படைத்தளமாக்கிக் கொண்டுள்ளது அமெரிக்கா.

செர்பியர்கள் வாழ்ந்த பகுதிகளை இணைத்து ஒரு நாடாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்ட முனைப்பியர்கள் அங்கு வந்த ஆத்திரிய இளவரசனைக் கொன்றதிலிருந்து முதல் உலகப் போர் தொடங்கியது. அப்போர் 1919 இல் முடிவுற்ற போது 27 ஆக இருந்த ஐரோப்பிய நாடுகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்த போதும் பல புதிய நாடுகள் உருவாயின. ஐரோப்பிய நாடுகளிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகள் ஒவ்வொன்றாக அரசியல் விடுதலை பெற்றன. ஆனால் இந்த முன்னாள் அடிமை நாடுகளுக்குள் முந்திய காலங்களில் அரசர்கள் நடத்திய இடைவிடா கொள்ளைப் போர்களால் பிய்த்தெறியப்பட்ட எண்ணற்ற தேசியங்கள் சிக்கிக் கிடக்கின்றன. முன்னாள் வல்லரசுகள் தம்மோடு இணக்கம் கண்டவர்களின் கைகளில் அந்நாடுகளை ஒப்படைத்து வெளியேறிய போது தங்களின் பிரித்தாளும் உத்தியைத் தொடரும் நோக்கத்துடன் அவற்றை அப்படியே வைத்துச் சென்றனர். அவ்வாறுதான் தனித்தனியாக ஆங்கிலரின் கட்டுப்பாட்டினுள் இருந்த சிற்றரசுகளை புதிதாக உருவான இந்திய அரசு படை கொண்டு தன்னுடன் இணைத்துக்கொண்டது. அந்தத் தேசியங்கள் இந்தியாவில் நடத்திய போராட்டங்களின் பயனாக மொழிவழி மாநிலங்கள் என்ற ஓர் இடைநிலை மாற்றம் அரைகுறையாக நிகழ்ந்துள்ளது. அத்தகைய ஒரு கட்டத்தில் இன்றைய திபேத் உள்ளது. தலை லாமா – அமெரிக்கா – வென் சியா போ முக்கோணக் கூட்டணியின் திட்டப்படி ஒரு பண்பாட்டுத் தன்னாட்சி, அதாவது மடங்களுக்குப் பழைய சொத்துகளைத் திருப்பித் தருதல் முதலானவை ஏற்றுக்கொள்ளப்பட்டால் முழுமையான விடுதலைக்கான போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என்பது தலை லாமாவின் வாக்குறுதி. அப்படி நடந்தால் மதத்தலைமை சாராத அல்லது தலை லாமாவுக்குப் போட்டியான புத்த சமய விசைகள் முழு விடுதலைக்கான போராட்டத்தைத் தொடர்வர். அது மூன்றாம் உலக நாடுகளுக்குள் அடிமைப்பட்டுக் கிடக்கும் நான்காம் உலக[2] மக்களின் விடுதலைக்கான உலகம் தழுவிய போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும். இவற்றை ஒருங்கிணைந்து ஒடுக்குவதற்காக இதே போன்ற 19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பியச் சூழலில் ஆத்திரேலியத் தலைமை அமைச்சர் மெட்டர்னிக் உருவாக்கிய மேற்கு பேலியாத் திட்டம் உதவாதது போலவே இரைசீவ் காந்தி உருவாக்கிய தெற்காசிய நாடுகளின் மண்டல ஒத்துழைப்புப் பேரவையும்(சார்க்) எதையும் செய்ய முடியவில்லை, வாணிகச் சுரண்டல் ஒத்துழைப்பைத் தவிர.

சீன – அமெரிக்க உறவு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இருவரும் ஒருவரை மற்றவர் நம்பவில்லை. சீனத்தைச் சுற்றியுள்ள நாடுகளில் அமெரிக்கா ஊடுருவி வருகிறது. நிக்சன் தொடங்கிவைத்து 700 வானூர்திகளில் வந்திறங்கிய பில் கிளின்றன் காலம் வரை வலுப்பெற்ற இந்த உறவில் சீனப் பொருளியல் எந்த அளவுக்கு அமெரிக்காவின் பிடிக்குள் இருக்கிறது என்று தெரியவில்லை. அமெரிக்க டாலரோடு ஒப்பிட இந்திய உரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கும் அதே வேளையில் விலைவாசி ஏற்றம் காரணமாக உரூபாயின் உள்நாட்டு மதிப்பு வீழ்ந்துள்ளது என்ன பொருளியல் விந்தையோ தெரியவில்லை.[3] அதே நேரத்தில் சீனச் சரக்குகள் கொள்ளை மலிவாக இங்கு குவிகின்றன. இந்தியா - அமெரிக்கா, அமெரிக்கா – சீனம், சீனம் – இந்தியா என்ற முக்கோண பணமதிப்பு விகிதங்களில் ஏதோ சித்துவேலை நடக்கலாம் என்று தோன்றுகிறது.

அமெரிக்கா, இந்தியா, சீனம், உருசியா ஆகியவற்றுக்கு இடையிலுள்ள உறவுகளில் பெரும் ஊசலாட்டங்கள் நிலவுகின்றன. அமெரிக்காவோடு கள்ள உறவு வைத்து உருசியாவின் அணுக்குண்டுகளை அழித்த எல்த்சினின் அழிம்பிலிருந்து உருசியா மீண்டு வருவதாகத் தெரிகிறது. ஐரோப்பாவில் உருசியாவைக் குறிவைத்து அமெரிக்கா புதிதாகத் தளம் அமைத்தால் உருசியா தாக்கும் என்ற புதினின் அறிவிப்பை ஒரு சுட்டியாகக் கொள்ளலாம்.
இந்திய – அமெரிக்க அணு ஆற்றல் உடன்பாட்டைப் பொதுமைக் கட்சியினர், குறிப்பாக சீனச் சார்பான மார்க்சியக் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பது சீன அரசின் அறிவுரையின் பேரிலாகலாம். அத்துடன் தன்னால் பதவியைப் பிடிக்க முடிந்த கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா தவிர வேறெங்கும் கட்சியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டாமல் மகமை தண்டுவதிலும் கூட்டணி பகரம் பேசுவதிலும் காலங்கழித்தவர்கள் திடீரென்று ஊரூருக்கும் கட்சி மாநாடுகள் நடத்தத் தொடங்கியிருப்பது, பாராளுமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பிடித்து சீனத்துக்குச் சார்பான இந்திய நிலையை உருவாக்கவா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இவர்களால் மக்களின் உண்மையான சிக்கல்களைத் தடம் பிடித்து அவர்களின் ஏற்பைப் பெற முடியுமா என்பது ஐயமே.

தேசிய விடுதலைப் போர் ஒரு மக்களிடையில் உருவானால் அவர்கள் முதலாளியத்தினுள் நுழையத் தொடங்கியுள்ளனர் என்பது அதன் பொருள். ஆனால் அதைப் புரிந்துகொள்ளாமல் அல்லது கூலி பெற்றுக் கொண்டு திசைதிருப்புவதற்காகவே பொருளியல் உரிமைகளுக்கான முழக்கங்களை முன்வைக்காமல் அந்தத் தேசியத்திலுள்ள படித்த ஒட்டுண்ணிக் கூட்டம் அதை மொழி, பண்பாட்டு, சமய விடுதலைப் போராட்டமாகத் திரிக்கின்றனர். இவர்களது இரண்டகத்தைப் பயன்படுத்தி ″புரட்சிகர″த் தனிமங்கள் அதை பாட்டாளியப் புரட்சியாக்கிச் சிதைக்கின்றனர்.

இத்தகைய சிக்கலான சூழ்நிலையில் இன்றைய வல்லரசுகளுக்குள் எதிர்பாராத ஒரு பெரும் மோதல் வெடித்து, அனைவரிடமும் அணுகுண்டு இருந்தால் அது வெறும் அட்டைப் புலிதான் என்ற மா சே துங்கின் புகழ் பெற்ற கூற்று பலித்து உலகம் பிழைத்திருந்தால் நான்காம் உலக நாடுகளுக்கு அரசியல் விடுதலை கிடைக்கலாம். ஆனால் பொருளியல் உரிமையை முன்னெடுத்துப் போராடினால் அந்த விடுதலை எளிதாகலாம். அதுவரை இந்த மக்களின் போராட்டம் தொடரும். இன்று திபேத்தில் போன்று விடுதலை வேண்டிப் போராடி உலகத்தின் கவனத்தை அவ்வப்போது கவரும் நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் நமக்கு இதை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.


(இக்கட்டுரை தமிழினி ஏப்பிரல்-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

அடிக்குறிப்புகள்:

[1] அவலோக முனிவர் என்ற சொல்லில் அபிதான சிந்தாமணி ″இவர் சைனர். அகத்தியருக்குத் தமிழாசிரியர் என்பர். இவர் இருக்கை பொதிகையில் என்பர். இவரை அவலோகிதர் என்றும் கூறுவர்″ என்று குறிப்பிடுகிறது.

[2] இந்த நான்குலகக் கோட்பாட்டை நானறிய முதன்முதலில் முன்வைத்தவர் நண்பர் வெங்காளூர் குணா. இன்று அவர் அந்தக் களத்தையே விட்டு விலகி முழு சாதி வெறி சார்ந்த ஆய்வுகளுக்குள் முழுகிப் போனார்.

[3] உரூபாயின் மதிப்பு குறைந்திருக்கும் போது டாலர்களைக் கொண்டுவந்து கூடும் போது எடுத்துச் செல்கின்றனர் அமெரிக்கர்கள் என்று கூறுகிறார் எம் நண்பர் திரு.மோகன்தாசு. ஒருவேளை பச்சை அட்டை வைத்திருக்கும் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள் ஏம வங்கியின் ஒத்துழைப்புடன் இதைச் செய்யலாமல்லவா?
அது போலவே சுற்றுலா வரும் அமெரிக்கர்கள் பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்திருக்கும் சூன்-சூலை மாதங்களில் டாலரைப் பெருமளவில் முதலிட்டு பங்குகளை வாங்கி திரும்ப திசம்பர் மாதத்துக்குப் பின் விலை ஏறும் போது விற்றுக் காசு பார்த்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள் என்று இன்னொரு நண்பர் கூறுகிறார். அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பண அமைச்சர் சிதம்பரம் முற்பட்ட போது அயல்நாட்டு முதலீட்டாளர்கள் கடும் எதிர்ப்பு காட்டியதால் முயற்சியைக் கைவிட்டாராம். நமது ஐயம், நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னது எதையோ எதிர்பார்த்த மிரட்டலா அல்லது எதிர்ப்பைக் காட்டியவர்கள் பச்சை அட்டைக்காரர்களா என்பதுதான்.